மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்

சென்ற பகுதியில் மதுரை மாநகரைச் சுற்றி வந்தபிறகு, இனி, தமிழின் இனிமையும் உவமைச் செழிப்பும் பொருள் சிறப்பும் பொருந்திய மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்.

1. கரும்பு ஆலைகள் 

வளமான மருத நிலத்திற்குள் நுழைந்தால், அங்கு ஒலிக்கும் பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். அதில் ஒன்று, கரும்பாலைகளின் ஓசை என்று முன்னரே பார்த்தோம்- கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258). கரும்பு ஆலைகள் வைத்துக் கரும்பின் பாகும் கற்கண்டும் உருவாக்கி, அவற்றினின்று பலவித இனிப்புப் பண்டங்கள் செய்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்தது தெரிகிறது. அதனால்தான் தமிழ்ப் பாடல்வரிகளில் எப்போதும் கட்டிக் கரும்பும், கன்னல் சாறும், சர்க்கரைப் பாகும் இனிமைக்கு உவமைகளாக நிற்கின்றன போலும்.

2. அடை, மோதகம், அப்பம்

அப்படி என்னென்ன பண்டங்கள் செய்தனர்?

நல்வரி இறாஅல் புரையும் மெல்அடை
அயிர் உருப்புஉற்ற ஆடுஅமை விசயம்
கவவொடு பிடித்த வகைஅமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர்
(624-626)

நல்ல வரிகளையுடைய தேனடையைப் போன்ற மெல்லிய அடையும், கற்கண்டைச் சூடேற்றிக் கிடைத்த பாகோடு பலவற்றைக் கலந்து உள்ளே வைத்துப் பிடித்துச் செய்த மோதகமும், இனிய பாகுடன் செய்த அப்பமும் விற்பவர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு இரவின் இரண்டாம் சாமத்தில் உறங்கச் செல்கிறார்கள்.

3. ஊன் சோறு

அடுத்து வரும் உணவு வகையான ஊன் சோறு, இன்று பிரியாணி என்று நம்மில் பலரும் விரும்பி விரும்பி நாடிச் செல்லும் உணவை ஒத்தது. இந்த ஊன் சோறு சங்க காலத்தில் பரவலாகப் பரிமாறப்பட்டதைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில் நமக்குக் காட்டுகின்றன.

அது, பலரும் புகழும்படி சமைக்கப்பட்ட பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோறாம். அதனால்தான் மதுரைக் காஞ்சி – ‘புகழ்படப் பண்ணிய பேர் ஊன்சோறு’ (533) என்று பலரால் விரும்பப்பட்ட அதன் தன்மையை எடுத்தியம்புகிறது.

பரதவரைப் பாண்டியன் வெற்றி கொண்டதைச் சொல்லும்போது, அவர்கள் பகுதிகளில் கோழ் ஊஉன் குறைக்கொழு வல்சி (141) உண்ணப்பட்டது தெரிகிறது. அதாவது, கொழுத்த இறைச்சியுடன் சமைக்கப்பட்ட சோறு வழங்கப்பட்டது.

4. தோலால் செய்யப்பட்ட செருப்பு

மூன்றாம் யாமத்தில், கரிய பெண் யானையின் தோலைப் போன்ற கருமையான இருள் பரவிக் கிடக்கிறது. ஊர் நிம்மதியாக உறங்கும் அந்நேரத்தில், மழை பெய்து தேர்கள் இயங்கும் தெருவில் நீர் திரண்டு ஓடுகிறது. அந்தச் சூழலிலும், சோம்பலோ தளர்ச்சியோ இல்லாமல் ஆர்வத்துடன் காவல் காக்கிறார்கள் ஊர்க் காவலர்கள்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
(643-644)

வலிமையான ஆண்யானையை இரையாக எண்ணிப் பார்க்கும் வலிய புலியைப் போல், துஞ்சாத/தூங்காத கண்களை உடையவர்களாக அஞ்சாத கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள்.

கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோல் அடியர்
(635-636)

கற்களையும் மரங்களையும் வெட்டும் கூர்மையான தொங்கிய வாளும், தொடையோடு பொருந்திய- கைப்பிடியுடன்கூடிய கூரிய வாளும், நூலாலான ஏணியும், நிலத்தைத் தோண்டும் உளியும் தாங்கி, தெருக்கள்தோறும் இக்காவலர்கள் உலவுவதால் மக்கள் மன அமைதியோடு தூங்குகிறார்கள். அவர்களுடைய கால்களை கவனித்தால் என்ன தெரிகிறது? அவர்கள் தோலாலான காலணிகளை அணிந்திருக்கிறார்கள். இளங்கன்று மற்றும் ஆட்டின் தோல் கொண்டு இசைக் கருவிகள் உருவாக்கப்பட்டது அறிவோம். தோலைக் கொண்டு காலணிகள் செய்து அணிவது அக்காலத்திலேயே இயல்பான ஒன்றாக இருந்தது என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.

5. கஞ்சியுடைய ஆடை / சிற்பம் 

அடுத்து ஒரு காட்சி- காலையில் கண்விழிக்கிறார் மன்னர். சந்தனச் சாந்தைப் பூசிக் கொள்கிறார். முத்து வட மாலை அணிந்த மார்பில் தேனீக்கள் மொய்க்கும் பூமாலை அணிகிறார். அழகிய மோதிரம் பொருந்திய வலிமையான பெரிய கையில் வீரவளையலுடன் காட்சி தருகிறார். 

அவருடைய ஆடை எப்படி இருக்கிறது? 

சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ
(721-722)

சோறு வடிக்கையில் கிடைக்கும் நீர்- அதாவது கஞ்சி இட்டுத் துவைத்த ஆடையை, உடைக்கு மேல் அணிகலன்கள் பொலிவுற அணிந்திருக்கிறார். கஞ்சியிட்ட மிடுக்கான ஆடை அணியும் வழக்கம் அன்றே இருந்ததையும் மதுரைக் காஞ்சி பதிவு செய்கிறது. கஞ்சியிட்ட மிடுக்கான ஆடையும் அணிகளும் மாலையும் உடுத்திய அரசர் எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கிறார் தெரியுமா?

வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி
(723 – 724)

சிற்ப நூலைக் கற்றுத் தேர்ந்த வல்லவன் செய்த முருகனின் சிற்பம் போன்ற அழகிய வடிவத்துடன் இருக்கிறார்.

6. கல்லணை

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அடுத்து, இத்தனை அழகு பொருந்திய, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வருபுனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து
ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்
(725-726)

கரை புரண்டு வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தும் கல்லணைபோல, தம் படைகளைத் தாக்க வரும் பகைவர்களைத் தடுக்கும் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள். ‘வருபுனல் கற்சிறை’ – வரும் புனலைத் தடுக்கும் கற்சிறைதான் கல்லணை. கல்லால் அணை கட்டுவது தொன்மைத் தமிழரின் நீர் மேலாண்மைத் திறம் இல்லையா? அந்தச் சொல்லாக்கமும் ‘வருபுனல் கற்சிறை’ என்று எவ்வளவு அழகாக அமைந்துள்ளது பாருங்கள்.

மன்னரின் பெருங்கொடை

பாணர் வருக, பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி
(749 – 752)

பாணரையும் அவர்கள் குடும்பத்தில் உள்ள பாடும் பெண்களையும், செய்யுள் இயற்றும் திறமையுடைய புலவர்களையும், ஆடற்கலைஞர்களாகிய கூத்தர்களையும் ‘வருக வருக’ என்று வரவேற்றுப் பரிசுகள் அளிக்கிறார் மன்னர். இந்தக் கலைஞர்கள் தம்முடைய பெரிய சுற்றத்தாரை உடன்வைத்துப் பாதுகாக்கும் தன்மையுடையவர்கள். அவர்களுக்குத் தாமரை வடிவில் உறுப்புகள் உடைய நெடிய தேர்களை யானைகளுடன் அளிக்கும் பெரும் கொடையாளர் பாண்டியன் நெடுஞ்செழியன்.

கொடையும் வளமும் செழிப்பும் நிறைந்த நாட்டில் –

களம் தோறும் கள் அரிப்ப
மரம்தோறும் மை வீழ்ப்ப
நிணஊன் சுட்டு உருக்கு அமைய
நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால்
(753-758)

இடந்தோறும் கள்ளை அரிக்கிறார்கள், மரத்தடிகள்தோறும் செம்மறிக் கிடாக்களை வெட்டுகிறார்கள், ஆட்டின் கொழுப்பு நிறைந்த தசைகளைச் சுடுகிறார்கள், நெய்யுடன் பொரியல்கள் சமைக்கிறார்கள். ஆட்டுத் துண்டுகளைச் சுடும்போதும் பொரியலை நெய்யில் தாளிக்கும்போதும் எழுந்த புகை, மழை வரும் முன் வானில் எழும் கருமுகில்போலப் பரவுகிறதாம்.

எவ்வளவு நயமாகச் சொல்கிறார் புலவர்!

இப்படி, இயற்கை வளம், உயரிய வளர்ச்சி, பல்தொழில் திறன், சீரிய கோட்பாடுகள், மாறுபட்ட வழிபாட்டு நெறிகள் இருப்பினும் கலந்தே இனிதுறையும்  பண்பட்ட மனப்பாங்கு, உள்நாட்டு அங்காடிகள், ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நடந்த வெளிநாட்டு வணிகம், போர் வெற்றிகள், கலை வளர்ச்சி, வழங்கிய கொடைகள் என்று பண்டைய தமிழ்நாட்டின் பன்முக வரலாறைத் தெளிவாகக் காட்டும் ஆவணங்களாகத் தமிழ் இலக்கியங்கள் நமக்குக் கிட்டியிருப்பது தமிழ்க் குடியில் பிறந்த நமக்குக் கிடைத்த பெரும் பேறு.

இன்று, ட்ரோன்களின் உதவியுடன் கவின்மிகு காட்சிகள் நம்மை எளிதில் வந்தடைகின்றன. ஒலியும் ஒளியும் நிறங்களும் நிறைந்த அக்காட்சிகள் நம் மனங்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன. எந்தத் தொழில்நுட்பமும் இன்றி, மதுரை மாநகரின் அன்றாட வாழ்வைத் தம் எழுத்தாற்றலால் செம்மையாக நமக்களிக்கிறார் மாங்குடி மருதனார். அவருடைய படைப்பிலிருந்து நாம் இங்கு பார்த்தது சுருக்கமான ஒரு பருந்துப் பார்வை எனலாம்.

தமிழ் மொழியின் வளனையும் அம்மொழியில் இலக்கியம் படைத்தோரின் திறனையும் தாண்டி இங்கு தனித்துத் தெரிவது, இன்றும் நாம் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஊரும், அதில் வாழும் மக்களும், அவர்கள் தொழிலும், வாழ்வும்தான்.  

பருந்துப் பார்வையிலேயே இத்தனைச் செய்திகள் என்றால், படிக்கப் படிக்கத் திகட்டாத இன்பம் தருகின்ற பற்பலக் காட்சிகளைத் தாங்கி நிற்கும் பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் படித்துத்தான் பாருங்களேன்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்

தமிழின் தொன்மை இலக்கியங்களான எட்டுத் தொகை-பத்துப் பாட்டு நூல்கள், அக்காலத்தே செழித்திருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும் அதன் சிறப்புக்களையும் எண்ணியெண்ணிக் களிப்படையச் செய்பவை; படிக்கப் படிக்கச் சிந்திக்கத் தூண்டுபவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மண்ணின் நிகழ்வுகளை நேரலைபோல நமக்குக் காட்டுபவை.

சங்க இலக்கியங்கள் மீது அதைப் படிப்பவர்களுக்குத் தீராத ஈர்ப்பு வருவது எதனால்? அவரவர் பார்வைக்கேற்ப காரணங்கள் பலவாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் முதன்மையான காரணம், அவை உங்களையும் என்னையும் போன்ற இயல்பான மக்களின் அன்றாட வாழ்வு சார்ந்த படைப்புக்கள் என்பதுதான். நாம் வாழும் சமூகத்தில் நம் அண்டை வீட்டாரையும், தெருவில் வசிப்போரையும், ஊர்க்காரர்களையும்; சிரிப்பு, அழுகை, கோபம், அச்சம், காதல் என்ற அவர்களின் பலவித உணர்வுகளையும் காட்டும் நம் மண்ணின் இலக்கியங்கள், நமக்குப் பல கதைகள் சொல்லுகின்றன.

அப்படி, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடியது. வாழ்வின் நிலையாமையை முன்னுரிமை கொண்டு பாடும் இப்படைப்பு, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு, இரவு ஆகிய வேளைகளில் மதுரை மாநகரின் வெவ்வேறு காட்சிகளை மிகுந்த சுவையுடன் உரைக்கிறது. அந்தக் காட்சிகளினூடே ஆசிரியர் மாங்குடி மருதனார் வியப்பூட்டும் பற்பல தகவல்களை அளிக்கிறார்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

வாழ்வின் நிலையாமையைக் கூறும்பொருட்டு இயற்றப்பட்ட இலக்கியத்தில் காட்டப்படும் மதுரை நகரின் செழிப்பையும் மன்னன் பெருமையையும் கேட்கும்போது, அங்கு வாழாது போனோமே என்று மனம் வருந்துகிறது; வாழ்ந்திட நெஞ்சம் ஏங்குகிறது. சரி, அப்படிப்பட்ட காட்சிகள்தான் என்னென்ன?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியத்தில் நாம் காணும் காட்சிகளை-

  1. மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்
  2. மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்
  3. மதுரைக்காஞ்சியில் வியக்க வைக்கும் சில செய்திகள்

என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

முதலில் மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்.

பாண்டிய நாட்டின் செழிப்பைக் கூறுகையில் – 

மழைதொழில் உதவ மாதிரம் கொழுக்க,
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்புநந்த,
நோய் இகந்து நோக்கு விளங்க
(10-13)

என்கிறார் புலவர். உழவருக்கு மழை உதவ, நிலமும் மரமும் பயன்களை அள்ளி வழங்க, நோய்களின்றி மக்கள் மகிழ்வுடன் விளங்கிய நாட்டின் தலைவனாம் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். தொல்முது கடவுள் சிவனின் வழித்தோன்றல் அவர் என்று உரைக்கிறார் புலவர். இதனிடையில் இன்றும் நாம் ஏங்கும் ஒன்றைச் சொல்கிறார்- ‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய’ எனும்போது, ஒரே விதைப்பில் விதைகள் ஆயிரம் ஆயிரமாகப் பயன்தரும் வளமான மண்ணை ஆண்ட குடி பாண்டியர் குடி என்பது தெளிவாகிறது.

நெடுஞ்செழியன் ஆண்ட தமிழ்மண்ணின் எல்லைகள் என்னவாக இருந்தன?

தென்குமரி வட பெருங்கல்
குணகுட கடலா எல்லை
(70-71)

தெற்கில் குமரிக் கடலும் வடக்கில் பெரிய மலையும் எல்லைகளாக இருந்தன. இங்கே பெரிய மலை என்பது திருவேங்கட மலை என்பது அனைவரும் அறிந்ததுதானே? கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு, கொற்றவர் தம் கோனாக விளங்கிய மன்னர் அவர்.

பாண்டிய நாட்டின் ஐவகை நிலங்களின் காட்சிகளை வரிசையாக விவரிக்கிறார் ஆசிரியர். 

மருத நிலத்தில்-

களிறு மாய்க்கும் கதிர்க் கழனியைக் (247-248) காண்கிறோம். அதாவது, யானைகளையே மறைக்கும் அளவிற்குக் கதிர்கள் வயல்களில் வளர்ந்துள்ளன.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அந்நிலத்தில் எழும் பலவித ஒலிகளுக்கு இடையில் நாம் கேட்பது-

கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258)- கரும்பு ஆலைகளின் ஓசையும்;

தளிமழை பொழியும் தண்பரங்குன்றில் கலிகொள்சும்மை ஒலிகொள்ஆயம் (263-264)

முகில்கள் மழையைப் பொழியும் குளிர்ச்சி பொருந்திய திருப்பரங்குன்றத்தில் விழாக்களின் ஒலி நம் செவிகளை நிறைக்கிறது.

முல்லை நிலத்தில் –

தினை எள் மற்றும் வரகின் கதிர்கள் முற்றி விளைந்து நிற்கின்றன. 

பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி
மடக்கண் பிணையொடு மறுகுவன உகள
(275-276)

மிகவும் அழகான, சிறிய தலையையுடைய நெளவி மான் தன் பெண் மானுடன் சுழன்றுத் துள்ளி விளையாடுகிறது.

குறிஞ்சி நிலத்தில் ஒரே ஆரவாரமாக இருக்கிறது-

தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை விரட்டும் ஒலியும், தளிர்களை மேயும் காட்டுப் பசுவைக் கானவர் விரட்டும் ஓசையும், தான் தோண்டிய குழியில் விழுந்த ஆண் பன்றியை மலைக்குறவன் கொல்லும் ஒலியும், வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் நறுமண மலர்களைப் பறிக்கும் பெண்கள் ‘புலி புலி’ என்ற கூவிக்கொண்டே பறிக்கும் ஒலியும் சேர்ந்து, வெள்ளை அருவியின் ஒலி மலையில் எதிரொலிக்கிறது.

வறண்ட பகுதியான பாலை நிலத்திலோ-

அருவிகள் இல்லாது அழகிழந்து நிற்கிறது பெரிய மலை, வைக்கோல்போல் ஊகம்புல் நிறைந்துகிடக்க உலர்ந்திருக்கிறது காடு, சூறாவளிக் காற்று கடல் போல் ஓங்கி ஒலிக்கிறது. அந்தச் சூழலில், இலையால் வேய்ந்த குடிசையில்- மான் தோல் படுக்கையில்- இளைஞர்கள், தங்கள் கைகளில் வில்லினை ஏந்திக் கள்வர் வராமல் காக்கிறார்கள்.

நெய்தல் நிலத்திலோ-

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்து உடன்கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
(321-324)

சிறந்த மரக்கலங்களைக் கடலில் இயக்குபவர்கள் பெரிய நாடுகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் தாங்கள் கொணர்ந்த குதிரைகளை விற்று, இங்கிருந்து அணிகலன்களைக் கொண்டு செல்லும் வளமான வணிகம் ‘வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப’- நாள்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

மதுரைக்காஞ்சியின் வரிகளைப் படிக்கும்போது நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அத்தனையும் வரலாற்றுத் தரவுகள். தமிழகத்தின் வளமான நிலங்களில் என்னென்ன விளைந்தன? தினை, எள், வரகு, மூங்கில் நெல், வெண்கடுகு, வெண்ணெல்லும்; இஞ்சி, மஞ்சள், மிளகு, இனிய புளி, வெள்ளுப்பும்; அகிலும் சந்தனமும்; கீரையும் கிழங்கும்; பலாவும் மாங்கனியும் …. என்று பெரிய பட்டியலிடலாம்.

இப்படி, சிவனின் வழிவந்தவன்-திருவில் பாண்டியனின் வழித்தோன்றல் என்று மன்னனைச் சுட்டி, யானை-குதிரை-தேர்-வீரர் படைகளின் வலிமையைப் பாராட்டி, நாட்டின் நால்திசை எல்லைகளைக் காட்டி, போர் வெற்றிகளைக் குறிப்பிட்டுக்  கொற்றவர்களுக்கெல்லாம் கோனாக இருக்கும் நெடுஞ்செழியன் பெருமை கூறித் தொடங்குகிறது மதுரைக்காஞ்சி. இலக்கிய நெறியுடன் வரலாற்றுத் தகவல்களின் பெட்டகங்களாக விளங்குவது தமிழ் இலக்கியங்களின் சிறப்பு.

இந்த முதல் பகுதியை அடுத்து, மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகரையும் மதுரைக்காஞ்சியில் வியக்க வைக்கும் சில செய்திகளையும் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google