மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்

சென்ற பகுதியில் மதுரை மாநகரைச் சுற்றி வந்தபிறகு, இனி, தமிழின் இனிமையும் உவமைச் செழிப்பும் பொருள் சிறப்பும் பொருந்திய மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்.

1. கரும்பு ஆலைகள் 

வளமான மருத நிலத்திற்குள் நுழைந்தால், அங்கு ஒலிக்கும் பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். அதில் ஒன்று, கரும்பாலைகளின் ஓசை என்று முன்னரே பார்த்தோம்- கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258). கரும்பு ஆலைகள் வைத்துக் கரும்பின் பாகும் கற்கண்டும் உருவாக்கி, அவற்றினின்று பலவித இனிப்புப் பண்டங்கள் செய்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்தது தெரிகிறது. அதனால்தான் தமிழ்ப் பாடல்வரிகளில் எப்போதும் கட்டிக் கரும்பும், கன்னல் சாறும், சர்க்கரைப் பாகும் இனிமைக்கு உவமைகளாக நிற்கின்றன போலும்.

2. அடை, மோதகம், அப்பம்

அப்படி என்னென்ன பண்டங்கள் செய்தனர்?

நல்வரி இறாஅல் புரையும் மெல்அடை
அயிர் உருப்புஉற்ற ஆடுஅமை விசயம்
கவவொடு பிடித்த வகைஅமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர்
(624-626)

நல்ல வரிகளையுடைய தேனடையைப் போன்ற மெல்லிய அடையும், கற்கண்டைச் சூடேற்றிக் கிடைத்த பாகோடு பலவற்றைக் கலந்து உள்ளே வைத்துப் பிடித்துச் செய்த மோதகமும், இனிய பாகுடன் செய்த அப்பமும் விற்பவர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு இரவின் இரண்டாம் சாமத்தில் உறங்கச் செல்கிறார்கள்.

3. ஊன் சோறு

அடுத்து வரும் உணவு வகையான ஊன் சோறு, இன்று பிரியாணி என்று நம்மில் பலரும் விரும்பி விரும்பி நாடிச் செல்லும் உணவை ஒத்தது. இந்த ஊன் சோறு சங்க காலத்தில் பரவலாகப் பரிமாறப்பட்டதைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில் நமக்குக் காட்டுகின்றன.

அது, பலரும் புகழும்படி சமைக்கப்பட்ட பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோறாம். அதனால்தான் மதுரைக் காஞ்சி – ‘புகழ்படப் பண்ணிய பேர் ஊன்சோறு’ (533) என்று பலரால் விரும்பப்பட்ட அதன் தன்மையை எடுத்தியம்புகிறது.

பரதவரைப் பாண்டியன் வெற்றி கொண்டதைச் சொல்லும்போது, அவர்கள் பகுதிகளில் கோழ் ஊஉன் குறைக்கொழு வல்சி (141) உண்ணப்பட்டது தெரிகிறது. அதாவது, கொழுத்த இறைச்சியுடன் சமைக்கப்பட்ட சோறு வழங்கப்பட்டது.

4. தோலால் செய்யப்பட்ட செருப்பு

மூன்றாம் யாமத்தில், கரிய பெண் யானையின் தோலைப் போன்ற கருமையான இருள் பரவிக் கிடக்கிறது. ஊர் நிம்மதியாக உறங்கும் அந்நேரத்தில், மழை பெய்து தேர்கள் இயங்கும் தெருவில் நீர் திரண்டு ஓடுகிறது. அந்தச் சூழலிலும், சோம்பலோ தளர்ச்சியோ இல்லாமல் ஆர்வத்துடன் காவல் காக்கிறார்கள் ஊர்க் காவலர்கள்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
(643-644)

வலிமையான ஆண்யானையை இரையாக எண்ணிப் பார்க்கும் வலிய புலியைப் போல், துஞ்சாத/தூங்காத கண்களை உடையவர்களாக அஞ்சாத கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள்.

கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோல் அடியர்
(635-636)

கற்களையும் மரங்களையும் வெட்டும் கூர்மையான தொங்கிய வாளும், தொடையோடு பொருந்திய- கைப்பிடியுடன்கூடிய கூரிய வாளும், நூலாலான ஏணியும், நிலத்தைத் தோண்டும் உளியும் தாங்கி, தெருக்கள்தோறும் இக்காவலர்கள் உலவுவதால் மக்கள் மன அமைதியோடு தூங்குகிறார்கள். அவர்களுடைய கால்களை கவனித்தால் என்ன தெரிகிறது? அவர்கள் தோலாலான காலணிகளை அணிந்திருக்கிறார்கள். இளங்கன்று மற்றும் ஆட்டின் தோல் கொண்டு இசைக் கருவிகள் உருவாக்கப்பட்டது அறிவோம். தோலைக் கொண்டு காலணிகள் செய்து அணிவது அக்காலத்திலேயே இயல்பான ஒன்றாக இருந்தது என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.

5. கஞ்சியுடைய ஆடை / சிற்பம் 

அடுத்து ஒரு காட்சி- காலையில் கண்விழிக்கிறார் மன்னர். சந்தனச் சாந்தைப் பூசிக் கொள்கிறார். முத்து வட மாலை அணிந்த மார்பில் தேனீக்கள் மொய்க்கும் பூமாலை அணிகிறார். அழகிய மோதிரம் பொருந்திய வலிமையான பெரிய கையில் வீரவளையலுடன் காட்சி தருகிறார். 

அவருடைய ஆடை எப்படி இருக்கிறது? 

சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ
(721-722)

சோறு வடிக்கையில் கிடைக்கும் நீர்- அதாவது கஞ்சி இட்டுத் துவைத்த ஆடையை, உடைக்கு மேல் அணிகலன்கள் பொலிவுற அணிந்திருக்கிறார். கஞ்சியிட்ட மிடுக்கான ஆடை அணியும் வழக்கம் அன்றே இருந்ததையும் மதுரைக் காஞ்சி பதிவு செய்கிறது. கஞ்சியிட்ட மிடுக்கான ஆடையும் அணிகளும் மாலையும் உடுத்திய அரசர் எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கிறார் தெரியுமா?

வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி
(723 – 724)

சிற்ப நூலைக் கற்றுத் தேர்ந்த வல்லவன் செய்த முருகனின் சிற்பம் போன்ற அழகிய வடிவத்துடன் இருக்கிறார்.

6. கல்லணை

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அடுத்து, இத்தனை அழகு பொருந்திய, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வருபுனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து
ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்
(725-726)

கரை புரண்டு வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தும் கல்லணைபோல, தம் படைகளைத் தாக்க வரும் பகைவர்களைத் தடுக்கும் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள். ‘வருபுனல் கற்சிறை’ – வரும் புனலைத் தடுக்கும் கற்சிறைதான் கல்லணை. கல்லால் அணை கட்டுவது தொன்மைத் தமிழரின் நீர் மேலாண்மைத் திறம் இல்லையா? அந்தச் சொல்லாக்கமும் ‘வருபுனல் கற்சிறை’ என்று எவ்வளவு அழகாக அமைந்துள்ளது பாருங்கள்.

மன்னரின் பெருங்கொடை

பாணர் வருக, பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி
(749 – 752)

பாணரையும் அவர்கள் குடும்பத்தில் உள்ள பாடும் பெண்களையும், செய்யுள் இயற்றும் திறமையுடைய புலவர்களையும், ஆடற்கலைஞர்களாகிய கூத்தர்களையும் ‘வருக வருக’ என்று வரவேற்றுப் பரிசுகள் அளிக்கிறார் மன்னர். இந்தக் கலைஞர்கள் தம்முடைய பெரிய சுற்றத்தாரை உடன்வைத்துப் பாதுகாக்கும் தன்மையுடையவர்கள். அவர்களுக்குத் தாமரை வடிவில் உறுப்புகள் உடைய நெடிய தேர்களை யானைகளுடன் அளிக்கும் பெரும் கொடையாளர் பாண்டியன் நெடுஞ்செழியன்.

கொடையும் வளமும் செழிப்பும் நிறைந்த நாட்டில் –

களம் தோறும் கள் அரிப்ப
மரம்தோறும் மை வீழ்ப்ப
நிணஊன் சுட்டு உருக்கு அமைய
நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால்
(753-758)

இடந்தோறும் கள்ளை அரிக்கிறார்கள், மரத்தடிகள்தோறும் செம்மறிக் கிடாக்களை வெட்டுகிறார்கள், ஆட்டின் கொழுப்பு நிறைந்த தசைகளைச் சுடுகிறார்கள், நெய்யுடன் பொரியல்கள் சமைக்கிறார்கள். ஆட்டுத் துண்டுகளைச் சுடும்போதும் பொரியலை நெய்யில் தாளிக்கும்போதும் எழுந்த புகை, மழை வரும் முன் வானில் எழும் கருமுகில்போலப் பரவுகிறதாம்.

எவ்வளவு நயமாகச் சொல்கிறார் புலவர்!

இப்படி, இயற்கை வளம், உயரிய வளர்ச்சி, பல்தொழில் திறன், சீரிய கோட்பாடுகள், மாறுபட்ட வழிபாட்டு நெறிகள் இருப்பினும் கலந்தே இனிதுறையும்  பண்பட்ட மனப்பாங்கு, உள்நாட்டு அங்காடிகள், ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நடந்த வெளிநாட்டு வணிகம், போர் வெற்றிகள், கலை வளர்ச்சி, வழங்கிய கொடைகள் என்று பண்டைய தமிழ்நாட்டின் பன்முக வரலாறைத் தெளிவாகக் காட்டும் ஆவணங்களாகத் தமிழ் இலக்கியங்கள் நமக்குக் கிட்டியிருப்பது தமிழ்க் குடியில் பிறந்த நமக்குக் கிடைத்த பெரும் பேறு.

இன்று, ட்ரோன்களின் உதவியுடன் கவின்மிகு காட்சிகள் நம்மை எளிதில் வந்தடைகின்றன. ஒலியும் ஒளியும் நிறங்களும் நிறைந்த அக்காட்சிகள் நம் மனங்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன. எந்தத் தொழில்நுட்பமும் இன்றி, மதுரை மாநகரின் அன்றாட வாழ்வைத் தம் எழுத்தாற்றலால் செம்மையாக நமக்களிக்கிறார் மாங்குடி மருதனார். அவருடைய படைப்பிலிருந்து நாம் இங்கு பார்த்தது சுருக்கமான ஒரு பருந்துப் பார்வை எனலாம்.

தமிழ் மொழியின் வளனையும் அம்மொழியில் இலக்கியம் படைத்தோரின் திறனையும் தாண்டி இங்கு தனித்துத் தெரிவது, இன்றும் நாம் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஊரும், அதில் வாழும் மக்களும், அவர்கள் தொழிலும், வாழ்வும்தான்.  

பருந்துப் பார்வையிலேயே இத்தனைச் செய்திகள் என்றால், படிக்கப் படிக்கத் திகட்டாத இன்பம் தருகின்ற பற்பலக் காட்சிகளைத் தாங்கி நிற்கும் பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் படித்துத்தான் பாருங்களேன்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்

முந்தைய பகிர்வில், மதுரைக்காஞ்சி வழியாகப் பாண்டிய நாட்டு வளத்தைப் பார்த்தோம். இனி மதுரை மாநகரைச் சுற்றி வருவோம்.. வாருங்கள்.

மதுரை மாநகர் எப்படி இருந்தது?

782 அடிகள் கொண்டது மதுரைக்காஞ்சி. அதில், 327ஆவது வரியில் தொடங்கும் மதுரையின் சிறப்பு, 699ஆவது வரியில் நிறைவடைகிறது. 372 வரிகளில் மதுரை நகரை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ஆசிரியர்.

புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை
(698 – 699)

வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து காணும் அழகும், மிகுந்த புகழும் எய்திய பெரிய சிறப்பையுடையது மதுரை. 372 வரிகளில் அம்மாநகரின் அமைப்பையும் பலதரப்பட்ட மக்களையும் அவர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு காட்சிகளையும் நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துகிறார் புலவர் மாங்குடி மருதனார். இன்றுபோல் புகைப்படங்கள், காணொலி, குறும்படம் போன்ற வெளிப்பாட்டு ஊடகங்கள் இல்லாத காலத்தில், சொற்களால் நம் கைப்பிடித்துக் கூட்டிச் சென்றுக் காட்டுகிறார் ஆசிரியர்.

மதுரையின் அகழியும் மதில்களும் மாடங்களும் வாயிலும் வீடுகளும் தெருக்களும் எப்படி இருந்தன?

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

  • மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கு – நீலமணி போன்ற நீரையுடைய ஆழமான கிடங்கு
  • விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை- வான் அளவு உயர்ந்த மதில்,  
  • நெய்படக் கரிந்த திண்போர்க் கதவு – நெய்யை ஊற்றியதால் கருத்த-திண்மையான கதவு
  • மழை ஆடும் மலையின் நிவந்த மாடம்- முகில் உலவும் மலைபோன்ற உயர்ந்த மாடங்கள்
  • வையை அன்ன வழக்குடை வாயில்- வையை ஆறுபோல் மக்கள் பயன்படுத்தும் பெரிய வாயில்
  • சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மெல்லிய இசையாக ஒலிக்கும்  சில்லென்ற தென்றல் வீசும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள்,
  • யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு – ஆறு கிடந்ததுபோன்ற அகலமான நெடிய தெருக்கள்

நம் கண்முன் காட்சி மெல்ல விரிவடையத் தொடங்குகிறது.

அப்படியே நடந்து சென்றால், நாளங்காடியில்- உணவுப் பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கூடைகளில் பூக்கள் மற்றும் பூமாலைகள் விற்பவர்கள் இருக்கிறார்கள்; பலவித சிறுவணிகர்கள் தத்தம் பொருட்களை விற்கிறார்கள். கூந்தல் நரைத்த தொல் முதுபெண்டிரும் உழைத்துப் பொருளீட்டுகிறார்கள்.

நாள்பொழுதில் விழாவைக் கண்டுகளிக்க, செல்வந்தர்கள் வருகிறார்கள். அவர்கள் பளிச்சென்ற ஆடைகளுடன் பொன்னால் அழகு செய்யப்பட்ட வாளையும், மலர் மாலைகளையும், மார்பில் முத்து மாலையும் அணிந்திருக்கிறார்கள். 

செல்வமகளிர், மணிகளையுடைய பொற்சிலம்பும், பொன்னால் செய்த அணிகலன்கள், வளையல்கள் மற்றும் ஒளியுடைய காதணிகள் அணிந்து வருகிறார்கள். அவர்கள் பூசியிருக்கும் வாசனைப் பொருட்களின் நறுமணம் தெருவெங்கும் பரவியிருக்கிறது.

இவர்களோடு குலமகளிர், பரத்தையர், பிள்ளை பெற்ற மகளிர், தாய்மையடைந்த பெண்கள் தத்தம் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் அவரவர் வழிபாட்டு நெறிகளைச் சச்சரவின்றிக் கடைபிடிக்கின்றனர் – பெளத்த பள்ளியும் அந்தணர் பள்ளியும் சமணர் பள்ளியும் தத்தம் முறைகளில் செயல்படுகின்றன.

இது மட்டுமா?

சிறந்த கொள்கையுடைய அறம் கூறும் அவையம்- நீதி மன்றங்கள், அன்பும் அறனும் ஒழியாது காக்கும் அமைச்சர்கள், அறநெறி பிழையாது சிறந்த நாடுகளின் பண்டங்களை விற்கும் வணிகர்கள், நாற்பெரும் குழுவினர் என்று பலதரப்பட்டோர் வாழும் தெருக்களைக் காணமுடிகிறது.

அப்படியே தெருக்களில் தொடர்ந்து நடந்து சென்றால், கடலில் கிடைத்த சங்கினை அறுத்து வளையல் செய்பவர்கள்; அழகிய மணிகளில் துளை இடுபவர்கள்; பொன்னைச் சுட்டு நகைகளைச் செய்வோர்; பொன்னைக் கல்லில் உரசிப் பார்த்துத் தரம் பார்ப்போர்; துணி விற்பவர்கள்; கச்சுக்களை முடிப்பவர்கள்; செம்புப் பொருட்களை எடையிட்டு வாங்குபவர்கள்; மலர் விற்பவர்கள், நறுமணச் சாந்து விற்பவர்கள் என்று பல்வேறு தொழில் செய்வோரைக் காணமுடிகிறது. 

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அங்கே, கூர்மையான அறிவுடைய ஓவியக் கலைஞர்கள் ஓவியம் தீட்டுகிறார்கள்; சிறிதும் பெரிதுமான மடித்த துணிகளை, அவற்றை நெய்து வந்த வணிகர்கள் விற்பனை செய்கிறார்கள்.

சாறும் மணமும் நிறைந்த பலாச் சுளையும் மாம்பழமும், பல்வேறு வடிவிலான காய்களும், பழங்களும், கீரைகளும், இனிப்பான சாறுடைய கற்கண்டுத் துண்டுகளும், கீழே விளைந்த கிழங்குகளும் கலந்து, சோற்றினைக் கொடுப்போர் கொடுக்க, பெற்றுக் கொள்பவர்கள் உண்ணுகிறார்கள்.

இப்படியே அந்தி நேரம் முடிந்து இரவு வந்து, இரவில் முதல், இடை, கடைச் சாம நிகழ்வுகளைக் காட்டுகிறார் ஆசிரியர். அடுத்து, பொழுது புலர்கிறது. விடியற்காலையில் மதுரை எப்படி இருக்கிறது?

அந்தணர்கள் வேதம் பாட, யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைக்க, யானைப் பாகர்கள் யானைக்குக் கவளம் ஊட்ட, தேரில் கட்டப்படும் குதிரைகள் புல்லை உண்டு கனைக்கின்றன. பண்டங்கள் விற்கும் கடைகளில் தரையை மெழுகுகிறார்கள். கள்ளை விற்பவர்கள் விலை கூறி விற்கிறார்கள். இல்லத்துப் பெண்கள் தங்கச் சிலம்புகள் ஒலிக்க நடந்து வந்து, தத்தம் வீடுகளின் கதவுகளைத் திறக்கிறார்கள்.  

இதுதான் மாங்குடி மருதனார் காட்டிய ‘புத்தேள் உலகம் கவினிக் காண்வர மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை (698 – 699)’- வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து காணும் அழகும், மிகுந்த புகழும் அடைந்த சிறப்பையுடைய மதுரை மாநகர். ஊரைச் சுற்றி வந்த உணர்வு எப்படி இருந்தது என்று நீங்கள்தான் கூறவேண்டும்.

அடுத்த பகுதியில், மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!


இந்த ஆண்டு ஆகஸ்டு 30 தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை உலகெங்குமுள்ள மலையாள மக்களால் கொண்டாடப்பட்டது ஓணம்.

தாமதமாகச் சொன்னாலும், அனைவருக்கும் ஓணநன்னாள் நல்வாழ்த்துக்கள்!!

சரி, மலையாளப் பண்டிகைக்குத் தமிழில் வாழ்த்தா என்கிறீர்களா?

சேர சோழ பாண்டியர்களென ஒன்றிணைந்த தமிழகத்தின் திருவிழாவாக இருந்த ஓணவிழாவை, காலப்போக்கில் தமிழர்கள் கொண்டாட மறந்த பண்டைநாள் பண்டிகையைப் பற்றியதுதான் இன்றைய பதிவு. இதை உணர நம் வழித்துணை- நமக்கென நம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கியச் சான்றுகளே.

கடந்த நான்கு ஆண்டுகள் அபுதாபியில் வாழ்ந்ததில் பல கேரளத் தோழிமார் கிடைத்தனர். செவிக்கினிய மலையாள மொழியைக் கொஞ்சமாய்ப் பேசக்கற்கும் வாய்ப்பும் அமைந்தது. அதனால், அம்மொழி தமிழோடு எவ்வளவு தொடர்புடையது என்றும் தமிழரின் பல பழமையான சொற்களை மலையாளிகள் இன்றளவும் புழங்கி வருவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமிழர்கள்மீதும், தமிழ்த்திரைப்படங்கள்மீதும், தமிழ்த்திரைப்பாடல்கள்மீதும் மலையாள மக்களுக்கு உள்ள ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுடைய மொழி, பழகும் தன்மை, வேர்களைப் பாதுகாக்கும் விழைவு, உணவுமுறை என்று பலவற்றைக் கூர்மையாகக் கவனிப்பேன். அப்போதெல்லாம், என்றோ விலகிப்போன உறவுகளோடு இணையும் மீள்நிகழ்வுபோல உணர்ந்திருக்கிறேன்.

வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரி தம் ‘தென் இந்திய வரலாறு’ நூலில் –

“சங்க காலத்தில், இப்போதைய மலையாளப் பகுதி தமிழ்ப்பேசும் நிலமாகவே இருந்தது……….. சங்க இலக்கியத்தில் காணப்படும் பல சொற்களும் சொற்றொடர்களும் இப்போதைய தமிழில் வழக்கற்றுவிட்டபோதிலும், அவை மலையாள மொழியில் இன்றும் வழக்கிலிருக்கின்றன”

என்று குறிப்பிடுகிறார்.

“கன்னடத்தையும் தெலுங்கையும்போல, மலையாள மொழியும் இலக்கிய மரபுச் சொற்கள் பலவற்றைச் சமஸ்கிருதத்திலிருந்து தாராளமாகக் கடன் வாங்கியது. சமஸ்கிருத ஒலிகளைச் சரியாக உச்சரிப்பதற்காக, பழைய வட்டெழுத்து முறையை விட்டுவிட்டு, தமிழ்-கிரந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய எழுத்துமுறையை உருவாக்க வேண்டியிருந்தது”

என்றும் அவர் விளக்குகிறார்.

ஆக, முந்தைய சேரநாடென வழங்கப்பெற்ற இன்றைய கேரள மாநிலத்தில், அவர்தம் மொழியில், உணவில், இசையில் தமிழ்மணம் கமழ்வது வியப்பில்லைதானே?!

 அப்படிப்பட்ட ஒரு தொடர்புதான் ஓணநன்னாளும்.

ஓணம் தமிழரின் பழங்காலப் பண்டிகை என்பதுபற்றி பலர் பேசியும் எழுதியுமிருக்கிறார்கள். இது என் முறை.

ஓணத்திருநாள் திருமாலின் வாமன அவதாரத்தோடு தொடர்புபடுத்தியே கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம்.

‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடிய’ என்று வாமன அவதாரத்தைப் பாடி, ‘திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே’ என்று இளங்கோவடிகள் சிலப்பதிகார ஆய்ச்சியர்க் குரவையில் போற்றும் முன்பே, சங்கப்பாடல்கள் வாமனரைக் குறிக்கக் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப்பாட்டின் தொடக்கமே திருமால் பெருமை பேசுகிறது.

‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்று தொல்காப்பியர் காட்டும் முல்லை நிலத்தின் தலைவன் மாயோனான திருமால் அல்லவா?

முல்லைப்பாட்டு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, சோழநாட்டில் பிறந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மழைமேகத்தை திருமாலோடு ஒப்பிடுகிறார் புலவர்.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல

(முல்லைப்பாட்டு 1-3)

அகன்ற உலகத்தை வளைத்து, சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும்,

மா தாங்கு தடக்கை – திருமகளை அணைத்த வலிமையான கையை உடையவனும்,

நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – மாவலி மன்னன் தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமால்;

அந்தத் திருமாலைப் போல் முகிலானது, கடல்நீரைப் பருகியவுடன், மலைகளை இடமாகக் கொண்டு வலப்பக்கமாக எழுந்துநின்று, விரைந்து பெருமழையைப் பெய்ததாம்.

முல்லைப்பாட்டைப் போல, வாமனரைப் பற்றி வேறு பாடல்களிலும் காணமுடிகிறது. ஆனால், ஓணவிழா அல்லவா நாம் தேடுவது?

சரி, ஓணவிழாவைத் தமிழர்கள் கொண்டாடிய சான்றுகளை எங்கெல்லாம் காணமுடிகிறது?

சங்க இலக்கியத்தில் மதுரைக்காஞ்சியில் ஓணவிழவின் குறிப்பு வருகிறது. பத்திமை இலக்கியங்களில் சிவனைப் போற்றிய நாயன்மாரும், திருமாலைப் போற்றிய ஆழ்வார்களும் ஓணவிழாவைப் பற்றிப் பாடுகிறார்கள்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை, மாங்குடி மருதனார் பாடியது.

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

(மதுரைக்காஞ்சி 590 – 599)

என்ற வரிகளைப் பாருங்கள்…

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நன்னாள்

அவுணர்களைக் கொன்ற, பொன்னால் செய்த மாலையினையுடைய திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், 

வீரர்கள் எப்படித் தெருக்களில் வந்தார்களாம்??

கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  

யானைத் தோட்டி வெட்டின வடுவுடைய முகம்

போர்க்கருவிகளைப் பயின்று தழும்புபட்ட போரைத் தாங்கும் பெரிய கை

தழும்புடைய நெற்றியுடன் காட்சியளிக்கும் போரை விரும்பும் மறவர்கள்-

எப்படி நடந்து வருகிறார்கள்??

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

வண்டுகள் நிறைந்த மலர்ச் சரத்தை அணிந்து வலிமையான களிற்று யானைகளைச் செலுத்தி நடந்து வருகிறார்கள்..

திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், யானைகளைத் தெருக்களில் நடத்திச் செல்கிறார்கள் வீரர்கள்..

இன்றளவும் யானைகள் கோயில்களோடும் திருவிழாக்களோடும் இணைந்திருப்பதைக் காண்கிறோம்.

சங்கநூலான மதுரைக்காஞ்சி நமக்குச் சொல்லும் செய்தி இது.

அடுத்து, சிவனை அம்மையப்பனாகக் கண்ட திருஞானசம்பந்தர், மயிலை கபாலீச்சரத்தில் பாடிய பூம்பாவைப் பதிகத்தில்-

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம்அமர்ந்தான் ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்

(பன்னிரு திருமுறை 2:47:2 திருஞானசம்பந்தர், இரண்டாம் திருமுறை, திருமயிலை கபாலீச்சரம்)

என்கிறார்.

மையிட்ட அழகிய கண்களையுடைய பெண்கள் வாழும் மயிலையில், திருநீறு அணிந்து கபாலீச்சரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அங்கு நடக்கும் ஐப்பசி ஓணவிழாவையும் அடியவர்கள் போற்றுதலையும் காணாமல் போவாயோ பூம்பாவாய் என்று கேட்கிறார்.

ஓணவிழா, சம்பந்தர் காலத்தில் ஐப்பசியில் கொண்டாடப்பட்டதையும் இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

திருமாலையே முழுமுதல் கடவுளாக வழிபட்ட, திருமால் பெருமை பாடிய ஆழ்வார்கள் நெஞ்சுருகி உரைத்தது என்ன?

திருமழிசை ஆழ்வார்-

காணல்உறுகின்றேன் கல்அருவி முத்து உதிர 
ஓண விழவில் ஒலிஅதிர  பேணி
வருவேங்கடவா! என்உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று

(2422, திருமழிசை ஆழ்வார்,  நான்முகன் திருவந்தாதி, மூன்றாம் ஆயிரம்)

என்கிறார்.

நானோ உன்னைத் தேடி திருவேங்கடம் அதனைச் சென்று காணல் உறுகின்றேன்….. நீயோ என் உள்ளம் புகுந்தாய்

கல்அருவி முத்து உதிர ஓண விழவில் ஒலிஅதிர  ….. வேங்கடத்தில், அருவிகளிலிருந்து முத்துக்கள்போல நீர் ஆர்ப்பரித்து விழுகிறது;

அந்த ஒலியோடு தொண்டர்கள் திருமாலைப் போற்றிப் பல்லாண்டு பாடும் ஒலியும் சேர்ந்து வேங்கடமலையில் ஒலியதிர்கிறது என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

சரி, இந்தக் காட்சி நடக்குமிடம் திருவேங்கடத்தில், ஆனால் நடக்கும் நாளோ மாலுக்குரிய நாளான ஓணவிழாவில் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் செய்தி.

அடுத்து, பெரியாழ்வார் தம் திருப்பல்லாண்டில்-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் 

அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் 

 பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே 

 (6, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார்.

நாங்கள் வழிவழியாக ஏழேழு பிறவியிலும் திருமாலுக்கே தொண்டு செய்கின்றோம் என்பவர், திருவோணத் திருவிழவில், அந்திப் பொழுதில் அரியுரு எடுத்தவனைப் பல்லாண்டு பாடுவோமென்கிறார். நற்றமிழில் நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிடுகிறார்.

ஆயினும், திருவோணத்தைக் குறிப்பிடும் பெரியாழ்வார் வாமன அவதாரத்தை இணைத்துப் பாடாதது இங்கு நோக்கத்தக்கது.

திருப்பல்லாண்டின் மற்றொரு பாடலில்-

உடுத்துக் களைந்த நின் பீதகஆடை உடுத்துக் கலத்ததுண்டு

தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்

விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்

படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

(9, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார் பெரியாழ்வார்.

நீ உடுத்திக் களைந்த பட்டாடையை நாங்கள் உடுத்துகிறோம்; உனக்கு முதலில் கலத்தில் படைத்த உணவையே நாங்கள் உண்ணுகிறோம்; நீ சூடிய துழாய் மாலையை நாங்கள் சூடிக்கொள்கிறோம்;

நீ எங்களைச் செய்யப் பணித்த தொழிலையே செய்யும் நாங்கள்- பாம்பணையில் பள்ளிகொண்ட உமக்குப் பல்லாண்டு பாடுகிறோம், என்று வெறுமனே சொல்லாமல்,

திருவோணத் திருவிழவில்படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

என்று வரலாற்றுத் தகவலையும் தந்து செல்கிறார்.

ஆக, முந்தைய இலக்கியங்கள் வாயிலாக, ஓணவிழா சங்ககாலம் தொடங்கி பத்திமைக்காலத்திலும் தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது நமக்குத் தெரிய வருகிறது.

தமிழர்களாகிய நமக்குக் கிடைத்துள்ள பெரும் சொத்து நம் பழம்பெரும் இலக்கியங்கள். அவை, நம் மூதாதையர் நமக்கென எழுதிச்சென்ற கடிதங்கள். அவற்றைத் தேடித்தேடி மேலும்மேலும் படிக்கப்படிக்க, நம் வரலாறும் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட சமூகமாற்றங்களும் நமக்குப் புரிபடும், நம் உண்மையான அடையாளமும் தெளிவுபெறும்.

நன்றி.

Podcast available on:   Apple   Google     Spotify