மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்

சென்ற பகுதியில் மதுரை மாநகரைச் சுற்றி வந்தபிறகு, இனி, தமிழின் இனிமையும் உவமைச் செழிப்பும் பொருள் சிறப்பும் பொருந்திய மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்.

1. கரும்பு ஆலைகள் 

வளமான மருத நிலத்திற்குள் நுழைந்தால், அங்கு ஒலிக்கும் பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். அதில் ஒன்று, கரும்பாலைகளின் ஓசை என்று முன்னரே பார்த்தோம்- கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258). கரும்பு ஆலைகள் வைத்துக் கரும்பின் பாகும் கற்கண்டும் உருவாக்கி, அவற்றினின்று பலவித இனிப்புப் பண்டங்கள் செய்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்தது தெரிகிறது. அதனால்தான் தமிழ்ப் பாடல்வரிகளில் எப்போதும் கட்டிக் கரும்பும், கன்னல் சாறும், சர்க்கரைப் பாகும் இனிமைக்கு உவமைகளாக நிற்கின்றன போலும்.

2. அடை, மோதகம், அப்பம்

அப்படி என்னென்ன பண்டங்கள் செய்தனர்?

நல்வரி இறாஅல் புரையும் மெல்அடை
அயிர் உருப்புஉற்ற ஆடுஅமை விசயம்
கவவொடு பிடித்த வகைஅமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர்
(624-626)

நல்ல வரிகளையுடைய தேனடையைப் போன்ற மெல்லிய அடையும், கற்கண்டைச் சூடேற்றிக் கிடைத்த பாகோடு பலவற்றைக் கலந்து உள்ளே வைத்துப் பிடித்துச் செய்த மோதகமும், இனிய பாகுடன் செய்த அப்பமும் விற்பவர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு இரவின் இரண்டாம் சாமத்தில் உறங்கச் செல்கிறார்கள்.

3. ஊன் சோறு

அடுத்து வரும் உணவு வகையான ஊன் சோறு, இன்று பிரியாணி என்று நம்மில் பலரும் விரும்பி விரும்பி நாடிச் செல்லும் உணவை ஒத்தது. இந்த ஊன் சோறு சங்க காலத்தில் பரவலாகப் பரிமாறப்பட்டதைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில் நமக்குக் காட்டுகின்றன.

அது, பலரும் புகழும்படி சமைக்கப்பட்ட பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோறாம். அதனால்தான் மதுரைக் காஞ்சி – ‘புகழ்படப் பண்ணிய பேர் ஊன்சோறு’ (533) என்று பலரால் விரும்பப்பட்ட அதன் தன்மையை எடுத்தியம்புகிறது.

பரதவரைப் பாண்டியன் வெற்றி கொண்டதைச் சொல்லும்போது, அவர்கள் பகுதிகளில் கோழ் ஊஉன் குறைக்கொழு வல்சி (141) உண்ணப்பட்டது தெரிகிறது. அதாவது, கொழுத்த இறைச்சியுடன் சமைக்கப்பட்ட சோறு வழங்கப்பட்டது.

4. தோலால் செய்யப்பட்ட செருப்பு

மூன்றாம் யாமத்தில், கரிய பெண் யானையின் தோலைப் போன்ற கருமையான இருள் பரவிக் கிடக்கிறது. ஊர் நிம்மதியாக உறங்கும் அந்நேரத்தில், மழை பெய்து தேர்கள் இயங்கும் தெருவில் நீர் திரண்டு ஓடுகிறது. அந்தச் சூழலிலும், சோம்பலோ தளர்ச்சியோ இல்லாமல் ஆர்வத்துடன் காவல் காக்கிறார்கள் ஊர்க் காவலர்கள்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
(643-644)

வலிமையான ஆண்யானையை இரையாக எண்ணிப் பார்க்கும் வலிய புலியைப் போல், துஞ்சாத/தூங்காத கண்களை உடையவர்களாக அஞ்சாத கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள்.

கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோல் அடியர்
(635-636)

கற்களையும் மரங்களையும் வெட்டும் கூர்மையான தொங்கிய வாளும், தொடையோடு பொருந்திய- கைப்பிடியுடன்கூடிய கூரிய வாளும், நூலாலான ஏணியும், நிலத்தைத் தோண்டும் உளியும் தாங்கி, தெருக்கள்தோறும் இக்காவலர்கள் உலவுவதால் மக்கள் மன அமைதியோடு தூங்குகிறார்கள். அவர்களுடைய கால்களை கவனித்தால் என்ன தெரிகிறது? அவர்கள் தோலாலான காலணிகளை அணிந்திருக்கிறார்கள். இளங்கன்று மற்றும் ஆட்டின் தோல் கொண்டு இசைக் கருவிகள் உருவாக்கப்பட்டது அறிவோம். தோலைக் கொண்டு காலணிகள் செய்து அணிவது அக்காலத்திலேயே இயல்பான ஒன்றாக இருந்தது என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.

5. கஞ்சியுடைய ஆடை / சிற்பம் 

அடுத்து ஒரு காட்சி- காலையில் கண்விழிக்கிறார் மன்னர். சந்தனச் சாந்தைப் பூசிக் கொள்கிறார். முத்து வட மாலை அணிந்த மார்பில் தேனீக்கள் மொய்க்கும் பூமாலை அணிகிறார். அழகிய மோதிரம் பொருந்திய வலிமையான பெரிய கையில் வீரவளையலுடன் காட்சி தருகிறார். 

அவருடைய ஆடை எப்படி இருக்கிறது? 

சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ
(721-722)

சோறு வடிக்கையில் கிடைக்கும் நீர்- அதாவது கஞ்சி இட்டுத் துவைத்த ஆடையை, உடைக்கு மேல் அணிகலன்கள் பொலிவுற அணிந்திருக்கிறார். கஞ்சியிட்ட மிடுக்கான ஆடை அணியும் வழக்கம் அன்றே இருந்ததையும் மதுரைக் காஞ்சி பதிவு செய்கிறது. கஞ்சியிட்ட மிடுக்கான ஆடையும் அணிகளும் மாலையும் உடுத்திய அரசர் எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கிறார் தெரியுமா?

வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி
(723 – 724)

சிற்ப நூலைக் கற்றுத் தேர்ந்த வல்லவன் செய்த முருகனின் சிற்பம் போன்ற அழகிய வடிவத்துடன் இருக்கிறார்.

6. கல்லணை

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அடுத்து, இத்தனை அழகு பொருந்திய, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வருபுனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து
ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்
(725-726)

கரை புரண்டு வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தும் கல்லணைபோல, தம் படைகளைத் தாக்க வரும் பகைவர்களைத் தடுக்கும் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள். ‘வருபுனல் கற்சிறை’ – வரும் புனலைத் தடுக்கும் கற்சிறைதான் கல்லணை. கல்லால் அணை கட்டுவது தொன்மைத் தமிழரின் நீர் மேலாண்மைத் திறம் இல்லையா? அந்தச் சொல்லாக்கமும் ‘வருபுனல் கற்சிறை’ என்று எவ்வளவு அழகாக அமைந்துள்ளது பாருங்கள்.

மன்னரின் பெருங்கொடை

பாணர் வருக, பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி
(749 – 752)

பாணரையும் அவர்கள் குடும்பத்தில் உள்ள பாடும் பெண்களையும், செய்யுள் இயற்றும் திறமையுடைய புலவர்களையும், ஆடற்கலைஞர்களாகிய கூத்தர்களையும் ‘வருக வருக’ என்று வரவேற்றுப் பரிசுகள் அளிக்கிறார் மன்னர். இந்தக் கலைஞர்கள் தம்முடைய பெரிய சுற்றத்தாரை உடன்வைத்துப் பாதுகாக்கும் தன்மையுடையவர்கள். அவர்களுக்குத் தாமரை வடிவில் உறுப்புகள் உடைய நெடிய தேர்களை யானைகளுடன் அளிக்கும் பெரும் கொடையாளர் பாண்டியன் நெடுஞ்செழியன்.

கொடையும் வளமும் செழிப்பும் நிறைந்த நாட்டில் –

களம் தோறும் கள் அரிப்ப
மரம்தோறும் மை வீழ்ப்ப
நிணஊன் சுட்டு உருக்கு அமைய
நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால்
(753-758)

இடந்தோறும் கள்ளை அரிக்கிறார்கள், மரத்தடிகள்தோறும் செம்மறிக் கிடாக்களை வெட்டுகிறார்கள், ஆட்டின் கொழுப்பு நிறைந்த தசைகளைச் சுடுகிறார்கள், நெய்யுடன் பொரியல்கள் சமைக்கிறார்கள். ஆட்டுத் துண்டுகளைச் சுடும்போதும் பொரியலை நெய்யில் தாளிக்கும்போதும் எழுந்த புகை, மழை வரும் முன் வானில் எழும் கருமுகில்போலப் பரவுகிறதாம்.

எவ்வளவு நயமாகச் சொல்கிறார் புலவர்!

இப்படி, இயற்கை வளம், உயரிய வளர்ச்சி, பல்தொழில் திறன், சீரிய கோட்பாடுகள், மாறுபட்ட வழிபாட்டு நெறிகள் இருப்பினும் கலந்தே இனிதுறையும்  பண்பட்ட மனப்பாங்கு, உள்நாட்டு அங்காடிகள், ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நடந்த வெளிநாட்டு வணிகம், போர் வெற்றிகள், கலை வளர்ச்சி, வழங்கிய கொடைகள் என்று பண்டைய தமிழ்நாட்டின் பன்முக வரலாறைத் தெளிவாகக் காட்டும் ஆவணங்களாகத் தமிழ் இலக்கியங்கள் நமக்குக் கிட்டியிருப்பது தமிழ்க் குடியில் பிறந்த நமக்குக் கிடைத்த பெரும் பேறு.

இன்று, ட்ரோன்களின் உதவியுடன் கவின்மிகு காட்சிகள் நம்மை எளிதில் வந்தடைகின்றன. ஒலியும் ஒளியும் நிறங்களும் நிறைந்த அக்காட்சிகள் நம் மனங்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன. எந்தத் தொழில்நுட்பமும் இன்றி, மதுரை மாநகரின் அன்றாட வாழ்வைத் தம் எழுத்தாற்றலால் செம்மையாக நமக்களிக்கிறார் மாங்குடி மருதனார். அவருடைய படைப்பிலிருந்து நாம் இங்கு பார்த்தது சுருக்கமான ஒரு பருந்துப் பார்வை எனலாம்.

தமிழ் மொழியின் வளனையும் அம்மொழியில் இலக்கியம் படைத்தோரின் திறனையும் தாண்டி இங்கு தனித்துத் தெரிவது, இன்றும் நாம் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஊரும், அதில் வாழும் மக்களும், அவர்கள் தொழிலும், வாழ்வும்தான்.  

பருந்துப் பார்வையிலேயே இத்தனைச் செய்திகள் என்றால், படிக்கப் படிக்கத் திகட்டாத இன்பம் தருகின்ற பற்பலக் காட்சிகளைத் தாங்கி நிற்கும் பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் படித்துத்தான் பாருங்களேன்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்

முந்தைய பகிர்வில், மதுரைக்காஞ்சி வழியாகப் பாண்டிய நாட்டு வளத்தைப் பார்த்தோம். இனி மதுரை மாநகரைச் சுற்றி வருவோம்.. வாருங்கள்.

மதுரை மாநகர் எப்படி இருந்தது?

782 அடிகள் கொண்டது மதுரைக்காஞ்சி. அதில், 327ஆவது வரியில் தொடங்கும் மதுரையின் சிறப்பு, 699ஆவது வரியில் நிறைவடைகிறது. 372 வரிகளில் மதுரை நகரை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ஆசிரியர்.

புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை
(698 – 699)

வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து காணும் அழகும், மிகுந்த புகழும் எய்திய பெரிய சிறப்பையுடையது மதுரை. 372 வரிகளில் அம்மாநகரின் அமைப்பையும் பலதரப்பட்ட மக்களையும் அவர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு காட்சிகளையும் நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துகிறார் புலவர் மாங்குடி மருதனார். இன்றுபோல் புகைப்படங்கள், காணொலி, குறும்படம் போன்ற வெளிப்பாட்டு ஊடகங்கள் இல்லாத காலத்தில், சொற்களால் நம் கைப்பிடித்துக் கூட்டிச் சென்றுக் காட்டுகிறார் ஆசிரியர்.

மதுரையின் அகழியும் மதில்களும் மாடங்களும் வாயிலும் வீடுகளும் தெருக்களும் எப்படி இருந்தன?

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

  • மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கு – நீலமணி போன்ற நீரையுடைய ஆழமான கிடங்கு
  • விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை- வான் அளவு உயர்ந்த மதில்,  
  • நெய்படக் கரிந்த திண்போர்க் கதவு – நெய்யை ஊற்றியதால் கருத்த-திண்மையான கதவு
  • மழை ஆடும் மலையின் நிவந்த மாடம்- முகில் உலவும் மலைபோன்ற உயர்ந்த மாடங்கள்
  • வையை அன்ன வழக்குடை வாயில்- வையை ஆறுபோல் மக்கள் பயன்படுத்தும் பெரிய வாயில்
  • சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மெல்லிய இசையாக ஒலிக்கும்  சில்லென்ற தென்றல் வீசும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள்,
  • யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு – ஆறு கிடந்ததுபோன்ற அகலமான நெடிய தெருக்கள்

நம் கண்முன் காட்சி மெல்ல விரிவடையத் தொடங்குகிறது.

அப்படியே நடந்து சென்றால், நாளங்காடியில்- உணவுப் பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கூடைகளில் பூக்கள் மற்றும் பூமாலைகள் விற்பவர்கள் இருக்கிறார்கள்; பலவித சிறுவணிகர்கள் தத்தம் பொருட்களை விற்கிறார்கள். கூந்தல் நரைத்த தொல் முதுபெண்டிரும் உழைத்துப் பொருளீட்டுகிறார்கள்.

நாள்பொழுதில் விழாவைக் கண்டுகளிக்க, செல்வந்தர்கள் வருகிறார்கள். அவர்கள் பளிச்சென்ற ஆடைகளுடன் பொன்னால் அழகு செய்யப்பட்ட வாளையும், மலர் மாலைகளையும், மார்பில் முத்து மாலையும் அணிந்திருக்கிறார்கள். 

செல்வமகளிர், மணிகளையுடைய பொற்சிலம்பும், பொன்னால் செய்த அணிகலன்கள், வளையல்கள் மற்றும் ஒளியுடைய காதணிகள் அணிந்து வருகிறார்கள். அவர்கள் பூசியிருக்கும் வாசனைப் பொருட்களின் நறுமணம் தெருவெங்கும் பரவியிருக்கிறது.

இவர்களோடு குலமகளிர், பரத்தையர், பிள்ளை பெற்ற மகளிர், தாய்மையடைந்த பெண்கள் தத்தம் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் அவரவர் வழிபாட்டு நெறிகளைச் சச்சரவின்றிக் கடைபிடிக்கின்றனர் – பெளத்த பள்ளியும் அந்தணர் பள்ளியும் சமணர் பள்ளியும் தத்தம் முறைகளில் செயல்படுகின்றன.

இது மட்டுமா?

சிறந்த கொள்கையுடைய அறம் கூறும் அவையம்- நீதி மன்றங்கள், அன்பும் அறனும் ஒழியாது காக்கும் அமைச்சர்கள், அறநெறி பிழையாது சிறந்த நாடுகளின் பண்டங்களை விற்கும் வணிகர்கள், நாற்பெரும் குழுவினர் என்று பலதரப்பட்டோர் வாழும் தெருக்களைக் காணமுடிகிறது.

அப்படியே தெருக்களில் தொடர்ந்து நடந்து சென்றால், கடலில் கிடைத்த சங்கினை அறுத்து வளையல் செய்பவர்கள்; அழகிய மணிகளில் துளை இடுபவர்கள்; பொன்னைச் சுட்டு நகைகளைச் செய்வோர்; பொன்னைக் கல்லில் உரசிப் பார்த்துத் தரம் பார்ப்போர்; துணி விற்பவர்கள்; கச்சுக்களை முடிப்பவர்கள்; செம்புப் பொருட்களை எடையிட்டு வாங்குபவர்கள்; மலர் விற்பவர்கள், நறுமணச் சாந்து விற்பவர்கள் என்று பல்வேறு தொழில் செய்வோரைக் காணமுடிகிறது. 

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அங்கே, கூர்மையான அறிவுடைய ஓவியக் கலைஞர்கள் ஓவியம் தீட்டுகிறார்கள்; சிறிதும் பெரிதுமான மடித்த துணிகளை, அவற்றை நெய்து வந்த வணிகர்கள் விற்பனை செய்கிறார்கள்.

சாறும் மணமும் நிறைந்த பலாச் சுளையும் மாம்பழமும், பல்வேறு வடிவிலான காய்களும், பழங்களும், கீரைகளும், இனிப்பான சாறுடைய கற்கண்டுத் துண்டுகளும், கீழே விளைந்த கிழங்குகளும் கலந்து, சோற்றினைக் கொடுப்போர் கொடுக்க, பெற்றுக் கொள்பவர்கள் உண்ணுகிறார்கள்.

இப்படியே அந்தி நேரம் முடிந்து இரவு வந்து, இரவில் முதல், இடை, கடைச் சாம நிகழ்வுகளைக் காட்டுகிறார் ஆசிரியர். அடுத்து, பொழுது புலர்கிறது. விடியற்காலையில் மதுரை எப்படி இருக்கிறது?

அந்தணர்கள் வேதம் பாட, யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைக்க, யானைப் பாகர்கள் யானைக்குக் கவளம் ஊட்ட, தேரில் கட்டப்படும் குதிரைகள் புல்லை உண்டு கனைக்கின்றன. பண்டங்கள் விற்கும் கடைகளில் தரையை மெழுகுகிறார்கள். கள்ளை விற்பவர்கள் விலை கூறி விற்கிறார்கள். இல்லத்துப் பெண்கள் தங்கச் சிலம்புகள் ஒலிக்க நடந்து வந்து, தத்தம் வீடுகளின் கதவுகளைத் திறக்கிறார்கள்.  

இதுதான் மாங்குடி மருதனார் காட்டிய ‘புத்தேள் உலகம் கவினிக் காண்வர மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை (698 – 699)’- வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து காணும் அழகும், மிகுந்த புகழும் அடைந்த சிறப்பையுடைய மதுரை மாநகர். ஊரைச் சுற்றி வந்த உணர்வு எப்படி இருந்தது என்று நீங்கள்தான் கூறவேண்டும்.

அடுத்த பகுதியில், மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்

தமிழின் தொன்மை இலக்கியங்களான எட்டுத் தொகை-பத்துப் பாட்டு நூல்கள், அக்காலத்தே செழித்திருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும் அதன் சிறப்புக்களையும் எண்ணியெண்ணிக் களிப்படையச் செய்பவை; படிக்கப் படிக்கச் சிந்திக்கத் தூண்டுபவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மண்ணின் நிகழ்வுகளை நேரலைபோல நமக்குக் காட்டுபவை.

சங்க இலக்கியங்கள் மீது அதைப் படிப்பவர்களுக்குத் தீராத ஈர்ப்பு வருவது எதனால்? அவரவர் பார்வைக்கேற்ப காரணங்கள் பலவாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் முதன்மையான காரணம், அவை உங்களையும் என்னையும் போன்ற இயல்பான மக்களின் அன்றாட வாழ்வு சார்ந்த படைப்புக்கள் என்பதுதான். நாம் வாழும் சமூகத்தில் நம் அண்டை வீட்டாரையும், தெருவில் வசிப்போரையும், ஊர்க்காரர்களையும்; சிரிப்பு, அழுகை, கோபம், அச்சம், காதல் என்ற அவர்களின் பலவித உணர்வுகளையும் காட்டும் நம் மண்ணின் இலக்கியங்கள், நமக்குப் பல கதைகள் சொல்லுகின்றன.

அப்படி, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடியது. வாழ்வின் நிலையாமையை முன்னுரிமை கொண்டு பாடும் இப்படைப்பு, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு, இரவு ஆகிய வேளைகளில் மதுரை மாநகரின் வெவ்வேறு காட்சிகளை மிகுந்த சுவையுடன் உரைக்கிறது. அந்தக் காட்சிகளினூடே ஆசிரியர் மாங்குடி மருதனார் வியப்பூட்டும் பற்பல தகவல்களை அளிக்கிறார்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

வாழ்வின் நிலையாமையைக் கூறும்பொருட்டு இயற்றப்பட்ட இலக்கியத்தில் காட்டப்படும் மதுரை நகரின் செழிப்பையும் மன்னன் பெருமையையும் கேட்கும்போது, அங்கு வாழாது போனோமே என்று மனம் வருந்துகிறது; வாழ்ந்திட நெஞ்சம் ஏங்குகிறது. சரி, அப்படிப்பட்ட காட்சிகள்தான் என்னென்ன?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியத்தில் நாம் காணும் காட்சிகளை-

  1. மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்
  2. மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்
  3. மதுரைக்காஞ்சியில் வியக்க வைக்கும் சில செய்திகள்

என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

முதலில் மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்.

பாண்டிய நாட்டின் செழிப்பைக் கூறுகையில் – 

மழைதொழில் உதவ மாதிரம் கொழுக்க,
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்புநந்த,
நோய் இகந்து நோக்கு விளங்க
(10-13)

என்கிறார் புலவர். உழவருக்கு மழை உதவ, நிலமும் மரமும் பயன்களை அள்ளி வழங்க, நோய்களின்றி மக்கள் மகிழ்வுடன் விளங்கிய நாட்டின் தலைவனாம் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். தொல்முது கடவுள் சிவனின் வழித்தோன்றல் அவர் என்று உரைக்கிறார் புலவர். இதனிடையில் இன்றும் நாம் ஏங்கும் ஒன்றைச் சொல்கிறார்- ‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய’ எனும்போது, ஒரே விதைப்பில் விதைகள் ஆயிரம் ஆயிரமாகப் பயன்தரும் வளமான மண்ணை ஆண்ட குடி பாண்டியர் குடி என்பது தெளிவாகிறது.

நெடுஞ்செழியன் ஆண்ட தமிழ்மண்ணின் எல்லைகள் என்னவாக இருந்தன?

தென்குமரி வட பெருங்கல்
குணகுட கடலா எல்லை
(70-71)

தெற்கில் குமரிக் கடலும் வடக்கில் பெரிய மலையும் எல்லைகளாக இருந்தன. இங்கே பெரிய மலை என்பது திருவேங்கட மலை என்பது அனைவரும் அறிந்ததுதானே? கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு, கொற்றவர் தம் கோனாக விளங்கிய மன்னர் அவர்.

பாண்டிய நாட்டின் ஐவகை நிலங்களின் காட்சிகளை வரிசையாக விவரிக்கிறார் ஆசிரியர். 

மருத நிலத்தில்-

களிறு மாய்க்கும் கதிர்க் கழனியைக் (247-248) காண்கிறோம். அதாவது, யானைகளையே மறைக்கும் அளவிற்குக் கதிர்கள் வயல்களில் வளர்ந்துள்ளன.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அந்நிலத்தில் எழும் பலவித ஒலிகளுக்கு இடையில் நாம் கேட்பது-

கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258)- கரும்பு ஆலைகளின் ஓசையும்;

தளிமழை பொழியும் தண்பரங்குன்றில் கலிகொள்சும்மை ஒலிகொள்ஆயம் (263-264)

முகில்கள் மழையைப் பொழியும் குளிர்ச்சி பொருந்திய திருப்பரங்குன்றத்தில் விழாக்களின் ஒலி நம் செவிகளை நிறைக்கிறது.

முல்லை நிலத்தில் –

தினை எள் மற்றும் வரகின் கதிர்கள் முற்றி விளைந்து நிற்கின்றன. 

பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி
மடக்கண் பிணையொடு மறுகுவன உகள
(275-276)

மிகவும் அழகான, சிறிய தலையையுடைய நெளவி மான் தன் பெண் மானுடன் சுழன்றுத் துள்ளி விளையாடுகிறது.

குறிஞ்சி நிலத்தில் ஒரே ஆரவாரமாக இருக்கிறது-

தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை விரட்டும் ஒலியும், தளிர்களை மேயும் காட்டுப் பசுவைக் கானவர் விரட்டும் ஓசையும், தான் தோண்டிய குழியில் விழுந்த ஆண் பன்றியை மலைக்குறவன் கொல்லும் ஒலியும், வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் நறுமண மலர்களைப் பறிக்கும் பெண்கள் ‘புலி புலி’ என்ற கூவிக்கொண்டே பறிக்கும் ஒலியும் சேர்ந்து, வெள்ளை அருவியின் ஒலி மலையில் எதிரொலிக்கிறது.

வறண்ட பகுதியான பாலை நிலத்திலோ-

அருவிகள் இல்லாது அழகிழந்து நிற்கிறது பெரிய மலை, வைக்கோல்போல் ஊகம்புல் நிறைந்துகிடக்க உலர்ந்திருக்கிறது காடு, சூறாவளிக் காற்று கடல் போல் ஓங்கி ஒலிக்கிறது. அந்தச் சூழலில், இலையால் வேய்ந்த குடிசையில்- மான் தோல் படுக்கையில்- இளைஞர்கள், தங்கள் கைகளில் வில்லினை ஏந்திக் கள்வர் வராமல் காக்கிறார்கள்.

நெய்தல் நிலத்திலோ-

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்து உடன்கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
(321-324)

சிறந்த மரக்கலங்களைக் கடலில் இயக்குபவர்கள் பெரிய நாடுகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் தாங்கள் கொணர்ந்த குதிரைகளை விற்று, இங்கிருந்து அணிகலன்களைக் கொண்டு செல்லும் வளமான வணிகம் ‘வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப’- நாள்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

மதுரைக்காஞ்சியின் வரிகளைப் படிக்கும்போது நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அத்தனையும் வரலாற்றுத் தரவுகள். தமிழகத்தின் வளமான நிலங்களில் என்னென்ன விளைந்தன? தினை, எள், வரகு, மூங்கில் நெல், வெண்கடுகு, வெண்ணெல்லும்; இஞ்சி, மஞ்சள், மிளகு, இனிய புளி, வெள்ளுப்பும்; அகிலும் சந்தனமும்; கீரையும் கிழங்கும்; பலாவும் மாங்கனியும் …. என்று பெரிய பட்டியலிடலாம்.

இப்படி, சிவனின் வழிவந்தவன்-திருவில் பாண்டியனின் வழித்தோன்றல் என்று மன்னனைச் சுட்டி, யானை-குதிரை-தேர்-வீரர் படைகளின் வலிமையைப் பாராட்டி, நாட்டின் நால்திசை எல்லைகளைக் காட்டி, போர் வெற்றிகளைக் குறிப்பிட்டுக்  கொற்றவர்களுக்கெல்லாம் கோனாக இருக்கும் நெடுஞ்செழியன் பெருமை கூறித் தொடங்குகிறது மதுரைக்காஞ்சி. இலக்கிய நெறியுடன் வரலாற்றுத் தகவல்களின் பெட்டகங்களாக விளங்குவது தமிழ் இலக்கியங்களின் சிறப்பு.

இந்த முதல் பகுதியை அடுத்து, மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகரையும் மதுரைக்காஞ்சியில் வியக்க வைக்கும் சில செய்திகளையும் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்


ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம்.. நாடுவிட்டு நாடு பணியிடம் மாறிவந்ததால் தொடர்ந்து பதிவுகளைத் தர இயலாமல் போனது.

இந்த இடமாற்றம் பற்றியதுதான் இன்றைய பதிவு.

இப்படி நாடுவிட்டு நாடுசென்று வாழ்வு அமைத்துக் கொள்வதைத் தமிழில் எப்படிக் குறிக்கிறோம்?  ‘புலம்பெயர்தல்’ என்று சொல்கிறோம். இன்றும், புலம்பெயர்ந்த இந்தியர்கள்/ புலம்பெயர் தமிழர்கள் என்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா?

பொதுவாக, வெளிநாடுவாழ் இந்தியர்/ அயலகத் தமிழர் ஆகிய சொற்களை அரசுகள் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது.  ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படுவது குறித்தும் செய்திகளைச் சமீபத்தில் கண்டோம்.

இன்றும் நம்மிடையே புழங்கிவரும் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் என் மனதில் தங்கிப்போனது.

‘புலம்பெயர்தல்’ எவ்வளவு பழமையானது என்பதைவிட, ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் எவ்வளவு பழமையானது என்று தேடத் தோன்றியது. ஏனென்றால், தமிழர்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்றதும், வேற்றுநாட்டவர் தமிழகத்தில் வாழ்ந்ததும் சங்ககாலம் தொட்டு இருந்துவந்ததுதான். இலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுக்கள் வழியாகவும் இதை அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது’ என்று கூறியதாகக் கட்டுரைகளில் வாசித்தேன். ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : கோவை-சிறப்பு மலரில், அவருடைய ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தபோது, செம்மொழிக்கான பண்புகளாக – ‘தொன்மை, தொடர்ச்சி, செழுமை வளம்’ ஆகியவற்றை அவர் குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.

தமிழ்மொழி இன்றும் நம்மிடையே வழக்கொழியாது இருப்பதற்கு அதன் தொடர்ச்சியே முதன்மைப் பங்கு வகிக்கிறது. அப்படி, தொடர்ந்து நாம் பயன்படுத்தும் எண்ணிலடங்காச் சொற்களுள் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லின் தொன்மையை இன்று பார்ப்போம்.

மக்கள், தாம் வாழுமிடம்விட்டு வேறோர் இடம் புலம்பெயர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கல்வி, வேலை, வணிகம், போர் என்று பட்டியலிடலாம். தொல்காப்பியரும்-

‘ஓதல் பகையே தூதிவைப் பிரிவே’ 

என்று பிரிவு ஏற்படும் சூழல்களைக் காட்டுகிறார்.

நாம் இங்கு பார்க்கப்போவது, சங்கப் பாடல்களில் ‘புலம்பெயர்தல்’ என்னும் சொல்லாட்சி எப்படிப்பட்ட சூழல்களில் எல்லாம் வருகிறது என்பதைத்தான்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ஒரு பாடல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பொருள் ஈட்டுவதற்காகப் பிரியும் தலைவனிடம் தோழி, பிரிவின் துன்பம் குறித்துக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தன் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து

பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி

அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

(நற்றிணை 183)

என்பன முதல் சில வரிகள்.

மருத நிலத்து உமணர் – அதாவது உப்பு வணிகர்கள், தம் நாட்டில் விளைந்த நெல்லை, கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் உள்ள உப்பிற்கு விலையாகக் கொடுப்பார்கள். அதாவது, நெல்லை உப்புக்குப் பண்டமாற்றாகக் கொடுத்து வாங்குவார்கள்.  உப்பு வாணிபத்தில் ஈடுபடும் உமணர்,  தம் சுற்றத்தாரோடு நிலவுபோன்ற வெள்ளை மணலில், நீண்ட வழித்தடத்தில் வண்டிகளைக் கட்டிக்கொண்டு, நிலம்விட்டு மற்ற நிலத்திற்குப் புலம்பெயர்ந்துச் செல்வார்களாம். அப்படி அவர்கள் புலம்பெயர்ந்து செல்வதுகண்டு, அந்த ஊரில் இருப்பவர்கள் வருந்துவார்களாம். அதுபோல, உன் பிரிவால் தலைவி துன்பப்படுவாள் என்று தோழி கூறுகிறாள். 

ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

சுற்றத்தாரோடு புலம்பெயர்ந்து உமணர் போவது துன்பம் தரும், எனுமிடத்தில் ‘புலம்பெயர்தல்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரும் அகநானூற்றுப் பாடலைப் பாருங்கள்.

வேம்பற்றூர் குமரனார் எழுதிய பாடல், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைகிறது பாடல்.

முனை புலம்பெயர்த்த புல்லென் மன்றத்துப்

பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்

வினை அழி பாவையின் உலறி,

மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கே

(அகநானூறு 157)

என்று முடிகிறது பாடல். தலைவன் சென்றுள்ள கொடிய வழியைப் பாடலின் தொடக்க வரிகள் விளக்குகின்றன. பிரிந்து செல்லும் முன் தலைவன் தலைவிக்கு ஊக்கம்தரும் சொற்களைச் சொல்லிச் சென்றிருக்கிறான். அதைத் தலைவி தோழிக்குச் சொல்கிறாள்.

அச்சம் தரும் வழியில் தனியாகச் சென்ற நம் தலைவர் என் மனதிற்கு ஆறுதல் அளிக்க, முன்பெல்லாம் என்ன சொல்லுவார் தெரியுமா?

‘போர் நிகழ்கிறது. ஊரில் நலமாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தம் இடம் பொருள் இழந்து பாதுகாப்பான இருப்பிடம் நோக்கிப் புலம்பெயர்ந்துப் போய்விட்டனர். அதனால் பொலிவிழந்து காணப்பட்டது ஊர்மன்றம். எல்லோரும் புலம்பெயர்ந்து போன பிறகும், ஊர்மன்றத்தில் வைக்கப்பட்ட பெண்சிலை ஒன்று இருக்கும். அது மழை பெய்யும்போது நெகிழ்ந்தும், வெய்யில் காய்கையில் வெளுத்துப்போயும் தனியாக நிற்கும். 

அந்த மன்றத்துப் பொலிவிழந்த பாவைபோல, வீட்டில் தனித்திருக்க யாரால் முடியும்? உன்னைப் போன்று மனவலிமை உடையவர்களால் மட்டும்தான் அது முடியும்’, என்று தலைவர் என்னிடம் சொல்வார். ஆனாலும் அவரைப் பிரிந்து தனியாக நாட்களை என்னால் கழிக்க இயலவில்லை, என்று தலைவி புலம்புகிறாள்.

முனை புலம்பெயர்த்த புல்லென்மன்றத்து’

மக்கள் புலம்பெயர்ந்து சென்றதால் பொலிவிழந்த மன்றம் என்கிறது பாடல்.

புலம்பெயர்தலைத் தேடப் போய், பாடலின் இனிமையில் மயங்கிவிட்டோம் பாருங்கள்.

மற்றுமோர் அகநானூற்று பாடல், மாமூலனார் பாடியது. 

கோடு உயர் பிறங்கல் குன்றுபல நீந்தி,
வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய

(அகநானூறு 393)
என்று தொடங்கும் பாடல் அது.

இங்கே, புல்லி என்ற மன்னன் ஆளுகின்ற வேங்கடமலை பற்றிய வண்ணனையைக் காணமுடிகிறது.

வேங்கட மலையின் வளமும், நாட்டுப்புற வாழ்வும் தனியாக மற்றொரு பதிவில் பார்க்கவேண்டிய தகவல்கள். 

கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அதாவது – உயர்ந்த சிகரங்களையுடைய, பாறைகள் நிறைந்த குன்றுகள் பலவற்றைக் கடந்து சென்று, 

வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து- அதாவது – வேறொரு நாட்டில் பொருள் தேடும் எண்ணத்தோடு – 

புலம்பெயர்ந்து செல்லும் தலைவன், உன்னை மறவாது திரும்பி வருவான், என்று பிரிவினால் வருந்தும் தலைவிக்குத் தோழி கூறுவதாக அமைகிறது பாடல்.

இதுவரை நாம் படித்த எட்டுத்தொகைப் பாடல்கள் மூன்று. இரண்டில் பொருள் ஈட்டுவதற்காக இடம் மாறுவது ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லால் காட்டப்பட்டது. ஒன்றில், போரினால் ‘புலம்பெயர்ந்ததைப்’ பார்க்கமுடிந்தது.

இன்றும் புழக்கத்தில் உள்ள ‘புலம்பெயர்தல்’ என்ற சொல், பத்துப்பாட்டில் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடை, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடியது.

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

(நெடுநல்வாடை 1-5)

என்று பாடலின் தொடக்கமே, வெள்ளப் பெருக்கால் தம் இடத்தைவிட்டு வேறோர் இடம் நகரும் இடையர்களைக் காட்டுகிறது.

பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்-

வானம் புதிய மழையை அளவில்லாது பொழிந்ததை வெறுத்த வளைந்த கோல்களையுடைய இடையர், 

ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

தம் காளைகளை வேறு நிலங்களில் மேயவிட்டு, புலம்பெயர்ந்து, தனிமையில் கலங்கித் தவித்தனராம்.


அடுத்து, மலைபடுகடாம் – ‘புலம்பெயர்வைப்’ பயன்படுத்துகிறது. 

மலைபடுகடாம் ‘கூத்தராற்றுப்படை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். நன்னன் வேண்மான் என்ற மன்னனின் நாட்டுச்சிறப்பு, போர்த்திறன், மலைவளம் போன்றவை விவரிக்கப்படுகின்றன மலைபடுகடாமில்.

ஆற்றுப்படை நூல் இல்லையா? ஒரு பாணர் வறுமையில் வாடும் மற்றொரு பாணரை மன்னரிடம் சென்று, தாம் பெற்றதுபோல் செல்வத்தைப் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். தம் இடத்தைவிட்டுப் பிரிந்து, செல்வம் பெற்றுவரும் பொருட்டு, புலம்பெயர்ந்து மன்னரை நாடிச் செல்வார்கள் கலைஞர்களான கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும்.

பற்பல இசைக்கருவிகள் குறித்தும்,  எள், இஞ்சி, அவரை, தயிர், நாவல் பழம், வெண்கடுகு போன்ற உணவுப் பொருட்கள் குறித்தும் தகவல்கள் நூலில் காணமுடிகிறது.

மன்னன் நன்னனின் மலைநாட்டை நோக்கிச் செல்லும் வழித்தடம் எப்படி இருக்கும்? ஒரு சிறிய எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

பெரிய பெரிய அரண்கள் இருக்கும். பின்னி வைத்ததுபோல் கொடிகள் நிறைந்த சிறுகாட்டைக் கடக்க வேண்டும். யானைகள் போரிடுவதைப் போன்று நெருங்கிக் கிடக்கும் பாறைகள் நிறைந்த மழைக்காடுகள் இருக்குமாம். 

அப்படிப்பட்ட பாதையைக் கடந்து செல்லும்போது – 

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்

(மலைபடுகடாம் 392 – 393)

என்று அறிவுறுத்துகிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

முன்பு பாதையை நன்கு அறியாததால் வழிதவறிப் போன – புலம்பெயர்ந்த புதியவர்களான நீங்கள், (புலம்பெயர்புதுவிர்)

மறுபடி அதே சரியான இடத்திற்கு வந்துவிட்டால், அப்படியே சென்றுவிடாதீர்கள்.

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்-

குழப்பத்தைக் கொடுத்த அந்தச் சந்தைத் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு உதவியாக, ஊகம்புல்லைக் கட்டி வையுங்கள், என்கிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

அடுத்து, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையைப் பார்ப்போம். பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இதே ஆசிரியர், பத்துப்பாட்டு நூல்களில் மற்றொன்றான பெரும்பாணாற்றுப்படையையும் பாடியுள்ளார். 

காவிரியின் சிறப்பு, சோழநாட்டின் பெருவளம், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, இரவுநேர நிகழ்ச்சிகள், ஏற்றுமதி, இறக்குமதி, விழா நீங்காக் கடைவீதி, ஊரில் வாழும் உழவர்கள், வணிகர்கள், பல நாட்டினர் ஒன்றுகூடி வாழும் பாங்கு, என்று பல்வேறு வரலாற்றுச் செய்திகளைக் கண்முன் காட்டும் நூல் பட்டினப்பாலை. 

வணிகர் சிறப்பைச் சொல்லுகையில் – 

நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்,
கொள்வதூஉம் மிகை கொடாது,  கொடுப்பதூஉங் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை

(பட்டினப்பாலை 207-212)

நடுநிலைகொண்ட நல்ல நெஞ்சினர், பழிச்சொல்லுக்கு அஞ்சி உண்மை பேசினர், தம் பொருட்களையும் பிறர் பொருட்களையும் ஒன்றாகக் கருதினர், வாங்கியவற்றைக் கூடுதலாகக் கொள்ளாமல் கொடுத்தவற்றைக் குறைவாகக் கொடுக்காமல், பலப்பலப் பண்டங்களை விலைப்பேசி விற்கும், வளம் சேர்க்கும் தொன்மையான வணிகர் இருப்பிடம், என்று மிக அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.

காவிரிப்பட்டினத்தின் வணிகர் பகுதி எப்படி இருந்ததாம்?

பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர் முதுவாய் ஒக்கல்,
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள்கலந்துஇனிதுஉறையும்முட்டாச் சிறப்பின் பட்டினம் 

(பட்டினப்பாலை 213-218)

வெவ்வேறு  நாடுகளில் பலப்பலக் குழுக்களாக வாழ்ந்து பழகிய அறிவார்ந்த சுற்றத்தார் ஒன்றுகூடி, திருவிழாக்கோலம் பூண்ட தொன்மையான ஊர்போல் காட்சி அளித்ததாம் காவிரிப்பூம்பட்டினம் .

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

பழியில்லா நாடுகளிலிருந்து, பலப்பல மொழிகள் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து வணிகத்தின் பொருட்டு, காவிரிப்பூம்பட்டினத்தில் இனிமையாகக் கலந்து வாழ்ந்தனராம். அத்தகைய குறையில்லாச் சிறப்புடையது புகார் நகரம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பிழைப்புத் தேடி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர், அதுவும் இணக்கமாக வாழ்ந்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, தமிழகத்தின் வரலாற்றுச் செய்தி இது.

‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லும் உண்டு; பிறநாட்டவருடன் கூடிப் பன்னாட்டுச் சமூகமாக  அன்றே வாழ்ந்த சான்றும் உண்டு.

சங்ககாலத்தை அடுத்துவரும் சிலப்பதிகாரத்தில், பட்டினப்பாலையை ஒட்டிய வரிகளைக் காணமுடிகிறது.

புகார் காண்டத்தில் இந்திரவிழவு ஊரெடுத்த காதையில், புகார் நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பிரிவுகளாக இருந்ததை விளக்குகிறார் ஆசிரியர் இளங்கோவடிகள்.

மருவூர்ப்பாக்கத்துக் காட்சிகளைப் பாருங்கள் – 

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்                     

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 7-10)

திறந்தநிலை மேல்மாடங்களும், வியத்தகு பண்டகசாலைகள் அல்லது கிடங்குகளும், மானின் கண்போன்ற அகண்ட சாளரங்கள் கொண்ட மாளிகைகளும் இருந்தன. காண்போர் கண்களை அகலவிடாமல் கட்டிப்போடும் அழகிய யவனர் இருப்பிடங்களும் புகார் நகரில் இருந்தன.

அதோடு, 

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்

கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 11-12)

கடல் வழியாகச் செல்லும் கலங்களில் பலப்பல நாடுகளிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவோரும் கொண்டு செல்வோருமாக  – புலம்பெயர்ந்துப் பற்பல நாட்டவர் செல்வம் கொழிக்கக் காவிரிப்பூம்பட்டினத்தில் கலந்து மகிழ்ந்து வாழ்ந்த கடலோரப் பகுதிகளை இளங்கோவடிகள் கண்முன் நிறுத்துகிறார். ‘புலம்பெயர் மாக்கள்’ என்று நாம் தேடும் சொல்லையே பயன்படுத்துகிறார்.

புகார் நகரம் குறித்த- 

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

என்னும் பட்டினப்பாலை வரிகளும்

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

என்னும் சிலப்பதிகார வரிகளும் எவ்வளவு ஒத்திருக்கின்றன பாருங்கள். 

இப்படி, பல நாட்டவருடன் பரந்த மனத்துடன் கூடி வாழ்ந்த பன்மைச் சமூகமாகத்தான் பண்டைத் தமிழகத்தை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். 

பட்டினப்பாலை தவிர்த்த சங்க இலக்கியங்களில் – 

  • நற்றிணையில் மருத நிலத்து உமணர் நெய்தல் நிலத்திற்குப் புலம் பெயர்ந்தனர்
  • அகநானூறில் ஒரு பாடலில் போரால் புலம் பெயர்ந்தனர்; மற்றொரு பாடலில் பொருளீட்டப் புலம் பெயர்ந்தனர்
  • நெடுநல்வாடையில் வெள்ளப் பெருக்கால் புலம் பெயர்ந்தனர்
  • மலைபடுகடாமில் பொருள் வேண்டி மன்னரிடம் செல்வோர் புலம் பெயர்ந்தனர்

என்று பார்த்தோம். 

பட்டினப்பாலையிலும் சங்ககாலத்துக்குப் பின்வந்த சிலம்பிலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிபம் புலம் பெயர்தலுக்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. குறிப்பாக, பன்னாட்டவர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்த மேம்பட்ட சமூகச்சூழலைப் பெருமிதத்துடன் அறிந்துகொள்கிறோம்.

ஆக, சங்ககால நூல்களிலும் காப்பியக்காலச் சிலப்பதிகாரத்திலும் இன்றும் வழக்கிலுள்ள ‘புலம்பெயர்தல்’ எனும் சொல்லே இடம் பெயர்தலுக்குப் பயன்பட்டுள்ளது.

எனவே, தமிழ் இன்னும் வாழும் மொழியாக இருப்பது அதன் தொன்மையால் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாலும்தான். அந்தத் தொடர்ச்சிக்குத் தேவை நாம் தமிழ்மொழியை வேற்றுமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்துவதுதான்.

நன்றி.


Podcast available on:   Apple   Google    Spotify