மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்


தமிழால் இணைந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திங்கள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆண்டு முழுதும் சமயம் சார்ந்த, புராணக் கதைகளோடு இணைந்த பல்வேறு பண்டிகைகள் வந்து போகும். ஆனால், பொங்கல் என்ற ஒரு சொல் போதும், தமிழ் மண்ணின் மணம் பரப்பும் எண்ணில்லாக் காட்சிகள் நம் நினைவலைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும். மண்ணுக்கு மணம் உண்டா என்றால், ‘பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ’ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வேர்களின் மணம் நம் டிஎன்ஏக்களில் பொதிந்திருப்பதால்தான் அந்த வேருக்குரிய பண்பாட்டுக் கூறுகள் நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. மண்ணையும் அதன் மணத்தையும் நம் பண்பாட்டின் பழமையையும் அதன் பெருமையையும் பேசவும் வியக்கவும் இலக்கியத் தரவுகள் நம்மிடம் இருப்பதுபோல வேறெந்தச் சமூகத்திடமும் இல்லை என்பது என்னை அறியாமல் ஒவ்வொரு பதிவிலும் வந்துவிட நேர்ந்தால், அது என் பிழையல்ல; நம் முன்னோர் எழுத்தாற்றலால் விளைந்த உணர்வு.  

பொங்கல் என்றதும் மனதை மகிழ்வூட்டும் காட்சிகள் என்னென்ன என்பதைப் பற்றி நாம் இன்று பேசப் போவதில்லை. மகிழ்வூட்டும் அந்தக் காட்சிகள் தமிழ்ச் சமூகத்தில் எத்தனை ஆண்டுகாலமாய்த் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்பதைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

நிலத்தை உழுது விதை விதைக்கும் உழவுத் தொழிலும், தைத்திங்களும், தை மாதத்து அறுவடையும், கதிரவனை வழிபடுதலும், வீட்டின் முன்வாசலில் இடும் கோலமும், அதே முன்வாசலில் விறகுமூட்டி எரியும் அடுப்பும், பானையில் பொங்கும் சோறும், புதிதாய் விளைந்த காய்களும், கரும்பும், மஞ்சளும், வாழை இலையில் பரிமாறிய உணவும், சமயச் சார்பில்லாத பொங்கல் பண்டிகையைச் சுட்டும் அடையாளங்கள். இவையனைத்தும், ஈராயிரம் ஆண்டுகள் தாண்டி இன்றுவரை நம்முடன் தொடர்ந்து இணைந்துவரும் நெடுங்காலக் குறியீடுகள். இந்தத் தமிழர் தொன்மங்களுக்கான சான்றுகள் அனைத்தும் நம் பண்டைய நூல்களில் உண்டு.

தொல்காப்பியர், வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (மரபியல் 81) என்ற வரிகளில், நிலத்தையுடைய வேளாண் மக்களுக்கு உழவே தலையாயத் தொழில் என்கிறார். உழவர்களின் சிறப்பை வள்ளுவரும், ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெலாம் தொழுதுண்டு பின்செல்பவர்‘ என்றுரைத்தது நாம் அறிந்ததுதானே. தமிழர்கள் உழவுத் தொழிலை எவ்வளவு போற்றியிருந்தார்கள் என்பது இதனால் புரியும்.

சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை தை மாதச் சிறப்பைக் குறிப்பிட்டுச் சுட்டுகின்றன. பத்திமைக் காலத்திலும் இது தொடர்ந்ததை, ’நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்‘ என்ற சம்பந்தரின் மயிலைப் பதிகம் உறுதிசெய்கிறது.

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் தொடங்குவதே திங்களையும் ஞாயிறையும் மாமழையையும் போற்றித்தான். சிலம்பின் நான்காவது வரி, ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்‘  (மங்கல வாழ்த்துப் பாடல்- 4) என்று கதிரவனைப் போற்றும் வழக்கம் அக்காலத் தமிழரிடையே இருந்ததை முதன்முறையாகச் சொல்கிறது.

ஆக, உழவர் பெருமை, தை மாதத்தின் சிறப்பு, கதிரவனை வழிபடல் என்று இன்றைய தைத்திருநாள் முதன்மையாக வலியுறுத்துபவை, பழந்தமிழர் வாழ்விலிருந்து நாம் பெற்றவை என்பது தெளிவு.

புறநானூறின் 168ஆவது பாடலோ மேலும் பல சுவையான காட்சிகளை எடுத்தியம்புகிறது. குதிரைமலைக்குத் தலைவனாம் பிட்டங்கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது இந்தப் பாடல். சிறந்த வள்ளலாகத் திகழ்ந்த பிட்டங்கொற்றனின் ஈகைப் பண்பைப் போற்றும் பாடல், அவருடைய நாட்டு வளத்தை முதலில் சொல்கிறது.

அருவி ஆர்க்கும் கழை பயில் நனந்தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி (1-4)

பிட்டங்கொற்றனுடைய நாட்டில் அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன; அகண்ட நிலப்பரப்பில் மூங்கில் அடர்ந்தும், மலைகளில் மிளகு நிறைந்தும் விளைந்திருக்கிறது; அந்த வளமான நிலத்தில் காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன; காந்தள் மலரின் வேரிலுள்ள கிழங்கைக் காட்டுப் பன்றிக்கூட்டம் தோண்டியெடுத்து உண்கிறது; அதை, கடுங்கண் கேழல் கிண்டி உழுத பூழி‘என்கிறார் புலவர். வலிமையான காட்டுப்பன்றிகள் நிலத்தை உழவன் உழுததுபோலக் கிண்டி உழுததால் அந்த இடமே புழுதிக்காடாகத் தெரிகிறது.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அப்படி மண்ணை உழுது, காட்டுப் பன்றிக்கூட்டம் கிழங்கைத் தோண்டியதால், அங்கு வாழ்ந்த குறவர்களுக்குத் தம் மண்ணை உழவேண்டியத் தேவையே இருக்கவில்லை.

நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர் 
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் (5-7)

உழவேண்டியத் தேவையே இல்லாததால் அவர்கள் உகந்த நேரத்தில், சிறிய தினைப்பயிரை நெருக்கமாக விதைக்கிறார்கள். எதற்காக? குறைவின்றிக் கிடைக்கும் புதுவிளைச்சலை உண்டு மகிழ்வதற்காக.

அடுத்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?-

மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி,
வான்கேழ் இரும் புடைகழாஅது, ஏற்றி  (7-10)

அவர்கள், நுரைபொங்கும் இனிக்கும் சுவையுடைய மானின் பாலைப் பானையில் இடுகிறார்கள்; சரி, அந்தப் பானை எப்படி இருக்கிறது? மான் இறைச்சியை வேகவைத்த மணத்துடன் இருந்ததாம் அந்தப் பானை.

சரி, நிலத்தை உழுதாகிவிட்டது; தினையை மிகுதியாக விதைத்தாகிவிட்டது; பானையில் மானின் பாலை வைத்தாகிவிட்டது. அடுத்து என்ன?

சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! (11-14)

காட்டுமல்லிப் பூத்துக்குலுங்கும் வீட்டின் முன்பகுதியில், சந்தன விறகில் எரியும் அடுப்பை ஏற்றி, அதில் சோறு சமைக்கிறார்கள். 

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

இன்று சிற்றூர்களில் காணக்கூடிய, நகரங்களில் அருகிப்போய்விட்ட- வாசலில் இடும் பொங்கலை இது படம்பிடித்துக் காட்டுகிறது இல்லையா! நாள்தோறும் சமைக்கும் உணவு வீட்டுக்குள் இருக்கும் அடுக்களையில் பொங்கப்படும். கொண்டாட்டத்திற்குரிய சிறப்பு நாட்களில் வீட்டு முன்பகுதியில் சோறு பொங்குவது தமிழர் மரபு என்பதை இது காட்டுகிறது. இன்றும் கோயில்களில் விழாநாட்களில் விறகடுப்பில் ஒன்றாக அமர்ந்துப் பொங்கலிடுவதை நாம் இங்கு ஒப்புநோக்கவேண்டும்.

அடுத்து, சமைத்த உணவைச் செழுமையாய் வளர்ந்த வாழை மரத்தின் பெரிய இலைகளில் பரிமாறிப் பகிர்ந்து உண்கிறார்கள். ‘செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ!’ (13-14) என்கிறார் புலவர். பிட்டங்கொற்றனின் ஆட்சிப் பகுதி குதிரை மலை; அதனால், ஊராக் குதிரைக் கிழவ என்று – ஊர்ந்து செல்லாத/ ஓடாத குதிரையாம் குதிரை மலைக்குத் தலைவனே என்று மன்னனைப் பாடுகிறார்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

முன்றில் என்னும் வீட்டின் முன்பகுதியில் சிறப்பாகச் சோறு சமைத்ததைப் பார்த்தோம். தமிழர் வீட்டு முற்றத்தில் என்னென்ன இருந்தனவாம்? பட்டினப்பாலை வழியாகச் சோழநாட்டு வீட்டுக்குள் நுழைந்து பார்க்கலாம்- கோள் தெங்கின் குலை வாழை; காய் கமுகின் கமழ் மஞ்சள்; இன மாவின் இணர் பெண்ணை; முதல் சேம்பின் முளை இஞ்சி; அகல் நகர் வியல் முற்றத்து (15-20) – கொத்துக் கொத்தாய்த் தென்னை, குலைக்குலையாய் வாழை, காய்த்து நிற்கும் பாக்கு, மணம் கமழும் மஞ்சள், நிரம்பி நிற்கும் மாமரங்கள், நிறைந்த பனை, சேம்பு, முளையுடைய இஞ்சி என்று வீட்டின் அகண்ட முற்றத்தில் செழிப்பான மரம் செடிகளைக் காண்கிறோம்.

சங்கப் பாடல்கள் பலவற்றில் ஓயாது நம் காதுகளில் ஒலிப்பது, கரும்பாலைகளின் ஒலி. எடுத்துக்காட்டாக, கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை என்று கரும்பு ஆலைகள் வைத்துக் கரும்பின் பாகும் கற்கண்டும் உருவாக்கி, அவற்றினின்று பலவித இனிப்புப் பண்டங்கள் செய்ததை மதுரைக் காஞ்சியில் சென்ற பதிவில் பார்த்தோம்.

அடுத்து, கோலங்கள். கோலங்கள் வீட்டின் நுழைவாயில் பகுதியை ஆண்டுமுழுக்க அலங்கரிக்கின்றன. ஆனாலும், மார்கழி முதலே தொடங்கித் தை மாதத்தில் வீடுகளுக்குப் பண்டிகைப் பொலிவைத் தரும் அழகார்ந்த கோலங்களை இங்கு மறக்க முடியுமா? ஓங்கு மணல் வரி ஆர் சிறு மனை (நற்றிணை 378), அகல் வரிச் சிறு மனை (நற்றிணை 273), வரி புனை சிற்றில் (நற்றிணை 123) என்ற நற்றிணைப் பாடல்வரிகள், சிறிய வீடுகள் என்றாலும் அவை வரிகளால் புனையப்பட்ட கோலங்களால் அழகூட்டப்பெற்றமையை அறிகிறோம்.

உழுது, விதைவிதைத்து, தையிலே அறுவடை செய்து, இல்லத்தில் கோலங்கள் வரைந்து, கதிரவனை வணங்கி, வீட்டின் முன் பகுதியில் சந்தன விறகில் அடுப்பு வைத்து, உலையிட்டுச் சோறு பொங்கி, அறுவடைக் காலத்தில் மண் வழங்கிய காய், கனிகளைச் சமைத்து, பெரிய வாழையிலையில் உணவுப் பரிமாறிப் பகிர்ந்து உண்டு, அக்காலத்தே விளைந்த மஞ்சள், கரும்பைக் கொண்டாட்டங்களில் இணைத்து, காலம் காலமாக தமிழக வயல்கள் வழங்கிய செல்வங்களைச் சேர்த்துச் சேர்த்து வந்ததுதான் நாம் இன்று கொண்டாடும் பொங்கல் திருநாள்.

இவை அனைத்தையும் தாண்டி, தைத்திருநாள் ஒரு நன்றி பாராட்டும் நன்னாள். அடிப்படை உணவு தந்த மண்ணுக்கும் அந்த மண்ணை வளமாக்கிய வானுக்கும் முதன்மையாக நன்றி கூறும் காலம் என்பதால்தான்,  தமிழ்நாட்டில் இருந்தாலும் வேறு மாநிலங்களிலோ உலகெங்கும் பரவி வேறு நாடுகளிலோ வாழ்ந்தாலும், தைத்திருநாள் பொங்கலைத் தமிழர் இணைந்து விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். வீட்டுக்குள் குடும்பத்தோடு நின்றுவிடாமல் ஊர்க்கூடிக் களிக்கும் திருவிழா இது. உழவர் தமக்கென உழைத்தவர்களையும், உழவரல்லாத மற்றவர்கள்- அன்றாடம் உண்ணும் உணவைத் தடையின்றி வழங்க உழைத்த உழவர்களையும் நினைத்து நன்றியுணர்வுடன் நெகிழ்ந்து வணங்கும் பண்டிகைதான் பொங்கல்.

இந்தச் சங்கப் பாடல்கள் படம்பிடித்திருக்கும் காட்சிகளின் சாயலைத்தானே இன்றும் உலகெங்கும் வாழும் நம் தமிழ்க்கூட்டம் திருநாளெனக் கொண்டாடுகிறது? பொங்கல் என்பது வெறும் திருநாள் அல்ல. ஒரு சமயம் சார்ந்ததென்று குறுகிய வட்டத்தில் வைக்கப்படும் பண்டிகையும் அல்ல. பண்டைத் தமிழர்களின் தொன்மையான குறியீடுகள் பலவற்றை நமக்கு நினைவூட்டும் நன்னாள் என்பதை இவற்றிலிருந்து நாம் உறுதியாக அறிந்துகொள்ளமுடியும்.

ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் பரவிநிற்கும் இந்தத் தொன்மைப் பண்பாட்டு வேரின் வாசம் தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து வீசுகிறது. அதனால்தான்…. தமிழ்மொழியின் பெருமை அதன் தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது என்பதுபோல, எந்நாட்டில் வாழ்ந்தாலும் தம் வேர்களை நேசிக்கும் தமிழரின் பெருமை பழமையில் அல்ல, இன்றும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கும் செழுமையான பண்பாட்டுத் தொடர்ச்சியில்தான் இருக்கிறது.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

பின்னூட்டமொன்றை இடுங்கள்