மாறிய பெயர்; தடம் மாறிய பொருள்

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் துப்பாக்கி திரைப்படம் ஒளிபரப்பி இருந்தார்கள். அலைவரிசையைக் கவனிக்கவில்லை. உற்று நோக்கியபோது நடிகர் விஜய் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். அட.. என்னடா இது என்று ஆர்வம் கூடியது. பெயரைப் பார்த்தால் – ‘Thuppakki – Indian Soldier Never On Holiday’ என்று வந்தது. ஓ.. மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்று புரிந்துகொண்டேன். பின்னொருநாள், இந்தி அலைவரிசை வழங்கிக்கொண்டிருந்த படமொன்றைப் பார்க்க அமர்ந்தேன். ஏற்கனவே பார்த்த படம்போல் இருந்தது. மூளையைத் தீட்டித் தேடியதில் அதே துப்பாக்கி- இப்போது அக்‌ஷய்குமார் கையில். உதட்டசைவு மாறாமல் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். பெயரைப் பார்த்தால் – ‘Holiday – A Soldier is Never Off Duty’ என்று இருந்தது. இது தமிழ்த் துப்பாக்கியின் இந்தி தழுவல். துப்பாக்கி என்று தமிழில் முதலில் எடுத்து, வணிக வெற்றியடைந்ததும், அதையே ‘Indian Soldier Never On Holiday’ என்று இந்தியில் மொழிமாற்றம் மட்டும் செய்து வெளியிட்டு இருந்தார்கள். பின் அதே கதையைத் தழுவி, முதலிலிருந்து முழுமையாக மறுபடி இந்தியில் ‘A Soldier is Never Off Duty’ என்று பயங்கரமாக மாற்றி யோசித்திருந்தார்கள். ஒரே கல்லில் மூன்று மாங்காய்… இல்லை இல்லை.. ஒரே கதையில் குறைந்தது மூன்று படங்கள்.

தோசையும் தேங்காய்த் துவையலும் வழங்கிய உணவகம் அதையே தோசா நாரியல் சட்னி என்று பெயர்மாற்றி வழங்கியது. மேலும் அடங்காத அறிவுப் பசியில், தோசை மாவை பாசுமதி அரிசியில் முதலிலிருந்து ஆட்டி வட இந்திய ‘தோசா’வாகத் திரைவிரும்பிகளுக்குப் பரிமாறியது புரிந்தது. இதுபோல் தோசைகளும் இட்லிகளும் கணக்கில்லாமல் கிடைக்கும் காலம் இது. தலைச் சுற்றியது எனக்கு.

எதை எப்படிக் கொடுத்தாலும் சிந்திக்காது வாங்கியுண்ணும் சமூகமாக மாறிப்போன நமக்கு, மாறிய பெயர்களும் தடம் மாறிய பொருள்களும் பொருட்டாகவே தெரிவதில்லை.

இன்னொரு கவளம் வேண்டுமா? இதோ…

சென்னையில் ஹாமில்டன் பாலம் என்று ஒன்று இருந்தது. அதன் பெயர்க்காரணம் குறித்துச் சென்னை ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்கள் கூறுகிறார்கள். சென்னையின் ஆளுநராக இருந்த லார்ட் ஹாமில்டன் என்பவரின் பெயரில் இது கட்டப்பட்டதாக நம்பிவந்த நேரத்தில், ஹாமில்டன் என்ற ஆளுநர் சென்னையில் இருந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை என்கிறார், சென்னை ஆய்வாளரான திரு. முத்தையா. ஆனால், நம்முடைய பேசுபொருள் அதுவல்ல.

ஆங்கிலேயர் காலத்தில் ‘ஹாமில்டன் ப்ரிட்ஜ்’ என்றழைக்கப்பட்ட பாலம், தமிழில் ‘ஹாமில்டன் வாராவதி’ என்றானது. ஹாமில்டன் என்ற சொல் காலப்போக்கில் மருவி ‘அம்பட்டன் வாராவதி’ ஆனது.  அழகுத் தமிழ்ச் சொற்களான கன்னியாகுமரி cape comorin என்றும், தூத்துக்குடி tuticorin என்றும், திருநெல்வேலி tinneveli என்றும் ஆங்கிலேயர் வாயில் படாதபாடுபட்டதைக்கூட ஓரளவு தாங்கிக் கொள்ளலாம். நம் உணவுச் சின்னமாம் மிளகாய்ப்பொடியை gun powder என்று இழிவுபடுத்தியதற்குப் பழிக்குப்பழிதான் ‘அம்பட்டன் வாராவதி’ என்று நினைத்துவிடாதீர்கள். வாராவதியின் கதை அதோடு நிறைவடையவில்லை.

ஹாமில்டன் ப்ரிட்ஜ் தமிழனால் அம்பட்டன் வாராவதி என்றாக, அதை ஆங்கிலேயர் மிகச்சிறப்பாக மறுமொழியாக்கம் செய்து barbers bridge என்று அழைக்கத் தொடங்கினர். ‘ஹாமில்டன் ப்ரிட்ஜ்’ – barbers bridgeஆக மாறிய கதைச் சுருக்கம் இது.

பின்னர் அதுவே அம்பேத்கர் பாலம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

இதை எண்ணிச் சிரிப்பதா? சிந்திப்பதா? முடிவு உங்கள் கையில்.

இது போல இன்னும் நிறைய உண்டு-

பெருமைமிகு மாமல்லபுரம் மகாபலிபுரம் ஆனதும்; அருள்மிகு தில்லைச் சிற்றம்பலம் சிதம்பரம் ஆனதும்; இணையில்லாப் பெருவுடையார் கோயில் ப்ருஹத்தீஷ்வரம் ஆனதும் என்று பட்டியல் நீள்கிறது. பார்ப்போம்… கேட்போம்… அடுத்தடுத்த பதிவுகளில்.

நன்றி.

இணைப்புகள்-


Podcast available on:   Apple   Google   Spotify

‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்


ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம்.. நாடுவிட்டு நாடு பணியிடம் மாறிவந்ததால் தொடர்ந்து பதிவுகளைத் தர இயலாமல் போனது.

இந்த இடமாற்றம் பற்றியதுதான் இன்றைய பதிவு.

இப்படி நாடுவிட்டு நாடுசென்று வாழ்வு அமைத்துக் கொள்வதைத் தமிழில் எப்படிக் குறிக்கிறோம்?  ‘புலம்பெயர்தல்’ என்று சொல்கிறோம். இன்றும், புலம்பெயர்ந்த இந்தியர்கள்/ புலம்பெயர் தமிழர்கள் என்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா?

பொதுவாக, வெளிநாடுவாழ் இந்தியர்/ அயலகத் தமிழர் ஆகிய சொற்களை அரசுகள் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது.  ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படுவது குறித்தும் செய்திகளைச் சமீபத்தில் கண்டோம்.

இன்றும் நம்மிடையே புழங்கிவரும் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் என் மனதில் தங்கிப்போனது.

‘புலம்பெயர்தல்’ எவ்வளவு பழமையானது என்பதைவிட, ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் எவ்வளவு பழமையானது என்று தேடத் தோன்றியது. ஏனென்றால், தமிழர்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்றதும், வேற்றுநாட்டவர் தமிழகத்தில் வாழ்ந்ததும் சங்ககாலம் தொட்டு இருந்துவந்ததுதான். இலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுக்கள் வழியாகவும் இதை அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது’ என்று கூறியதாகக் கட்டுரைகளில் வாசித்தேன். ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : கோவை-சிறப்பு மலரில், அவருடைய ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தபோது, செம்மொழிக்கான பண்புகளாக – ‘தொன்மை, தொடர்ச்சி, செழுமை வளம்’ ஆகியவற்றை அவர் குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.

தமிழ்மொழி இன்றும் நம்மிடையே வழக்கொழியாது இருப்பதற்கு அதன் தொடர்ச்சியே முதன்மைப் பங்கு வகிக்கிறது. அப்படி, தொடர்ந்து நாம் பயன்படுத்தும் எண்ணிலடங்காச் சொற்களுள் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லின் தொன்மையை இன்று பார்ப்போம்.

மக்கள், தாம் வாழுமிடம்விட்டு வேறோர் இடம் புலம்பெயர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கல்வி, வேலை, வணிகம், போர் என்று பட்டியலிடலாம். தொல்காப்பியரும்-

‘ஓதல் பகையே தூதிவைப் பிரிவே’ 

என்று பிரிவு ஏற்படும் சூழல்களைக் காட்டுகிறார்.

நாம் இங்கு பார்க்கப்போவது, சங்கப் பாடல்களில் ‘புலம்பெயர்தல்’ என்னும் சொல்லாட்சி எப்படிப்பட்ட சூழல்களில் எல்லாம் வருகிறது என்பதைத்தான்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ஒரு பாடல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பொருள் ஈட்டுவதற்காகப் பிரியும் தலைவனிடம் தோழி, பிரிவின் துன்பம் குறித்துக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தன் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து

பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி

அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

(நற்றிணை 183)

என்பன முதல் சில வரிகள்.

மருத நிலத்து உமணர் – அதாவது உப்பு வணிகர்கள், தம் நாட்டில் விளைந்த நெல்லை, கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் உள்ள உப்பிற்கு விலையாகக் கொடுப்பார்கள். அதாவது, நெல்லை உப்புக்குப் பண்டமாற்றாகக் கொடுத்து வாங்குவார்கள்.  உப்பு வாணிபத்தில் ஈடுபடும் உமணர்,  தம் சுற்றத்தாரோடு நிலவுபோன்ற வெள்ளை மணலில், நீண்ட வழித்தடத்தில் வண்டிகளைக் கட்டிக்கொண்டு, நிலம்விட்டு மற்ற நிலத்திற்குப் புலம்பெயர்ந்துச் செல்வார்களாம். அப்படி அவர்கள் புலம்பெயர்ந்து செல்வதுகண்டு, அந்த ஊரில் இருப்பவர்கள் வருந்துவார்களாம். அதுபோல, உன் பிரிவால் தலைவி துன்பப்படுவாள் என்று தோழி கூறுகிறாள். 

ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

சுற்றத்தாரோடு புலம்பெயர்ந்து உமணர் போவது துன்பம் தரும், எனுமிடத்தில் ‘புலம்பெயர்தல்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரும் அகநானூற்றுப் பாடலைப் பாருங்கள்.

வேம்பற்றூர் குமரனார் எழுதிய பாடல், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைகிறது பாடல்.

முனை புலம்பெயர்த்த புல்லென் மன்றத்துப்

பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்

வினை அழி பாவையின் உலறி,

மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கே

(அகநானூறு 157)

என்று முடிகிறது பாடல். தலைவன் சென்றுள்ள கொடிய வழியைப் பாடலின் தொடக்க வரிகள் விளக்குகின்றன. பிரிந்து செல்லும் முன் தலைவன் தலைவிக்கு ஊக்கம்தரும் சொற்களைச் சொல்லிச் சென்றிருக்கிறான். அதைத் தலைவி தோழிக்குச் சொல்கிறாள்.

அச்சம் தரும் வழியில் தனியாகச் சென்ற நம் தலைவர் என் மனதிற்கு ஆறுதல் அளிக்க, முன்பெல்லாம் என்ன சொல்லுவார் தெரியுமா?

‘போர் நிகழ்கிறது. ஊரில் நலமாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தம் இடம் பொருள் இழந்து பாதுகாப்பான இருப்பிடம் நோக்கிப் புலம்பெயர்ந்துப் போய்விட்டனர். அதனால் பொலிவிழந்து காணப்பட்டது ஊர்மன்றம். எல்லோரும் புலம்பெயர்ந்து போன பிறகும், ஊர்மன்றத்தில் வைக்கப்பட்ட பெண்சிலை ஒன்று இருக்கும். அது மழை பெய்யும்போது நெகிழ்ந்தும், வெய்யில் காய்கையில் வெளுத்துப்போயும் தனியாக நிற்கும். 

அந்த மன்றத்துப் பொலிவிழந்த பாவைபோல, வீட்டில் தனித்திருக்க யாரால் முடியும்? உன்னைப் போன்று மனவலிமை உடையவர்களால் மட்டும்தான் அது முடியும்’, என்று தலைவர் என்னிடம் சொல்வார். ஆனாலும் அவரைப் பிரிந்து தனியாக நாட்களை என்னால் கழிக்க இயலவில்லை, என்று தலைவி புலம்புகிறாள்.

முனை புலம்பெயர்த்த புல்லென்மன்றத்து’

மக்கள் புலம்பெயர்ந்து சென்றதால் பொலிவிழந்த மன்றம் என்கிறது பாடல்.

புலம்பெயர்தலைத் தேடப் போய், பாடலின் இனிமையில் மயங்கிவிட்டோம் பாருங்கள்.

மற்றுமோர் அகநானூற்று பாடல், மாமூலனார் பாடியது. 

கோடு உயர் பிறங்கல் குன்றுபல நீந்தி,
வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய

(அகநானூறு 393)
என்று தொடங்கும் பாடல் அது.

இங்கே, புல்லி என்ற மன்னன் ஆளுகின்ற வேங்கடமலை பற்றிய வண்ணனையைக் காணமுடிகிறது.

வேங்கட மலையின் வளமும், நாட்டுப்புற வாழ்வும் தனியாக மற்றொரு பதிவில் பார்க்கவேண்டிய தகவல்கள். 

கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அதாவது – உயர்ந்த சிகரங்களையுடைய, பாறைகள் நிறைந்த குன்றுகள் பலவற்றைக் கடந்து சென்று, 

வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து- அதாவது – வேறொரு நாட்டில் பொருள் தேடும் எண்ணத்தோடு – 

புலம்பெயர்ந்து செல்லும் தலைவன், உன்னை மறவாது திரும்பி வருவான், என்று பிரிவினால் வருந்தும் தலைவிக்குத் தோழி கூறுவதாக அமைகிறது பாடல்.

இதுவரை நாம் படித்த எட்டுத்தொகைப் பாடல்கள் மூன்று. இரண்டில் பொருள் ஈட்டுவதற்காக இடம் மாறுவது ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லால் காட்டப்பட்டது. ஒன்றில், போரினால் ‘புலம்பெயர்ந்ததைப்’ பார்க்கமுடிந்தது.

இன்றும் புழக்கத்தில் உள்ள ‘புலம்பெயர்தல்’ என்ற சொல், பத்துப்பாட்டில் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடை, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடியது.

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

(நெடுநல்வாடை 1-5)

என்று பாடலின் தொடக்கமே, வெள்ளப் பெருக்கால் தம் இடத்தைவிட்டு வேறோர் இடம் நகரும் இடையர்களைக் காட்டுகிறது.

பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்-

வானம் புதிய மழையை அளவில்லாது பொழிந்ததை வெறுத்த வளைந்த கோல்களையுடைய இடையர், 

ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

தம் காளைகளை வேறு நிலங்களில் மேயவிட்டு, புலம்பெயர்ந்து, தனிமையில் கலங்கித் தவித்தனராம்.


அடுத்து, மலைபடுகடாம் – ‘புலம்பெயர்வைப்’ பயன்படுத்துகிறது. 

மலைபடுகடாம் ‘கூத்தராற்றுப்படை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். நன்னன் வேண்மான் என்ற மன்னனின் நாட்டுச்சிறப்பு, போர்த்திறன், மலைவளம் போன்றவை விவரிக்கப்படுகின்றன மலைபடுகடாமில்.

ஆற்றுப்படை நூல் இல்லையா? ஒரு பாணர் வறுமையில் வாடும் மற்றொரு பாணரை மன்னரிடம் சென்று, தாம் பெற்றதுபோல் செல்வத்தைப் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். தம் இடத்தைவிட்டுப் பிரிந்து, செல்வம் பெற்றுவரும் பொருட்டு, புலம்பெயர்ந்து மன்னரை நாடிச் செல்வார்கள் கலைஞர்களான கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும்.

பற்பல இசைக்கருவிகள் குறித்தும்,  எள், இஞ்சி, அவரை, தயிர், நாவல் பழம், வெண்கடுகு போன்ற உணவுப் பொருட்கள் குறித்தும் தகவல்கள் நூலில் காணமுடிகிறது.

மன்னன் நன்னனின் மலைநாட்டை நோக்கிச் செல்லும் வழித்தடம் எப்படி இருக்கும்? ஒரு சிறிய எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

பெரிய பெரிய அரண்கள் இருக்கும். பின்னி வைத்ததுபோல் கொடிகள் நிறைந்த சிறுகாட்டைக் கடக்க வேண்டும். யானைகள் போரிடுவதைப் போன்று நெருங்கிக் கிடக்கும் பாறைகள் நிறைந்த மழைக்காடுகள் இருக்குமாம். 

அப்படிப்பட்ட பாதையைக் கடந்து செல்லும்போது – 

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்

(மலைபடுகடாம் 392 – 393)

என்று அறிவுறுத்துகிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

முன்பு பாதையை நன்கு அறியாததால் வழிதவறிப் போன – புலம்பெயர்ந்த புதியவர்களான நீங்கள், (புலம்பெயர்புதுவிர்)

மறுபடி அதே சரியான இடத்திற்கு வந்துவிட்டால், அப்படியே சென்றுவிடாதீர்கள்.

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்-

குழப்பத்தைக் கொடுத்த அந்தச் சந்தைத் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு உதவியாக, ஊகம்புல்லைக் கட்டி வையுங்கள், என்கிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

அடுத்து, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையைப் பார்ப்போம். பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இதே ஆசிரியர், பத்துப்பாட்டு நூல்களில் மற்றொன்றான பெரும்பாணாற்றுப்படையையும் பாடியுள்ளார். 

காவிரியின் சிறப்பு, சோழநாட்டின் பெருவளம், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, இரவுநேர நிகழ்ச்சிகள், ஏற்றுமதி, இறக்குமதி, விழா நீங்காக் கடைவீதி, ஊரில் வாழும் உழவர்கள், வணிகர்கள், பல நாட்டினர் ஒன்றுகூடி வாழும் பாங்கு, என்று பல்வேறு வரலாற்றுச் செய்திகளைக் கண்முன் காட்டும் நூல் பட்டினப்பாலை. 

வணிகர் சிறப்பைச் சொல்லுகையில் – 

நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்,
கொள்வதூஉம் மிகை கொடாது,  கொடுப்பதூஉங் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை

(பட்டினப்பாலை 207-212)

நடுநிலைகொண்ட நல்ல நெஞ்சினர், பழிச்சொல்லுக்கு அஞ்சி உண்மை பேசினர், தம் பொருட்களையும் பிறர் பொருட்களையும் ஒன்றாகக் கருதினர், வாங்கியவற்றைக் கூடுதலாகக் கொள்ளாமல் கொடுத்தவற்றைக் குறைவாகக் கொடுக்காமல், பலப்பலப் பண்டங்களை விலைப்பேசி விற்கும், வளம் சேர்க்கும் தொன்மையான வணிகர் இருப்பிடம், என்று மிக அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.

காவிரிப்பட்டினத்தின் வணிகர் பகுதி எப்படி இருந்ததாம்?

பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர் முதுவாய் ஒக்கல்,
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள்கலந்துஇனிதுஉறையும்முட்டாச் சிறப்பின் பட்டினம் 

(பட்டினப்பாலை 213-218)

வெவ்வேறு  நாடுகளில் பலப்பலக் குழுக்களாக வாழ்ந்து பழகிய அறிவார்ந்த சுற்றத்தார் ஒன்றுகூடி, திருவிழாக்கோலம் பூண்ட தொன்மையான ஊர்போல் காட்சி அளித்ததாம் காவிரிப்பூம்பட்டினம் .

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

பழியில்லா நாடுகளிலிருந்து, பலப்பல மொழிகள் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து வணிகத்தின் பொருட்டு, காவிரிப்பூம்பட்டினத்தில் இனிமையாகக் கலந்து வாழ்ந்தனராம். அத்தகைய குறையில்லாச் சிறப்புடையது புகார் நகரம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பிழைப்புத் தேடி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர், அதுவும் இணக்கமாக வாழ்ந்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, தமிழகத்தின் வரலாற்றுச் செய்தி இது.

‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லும் உண்டு; பிறநாட்டவருடன் கூடிப் பன்னாட்டுச் சமூகமாக  அன்றே வாழ்ந்த சான்றும் உண்டு.

சங்ககாலத்தை அடுத்துவரும் சிலப்பதிகாரத்தில், பட்டினப்பாலையை ஒட்டிய வரிகளைக் காணமுடிகிறது.

புகார் காண்டத்தில் இந்திரவிழவு ஊரெடுத்த காதையில், புகார் நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பிரிவுகளாக இருந்ததை விளக்குகிறார் ஆசிரியர் இளங்கோவடிகள்.

மருவூர்ப்பாக்கத்துக் காட்சிகளைப் பாருங்கள் – 

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்                     

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 7-10)

திறந்தநிலை மேல்மாடங்களும், வியத்தகு பண்டகசாலைகள் அல்லது கிடங்குகளும், மானின் கண்போன்ற அகண்ட சாளரங்கள் கொண்ட மாளிகைகளும் இருந்தன. காண்போர் கண்களை அகலவிடாமல் கட்டிப்போடும் அழகிய யவனர் இருப்பிடங்களும் புகார் நகரில் இருந்தன.

அதோடு, 

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்

கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 11-12)

கடல் வழியாகச் செல்லும் கலங்களில் பலப்பல நாடுகளிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவோரும் கொண்டு செல்வோருமாக  – புலம்பெயர்ந்துப் பற்பல நாட்டவர் செல்வம் கொழிக்கக் காவிரிப்பூம்பட்டினத்தில் கலந்து மகிழ்ந்து வாழ்ந்த கடலோரப் பகுதிகளை இளங்கோவடிகள் கண்முன் நிறுத்துகிறார். ‘புலம்பெயர் மாக்கள்’ என்று நாம் தேடும் சொல்லையே பயன்படுத்துகிறார்.

புகார் நகரம் குறித்த- 

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

என்னும் பட்டினப்பாலை வரிகளும்

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

என்னும் சிலப்பதிகார வரிகளும் எவ்வளவு ஒத்திருக்கின்றன பாருங்கள். 

இப்படி, பல நாட்டவருடன் பரந்த மனத்துடன் கூடி வாழ்ந்த பன்மைச் சமூகமாகத்தான் பண்டைத் தமிழகத்தை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். 

பட்டினப்பாலை தவிர்த்த சங்க இலக்கியங்களில் – 

  • நற்றிணையில் மருத நிலத்து உமணர் நெய்தல் நிலத்திற்குப் புலம் பெயர்ந்தனர்
  • அகநானூறில் ஒரு பாடலில் போரால் புலம் பெயர்ந்தனர்; மற்றொரு பாடலில் பொருளீட்டப் புலம் பெயர்ந்தனர்
  • நெடுநல்வாடையில் வெள்ளப் பெருக்கால் புலம் பெயர்ந்தனர்
  • மலைபடுகடாமில் பொருள் வேண்டி மன்னரிடம் செல்வோர் புலம் பெயர்ந்தனர்

என்று பார்த்தோம். 

பட்டினப்பாலையிலும் சங்ககாலத்துக்குப் பின்வந்த சிலம்பிலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிபம் புலம் பெயர்தலுக்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. குறிப்பாக, பன்னாட்டவர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்த மேம்பட்ட சமூகச்சூழலைப் பெருமிதத்துடன் அறிந்துகொள்கிறோம்.

ஆக, சங்ககால நூல்களிலும் காப்பியக்காலச் சிலப்பதிகாரத்திலும் இன்றும் வழக்கிலுள்ள ‘புலம்பெயர்தல்’ எனும் சொல்லே இடம் பெயர்தலுக்குப் பயன்பட்டுள்ளது.

எனவே, தமிழ் இன்னும் வாழும் மொழியாக இருப்பது அதன் தொன்மையால் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாலும்தான். அந்தத் தொடர்ச்சிக்குத் தேவை நாம் தமிழ்மொழியை வேற்றுமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்துவதுதான்.

நன்றி.


Podcast available on:   Apple   Google    Spotify

நுனி நாக்குத் தமிழ் சரியா? தொல்காப்பிய வழி தமிழ் ஒலிகள்

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்

(ஔவையார்)

என்று ஔவையார் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

சித்திரம் வரைவது கைப்பழக்கம்;

செம்மையாகத் தமிழ்ப் பேசுவது- நாவின் பழக்கம்;

எக்காலமும் பயன்படுமாறு உள்ளிருத்திக் கொள்ளும் கல்வி – மனப்பழக்கமாம்.

இன்று நாம் பேசும் தமிழ், பெரும்பாலும் கலப்புத் தமிழ்தான். ஆங்கிலச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் கலந்து பேசுவதே இயல்பான பேச்சுவழக்கு என்று பலரும் கருதும் வருந்தத்தக்கச் சூழலைக் காண்கிறோம்.

 இடையிடையே ஒலிக்கும் அந்தத் தமிழாவது சரியான உச்சரிப்பில் உள்ளதா?

இந்தப் பகிர்வில் நாம் பார்க்கப் போவது ஔவை சொன்ன நாப்பழக்கத்தைப் பற்றித்தான்.

ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கும் மையங்கள் – ‘நுனிநாக்கு ஆங்கிலம் பேச வேண்டுமா? எங்களிடம் வாருங்கள்’ என்று விளம்பரப்படுத்துவதைக் காண்கிறோம்.

நுனிநாக்கு ஆங்கிலம் என்பது மற்றவரைக் கவரும்வண்ணம் ஆங்கிலத்தைப் பேசும் முறையைச் சொல்கிறது.  ஆனால், ஒரு சொல் அல்லது தகவல் ‘நுனி நாக்கில் உள்ளது’ என்பதை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தால் – ‘tip of my tongue’ என்று வரும்.

வாய்வரை வந்துவிட்டது ஆனால் மறந்துவிட்டேன்’ என்பதையே அத்தொடர் குறிக்கிறது.

இன்றைய பகிர்வு இதைப் பற்றியதல்ல. நுனிநாக்கு ஆங்கிலம் பற்றியதும் அல்ல.

நுனிநாக்கு ஆங்கிலம்போல் நுனிநாக்கில் தமிழைப் பேசுவது சரியா என்பதுதான் இன்றைய பதிவு.

பேச்சுமொழி தவிர, நாள்தோறும் நம் காதுகளில் ஒலிக்கும் பல்வகைத் தமிழ் உண்டு- வானொலியில் பண்பலைத் தமிழ், தொலைக்காட்சியில் தொகுப்பாளர் தமிழ், செய்தித் தமிழ் என்பதுபோல்.

மகிழ்ச்சியூட்டும் ஒருசில நிகழ்வுகளை விடுத்து, ஔவை சொன்ன நாவில் பழகிய செம்மையான தமிழ் – தேடினாலும் கிடைப்பதில்லை.

தமிழ்வழிக் கல்வி இன்று அருகிவிட்டது;

தமிழ் கற்ற பெற்றோர் வீட்டில் தமிழ்ப் பேசுவதில்லை;

ஆங்கிலவழியில் கல்வி கற்கும் பிள்ளைகளில் பெரும்பாலானோருக்குத் தமிழ்ப் பேசும் தேவை இல்லவே இல்லை.

குறைந்தது, பள்ளியில் தமிழ் படிக்காத முதல் தலைமுறை, பெற்றோர் வீட்டில் பேசுவதைக் கேட்டாவது உச்சரிப்புப் பிழையின்றிப் பேசினார்கள். இப்போது, அந்த வாய்ப்பும் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.

இதற்கெல்லாம் ஏன் வருந்த வேண்டும்? மொழி என்பது தகவல் தொடர்புக் கருவிதானே? என்று உங்களில் பலர் நினைக்கலாம்.

ஆனால், நமக்குப் பயன்படும் பற்பல மொழிகளை அதே எண்ணத்துடன் நாம் பார்ப்பதில்லையே? வெளிநாட்டு மொழிகளைக் கற்கும்போது உச்சரிப்பில் எடுத்துக்கொள்ளும் அக்கறை, நம் வாயிலாக அடுத்தத் தலைமுறைக்குச் செல்லவேண்டிய நம் அடையாளமான தாய்மொழியைப் பழக்கும்போதும் இருக்கலாமே என்பதுதான் என் ஆதங்கம்.

சரி, நாப்பழக்கத்தை எப்படி வளர்ப்பது?

சரியான உச்சரிப்பை எப்படிப் பழகுவது?

தமிழ் மொழியின் ஒலிகள் எப்படி வந்தன, அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பது குறித்து, நம் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போம். 

தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்கள் எதுவும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான், தமிழில் இதுவரைக் கிடைத்துள்ள நூல்களில் மிகத் தொன்மையானது தொல்ககாப்பியம் என்கிறோம்.

இலக்கியத்துக்குத்தானே இலக்கணம் வகுக்க இயலும்? தமக்கு முன்பிருந்த இலக்கியங்களில் இருந்து மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கினார் தொல்காப்பியர்.

தொல்காப்பியரின் காலம், பொதுக்காலத்துக்கு முன் 500 முதல் 300 ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என்று ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.

கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்குமுன், தெளிவான விளக்கங்களுடன் நம் மொழிக்கான இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மொழியைத் தவறாக உச்சரிப்பது மொழிக்கொலை என்றுதானே சொல்லவேண்டும்?

நம் பிள்ளைகள் கெட்ட சொல் ஏதாவது சொன்னால், அவர்களைத் திட்டினாலும் நமக்கு நன்றாகத் தெரியும் – அவர்கள் அந்தக் கெட்ட சொல்லை உருவாக்கவில்லை- தாம் கேட்ட சொல்லைத்தான் பயன்படுத்தினார்கள்  என்று.

அதேபோல்தான், ஒழுங்காகத் தமிழ்ப் பேசாத சமூகம், தமிழ் எழுத்துக்களை ஒழுங்காக உச்சரிக்காத சமூகம் – தவறான உச்சரிப்பைக் கேட்டு அதையே தொடரும் தலைமுறையைத்தானே உருவாக்கும்?

தொல்காப்பியர், தாம் இயற்றிய தொல்காப்பியத்தில்- எழுத்ததிகாரத்தில் – ‘பிறப்பியல்’ என்று தனி இயலில் எழுத்துக்களின் ஒலிப்புமுறை பற்றிக் கூறுகிறார்.

மிகமிக எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார். 

எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளாகத் தொல்காப்பியர் எட்டு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார்.

தலை, கழுத்து, நெஞ்சு. பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவை அவை.

அண்ணம் என்பது மேல்வாயைக் குறிக்கிறது.

தொல்காப்பியத்தின் நூற்பாக்களையும் அவற்றின் விளக்கத்தையும் கூற முயற்சிக்கிறேன்.

பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்

12 உயிர் எழுத்துக்களும் மிடற்றுப் பிறந்த வளியின்– அதாவது, தொண்டையில் இருந்து பிறந்த காற்றால் ஒலிக்கும்.

அவற்றுள்,
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்

வாயைத் திறந்த நிலையில், அ ஆ இரண்டும் ஒலிக்கும்.

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
அவைதாம்,
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய

இ ஈ எ ஏ ஐ என்ற ஐந்தும் – மேல்வாய்ப் பல்லின் அடியை நாவிளிம்பு பொருந்தப் பிறக்கும்.

அடுத்த நூற்பாவை விளக்கவே தேவையில்லை-

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்

என்கிறார் தொல்காப்பியர்.

சரி மெய்யெழுத்துக்களின் ஒலி எப்படி பிறக்கிறது?

நாவின் அடி மேல்வாயின் அடிப்பகுதியைச் சென்று பொருந்தும்போது க், ங் ஆகியவை பிறக்கின்றன.

ககார ஙகாரம் முதல் நா அண்ணம்

அண்ணம் என்பது மேல்வாயைக் குறிக்கிறது.

நாவின் இடைப்பகுதி, அண்ணத்தின் (மேல்வாயின்) இடைப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச், ஞ் இரண்டும் பிறக்கின்றன.

சகார ஞகாரம் இடை நா அண்ணம்

நாவின் நுனி, அண்ணத்தின் நுனிப்பகுதியைச் சென்று பொருந்துகின்ற நிலையில் ட், ண் இரண்டும் பிறக்கின்றன. 

டகார ணகாரம் நுனி நா அண்ணம்

மேல்வாய்ப் பல்லினது அடிப்பகுதியை நாவின் நுனியானது நன்கு பரந்து ஒற்றும்போது ‘த்’, ‘ந்’ என்னும் மெய்கள் பிறக்கின்றன.

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்

மேல் இதழும் கீழ் இதழும் ஒன்றோடு ஒன்று இயைந்து பொருந்திட, ‘ப்’, ‘ம்’ என்பவை பிறக்கின்றன.

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்

நாவின் நுனி, அண்ணத்தைச் சென்று நன்கு ஒற்றும் போது ‘ற்’ ‘ன்’ என்னும் மெய்கள் தோன்றும்.

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்

இனி, இடையின மெய்களுக்குச் செல்வோம். யரலவழள இடையினம் இல்லையா?

யகர மெய்– மேல்வாயை நாவின் அடிப்பகுதி சேரும் போது, கழுத்தில் இருந்து எழும் காற்று மேல்வாயைச் சென்று அடையப் பிறக்கும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்

நீங்களும் பொறுமையாகக் கேட்டோ படித்தோ இவற்றை ஒப்புநோக்கிப் பாருங்களேன். எவ்வளவு துல்லியமாக ஒலிகள் குறித்து நம் பழந்தமிழ் நூல் விளக்கியுள்ளது என்பது புரியும்.

மேல்வாய் நுனியை நாக்கின் நுனி வருடும் போது ர், ழ் மெய்கள் தோன்றுகின்றன.

நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்

மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரமானது (விளிம்பு) தடித்துப் பொருந்தும் (ஒற்றும்) போது லகர மெய் தோன்றும்; மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ (வருட) ளகர மெய் தோன்றும். 

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்

ல, ள இரண்டு எழுத்துக்களுக்கும் உச்சரிப்பு வேறுபாடுகளை அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.

மேற்பல் கீழ் இதழோடு இயைந்து பொருந்த வகர மெய் தோன்றுகிறது

பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும்

இதுதான் தொல்காப்பியர் விளக்கிய உயிர் மற்றும் மெய் எழுத்துக்களின் ஒலிப்புமுறை.

இதுவரை, இலக்கணம் குறித்த இந்த ஒலிப்பதிவைப் பொறுமையாகக் கேட்டமைக்கு நன்றி.

ஒவ்வொரு மொழிக்கும் அம்மொழிக்குரிய ஒலிப்புமுறை உண்டு. அதை மனதில் வைத்து அந்த மொழியைப் பேசினால்தானே அழகு?!

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி வெற்றி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வோம்;

தாய்மொழி தமிழ் பன்னெடுங்காலம் தழைத்தோங்கிட, ஔவை சொன்னபடி நாவைப் பழக்கிக் கொள்ளலாமே.

நன்றி.

உதவிய நூல்கள்-

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – பிறப்பியல், அழகப்பா பல்கலைக்கழகம்

மெய்யெழுத்துகளின் பிறப்பு, tamilvirtualuniversity

உயிரெழுத்துகளின் பிறப்பு, tamilvirtualuniversity

Podcast available on:

Apple

Spotify

Google

கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’

இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்!

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்

வென்றெரி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

(புறநானூறு 112)

தமிழ் மொழியும், பண்பாடும், வரலாறும் குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மண்ணில் உலவி வருவது பற்றிச் சென்ற பகிர்வில் குறிப்பிட்டேன் இல்லையா?

அந்தத் தொடர்ச்சியைச் சொல்லும் ஓர் அழகான எடுத்துக்காட்டை இன்று பார்ப்போம்.

என் வலையொலிப் பக்கத்திற்குப் பெயர் கொடுத்த பாடல், புறநானூறில் 112 ஆவது பாடலான, பாரி மகளிர் அங்கவை சங்கவை எழுதிய ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ பாடலையே எடுத்துக் கொள்வோம்.

இது வருத்தமான சூழலைக் காட்டும் கையறுநிலைப் பாடல்.

‘சென்ற மாதம் நிலவு பொழிந்த இரவில், எங்கள் தந்தை பாரி மன்னர் எம்முடன் இருந்தார், எங்கள் குன்றாகிய பரம்புமலையும் எம்முடையதாக இருந்தது;

இந்த மாதத்து நிலவைக் காணும்போது, வெற்றி முரசைக் கொண்ட வேந்தர்கள், எங்கள் குன்றை வென்றுவிட்டனர். நாங்கள் தந்தையையும் இழந்து நிற்கிறோம்’

என்று, போரினால் ஏற்படும் மாபெரும் வடுவை, பேரிழப்பைப் பாரிமகளிர் நமக்கு உரைக்கிறார்கள்.

போர் ஏற்படுத்தும் பேரழிவை எழுதியிருப்பவர்கள் பலர். ஆனால், தந்தையையும் தம் அரசையும் இழந்த மகள்களின் மனநிலையை நேரடியாக நம்முடன் பகிர்ந்திருக்கிறார்கள் அங்கவையும் சங்கவையும்.

எந்தவொரு பாடலும் படிப்பவர் மனநிலைக்கேற்ப அவரவர்க்கு ஒவ்வொருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும். அது கவிதையின் வலிமைகளுள் ஒன்று.

பாடல் மட்டுமல்ல, பாடப்பட்ட பொருளும் வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலவும்கூட சூழலுக்கேற்ப வலியைத் தருகிறது; தாக்குகிறது; வேறு சிலருக்கு, மனக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது; இன்பத்தைக் காட்டுகிறது.

ஒருவருக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கும் நிலவு, மற்றவர்க்கு மட்டற்ற மகிழ்ச்சியைப் பொழிகிறது.

அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள்’ ஏற்படுத்திய வெவ்வேறு பாதிப்புக்கள்தான்  என்ன?

சங்க இலக்கியக் காலத்தில் இருந்து 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் திரை உலகிற்கு வருவோம்.

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ என்ற கையறு நிலைப் பாடல் / வாழ்க்கைத் துயரைச் சொல்லும் பாடலைக் கவியரசர் கண்ணதாசன், இரண்டு சூழல்களில் கையாண்டு இருக்கிறார்.

1963இல் வெளிவந்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்திற்காக எழுதிய –

‘அன்று வந்ததும் அதே நிலா

இன்று வந்ததும் இதே நிலா’

பாடலில், துள்ளலிசையோடு மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘அற்றைத் திங்களைப்’ பயன்படுத்தி இருக்கிறார்.

கம்பனின் காதலனாகவே தம்மைக் காட்டிக் கொள்ளும் கண்ணதாசன், இப்பாடலிலும் ‘கம்பன் பாடிய வெள்ளை நிலா’ என்று கம்பனை உடன் வைத்துக் கொள்கிறார்.

இருந்தாலும், ‘அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் இதே நிலா’ என்ற முதல் அடி , பாரி மகளிர் எழுதிய சங்கப் பாடல் அடிகளின் பாதிப்பில்தான் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

மற்றுமொரு பாடலில், பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி, காதல் நினைவிற்கும் பிரிவிற்கும் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ பாடலை ஒட்டிய அடிகளைப் படைத்திருக்கிறார்.

1966 இல் ‘நாடோடி’ படத்தில்-

‘அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை

நீ அறிவாயே வெண்ணிலவே’

என்று தலைவியை நிலவோடு உரையாட வைக்கிறார்.

காலங்கள் உருண்டோடினாலும், சமூகக் காரணிகளால் பண்பாடு -மாற்றம் கண்டாலும், ஒரு சில தொடர்புகள், நம்மை விடுவதாக இல்லைபோலும்.

1997 இல் ‘இருவர்’ திரைப்படத்தில், கவிஞர் வைரமுத்து, பாரி மகளிரின் ‘அற்றைத் திங்கள்’ அடிகளை அப்படியே நமக்களிக்கிறார்.

காதல் களிப்பை வெளிப்படுத்துகிறது அப்பாடல் –

‘நறுமுகையே’ எனத் தொடங்கும் பாடலில்-

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றித் தரள நீர்வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

என்று தலைவன் கேட்க..

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா

என்று தலைவி வினவுகிறாள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 இல் வெளிவந்த சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில், கவிஞர் யுகபாரதி –

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

என்று அற்றைத் திங்களை இணைக்கிறார்.

திரை இசைப் பாடல்களில் சங்க இலக்கிய அடிகள் என்பதைப் பற்றித்தான் இன்றைய பகிர்வா? என்று எண்ண வேண்டாம்.

இல்லவே இல்லை.

உண்மையில், ஈராயிரம் ஆண்டுகாலப் பாடல் அடிகள் இன்றளவும் நம்மிடையே உலவக் காரணம் என்ன? தொடர்ச்சியாக எழுதுவோர் வழக்கின் மூலம் சமூக வழக்கில் இடம் பெறுவதுடன், படிக்கும்போதும் கேட்கும்போதும் இந்த அடிகளின் பொருள் நமக்குப் புரியவும் செய்கிறது, என்றால் அதன் காரணம்தான் என்ன?

என்ன என்ன என்ற வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை – நம்மில் ஆர்வமுள்ள பலர் நல்ல தமிழ்ச் சொற்களை, சொற்றொடர்களை விடாது பற்றி இருப்பதால்தான்.

கவியரசர் கண்ணதாசனும், கவிஞர்கள் வைரமுத்து மற்றும் யுகபாரதியும் – தாம் படித்த இலக்கியத்தின் அழகுடைய, பொருள் பொதிந்த சொற்றொடரில் மதிமயங்கி, ஈர்க்கப்பட்டு, தாம் புனைந்த பாடல்களில் அதை அப்படியே அல்லது அதன் பொருளை நயம்படப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

மணற்கேணி – அதாவது ஊற்று நீர் தோண்டும் அளவிற்கு ஏற்றாற்போல ஊறும்; அதேபோல, கற்றலுக்கு ஏற்றவாறு அறிவு வளரும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆக, தோண்டத் தோண்ட நீர் பெருகும், படிக்கப் படிக்க அறிவு வளரும்.

நம் மொழியின் சொற்றொடர்கள், வேற்றுமொழி பாதிப்பையும் ஆதிக்கத்தையும் மீறி, வழக்கில் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, சங்கிலித் தொடராக நல்ல தமிழ்ச் சொற்கள் நம்மிடையே வழங்கி வருவது தமிழின் சிறப்பு என்று சொல்லிவிட்டுப் போகலாம்; ஆனால், இந்தச் செம்மொழியைப் படித்து, கேட்டு, உணர்ந்து மகிழும் வண்ணம், நமக்குப் பரிமாறும் படைப்பாளர்கள் முதன்மைப் பங்கு வகிக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள்.. அங்கவை சங்கவையின் புறநானூற்று ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ நமக்குப் புரிகிறதுதானே?

இலக்கிய மாணவர்களாக இருந்துதான் நல்ல தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும் என்பதில்லையே… தமிழ் என்ற மொழி, இத்தனை ஆண்டுகாலத் தொடர்ச்சியாக நல்ல சொற்களை, தொன்மைச் சொற்களை, தெளிவாகப் பொருளை உணர்த்தும் எளிய சொற்களைத் தாங்கி நிற்கிறது என்றால், அதற்குக் காரணம் ஒவ்வொரு வீட்டிலும் தொடர்ந்து ஒலித்து வந்த/ ஒலித்து வரும் நல்ல தமிழ்தான்.

நூல்களில் எழுத ஒரு தமிழ், மேடையில் முழங்க ஒரு தமிழ், ஊடகங்களில் அறிவிக்க ஒரு தமிழ், வீட்டில் உரையாட ஒரு தமிழ் என்று பாகுபாடு ஏன்?

சூழலுக்கேற்ப ஏற்ற இறக்கங்கள் நம் தொண்டையில் இருந்து வரும் ஒலியில்தானே இருக்க வேண்டும், நாப்பழக்கத்தில் வரும் மொழியில்  இருக்க வேண்டியதில்லையே??

திரையிசையில் வழங்க வேண்டும் என்று எதிர்பாராமல், காத்துக் கிடக்காமல், நல்ல நூல்களை, பழந்தமிழ் நூல்களைப் படிக்கும் வழக்கத்தை நாமும் ஏற்படுத்திக் கொள்ளலாமே.

ஒரு மொழியின் தொடர்ச்சியான பயணம், வாசிப்பவர்கள் மூலமும், தாம் வாசித்த சொற்றொடர்களை மற்றவர்களுடன் பகிர்பவர்கள்மூலமும், அந்த நல்ல சொற்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவர்கள்மூலமும், தடையில்லாமல் செல்ல இயலும்தானே!

படைப்பாளிகள் மட்டுமல்ல, தமிழ்ப் பேசும் ஒவ்வொருவருக்கும், தாய்மொழியின் தொடர்ச் சங்கிலியைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு உண்டு.

அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்களை’ இன்று பார்த்தோம்.

‘அற்றைத் திங்கள்’ போலவே, இன்றுவரைத் தொடர்ந்துவரும் மற்றுமொரு சுவையான சங்கப் பாடலோடு அடுத்த பகிர்வில் சந்திப்போம்.

நன்றி. வணக்கம்.

Podcast available on : 

Apple 

Spotify

Google

‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்


வலையொலிப் பதிவு

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கும் குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
(பாரதிதாசனார், தமிழின் இனிமை)

என்ற பாரதிதாசனாரின் அடிகள் சொல்லும் இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள். ‘அற்றைத் திங்கள்’ வலையொலிப் பக்கத்தில் உங்களை வரவேற்கிறேன்.

என் வலையொலிப் பக்கத்தின் முதல் பதிவு… அறிமுகப் பகிர்வு இது.

‘அற்றைத் திங்கள்’ என்று பெயர் சூட்ட என்ன காரணம் என்று முதலில் சொல்லணும்
இல்லையா? இன்றைய பகிர்வு முழுவதும் அதைப் பற்றியதுதான்.

உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ் – மொழி மட்டுமல்ல, ஒரு பண்பாடு.

சமீபத்திய கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுப் பணிகளைப் பாருங்கள்-

. பொதுக் காலத்துக்குப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுத்தறிவு
பெற்றிருந்தது தமிழ்ச் சமூகம் என்பது தெரிகிறது;

. பொதுக் காலத்துக்குக் குறைந்தது 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே, கொற்கை ஒரு
துறைமுகமாகச் செயல்பட்டு வந்ததும், அக்காலத்திலேயே வெளிநாடுகளில் வணிகச்
செல்வாக்குப் பெற்றிருந்தது தமிழகம் என்பதும் தெரிய வருகிறது;

. சிவகளையில் கிடைத்த நெல்மணிகளின் காலம், பொதுக் காலத்துக்கு முன் 1155 ஆண்டுகள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம், தமிழரின் நாகரிகம் இன்றிலிருந்து குறைந்தது 3200 ஆண்டுகள்
முற்பட்டது என்று அறியும்போது உள்ளம் பூரித்துப் போகிறது.

சரி, தொன்மை, பழமை என்பதை வைத்து நாம் அறியும் செய்திதான் என்ன?
அதற்கு இவ்வளவு சிறப்பிடம் தரத்தான் வேண்டுமா?
இந்த உலகம் மிக வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த அதிவேகப்
பயணத்தில், இனம், மொழி சார்ந்த பூரிப்பில் மெதுவாகப் பயணிப்பது… வேகத்தைக் குறைத்துக் கொண்டு மெதுவாகப் பயணிப்பது தேவையா?
என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

தமிழ்மொழியின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பழமையையும், இன்றும் நம் வாழ்வுடன் இயைந்த தன்மையையும், நான் எப்படி
பார்க்கிறேன்?
ஒரு சில பார்வைகளை உங்கள்முன் வைக்கிறேன்.

அ. சங்கப் பாடல்கள் காட்டும் சமூக வாழ்வை இன்றைய நம் வாழ்க்கைமுறையோடும் தொடர்புப்படுத்திப் பார்க்கமுடிகிறது

ஆ. மிகப் பழங்காலந்தொட்டுச் செழித்திருந்த அயல்நாட்டு வணிகம் குறித்த தகவல்களைப் பாருங்கள். அவை நம்மை வியக்க வைக்கின்றன.

அகழ்வாய்வுகளும் சங்க இலக்கியச் சான்றுகளும் சொல்லும் ரோம வணிகம்-
பல்லவர் காலத்தில் வளர்ந்து, இடைக்காலச் சோழர் காலத்தில் விண்ணளவு உயர்ந்த தென்கிழக்காசிய வணிகம்-
என்றிவை, தமிழர்கள் வலிமையான பெருங்கடல்களை வணிகக் குளங்களாகப் பயன்படுத்தியதைப் பறைசாற்றுகின்றன.

இ. இலக்கியங்கள் கூறும் கூத்தும் பாட்டும் வழிபாட்டு நெறிகளும் இதர கலைகளும், இன்றும் வளமாக நம்மிடையே உலவக் காண்கிறோம்.

ஈ. அன்று வழக்கில் இருந்த பண்டிகைகளை, விழாக்கோலத்துடன் இன்றும் தொடர்ந்து நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

உ. பிறமொழி கலப்பில்லாமல் தமிழ் பேசுவது அரிதாகிவிட்டது இன்று. ஆனாலும் கூட,
ஈராயிரம் ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட இலக்கியச் சொற்களும், தொடர்களும் பாக்களும் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. அவற்றை நம்மால் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வு, உயர்த்திய பண்பாடு, வளர்த்த மொழி, பரப்பிய வணிகம், உண்ட உணவு, உணர்ந்த காதல், உழைத்துச் செழிக்கச்
செய்த நானிலம், வென்ற போர்கள், இழந்த அரசுகள், இத்தனையும் இதற்கு மேலுமான வரலாறைக் கண்ட தமிழ் மண், 3200 ஆண்டுகாலத்
தொடர்ச்சியாக இன்னமும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது, இதே தமிழகத்தில்!
தமிழ் மொழியோ, இளமை மாறாது வாழும் மொழியாகத் திகழ்கிறது.

ஒரு சமூகத்தின் தொடர்ச்சி, பண்பாட்டின் தொடர்ச்சி, மண் சார்ந்த வரலாற்றின் தொடர்ச்சி – இத்தனை நீண்ட காலஎல்லையைக் கடந்தும்
உலகெங்கும் இடையூறற்றுப் பரவி நிற்பதை என்னவென்று சொல்வது!!

இத்தகு தொன்மை இனத்தின் எச்சங்களான நாம்- மொழி, பண்பாடு, வரலாறை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுச் செல்லும், பாதுகாத்துக் கொடுத்துச் செல்லும் பண்பாட்டுப் புரவலர்கள் என்று நான் நினைக்கிறேன்.

இத்தனைச் சிறப்புடைய தொன்மைத் தமிழின் ஒரு சொற்றொடர், இன்றும் நம்மிடையே உலவி வரும் சொற்றொடர்தான், என் வலையொலிப் பக்கத்தின் பெயராக அமையவேண்டும் என்று நினைத்தேன்.

சங்க இலக்கியத்தில், எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூறில், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை.
அங்கவையும் சங்கவையும் புனைந்த பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் ஒன்று.

பெண்பாற் கவிஞர்களும், இளமையிலேயே பாடல் இயற்றும் திறன் வாய்த்தவர்களும் இருந்த சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதை எடுத்துக்காட்டும் சிறப்புப் பாடல் இது.

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்ற இந்தப் பாடலின் தொடக்கச் சொற்றொடரையே, என் வலையொலிப் பதிவின் பெயராகச் சூட்டினேன்.

இப்போது நான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.. முன்பின் அறிமுகமில்லாத நம்மை இணைப்பது தமிழ்தான்.

வீட்டில் பேச்சுமொழியாக, நூல்களில் எழுத்துமொழியாக, ஓங்கி ஒலிக்கும் மேடைமொழியாக, நாள்தோறும் கேட்கும் ஊடகமொழியாக உலவிவரும் தமிழ், இளமை மாறாத இனிமை மொழியாக இன்ப மொழியாக இருக்கக் காரணம் நாம்தான்.

தமிழை வாசித்தும் நேசித்தும் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துப்போகிற நம் பற்றுடைய மனப்பாங்குதான் தமிழ் மொழியின், பண்பாட்டின், தமிழர் வரலாற்றின் தொடர்ச்சிக்கான காரணங்களுள் அடிப்படையானவை எனலாம்.

தமிழை வளர்க்கும் நற்பெயர் நமதென்றால், அதை வளர்க்காத குறையும் நம்முடையதுதானே?

தமிழ் என்ற மொழியும் பண்பாடும் நம் வேர்கள். அந்த வேர்களை, விழுதுகளான நம் பிள்ளைகள் இறுகப் பிடிக்கச் செய்வது நம் கைகளில்தான் உள்ளது.

இல்லையெனில், மரபு மாற்றுப் பயிர்போல, அடையாளம் இல்லாச் சமூகத்தை விட்டுச் செல்லும் பழியும் நம்மையே சேரும்.

நான் படித்து, கேட்டு, வியந்த – மொழி, இலக்கியம், வரலாறு, கலைகள், ஆளுமைகள் போன்ற ஆர்வமான பல தகவல்கள் குறித்த ஒலிப்பதிவாக இந்த வலையொலிப் பகிர்வை வழங்க விழைகிறேன்.

வாங்க சேர்ந்தே பயணிப்போம்!

உலகமெனும் அகண்ட இந்த நிலப்பரப்பில், 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஒலித்துவரும் தாய்மொழியை, அடுத்த தலைமுறைக்குப் பெருமிதத்துடன் கொண்டு செல்வோம்!!

Podcast available on:   Apple   Google   Spotify