‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்


ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம்.. நாடுவிட்டு நாடு பணியிடம் மாறிவந்ததால் தொடர்ந்து பதிவுகளைத் தர இயலாமல் போனது.

இந்த இடமாற்றம் பற்றியதுதான் இன்றைய பதிவு.

இப்படி நாடுவிட்டு நாடுசென்று வாழ்வு அமைத்துக் கொள்வதைத் தமிழில் எப்படிக் குறிக்கிறோம்?  ‘புலம்பெயர்தல்’ என்று சொல்கிறோம். இன்றும், புலம்பெயர்ந்த இந்தியர்கள்/ புலம்பெயர் தமிழர்கள் என்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா?

பொதுவாக, வெளிநாடுவாழ் இந்தியர்/ அயலகத் தமிழர் ஆகிய சொற்களை அரசுகள் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது.  ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படுவது குறித்தும் செய்திகளைச் சமீபத்தில் கண்டோம்.

இன்றும் நம்மிடையே புழங்கிவரும் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் என் மனதில் தங்கிப்போனது.

‘புலம்பெயர்தல்’ எவ்வளவு பழமையானது என்பதைவிட, ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் எவ்வளவு பழமையானது என்று தேடத் தோன்றியது. ஏனென்றால், தமிழர்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்றதும், வேற்றுநாட்டவர் தமிழகத்தில் வாழ்ந்ததும் சங்ககாலம் தொட்டு இருந்துவந்ததுதான். இலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுக்கள் வழியாகவும் இதை அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது’ என்று கூறியதாகக் கட்டுரைகளில் வாசித்தேன். ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : கோவை-சிறப்பு மலரில், அவருடைய ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தபோது, செம்மொழிக்கான பண்புகளாக – ‘தொன்மை, தொடர்ச்சி, செழுமை வளம்’ ஆகியவற்றை அவர் குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.

தமிழ்மொழி இன்றும் நம்மிடையே வழக்கொழியாது இருப்பதற்கு அதன் தொடர்ச்சியே முதன்மைப் பங்கு வகிக்கிறது. அப்படி, தொடர்ந்து நாம் பயன்படுத்தும் எண்ணிலடங்காச் சொற்களுள் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லின் தொன்மையை இன்று பார்ப்போம்.

மக்கள், தாம் வாழுமிடம்விட்டு வேறோர் இடம் புலம்பெயர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கல்வி, வேலை, வணிகம், போர் என்று பட்டியலிடலாம். தொல்காப்பியரும்-

‘ஓதல் பகையே தூதிவைப் பிரிவே’ 

என்று பிரிவு ஏற்படும் சூழல்களைக் காட்டுகிறார்.

நாம் இங்கு பார்க்கப்போவது, சங்கப் பாடல்களில் ‘புலம்பெயர்தல்’ என்னும் சொல்லாட்சி எப்படிப்பட்ட சூழல்களில் எல்லாம் வருகிறது என்பதைத்தான்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ஒரு பாடல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பொருள் ஈட்டுவதற்காகப் பிரியும் தலைவனிடம் தோழி, பிரிவின் துன்பம் குறித்துக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தன் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து

பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி

அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

(நற்றிணை 183)

என்பன முதல் சில வரிகள்.

மருத நிலத்து உமணர் – அதாவது உப்பு வணிகர்கள், தம் நாட்டில் விளைந்த நெல்லை, கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் உள்ள உப்பிற்கு விலையாகக் கொடுப்பார்கள். அதாவது, நெல்லை உப்புக்குப் பண்டமாற்றாகக் கொடுத்து வாங்குவார்கள்.  உப்பு வாணிபத்தில் ஈடுபடும் உமணர்,  தம் சுற்றத்தாரோடு நிலவுபோன்ற வெள்ளை மணலில், நீண்ட வழித்தடத்தில் வண்டிகளைக் கட்டிக்கொண்டு, நிலம்விட்டு மற்ற நிலத்திற்குப் புலம்பெயர்ந்துச் செல்வார்களாம். அப்படி அவர்கள் புலம்பெயர்ந்து செல்வதுகண்டு, அந்த ஊரில் இருப்பவர்கள் வருந்துவார்களாம். அதுபோல, உன் பிரிவால் தலைவி துன்பப்படுவாள் என்று தோழி கூறுகிறாள். 

ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

சுற்றத்தாரோடு புலம்பெயர்ந்து உமணர் போவது துன்பம் தரும், எனுமிடத்தில் ‘புலம்பெயர்தல்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரும் அகநானூற்றுப் பாடலைப் பாருங்கள்.

வேம்பற்றூர் குமரனார் எழுதிய பாடல், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைகிறது பாடல்.

முனை புலம்பெயர்த்த புல்லென் மன்றத்துப்

பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்

வினை அழி பாவையின் உலறி,

மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கே

(அகநானூறு 157)

என்று முடிகிறது பாடல். தலைவன் சென்றுள்ள கொடிய வழியைப் பாடலின் தொடக்க வரிகள் விளக்குகின்றன. பிரிந்து செல்லும் முன் தலைவன் தலைவிக்கு ஊக்கம்தரும் சொற்களைச் சொல்லிச் சென்றிருக்கிறான். அதைத் தலைவி தோழிக்குச் சொல்கிறாள்.

அச்சம் தரும் வழியில் தனியாகச் சென்ற நம் தலைவர் என் மனதிற்கு ஆறுதல் அளிக்க, முன்பெல்லாம் என்ன சொல்லுவார் தெரியுமா?

‘போர் நிகழ்கிறது. ஊரில் நலமாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தம் இடம் பொருள் இழந்து பாதுகாப்பான இருப்பிடம் நோக்கிப் புலம்பெயர்ந்துப் போய்விட்டனர். அதனால் பொலிவிழந்து காணப்பட்டது ஊர்மன்றம். எல்லோரும் புலம்பெயர்ந்து போன பிறகும், ஊர்மன்றத்தில் வைக்கப்பட்ட பெண்சிலை ஒன்று இருக்கும். அது மழை பெய்யும்போது நெகிழ்ந்தும், வெய்யில் காய்கையில் வெளுத்துப்போயும் தனியாக நிற்கும். 

அந்த மன்றத்துப் பொலிவிழந்த பாவைபோல, வீட்டில் தனித்திருக்க யாரால் முடியும்? உன்னைப் போன்று மனவலிமை உடையவர்களால் மட்டும்தான் அது முடியும்’, என்று தலைவர் என்னிடம் சொல்வார். ஆனாலும் அவரைப் பிரிந்து தனியாக நாட்களை என்னால் கழிக்க இயலவில்லை, என்று தலைவி புலம்புகிறாள்.

முனை புலம்பெயர்த்த புல்லென்மன்றத்து’

மக்கள் புலம்பெயர்ந்து சென்றதால் பொலிவிழந்த மன்றம் என்கிறது பாடல்.

புலம்பெயர்தலைத் தேடப் போய், பாடலின் இனிமையில் மயங்கிவிட்டோம் பாருங்கள்.

மற்றுமோர் அகநானூற்று பாடல், மாமூலனார் பாடியது. 

கோடு உயர் பிறங்கல் குன்றுபல நீந்தி,
வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய

(அகநானூறு 393)
என்று தொடங்கும் பாடல் அது.

இங்கே, புல்லி என்ற மன்னன் ஆளுகின்ற வேங்கடமலை பற்றிய வண்ணனையைக் காணமுடிகிறது.

வேங்கட மலையின் வளமும், நாட்டுப்புற வாழ்வும் தனியாக மற்றொரு பதிவில் பார்க்கவேண்டிய தகவல்கள். 

கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அதாவது – உயர்ந்த சிகரங்களையுடைய, பாறைகள் நிறைந்த குன்றுகள் பலவற்றைக் கடந்து சென்று, 

வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து- அதாவது – வேறொரு நாட்டில் பொருள் தேடும் எண்ணத்தோடு – 

புலம்பெயர்ந்து செல்லும் தலைவன், உன்னை மறவாது திரும்பி வருவான், என்று பிரிவினால் வருந்தும் தலைவிக்குத் தோழி கூறுவதாக அமைகிறது பாடல்.

இதுவரை நாம் படித்த எட்டுத்தொகைப் பாடல்கள் மூன்று. இரண்டில் பொருள் ஈட்டுவதற்காக இடம் மாறுவது ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லால் காட்டப்பட்டது. ஒன்றில், போரினால் ‘புலம்பெயர்ந்ததைப்’ பார்க்கமுடிந்தது.

இன்றும் புழக்கத்தில் உள்ள ‘புலம்பெயர்தல்’ என்ற சொல், பத்துப்பாட்டில் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடை, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடியது.

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

(நெடுநல்வாடை 1-5)

என்று பாடலின் தொடக்கமே, வெள்ளப் பெருக்கால் தம் இடத்தைவிட்டு வேறோர் இடம் நகரும் இடையர்களைக் காட்டுகிறது.

பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்-

வானம் புதிய மழையை அளவில்லாது பொழிந்ததை வெறுத்த வளைந்த கோல்களையுடைய இடையர், 

ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

தம் காளைகளை வேறு நிலங்களில் மேயவிட்டு, புலம்பெயர்ந்து, தனிமையில் கலங்கித் தவித்தனராம்.


அடுத்து, மலைபடுகடாம் – ‘புலம்பெயர்வைப்’ பயன்படுத்துகிறது. 

மலைபடுகடாம் ‘கூத்தராற்றுப்படை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். நன்னன் வேண்மான் என்ற மன்னனின் நாட்டுச்சிறப்பு, போர்த்திறன், மலைவளம் போன்றவை விவரிக்கப்படுகின்றன மலைபடுகடாமில்.

ஆற்றுப்படை நூல் இல்லையா? ஒரு பாணர் வறுமையில் வாடும் மற்றொரு பாணரை மன்னரிடம் சென்று, தாம் பெற்றதுபோல் செல்வத்தைப் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். தம் இடத்தைவிட்டுப் பிரிந்து, செல்வம் பெற்றுவரும் பொருட்டு, புலம்பெயர்ந்து மன்னரை நாடிச் செல்வார்கள் கலைஞர்களான கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும்.

பற்பல இசைக்கருவிகள் குறித்தும்,  எள், இஞ்சி, அவரை, தயிர், நாவல் பழம், வெண்கடுகு போன்ற உணவுப் பொருட்கள் குறித்தும் தகவல்கள் நூலில் காணமுடிகிறது.

மன்னன் நன்னனின் மலைநாட்டை நோக்கிச் செல்லும் வழித்தடம் எப்படி இருக்கும்? ஒரு சிறிய எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

பெரிய பெரிய அரண்கள் இருக்கும். பின்னி வைத்ததுபோல் கொடிகள் நிறைந்த சிறுகாட்டைக் கடக்க வேண்டும். யானைகள் போரிடுவதைப் போன்று நெருங்கிக் கிடக்கும் பாறைகள் நிறைந்த மழைக்காடுகள் இருக்குமாம். 

அப்படிப்பட்ட பாதையைக் கடந்து செல்லும்போது – 

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்

(மலைபடுகடாம் 392 – 393)

என்று அறிவுறுத்துகிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

முன்பு பாதையை நன்கு அறியாததால் வழிதவறிப் போன – புலம்பெயர்ந்த புதியவர்களான நீங்கள், (புலம்பெயர்புதுவிர்)

மறுபடி அதே சரியான இடத்திற்கு வந்துவிட்டால், அப்படியே சென்றுவிடாதீர்கள்.

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்-

குழப்பத்தைக் கொடுத்த அந்தச் சந்தைத் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு உதவியாக, ஊகம்புல்லைக் கட்டி வையுங்கள், என்கிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

அடுத்து, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையைப் பார்ப்போம். பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இதே ஆசிரியர், பத்துப்பாட்டு நூல்களில் மற்றொன்றான பெரும்பாணாற்றுப்படையையும் பாடியுள்ளார். 

காவிரியின் சிறப்பு, சோழநாட்டின் பெருவளம், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, இரவுநேர நிகழ்ச்சிகள், ஏற்றுமதி, இறக்குமதி, விழா நீங்காக் கடைவீதி, ஊரில் வாழும் உழவர்கள், வணிகர்கள், பல நாட்டினர் ஒன்றுகூடி வாழும் பாங்கு, என்று பல்வேறு வரலாற்றுச் செய்திகளைக் கண்முன் காட்டும் நூல் பட்டினப்பாலை. 

வணிகர் சிறப்பைச் சொல்லுகையில் – 

நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்,
கொள்வதூஉம் மிகை கொடாது,  கொடுப்பதூஉங் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை

(பட்டினப்பாலை 207-212)

நடுநிலைகொண்ட நல்ல நெஞ்சினர், பழிச்சொல்லுக்கு அஞ்சி உண்மை பேசினர், தம் பொருட்களையும் பிறர் பொருட்களையும் ஒன்றாகக் கருதினர், வாங்கியவற்றைக் கூடுதலாகக் கொள்ளாமல் கொடுத்தவற்றைக் குறைவாகக் கொடுக்காமல், பலப்பலப் பண்டங்களை விலைப்பேசி விற்கும், வளம் சேர்க்கும் தொன்மையான வணிகர் இருப்பிடம், என்று மிக அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.

காவிரிப்பட்டினத்தின் வணிகர் பகுதி எப்படி இருந்ததாம்?

பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர் முதுவாய் ஒக்கல்,
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள்கலந்துஇனிதுஉறையும்முட்டாச் சிறப்பின் பட்டினம் 

(பட்டினப்பாலை 213-218)

வெவ்வேறு  நாடுகளில் பலப்பலக் குழுக்களாக வாழ்ந்து பழகிய அறிவார்ந்த சுற்றத்தார் ஒன்றுகூடி, திருவிழாக்கோலம் பூண்ட தொன்மையான ஊர்போல் காட்சி அளித்ததாம் காவிரிப்பூம்பட்டினம் .

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

பழியில்லா நாடுகளிலிருந்து, பலப்பல மொழிகள் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து வணிகத்தின் பொருட்டு, காவிரிப்பூம்பட்டினத்தில் இனிமையாகக் கலந்து வாழ்ந்தனராம். அத்தகைய குறையில்லாச் சிறப்புடையது புகார் நகரம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பிழைப்புத் தேடி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர், அதுவும் இணக்கமாக வாழ்ந்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, தமிழகத்தின் வரலாற்றுச் செய்தி இது.

‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லும் உண்டு; பிறநாட்டவருடன் கூடிப் பன்னாட்டுச் சமூகமாக  அன்றே வாழ்ந்த சான்றும் உண்டு.

சங்ககாலத்தை அடுத்துவரும் சிலப்பதிகாரத்தில், பட்டினப்பாலையை ஒட்டிய வரிகளைக் காணமுடிகிறது.

புகார் காண்டத்தில் இந்திரவிழவு ஊரெடுத்த காதையில், புகார் நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பிரிவுகளாக இருந்ததை விளக்குகிறார் ஆசிரியர் இளங்கோவடிகள்.

மருவூர்ப்பாக்கத்துக் காட்சிகளைப் பாருங்கள் – 

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்                     

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 7-10)

திறந்தநிலை மேல்மாடங்களும், வியத்தகு பண்டகசாலைகள் அல்லது கிடங்குகளும், மானின் கண்போன்ற அகண்ட சாளரங்கள் கொண்ட மாளிகைகளும் இருந்தன. காண்போர் கண்களை அகலவிடாமல் கட்டிப்போடும் அழகிய யவனர் இருப்பிடங்களும் புகார் நகரில் இருந்தன.

அதோடு, 

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்

கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 11-12)

கடல் வழியாகச் செல்லும் கலங்களில் பலப்பல நாடுகளிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவோரும் கொண்டு செல்வோருமாக  – புலம்பெயர்ந்துப் பற்பல நாட்டவர் செல்வம் கொழிக்கக் காவிரிப்பூம்பட்டினத்தில் கலந்து மகிழ்ந்து வாழ்ந்த கடலோரப் பகுதிகளை இளங்கோவடிகள் கண்முன் நிறுத்துகிறார். ‘புலம்பெயர் மாக்கள்’ என்று நாம் தேடும் சொல்லையே பயன்படுத்துகிறார்.

புகார் நகரம் குறித்த- 

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

என்னும் பட்டினப்பாலை வரிகளும்

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

என்னும் சிலப்பதிகார வரிகளும் எவ்வளவு ஒத்திருக்கின்றன பாருங்கள். 

இப்படி, பல நாட்டவருடன் பரந்த மனத்துடன் கூடி வாழ்ந்த பன்மைச் சமூகமாகத்தான் பண்டைத் தமிழகத்தை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். 

பட்டினப்பாலை தவிர்த்த சங்க இலக்கியங்களில் – 

  • நற்றிணையில் மருத நிலத்து உமணர் நெய்தல் நிலத்திற்குப் புலம் பெயர்ந்தனர்
  • அகநானூறில் ஒரு பாடலில் போரால் புலம் பெயர்ந்தனர்; மற்றொரு பாடலில் பொருளீட்டப் புலம் பெயர்ந்தனர்
  • நெடுநல்வாடையில் வெள்ளப் பெருக்கால் புலம் பெயர்ந்தனர்
  • மலைபடுகடாமில் பொருள் வேண்டி மன்னரிடம் செல்வோர் புலம் பெயர்ந்தனர்

என்று பார்த்தோம். 

பட்டினப்பாலையிலும் சங்ககாலத்துக்குப் பின்வந்த சிலம்பிலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிபம் புலம் பெயர்தலுக்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. குறிப்பாக, பன்னாட்டவர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்த மேம்பட்ட சமூகச்சூழலைப் பெருமிதத்துடன் அறிந்துகொள்கிறோம்.

ஆக, சங்ககால நூல்களிலும் காப்பியக்காலச் சிலப்பதிகாரத்திலும் இன்றும் வழக்கிலுள்ள ‘புலம்பெயர்தல்’ எனும் சொல்லே இடம் பெயர்தலுக்குப் பயன்பட்டுள்ளது.

எனவே, தமிழ் இன்னும் வாழும் மொழியாக இருப்பது அதன் தொன்மையால் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாலும்தான். அந்தத் தொடர்ச்சிக்குத் தேவை நாம் தமிழ்மொழியை வேற்றுமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்துவதுதான்.

நன்றி.


Podcast available on:   Apple   Google    Spotify

தாய்லாந்தில் இரு தமிழ்க் கல்வெட்டுக்கள்

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்.   

ஈழத் துணவும் காழகத் தாக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு

(பட்டினப்பாலை 184-193)

இதென்ன, பலப்பலப் பொருட்களின் நீண்ட பட்டியல்போல இருக்கிறதே என்கிறீர்களா? ஆம், இவையனைத்தும் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் பற்பல நாடுகளில் இருந்து வந்து குவிந்திருக்கும் பண்டங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு, சோழநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இவை.

சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை தரும் செய்தியைத்தான் பார்த்தோம். சோழன் கரிகால்  பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது பட்டினப்பாலை.

உண்மையில், கரிகாற் பெருவளத்தான் அரசாண்ட தமிழகத்தின் சோழநாடு, பெரும் வளத்தோடு செழித்திருந்ததை எவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் புலவர்!

கடல் மூலமாக வந்த குதிரைகள் காணப்படுகின்றன;  உள்நாட்டு வணிகர்களின் கரிய மிளகு மூட்டைகள், வடமலையில் விளைந்த பொன்னும் மணியும், குடகுமலையில் தோன்றிய சந்தனமும் அகிலும் நிரம்பியுள்ளன; அதோடு, கங்கைக்கரையில் விளைந்தவையும் காவிரியில் விளைந்தவையும் குவிந்திருக்கின்றன; ஈழத்து உணவும் காழகத்துப் பொருட்களும் வந்து இறங்கியிருக்கின்றன. இப்படி, அரியவையும் பெரியவையுமாகப் பண்டங்கள் புகார் வீதியில்  நிறைந்து இருந்தனவாம்.

கடல்வழி வந்த குதிரைகள் அரபு நாட்டுத் தொடர்பைக் குறிப்பதாக அறிஞர்கள் உரைக்கிறார்கள். ஈழத்து உணவு புரிகிறது, இங்கே காழகம் என்பது மலேயப் பகுதியின் கடாரமாக இருக்கலாம் என்று சிலரும் இன்றைய மியான்மார் பகுதியாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்களும் சொல்கிறார்கள்.

பொதுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழரின் ரோமானிய மற்றும் அரபு வணிகம் தழைத்து விளங்கியதை இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றுச் சான்றுகள் மூலமாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தென்கிழக்காசியா உடனான தமிழகத்தின் தொடர்பு குறித்த செய்திகளை உறுதியாகக் கூறும் நேரடிச் சான்றுகள் குறைவாகவே இருந்தன.

பொதுக்காலத்தின் முதல் சில நூற்றாண்டுகளில், தென்கிழக்காசியாவுடனான தமிழர் தொடர்பிலான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கத் தொடங்குகின்றன.

அவற்றில், இன்றைய தாய்லாந்து நாட்டுப் பகுதியில் கிடைத்த இரண்டு கல்வெட்டுக்கள் குறித்து இன்று பேசுவோம்.

முதல் கல்வெட்டின் காலம்- பொதுக்காலம் 3-4 ஆம் நூற்றாண்டு; மற்றொரு கல்வெட்டின் காலம் பொதுக்காலம் 9 ஆம் நூற்றாண்டு.

தமிழர்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்ததைக் காட்டும் அந்த இரு கல்வெட்டுக்களின் கூடுதல் சிறப்பு, அவையிரண்டும் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் என்பது. கடல் கடந்து மற்றொரு நாட்டில் குடியேறிய நம் முன்னோர், அங்கு தாம் வாழ்ந்ததற்கான ஆவணத்தையும் விட்டுச் சென்றிருக்கின்றனர்.

அவர்கள் தமிழர்கள்தான் என்று நாம் எப்படி அறுதியிட்டுச் சொல்கிறோம்?

அவர்கள் செய்த வணிகத்தாலா? அவர்கள் விட்டுவந்த பொருட்களாலா? இவற்றைக்கொண்டு, கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த இனத்தின் அடையாளத்தை ஆய்வுகளால் ஓரளவுக்கு உறுதிசெய்ய முடியும்.

ஆனால், ஐயமின்றி அவர்கள் தமிழர்கள் என்பதற்கான அடையாளம் – அவர்கள் கல்லில் பதித்துச்சென்ற தம் தாய்மொழிதான்.

நாம் பார்க்கப் போகிற முதல் கல்வெட்டு, இன்றைய தாய்லாந்தில் உள்ள ‘கிராபி’ என்ற மாநிலத்தில்- ‘குவான் லுக் பட்’ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்.

அது ஒரு பொற்கொல்லர் அல்லது பொன் வணிகருடைய உரைகல். அதாவது, தங்கத்தின் தரத்தை உரசிப் பார்க்க, பொற்கொல்லர்கள் பயன்படுத்துவார்கள் இல்லையா…. அந்தக் கல். அதில், ‘பெரும்பதன் கல்’ என்ற பொரிப்பு காணப்பட்டது. பண்டைய நூற்றாண்டுகளில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்திய ‘தமிழ் பிராமி’ வரிவடிவத்தில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு அது.  அதன் காலம், பொதுக்காலம் 3-4 ஆம் நூற்றாண்டு.

அந்த இடத்தைச் சுற்றி, பொன்துகள்களும் கிடைத்தன. அங்கு ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், அங்கு பொன்வணிகம் நடந்து வந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

ஆக, இந்தக் கல்வெட்டைக் கொண்டு ஆய்வாளர்கள் கண்டறிந்து சொன்னது- பொதுக்காலம் 3-4 ஆம் நூற்றாண்டில் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்துவந்த தமிழர்கள், பொன்வணிகம் செய்திருக்கவேண்டும். 

அந்தக் கல் – ‘பெரும்பதன்’ என்ற பெயருடைய வணிகரின் உரைகல். தாம் தங்கத்தை உரசிப்பார்த்த அந்த உரைகல்லில் தம் பெயரைச் செதுக்கிச் சென்றிருக்கிறார் அவர்.

இன்றும், நம் வீட்டுப் பாத்திரங்களில் பெயர்களைப் பொரித்துவைக்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. அது ஓர் இயல்பான பழக்கம்போல் தோன்றினாலும், இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சி என்பது வியக்கவைக்கும் உண்மை.

‘பெரும்பதன்’ என்ற அந்த வணிகர் செய்த ஒரு சிறிய செயல் – தம் உரைகல்லில் பெயரைச் செதுக்கிவைத்தது. அந்தச் செயல், இன்றும் நாம் பெருமிதம் கொள்ளும் வகையில், தமிழர் கடல்கடந்து வாழ்ந்ததை உறுதிசெய்யும் சிறப்புமிகுந்த வரலாற்று நிகழ்வாக அமைந்துவிட்டது பாருங்கள்!

இன்று, நம் நாட்டிலும் சரி, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் சரி, அந்நாட்டின் தாய்மொழியிலோ, நம் அலுவல் மொழியிலோ, அல்லது பெரும்பான்மையோர் புழங்கும் மொழியிலோ எழுதுவதும் பேசுவதும், வாழ்க்கை ஓட்டத்தில் எளிதென்று சிலரும் உயர்வென்று சிலரும் எண்ணுகிறோம். 

பெரும்பதன் என்ற அந்தத் தமிழர் நினைத்திருந்தால், தாம் வாழ்ந்த நாட்டின் மொழியிலோ, புழங்கிய பொது மொழியிலோ எழுதியிருக்கலாம். அவர் எழுதிய மொழி தாய்மொழி தமிழ் என்றதனால்தான்- அது, தமிழர் அங்கு வாழ்ந்த அடையாளத்தை உறுதியாக உலகிற்குச் சொல்லும் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

அந்தக் கல்வெட்டு, அந்தமான் கடலை ஒட்டிய தாய்லாந்தின் மாநிலமான கிராபியில் உள்ள ‘ப்ரா குரு அந்தோன் சங்கரகிட்’ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 

நாம் இன்று தெரிந்துகொள்ளப்போகும் அடுத்த கல்வெட்டு – பொதுக்காலம் 9 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தின் ‘தகோபா’ அல்லது ‘தக்குவாபா’ என்ற பகுதியில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டு.

முந்தைய கல்வெட்டு கிடைத்த தென் தாய்லாந்துப் பகுதியில் உள்ள மற்றோர் ஊர்தான் தகுவாபா . சிதிலமடைந்த அந்தக் கல்வெட்டு கூறும் செய்தி என்ன?

தாங்கள் வாழ்ந்த இடத்தில் அமைத்த குளத்தைப் பற்றிக் குறிப்புத் தருகிறார்கள் அங்கு வாழ்ந்த வணிகர்கள்.

அந்தப் பகுதியில் வாழும் ‘மணிக்கிராமத்தார்க்கும்’ அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ‘சேனாவரையர்க்கும்’ பயன்படுமாறு ‘ஸ்ரீஅவனிநாரணம்’ என்ற பெயரில் குளம் ஒன்று வெட்டப்பட்டது. அந்தக் குளத்தை வெட்டியவர் பெயர் ‘நாங்கூர் உடையான்’. 

இந்தக் கல்வெட்டில் கிடைக்கும் பெயர்கள் – மணிக்கிராமத்தார், சேனாவரையர், நாங்கூர் உடையான், ஸ்ரீஅவனிநாரணன். இந்தப் பெயர்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு?

மணிக்கிராமம் என்பது, கடல்கடந்து பற்பல நாடுகளுக்குச் சென்ற தமிழக வணிகக் குழுக்களுள் ஒன்று.

சேனாவரையர் என்போர், அவர்களுக்குப் பாதுகாப்புக்கென்று உடன் இருந்தோர்

நாங்கூர் உடையான் குளத்தை வெட்டியவர் பெயர் – ஊர்ப்பெயரோடுகூடிய  நல்ல தமிழ்ப் பெயர் 

அந்தக் குளத்துக்கு அவர்கள் சூட்டிய பெயர்தான், அந்தக் கல்வெட்டின் காலத்தைக் கூறும் கூடுதல் சான்றாக இன்றுவரை நிற்கிறது.

குளத்தின் பெயர் – ‘ஸ்ரீ அவனிநாரணம்’.

பொதுக்காலம் 9 ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சிசெய்த பல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மரின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றுதான் ‘அவனிநாரணன்’ என்பது.

குடிபெயர்ந்து வாழ்ந்த நாட்டில் தாங்கள் வெட்டிய குளத்திற்கு, தம் சொந்த மண்ணில் தம்மை ஆளும் மன்னர் பெயரைச் சூட்டி வாழ்ந்து வந்திருக்கிறார்கள் தமிழக வணிகர்கள்.

தாம் செல்லும் இடங்களுக்கு, குழுக்களாகக் குடிபெயரும் ஊர்களுக்கு, தங்களுடைய சொந்த ஊர்ப் பெயர்களைச் சூட்டி வாழ்வது, தமிழரின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. தமிழகம் தாண்டி, இன்னும் தமிழ்ப் பெயர்கள் தாங்கி நிற்கும் ஊர்களே அதற்குச் சான்று.

இன்று தகோபா என்று அழைக்கப்படும் ஊரின் முந்தைய பெயர் ‘தக்கோலா’வாக இருந்திருக்கவேண்டும் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், தகோபாவுக்குப் பக்கத்தில் உள்ள ‘த்ராங்’ என்ற பகுதியே தக்கோலாவாக இருக்கும் என்கிறார்கள் வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்த்திரி உள்ளிட்டோர். தமிழ்நாட்டில், பல்லவத் தலைநகர் காஞ்சிக்கு அருகில் ‘தக்கோலம்’ என்ற ஊர் இன்றும் இருப்பது நம்மில் பலர் அறிந்ததுதானே?

தாய்லாந்தின் தகோபா பகுதியில், அவ்வூரின் வரலாற்றுப் பெயரான ‘தக்கோலா’ என்ற பெயரில் இன்றும் தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

சரி, புலம்பெயர்ந்த நாட்டில் ஒரு குளம் வெட்டி, அதற்கு அந்நாட்டு மன்னர் பெயரைச் சூட்டாமல், தம் மன்னர் பெயரைச் சூட்டி மகிழ்ந்த அந்த வணிகக் குழுவினர், தம் மண்ணின் வேறு என்ன சான்றுகளை அங்கு விட்டுச்சென்றார்கள்?

தமிழ்க் கல்வெட்டு கிடைத்த பகுதியில், பல்லவ பாணியிலான மூன்று சிற்பங்கள் கிடைத்தன. அவற்றுள், முதன்மைச் சிற்பம் திருமால் சிற்பம்.

கூடுதலாக, அந்த இடத்தைச் சுற்றியும் பொன்துகள்கள் நிரம்பக் கிடைத்தன. அங்கும் பொன் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஆக, தக்கோலம் என்று புலம்பெயர்ந்த ஊருக்குப் பெயரிட்டு, வழிபாட்டுக்குரிய கோயில் கட்டி, குளமும் வெட்டி,  தம் மன்னர் பெயரைக் குளத்திற்குச் சூட்டி, மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்திருக்கிறார்கள் மணிக்கிராமத்தார் என்ற தமிழக வணிகக் குழுவினர்.

அந்தச் சிற்பங்களைத் தாய்லாந்தின் ‘நாகோன் சி தம்மரத்’ அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம்.   

இந்தக் கல்வெட்டு, கடல்கடந்து சென்ற தமிழர் பெருமையைச் சொல்கிறது. வரலாற்று நோக்கில் பற்பல சான்றுகளைத் தருகிறது.  தென்கிழக்காசியாவில், அக்காலத்தில் தமிழக வணிகர்களின் செல்வாக்கை மிகத் தெளிவாகக் காட்டும் கல்வெட்டு இது.

ஆனால், இவற்றுள் முதன்மையானதாகத் தோன்றுவது – அவர்கள் எழுதிச் சென்ற மொழி. அங்கு வாழ்ந்த இனக்குழுவினர் ‘தமிழர்’ என்பதை உலகிற்குச் சொல்லும் முதன்மை ஆவணம் அவர்கள் பயன்படுத்திய தாய்மொழியான தமிழ்தான்.

ஒரு சமூகத்தின் அடையாளம் மொழியொடு பின்னிப் பிணைந்தது. அந்த அடையாளத்தை ஒதுக்கிவிட்டு, நாம் விட்டுச்செல்லும் எச்சங்கள், தெளிவில்லாத வரலாறையே காட்டும்.

விதைக்கும் விதை மரமாவதுதானே நோக்கம்?

இன்று நம்மில் பலர், மரபு மாற்றத்தில் வேரையே தொலைந்துபோகச் செய்வது சரியா?   

இன்று மட்டுமல்ல, நாளைய தலைமுறைக்கும் பெரும்பதன் போன்ற எண்ணிலடங்கா பலர் தேவை என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்தானே?

நன்றி.