சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்- 1

சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 5 (1)

இயற்கையோடியைந்த சங்கத்தமிழர் வாழ்வில், பூக்களுக்குத் தனிப்பேரிடமுண்டு. மக்கள் வாழ்வோடிணைந்த பூக்கள்பற்றி இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஒவ்வொரு திணையிலும் விளைந்த பல்வகைப் பூக்கள், அவற்றின் தோற்றம், நிறம், மேலும் விளக்கிட எண்ணிலடங்கா உவமைகள், மன்னர் தொடங்கிப் பெண்கள் ஆண்கள் குழந்தைகளென்று அவற்றைச் சூடியவர்கள், சூடிய சூழல், பூச்சூடியதோடு மாலையாய் அணிந்தமை, பூக்களைக் கோக்க எவற்றைப் பயன்படுத்தினார்கள்- என்று தகவல் தரும் சங்கப்பாடல்கள் வெறும் பாடல்களல்ல- வரலாற்று ஆவணங்கள்.

சூடத்தகுந்த பூக்கள் அவரவரைச் சென்றடைந்ததெப்படி? தத்தம் வாழ்விடங்களில் மலர்ந்த மணமிகு மலர்களைக் கொய்தனர் பெண்கள்; மரங்களை உலுக்கிப் பாறைகளின்மேல் உதிர்ந்த பூக்களையும் சேகரித்தனர்; கிடைத்த மலர்களைப் பெரியவட்டிலிலிட்டு வீதிகளில் விற்கக் காலயற நடந்தனர். வீட்டுச் செலவைப் பொறுப்புடன் பகிர்ந்த அக்காலப் பெண்களின் மற்றுமொரு பொருளீட்டும் பணிதான் பூவிற்பனை. பூவிற்றவரை- ‘பூவிலைப்பெண்டு’ என்றழகிய பெயரால் அழைக்கிறார் புலவர் நொச்சி நியமங்கிழார், புறநானூற்றில்.

கணக்கின்றி மலர்ந்திருக்கும் பூக்கள் பற்றிய சுவையான செய்திகள் சிலவற்றையாவது பகிராமல் பூவிலைப் பெண்டுகளைப் பார்ப்பதெப்படி?

காட்டில் மழைக்காலத்தில் மொட்டவிழ்ந்து மலர்ந்தது முல்லை; அகன்ற குளங்களில் மொட்டுவிட்டது தாமரை; மலையகத்துப் பைஞ்சுனையில் குவளையும் ஊர்ப்பொய்கையில் துளையுடைய நீண்ட தண்டு கொண்ட ஆம்பலும் கரும்புப் பாத்திக்கிடையில் நெய்தலும் பூத்தன. பொலிவும் அழகும் நிறைந்து பலப்பல நிறங்களில் மனம்மயக்கிய மலர்களைப் பல்வேறு சூழல்களில் நினைவுகூர்ந்த வண்ணம் பாடல்கள் புனைந்தார்கள் புலவர்கள்.

முல்லை மொட்டுக்கள் பூனையின் பற்களை நினைவூட்டிட, ‘பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய’ (அகம் 391) என்றும் ‘பிள்ளை வெருகின் முள்எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்’ (புறம் 117) என்றும் உவமை கூட்டி எழுதினர்.

பிள்ளை வெருகின் முள்எயிறு போன்ற முல்லை மொட்டு

படம்- நன்றி: Vaikunda raja –
https://commons.wikimedia.org/wiki/File:Jasminum_Trichotomom_Attoor.jpg

கரிய பெரிய அடியினையுடைய வேங்கை மரத்தின் பொன் நிறமலர்கள் பாறைகளின்மேல் விழுந்திருந்தது, குட்டிப்புலியைப்போலத் தோன்றியது நெடுவெண்ணிலவினாருக்கு (குறுந்தொகை 47). வேங்கை மரத்தின் புதிய பூக்களைப் பறிக்கப் பேரார்வம் கொண்டு பெண்கள், அதன் கீழிருந்து ‘புலிபுலி’ என்று கத்துவார்கள். அந்த ஒலியில் பூக்கள் உதிரும் என்ற சங்கப் பெண்களின் நம்பிக்கையை- ‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப்பூசல்’ என்று மலைபடுகடாமும், ‘ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலிபுலி என்னும் பூசல் தோன்ற’ என்று அகநானூறும் இயம்புகின்றன.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

இவைமட்டுமா? நிறைந்து மலர்ந்த இலவ மலர்கள், வரிசையாக ஏற்றப்பட்ட விளக்குகள்போலத் தோன்றியதைப் பதிவு செய்கிறார் ஒளவையார் (அகம் 11).

முருகனின் திருப்பரங்குன்றத்தின் எழிலைப் போற்றும் பரிபாடலின் 19ஆவது பாடலில், கீழ்வரும் பகுதியைப் பகிராமல் இருக்க முடியவில்லை-

பசும்பிடி இளமுகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,
கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள்,
எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை,
உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,
பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;
நிணந்தவை,கோத்தவை, நெய்தவை,தூக்க
மணந்தவை போல, வரை மலை எல்லாம்
நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்,
விடியல் வியல் வானம் போலப் பொலியும்
நெடியாய், நின் குன்றின் மிசை! (பரிபாடல் 19; 75-84)

மெல்லிய மொட்டுக்களுடைய பசும்பிடி, மலர்ந்த ஆம்பல், கைபோல் பூத்த காந்தள், மணங்கமழும் பெருநாணல், தழல் போன்ற வேங்கை, அழகான தோன்றி, முதிர்ந்த நறவம், அனைத்துக் காலங்களிலும் பூக்கும் கோங்கம், எதிரெதிர் விளைந்த இலவம் என்றித்தனை மலர்களால் நிறைந்திருந்தது குன்றம். பல்வேறு நிறங்களும் வடிவங்களும் கொண்ட மலர்களைக் கட்டியும் கோத்தும் நெய்தும் மாலையாகக் கட்டித் தொங்கவிட்டதைப்போலத் தோன்றும் மலை, விடியல் வானம்போல் ஒளிர்ந்ததாம்.

கைபோல் பூத்த காந்தள்

படம்- நன்றி: Sathya k selvam –
https://commons.wikimedia.org/wiki/File:செங்காந்தள்மலர்lily_flower-_Gloriosa_superba.jpg

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சமூகம் கண்டு மயங்கிய பூக்களின் எழிலை, இன்று நாம் படித்துச் சுவைக்கும் வண்ணம் வழங்கிச் சென்ற படைப்பாளர்களின் ஆற்றலை என்னெவென்று வியப்பது!

சரி, பூக்களைப் பார்த்தோம். பூக்களைச் சேர்த்தெப்படி கட்டினார்கள்? குறிப்பேதுமுண்டா பாடல்களில்?

மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடலில், பணி முடித்துத் தலைவியிடம் திரும்பிவரும் தலைவன் கடந்து வரும் பாதையை விவரிக்கிறாள் தோழி. ‘அங்கு, பசுக்களையும் காளைகளையும் கள்வர் கவராது அச்சமின்றி எதிர்த்து நின்று உயிர்நீத்த புகழுடைய வீரர்களின் பெயர் பொறித்த நடுகற்கள் இருக்கும். அவற்றை இளம் வீரர்கள் தூய்மையாகக் கழுவி, மணமிகு மஞ்சளிட்டு அழகூட்டுவார்கள். அதோடு, அம்பினால் அறுத்து உரிக்கப்பட்ட ஆத்தி மரத்தின் நார்கொண்டு தொடுத்த செங்கரந்தைக் கண்ணியையும் வைத்து வணங்குவார்கள்,’

அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின்
செம் பூங்கரந்தை புனைந்த கண்ணி (அகநானூறு 269; 10-11)
என்று அவள் கூறுகிறாள்.

நல்லந்துவனாரின் நெய்தல்கலியில், ஊராருக்குத் தன் காதலைத் தெரியப்படுத்த மடலேறும் தலைவன் தோழனிடம், “குறுநகையும் மின்னல் போன்ற அசைவும் கொண்டு கனவுபோல் வந்தென் உள்ளம் கவர்ந்தவளை என்னவளாக்குவதெப்படி?”, என்று துடிக்கிறான்.

துடித்தவன் –
மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை
அணிப்பூளை, ஆவிரை, எருக்கொடு பிணித்து, யாத்து
மல்லல் ஊர் மறுகின் கண் (கலித்தொகை 138: 8-10)

“நீலமணி நிறத்த மயிற்பீலியோடு அழகிய பூளை மலரும் ஆவிரையும் எருக்கம்பூவும் சேர்த்து, நூலால் இறுக்கமாகக் கட்டி மாலையாக்கி, அதைக் கொண்டு பனையோலையில் செய்த குதிரையை அழகுப்படுத்தி, மடலேறி ஊரில் வலம் வந்தேன். இரங்கத்தக்கவன்நான்”, என்று தன்னையே நொந்து கொள்கிறான். தலைவனின் ஏக்கத்துக்கிடையில் இங்கு நமக்குக் கிடைக்கும் செய்தி, பூக்களைக் கோக்க நூலைப் பயன்படுத்தியமை.

தங்கால் முடக்கொற்றனார் இயற்றிய அகநானூற்றுப் பாடலோ, ஊசி கொண்டு மாலை கட்டிய செய்தியைத் தருகிறது. தலைவி பாலுண்ண மறுக்கிறாள்; அழகிழந்து எதிலும் ஆர்வமின்றி நோயுற்றவள்போல நடந்து கொள்கிறாள். தலைவியின் தாய் தோழியிடம் இது குறித்து விளக்கம் கேட்க அவள் பதில் கூறுவதாக அமைகிறது பாடல்.

“அன்னையே.. சில நாட்களுக்கு முன்பு, நாங்கள் தோழிமாரோடு வேங்கை மலர்கள் பறிக்கச் சென்றபோது “புலி புலி”யென்ற ஒலி கேட்டோம். அப்போது அங்கொருவன் வந்தான். அவன், பெண்களுடைய கண்களையொத்த அழகிய இதழ்களுடைய செங்கழுநீர் மலர்களை ஊசியால் கோத்த பூமாலை அணிந்திருந்தான். தலையில் ஒரு பக்கத்தில் வெட்சி கண்ணியும் சூடியிருந்தான்,” என்கிறாள் அவள்.

ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன் (அகநானூறு 48, 8-9)

ஊசியால் கோத்த பூமாலை என்று குறிப்பிடுவதால், நூலோ நாரோ பயன்படுத்தி ஊசியால் பூக்களை இணைத்திருக்க வேண்டும் அக்காலத்தவர்.

இதே பாடலைத் தொடர்ந்து படிக்க, தலைவன் மெதுவாக அந்தப் பெண்களிடம் உரையாடத் தொடங்குகிறான். “இங்கு புலியொன்று வந்ததைப் பார்த்தீர்களா?” என்று கேட்கிறான். வெட்கத்துடன் அப்பெண்கள் விடை கூறாமல் பதுங்கி நிற்கவே, “ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் மை ஈர் ஓதி மடவீர்!”- ஐந்தாகப் பிரித்துப் பின்னப்பட்ட கரிய எண்ணெய் தேய்த்த முடியையுடைய பெண்களே!”, என்று அழைத்துக் கேட்கிறான். மேலும் தொடரும் சுவையான காட்சிகள் நம்மை ஈர்த்தாலும், பெண்களின் கூந்தல் பின்னப்பட்ட வகையோடு இங்கு நிறுத்திக் கொள்வோம்.

ஐம்பால்

பலவித பூக்களைக் கண்டோம்; நார் நூல் ஊசியென்று பூக்களைக் கோக்கப் பயன்படுத்தியவற்றையும் தெரிந்து கொண்டோம். அடுத்து, பூக்கள் சூடப்படும் அழகிய கூந்தலை எப்படி முடித்தனர் பெண்டிர்? கூந்தலை ‘ஐம்பால்’ என்ற சொல்லால் குறிக்கின்றன சங்கப் பாடல்கள். ஐம்பால் குறித்துத் தமிழறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும், பாடல்களின் பொருள் கொண்டு பார்க்கையில், ஐந்தாகப் பிரித்துப் பின்னப்பட்டது ஐம்பால் என்றே முதன்மை நிலையில் கொள்ளத் தோன்றுகிறது.

பூதங்கண்ணனாரின் நற்றிணைப் பாடலில், குளிர்ச்சி பொருந்திய சந்தனமும் இன்னும் பிறவகை நறுமணப் பொடிகள் கொண்டு மெருகூட்டிய தலைவியின் ஐம்பால் தலைவனால் பேசப்படுகிறது.

………………………..……………பெருந்தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழை (நற்றிணை 140;2-4)

அவள் தோழியரோடு விளையாடும்போது ஐம்பாலிலிட்ட வாசனை
மிகுந்த துகள்கள் கீழே சிதறின.

மற்றுமோர் அகநானூற்றுக் காட்சியில் (கயமனார்,அகம்145) தலைவி தலைவனுடன் சென்று விடுகிறாள். பழைய நினைவுகளில் மூழ்கிய செவிலித்தாய், தான் இரக்கமின்றித் தலைவியின் ஐம்பாலை- ஐந்தாகப் பகுத்துப் பின்னப்பட்ட கூந்தலை- அதிலணிந்த பூக்களோடு கையால் பிடித்துக் கொண்டு, அவள் முதுகில் எறிகோலால் அடித்ததை எண்ணி வருந்துகிறாள். அப்படி அடித்ததில் எறிகோல் உடைந்தும் போனது; உடைந்தபோதும் காதல் வயப்பட்ட தலைவி ‘இது என் முதுகுப் புறம்’ என்றபடி அமைதியாகக் காட்டியபடி நின்றாளாம்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

பூக்கள் குறித்தும், ஐந்தாகப் பிரித்துப் பின்னப்பட்ட கூந்தலையும் அக்கூந்தலைத் தூக்கிப் பிடித்து அன்னை கொடுத்த அடியைப் பற்றியும் இன்று பார்த்தோம். தாய்க்கும் மகளுக்குமிடையிலான போராட்டம் இன்றும் தொடரும் அன்புப் பிணக்குதானே? அடுத்த பதிவில், சங்க காலத்துத் தலைவிகளுடைய வாழ்வில் தவிர்க்க முடியாத இடம்வகித்த பூவிலைப் பெண்டிரைச் சந்திப்போமா?

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

One thought on “சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்- 1

பின்னூட்டமொன்றை இடுக