சென்ற பதிவில் கண்ட பொங்கல் காட்சியின் தொடர்ச்சிபோலவே, இன்றும் தொடரும் ஏறு தழுவும் வீர விளையாட்டின் சுவைமிகு காட்சிகளை இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.
பொங்கலும் சரி அதைத் தொடரும் ஏறு தழுவலும் சரி, ஊர்க்கூடி இழுக்கும் தேரினைப்போல ஊரார் பங்கேற்றுப் பொதுமக்கள் ஒன்றுகூடித் தொடர்ந்துக் கொண்டாடிவரும் தொல்தமிழர் விழாக்கள். அப்படிப்பட்ட தொல்தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் ஏறு தழுவல் இன்றுவரைத் தொடரும் அழகைக் காட்டுகிறது எட்டுத்தொகை இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகை.
போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீஇயவன் (34-35) எனுமிடத்தில், வீரன் ஒருவன் போர்க்குணத்தோடு தடித்த தோலுடன் தாக்க வரும் காளையின் கழுத்தில்; தார் போல் தழீஇயவன்– மாலைபோலச் சுற்றித் தழுவி நிற்கிறான் என்று விளக்குகிறது கலித்தொகை. ஏறினை மாலைபோலத் தழுவிய உவமையின் காரணமாகவே, இந்த வீர விளையாட்டு ஏறு தழுவுதல் என்றும் ஏறு தழுவல் என்றும் அழைக்கப்படுகிறது.
முல்லைக்கலியைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரனார். கலித்தொகையின் 103ஆவது பாடல், முல்லை நிலத்துத் தோழி தலைவியிடம் கூறுவதாக அமைகிறது. அப்பாடலின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் இருவரும் அரங்கின் மேலிருந்துகொண்டு, கீழே நடக்கும் ஏறு தழுவுதலை நமக்கு நேரடியாக விவரிக்கிறார்கள். மாட்டுப் பொங்கலன்று, தொலைக்காட்சியின் முன் அமர்ந்து ஏறு தழுவலை நீங்கள் பார்ப்பதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
வாருங்கள்! இனி, பண்டைத் தமிழிலக்கியமான கலித்தொகை விளக்கமாகக் காட்டும் தமிழரின் தொன்மையான ஏறு தழுவல் நடக்கும் அரங்கத்துக்குள் செல்வோம்.
அங்கே, பல காளைகளை வைத்திருக்கும் ஆயர்குல ஆடவர் ஏறு தழுவ ஆயத்தமாக நிற்கிறார்கள். அவர்கள், நறுமணம் கமழும் கொன்றை, காயா, வெட்சி, பிடவு, தளவம், குல்லை, குருந்து, கோடல், பாங்கர் என்று பல்வகை மலர்களை அணிந்திருக்கிறார்கள். அவர்களுடைய வீரத்தைக் காணக் காத்திருக்கும் பெண்கள் உயரமான மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய பற்கள், முல்லை மொட்டையும் மயிலிறகின் காம்பையும் ஒத்திருக்கின்றன; பெரிய கண்களையுடைய அவர்களின் காதுகளில் கனமான குழைகள் ஒளிர்கின்றன.
வீரர்களுடன் மோதுவதற்காகக் காளைகள் நிற்கும் இடத்துக்குத் தொழு என்று பெயர். முரட்டுக் காளைகள் எப்படி இருக்கின்றன?
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண்கால் காரியும்,
மீன் பூத்து அவிர்வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடு அணி சேயும் (11-16)
என்றால்- கருத்த நிறத்தில் ஒரு காளை நிற்கிறது. அதன் கால்கள் மட்டும் வெண்மையாக இருப்பது, மலைகளின் மேலிருந்து விழும் வெள்ளருவியைப் போலிருக்கிறது; அந்தி வானின் நிறத்தில் ஒரு காளை, அதன் மேலிருக்கும் வெள்ளைப் புள்ளிகள் வானில் தெளித்த தாரகைகள் போலிருக்கிறது; அடுத்து நிற்கும் சிவப்பு நிறக் காளையின் வளைந்த கொம்பு, சிவபெருமான் தலையில் அணிந்த நிலவைப் போலிருக்கிறது. எப்படியிருக்கிறது பாருங்கள் காளைகளின் மிடுக்குடன்கூடிய அழகு!!
களத்தினுள் குதிக்க ஓரிடத்தில் ஒன்றாக நிற்கின்றன இக்காளைகள். நமக்கு இவை எதை நினைவுபடுத்துகின்றன தெரியுமா?
அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்
பெரு மலை விடர் அகத்து ஒருங்கு உடன் குழீஇ,
படுமழை ஆடும் வரை அகம் போலும் (18-20)
மழை மேகங்களால் சூழப்பட்ட பெரிய மலையின் குகையில் – சிங்கங்களும் குதிரைகளும் முதலைகளும் ஒன்றாகக் கூடியதுபோல் இவை நிற்கின்றன, என்கிறாள் தோழி.
ஏறு தழுவல், வீரத்தை வெளிப்படுத்திப் பெருமைகொள்ளும் விளையாட்டு மட்டுமல்ல, பெண்களை மணமுடிக்க ஆண்கள் பெறும் தகுதிக்கான சிறப்புடைய சமூக நிகழ்வும் என்பதால், மேடைகளின்மேல் பெண்களும் மற்றோரும் நகம்கடித்துக் காத்திருக்கிறார்கள்.
அங்கே மயிர்க் கூச்செறியும் காட்சிகள் அரங்கேறுகின்றன-
தொழுவினுள் மிகுந்த ஆர்வத்துடன் நுழையும் ஒரு வீரனைக் காளை, குத்திக் கிழித்து அவன் குடலைத் தன் கொம்புகளில் சுற்றிக்கொள்கிறது. அச்சமூட்டும் இந்த வேளையிலும் தமிழ்ப் புலவர் உவமைநயத்தை மறக்கவில்லை. இரத்தத்தில் நனைந்துச் சிவப்புக் குடல் சுற்றிய காளையின் கொம்பு எப்படியிருந்ததாம்? ஒளிரும் மழுவேந்திய சிவனார் தலையில் இருக்கும் வெண்திங்களை அழகுசெய்யும் சிவப்புநிற மாலையைப் போலிருந்ததாம்.
அதுமட்டுமா?
அங்கே பாருங்கள்.. குடல் கிழிக்கப்பட்ட அந்த வீரனுக்குத்தான் என்ன துணிச்சல்? அவன் சற்றும் பின்வாங்கவில்லை. காளையின்முன் அச்சமின்றி நின்று, அதன் கொம்பிலிருந்துத் தன் குடலை நீக்கிக்கொண்டிருக்கிறான். அவனுடைய பெருமையை எப்படிப் பாராட்டுவது? குடலை உருவி மாலையாய்ப் போடுவேன் என்று வீரவசனம் பேசுவதெல்லாம் இங்கிருந்து வந்ததுதான் போலிருக்கிறது!
நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)
அடுத்து, எருது வளர்ப்பவர்களின் மகன் ஒருவன் முன்னே தாவி, காளையின் கடினமான கழுத்தை மாலைபோலச் சுற்றிக் கொண்டு இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறான்; மற்றொருவன் மாடு வளர்க்கும் குடும்பத்தினன். அவனோ புள்ளிகளுடைய காளையின் மேலே அமர்ந்துப் பயணிக்கிறான். ஆற்றில் படகு விடுபவனைப் போலக் காளையை அடக்கி ஓட்டுகிறான் அவன்.
நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)
இந்த இளைஞனைப் பார்…. காற்றைப்போல் வேகமாக வந்த இளம் கருப்புக் காளையை வென்று அதன் மேலே நின்றுகொண்டிருக்கிறான்.
இந்தக் காட்சிகளைக் கேட்கும் நமக்கே நடுக்கம் ஏற்படுகிறது.
நேரில் கண்டு விவரிக்கும் தோழியின் நெஞ்சம் நடுநடுங்குகிறது. மற்றொரு வீரனோ, மிகுந்த வேகத்துடன் தன் மேல் ஏறி மிதிக்கும் காளையை, அதன் காதுகளைப் பிடித்துத் தாக்குகிறான். பிடரிமயிர்க் கொண்ட குதிரையின் வாயைப் பிளந்த திருமாலைப் போலிருக்கிறானாம் அந்த வீரன். ஆண்டாளும் திருப்பாவையில் ‘மாவாய்ப் பிளந்தானை’ என்று பாடுவது இங்கு நினைவுக்கு வருகிறது.
மனம் பதைபதைக்கும் விளையாட்டு நிறைவுற்றது. வலிமையான புலிகளும் பெரிய யானைகளும் ஒன்றோடொன்று போரிட்டதுபோலக் காளைகளை அடக்கிய வீரர்கள், தொழுவைவிட்டுச் செல்கிறார்கள். விளையாட்டு அடங்கிய அந்தக் களமெங்கும் காயா மலர்கள் இங்கும் அங்கும் இறைந்து கிடக்கின்றன. கண்களில் மையணிந்த அழகான இளம்பெண்கள், ஆண்களுடன் ஆடி மகிழ்கின்றனர்.
இப்படி ஒரு வீரவிளையாட்டைக் காணும் எவருக்கும் சிலிர்ப்பு ஏற்படுவது இயல்புதானே! அதனால்தான், காளையை அடக்கிய வீரர்களைத் தவிர்த்து வேறு ஆடவரை ஆயர்மகளிர் விரும்பமாட்டார்கள் என்பதை விளக்க,
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள் (63-64)
என்கிறாள் தோழி. காளைகளின் கொல்லும் தன்மையுடைய கொம்புகளைக் கண்டு அஞ்சும் ஆடவனோடு, இந்தப் பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறப்பிலும் இணையமாட்டாளாம் ஆயர்மகள். முல்லைநில ஆயர்கள் வீரத்திற்குக் கொடுத்த சிறப்பிடத்தை விளக்க இந்த வரிகள் மட்டுமே போதும்.
இந்த உணர்வை விளக்க, முல்லைக் கலியைப் படைத்த சோழன் நல்லுருத்திரனாருக்கு மேலே சொன்ன இரண்டு வரிகள் போதவில்லை, 11 வரிகளை எடுத்துக் கொள்கிறார்.
இகுளை! இஃது ஒன்று கண்டை! இகுளை! இஃது ஒன்று கண்டை! – என் தோழியே.. இந்தக் காட்சியைப் பார்… இங்கு நடக்கும் வீரர்களின் தீரச்செயல்களைப் பார் என்று பாடலில் தோழி வியந்து வியந்துத் தலைவிக்கு ஆடவர் ஏறு தழுவும் வீரப்போட்டியைக் கண்ணகலக் காட்டுகிறாள். அவள் காட்டுவதெல்லாம், நமக்குத்தான். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து நாமும் வியந்துச் சுவையுடன் கேட்பதற்குத்தான்.
இந்தப் பாடல் மட்டுமல்ல, தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் பலப்பலக் காட்சிகள் சங்க இலக்கியங்கள் முழுதும் நிறைந்துக் கிடக்கின்றன. இந்தப் பாடலைக்காட்டிலும் வியப்பு ஏற்படுத்துவது ஒன்று உண்டு… அது, இந்தக் காட்சிகளின் சாயலோடு இன்றும் நம் மண்ணில் ஏறு தழுவுதல் தொடர்வதுதான்.
காளையைச் செல்லமாகச் செல்வமாக வளர்ப்பதில் பொதிந்திருப்பது அன்பு; அதை அடக்கவரும் ஆடவரிடம் குடிகொண்டிருப்பதோ வீரம்; முரட்டுக் காளைகளை அடக்கிய வீர இளைஞர்களைக் கைப்பிடிக்கக் காத்திருக்கும் இளம்பெண்களிடம் நாம் காண்பது அச்சத்துக்கும் இளமைதரும் மயக்கத்திற்கும் இடையிலான விளக்க இயலாதத் துறுதுறுப்பு. காதலோ மென்மையான உணர்வு; வீரமோ வன்மையானது. இப்படி நேரெதிர் உணர்வுகளை மையக்கருக்களாகக் கொண்டு போற்றுகிறது சங்க இலக்கியம்.
ஏறு தழுவலின் அன்றைய நோக்கம் இன்றில்லை. இது, கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மட்டுமே கரம்பிடிக்கத் தமிழ்மகளிர் துடிக்கும் காலமுமல்ல; அதற்குத் தேவையுமில்லை. ஆனால் ஒன்றைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏறு தழுவலால் மண்ணுக்குரிய மரபுவழிக் காளைகள் அழியும்முன் காக்கவேண்டியத் தேவை கலித்தொகைக் காலத்தில் இருந்திருக்கவில்லை. பண்பாட்டுச் சடங்குகளால் இயற்கைவிதிகள் பேணப்பட்டதாகவே தெரிகிறது.
கலித்தொகை காட்டிய காட்சிகள் இன்றைய காலத்திற்கேற்ப மாறியுள்ளன. இன்றைய போட்டிகளின்போது நம் காதுகளில் மிகுதியாக ஒலிப்பது- ‘மாடு வெற்றி பெற்றது’ அல்லது ‘மாடு பிடிபட்டது’. இக்காலத்து மரபுமாற்றுச் சந்தையில் உண்மையில் நம் மண்ணுக்குரிய காளைகள் வெற்றிபெறுவதே நமக்கெல்லாம் நன்மை.
காதலும் வீரமும் போற்றிய பழந்தமிழர் பண்பாட்டினுள் புதைந்துக் கிடக்கும் நாகரிகம் செழித்த வாழ்வை அறிந்திடவும் சுவைத்திடவும் மட்டுமல்லாமல், உணர்ந்துப் பேணிடவும் இலக்கியங்களை நாம் நாடிச் செல்வதுதான் ஒரே வழி.
நன்றி.
Podcast available on :