அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்


அனைவருக்கும் அன்னையர்நாள் நல்வாழ்த்துக்கள்.

ஒரு நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அன்னையைக் கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தில் இல்லை. ஆனால், அன்னைக்கும் தந்தைக்கும் என்றுமே மதிப்பளித்து உயர்நிலையில் போற்றும் பண்பு நமக்கிருக்கிறது.

மலையிடைப் பிறவா மணியும், அலையிடைப் பிறவா அமிழ்தும், யாழிடைப் பிறவா இசையும் சிலப்பதிகார ஆசிரியருக்கு அரியவற்றுடன் ஒப்பிடப் பயன்பட்டன. மாறிவரும் காலச்சூழலில், மலைத்தேனும் கடல்முத்தும் அருகிப்போனதோடு, மரநிழலும், மழைத்தூரலும், பனைநுங்கும்கூட அரிய பொருட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றுவரை வெய்யிலும் காற்றும், பூவின் மணமும், கடல் உப்பும், கன்னல் சாறும், தெங்கின் இளநீரும் இயல்பாகக் கிடைப்பதுபோல் தாயின் அன்பையும் அணைப்பையும் எவ்வளவு வயதானாலும் நேரம் கேட்டுப்பெறும் தேவையில்லை நம் வாழ்க்கை முறையில். இன்னொரு பார்வையில், எளிதாகக் கிடைத்திடும் எதையும் கொண்டாடும் கட்டாயமில்லை நமக்கு. தாய்மையும் சிலவேளைகளில் அப்படிப்பட்டதுதான்.

இன்றைய நாளைப் பயன்படுத்தி, சங்கப் பாடல்கள் என்னும் சாளரம் வழியாகப் பழங்காலத் தமிழகத்து அன்னையர் எப்படி இருந்தார்கள் என்று பார்க்கத் தோன்றியது. இலக்கியம் நமக்குக் காட்டும் பலப்பல அன்னையருள் சிலரை இன்று காண்போம். இருவர், மகனைப் போருக்கு அனுப்பிவிட்டுத் தாமும் வீரத்தையே அணிகளாகப் பூண்டவர்கள். மற்றவர்கள், மணமுடித்துச் சென்ற மகள் குறித்துக் கவலைப்படும் பாசமிகு தாய்மார். இன்றும் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ளமுடிகிற உணர்வுப் புதையல் சங்க இலக்கியம்.

இந்தப் பாடல்களும் காட்சிகளும் நம்மில் பலரும் அறிந்தவைதான். ஆயினும், எத்தனைமுறை வாசித்தாலும் இவர்கள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள்.

முதலில் ஒரு புறநானூறுக் காட்சியைப் பார்ப்போம். பாடலைப் பாடியவர் காவற்பெண்டு என்ற பெண்பாற் புலவர். அந்தத் தாயின் மகனைத் தேடிச் சிலர் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டின் தூணைப் பிடித்திக் கொண்டு அவர்கள் ‘உன் மகன் எங்கே?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் கூறும் விடை என்ன?

சிற்றில் நற்றூண் பற்றி,  “நின் மகன்
யாண்டு உளனோ?” என வினவுதி; என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே, 
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

புறநானூறு 86;  பாடியவர்: காவற்பெண்டு

சிற்றில் நற்றூண் பற்றி,  “நின் மகன் யாண்டு உளனோ?” என வினவுதி– என் சிறிய இல்லத்தில் நல்ல தூணைப் பிடித்துக் கொண்டு “உன் மகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்கிறாய்.  

என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்– என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது.  

ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே – புலி இருந்துவிட்டுப் போன கல் குகையைப் போன்றது அவனைப் பெற்ற என் வயிறு –

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே– வீரம் மிகுந்த என் மகன் எங்கே இருப்பான்? போர்க்களத்தில் இருப்பான், அங்கு போய்த் தேடுங்கள்,

என்கிறார் அந்தத் தாய்.

மகன் எங்கே என்று ஏளனமாகக் கேட்ட கேள்வியால் கோபத்தில் சொன்ன விடையாகவும் இப்பாடலைக் கொள்ளலாம். அல்லது, போருக்கு மகனை அனுப்புவதைத் தம் நாட்டுப்பற்றுடைக் கடமையாகக் கருதிய புறநானூற்றுத் தாய், விடை பகர்ந்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள் என்றும் கொள்ளலாம். அவனைத் தேடி இங்கே ஏன் வந்தாய்? போ போ போர்க்களத்தில்தான் இருப்பான்…வேறெங்கே இருப்பான் என்று இயல்பாகச் சொல்லிவிட்டார்போலும்.

ஆனால், புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே- புலி இருந்துச் சென்ற குகையென மகனைச் சுமந்த கருவறையைக் குறிக்கும் அத்தாயின் வீரப் பண்பை என்னவென்று சொல்வது!

அடுத்து வருவதும் ஒரு புறநானூறு காட்சி.

கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய்வடித்த வேல் தலைப் பெயரித்,
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்,
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, 
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

புறநானூறு 295; பாடியவர்: ஔவையார்

போர்க்களத்தில் மகன் இறந்துவிட்டான். இறந்துபோன தன் மகனைக் காண ஓடோடி வருகிறார் அவனுடைய தாய்.

அவன் எப்படிப் போரிட்டிருந்தான்?

கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய்வடித்த வேல் தலைப் பெயரி
– கடல் துள்ளி எழுந்தாற்போல, தீ கக்கும் தன் வேலைப் பகைவர்களை நோக்கி எறிந்து கொண்டும்,

தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்– வேலும் அம்பும் நிறைந்த போர்க்களத்தில் தன் படையினரை வழிநடத்திக் கொண்டும்,

வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி– முன்னேறி வந்த எதிர்ப் படையினரைத் தடுத்தும் விலக்கியும் போரிட்டான்.

இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, 
சிறப்புடையாளன்
– அப்படிச் சிறப்புறப் போரிட்ட அந்த வீரன் வீழ்த்தப்பட்டான்.

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே- புறமுதுகு இடாமல் நெஞ்சு நிமிர்த்திப் போரிட்ட அந்த இளம் வீரனின் தாய்;

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி– அப்படிச் சிறப்பாகப் போரிட்டு இறந்த, போற்றுதலுக்குரிய தம் மகனின் உயர்ந்த மாண்பைக் கண்டு மகிழ்ந்தார்;

அந்தப் பெருமிதத்தில்- வாடு முலை ஊறிச் சுரந்தன – அவருடைய வாடிய முலைகளிலும் பால் சுரந்ததாம்.

சங்கத் தாய்மாரின் மனத்திண்மையைப் படம்பிடித்துக் காட்டும் பாடல்கள் இவை.

காதலும் வீரமும்தானே சங்கப் பாடல்களின் சாரம்.. முதலில் வீரத்தைப் பார்த்தோம், இனி காதலைப் பார்ப்போம்.

தன் காதலனுடன் சென்றுவிட்ட மகளைப் பிரிந்த தாயின் வாட்டம், திருமணம் முடித்துக் கணவன் வீட்டில் தனியாகப் பொறுப்புக்களை மகள் எப்படி நல்லவண்ணம் நிறைவேற்றுவாளோ என்ற பதைபதைப்பு, பொருள்வளத்துடன் தன் வீட்டில் வளர்ந்த மகள் வசதியின்றித் துன்பப்படுவாளோ என்ற தவிப்பு என்று சங்ககாலத் தாயின் துடிதுடிப்பு நம்மை நெகிழச் செய்யும் அன்புப் போராட்டம்.

நற்றிணையில் ஒரு பாடல்-

அந்தத் தாயின் மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள்.


ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்,
இனியே தாங்கு நின் அவலம் என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே, 
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

நற்றிணை 184, பாடியர் பெயர் கிடைக்கவில்லை

ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்

எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகள்; அவளும் போரில் மிகுந்த வலிமையையும் கூரிய வேலையுமுடைய ஒரு இளைஞனோடு பாலை நிலத்திற்குச் சென்றுவிட்டாள். 

இனியே தாங்கு நின் அவலம் என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே

இனி உன்னுடைய துன்பத்தைத் பொறுத்துக் கொள் என்கிறீர்கள்.  அது எப்படி முடியும் அறிவு உடையவர்களே?  சொல்லுங்கள், என்கிறார் பெண்ணைப் பெற்ற அந்தத் தாய்.

………………………………………………….உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

மை தீட்டிய கண்ணின் மணியில் வாழும் பாவை வெளியே நடந்து வந்ததுபோல, என்னுடைய அழகிய இளைய மகள் விளையாடிய நீலமணியைப் போன்ற நொச்சி மரத்தையும் திண்ணையையும் பார்க்கும்போதெல்லாம்,

உள்ளின் உள்ளம் வேமே– என் உள்ளம் வெந்து போகும் என்று வருந்துகிறார்.

உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள்
– தன் மகள் பிரிந்து சென்றது, தன் கண்ணின் பாவை தனியே வெளியேறி நடந்தது போலத் தெரிந்ததாம் அந்தத் தாய்க்கு.

எவ்வளவு அழகாக அந்தத் தாயின் உணர்வைச் சொற்களில் வெளிப்படுத்திவிட்டார் ஆசிரியர்!

மற்றோர் இல்லத்தில், காதலனுடன் சென்ற மகள் திரும்பி வந்து அந்தக் காதலனின் வீட்டிலே இருக்கிறாள். தலைவனின் வீட்டில் பெண்ணுக்குச் சிலம்பு கழிக்கும் சடங்கை நடத்திவிட்டார்கள். அதை அறிந்த தாயின் மனத்தவிப்பைக் காட்டுகிறார் இந்த ஐங்குறுநூறு பாடலில், ஆசிரியர் ஓதலாந்தையார்.

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ, மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?

ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார்

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ

உங்கள் வீட்டில் என் மகளுடைய சிலம்பு கழிக்கும் நோன்பை நடத்திவிட்டீர்கள்.  எங்கள் மனையில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று சொன்னால் என்ன? என்று கேட்கிறார்.

யாரிடம் சொன்னால் என்ன?

வென்வேல் மையற விளங்கிய கழலடி

வெற்றி வேலையும் வீரக் கழல்களையும் காலில் அணிந்த,

இது தலைவனைப் புகழ்வதுபோல இருக்கிறது இல்லையா? அடுத்துச் சொல்கிறார்-

பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?– பொய்யில் வல்லவனான அந்த இளைஞனின் தாய்க்கு நீங்கள் சொன்னால்தான் என்ன? எங்கள் மனையில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று…. என்று, தன் மகளின் திருமணத்தைத் தங்கள் வீட்டில் நடத்த விழையும் அந்தத் தாய் துடிக்கிறார்.

அடுத்து வரும் சுவையான குறுந்தொகைக் காட்சியில், கணவன் வீட்டுக்கு வாழச் சென்றுவிட்ட மகள் எப்படி மனையறம் பேணுகிறாள் என்று காணத் தவிக்கும் தாயைக் காட்டுகிறார் ஆசிரியர் கூடலூர் கிழார்.

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,
குவளை உண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,
இனிதெனக் கணவன் உண்டலின், 
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே. 

குறுந்தொகை 167; பாடியவர்: கூடலூர் கிழார்

தன் மகளும் மருமகனும் இல்லறம் நடத்தும் பாங்கினைக் கண்டுவரச் செவிலித்தாயை அனுப்புகிறார் தலைவியின் அன்னையான நற்றாய். மகள் இருக்கும் ஊருக்குச் சென்று, திரும்பி வரும் செவிலித்தாய், தான் கண்டவற்றை விளக்குகிறார்.

அவர் கண்ட காட்சிதான் என்ன? மகள் அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தாள்.

முளி தயிர் பிசைந்த என்று தொடங்குகிறது பாடல்- உரைய வைத்த தயிர் நன்றாக.. ஏன் அளவிற்கு அதிகமாகவே புளித்துவிட்டது- அந்த முற்றிய தயிரைப் பிசைந்த-

காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்– காந்தள் மலரின் இதழைப் போன்ற தன் மெல்லிய விரல்களை அணிந்திருக்கும் ஆடையில் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்;

குவளை உண்கண் குய் புகை கழும– குவளை மலரைப் போன்ற மையிட்டக் கண்களில் தாளிப்பின் புகையைப் பொறுத்துக் கொண்டு உணவு சமைத்தாள்;

அடுத்து, தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்– தானே கலந்துச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பைக் கணவனுக்குப் பரிமாறினாள்;

புளிப்பு கூடுதலாகிப் போன அந்தக் குழம்பை உண்ட அவள் கணவன் என்ன சொன்னான்? நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த செவிலித்தாய்க்கு என்ன நடக்கப் போகிறதோ என்று முதலில் அச்சமும் படபடப்பும்; அடுத்து, செவிலித்தாய் உரைக்கக் கேட்ட தலைவியின் தாயின் மனப் போராட்டத்தைச் சொல்லவா வேண்டும்?

புளித்தக் குழம்பை உண்ட தலைவன் –

இனிதெனக் கணவன் உண்டலின், 
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே
. 

நன்றாக, சுவையாக இருக்கிறது என்று அவன் உண்டதால், மலர்ந்தது தலைவியின் முகம்.

அந்தப் பெண்ணின் முக மலர்வினால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் இரண்டு அன்னையர்- ஒருவர் அவளை ஈன்ற நற்றாய்; மற்றவர் அவளை வளர்த்த செவிலித்தாய்.

மழைச்சாரலென மனம் மயக்கும் தாயன்பின் சாறைப் பிழிந்து சங்க இலக்கியக் காட்சிகள் நம்மைச் சங்க காலத்துக்குக் கொண்டுபோவது உண்மைதானே?

தாய்மை உணர்வையும், தாயின் ஈடில்லா அன்பையும் பொறுமையையும் புரிந்துகொள்ள மொழி தேவையில்லைதான். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் என் மண்ணில் தாய்மார் எப்படி இருந்தனர்? எப்படி அன்பு பாராட்டினர்? உறவு சார்ந்த சமூகச் சூழல் எப்படி இருந்தது? என்ற பலதரப்பட்ட மரபுசார் தகவல்களுக்கும் என் மொழி எனக்குத் தேவை.

தொன்மையான நம் சமூகத்தின் தொன்மையான மரபுகளைப் புரிந்துகொள்ள- நம் முன்னோர் விட்டுச்சென்ற இலக்கியக் கடிதங்களைப் படித்திட நம் மொழி நமக்குத் தேவை.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!


இந்த ஆண்டு ஆகஸ்டு 30 தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை உலகெங்குமுள்ள மலையாள மக்களால் கொண்டாடப்பட்டது ஓணம்.

தாமதமாகச் சொன்னாலும், அனைவருக்கும் ஓணநன்னாள் நல்வாழ்த்துக்கள்!!

சரி, மலையாளப் பண்டிகைக்குத் தமிழில் வாழ்த்தா என்கிறீர்களா?

சேர சோழ பாண்டியர்களென ஒன்றிணைந்த தமிழகத்தின் திருவிழாவாக இருந்த ஓணவிழாவை, காலப்போக்கில் தமிழர்கள் கொண்டாட மறந்த பண்டைநாள் பண்டிகையைப் பற்றியதுதான் இன்றைய பதிவு. இதை உணர நம் வழித்துணை- நமக்கென நம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கியச் சான்றுகளே.

கடந்த நான்கு ஆண்டுகள் அபுதாபியில் வாழ்ந்ததில் பல கேரளத் தோழிமார் கிடைத்தனர். செவிக்கினிய மலையாள மொழியைக் கொஞ்சமாய்ப் பேசக்கற்கும் வாய்ப்பும் அமைந்தது. அதனால், அம்மொழி தமிழோடு எவ்வளவு தொடர்புடையது என்றும் தமிழரின் பல பழமையான சொற்களை மலையாளிகள் இன்றளவும் புழங்கி வருவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமிழர்கள்மீதும், தமிழ்த்திரைப்படங்கள்மீதும், தமிழ்த்திரைப்பாடல்கள்மீதும் மலையாள மக்களுக்கு உள்ள ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுடைய மொழி, பழகும் தன்மை, வேர்களைப் பாதுகாக்கும் விழைவு, உணவுமுறை என்று பலவற்றைக் கூர்மையாகக் கவனிப்பேன். அப்போதெல்லாம், என்றோ விலகிப்போன உறவுகளோடு இணையும் மீள்நிகழ்வுபோல உணர்ந்திருக்கிறேன்.

வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரி தம் ‘தென் இந்திய வரலாறு’ நூலில் –

“சங்க காலத்தில், இப்போதைய மலையாளப் பகுதி தமிழ்ப்பேசும் நிலமாகவே இருந்தது……….. சங்க இலக்கியத்தில் காணப்படும் பல சொற்களும் சொற்றொடர்களும் இப்போதைய தமிழில் வழக்கற்றுவிட்டபோதிலும், அவை மலையாள மொழியில் இன்றும் வழக்கிலிருக்கின்றன”

என்று குறிப்பிடுகிறார்.

“கன்னடத்தையும் தெலுங்கையும்போல, மலையாள மொழியும் இலக்கிய மரபுச் சொற்கள் பலவற்றைச் சமஸ்கிருதத்திலிருந்து தாராளமாகக் கடன் வாங்கியது. சமஸ்கிருத ஒலிகளைச் சரியாக உச்சரிப்பதற்காக, பழைய வட்டெழுத்து முறையை விட்டுவிட்டு, தமிழ்-கிரந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய எழுத்துமுறையை உருவாக்க வேண்டியிருந்தது”

என்றும் அவர் விளக்குகிறார்.

ஆக, முந்தைய சேரநாடென வழங்கப்பெற்ற இன்றைய கேரள மாநிலத்தில், அவர்தம் மொழியில், உணவில், இசையில் தமிழ்மணம் கமழ்வது வியப்பில்லைதானே?!

 அப்படிப்பட்ட ஒரு தொடர்புதான் ஓணநன்னாளும்.

ஓணம் தமிழரின் பழங்காலப் பண்டிகை என்பதுபற்றி பலர் பேசியும் எழுதியுமிருக்கிறார்கள். இது என் முறை.

ஓணத்திருநாள் திருமாலின் வாமன அவதாரத்தோடு தொடர்புபடுத்தியே கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம்.

‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடிய’ என்று வாமன அவதாரத்தைப் பாடி, ‘திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே’ என்று இளங்கோவடிகள் சிலப்பதிகார ஆய்ச்சியர்க் குரவையில் போற்றும் முன்பே, சங்கப்பாடல்கள் வாமனரைக் குறிக்கக் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப்பாட்டின் தொடக்கமே திருமால் பெருமை பேசுகிறது.

‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்று தொல்காப்பியர் காட்டும் முல்லை நிலத்தின் தலைவன் மாயோனான திருமால் அல்லவா?

முல்லைப்பாட்டு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, சோழநாட்டில் பிறந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மழைமேகத்தை திருமாலோடு ஒப்பிடுகிறார் புலவர்.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல

(முல்லைப்பாட்டு 1-3)

அகன்ற உலகத்தை வளைத்து, சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும்,

மா தாங்கு தடக்கை – திருமகளை அணைத்த வலிமையான கையை உடையவனும்,

நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – மாவலி மன்னன் தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமால்;

அந்தத் திருமாலைப் போல் முகிலானது, கடல்நீரைப் பருகியவுடன், மலைகளை இடமாகக் கொண்டு வலப்பக்கமாக எழுந்துநின்று, விரைந்து பெருமழையைப் பெய்ததாம்.

முல்லைப்பாட்டைப் போல, வாமனரைப் பற்றி வேறு பாடல்களிலும் காணமுடிகிறது. ஆனால், ஓணவிழா அல்லவா நாம் தேடுவது?

சரி, ஓணவிழாவைத் தமிழர்கள் கொண்டாடிய சான்றுகளை எங்கெல்லாம் காணமுடிகிறது?

சங்க இலக்கியத்தில் மதுரைக்காஞ்சியில் ஓணவிழவின் குறிப்பு வருகிறது. பத்திமை இலக்கியங்களில் சிவனைப் போற்றிய நாயன்மாரும், திருமாலைப் போற்றிய ஆழ்வார்களும் ஓணவிழாவைப் பற்றிப் பாடுகிறார்கள்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை, மாங்குடி மருதனார் பாடியது.

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

(மதுரைக்காஞ்சி 590 – 599)

என்ற வரிகளைப் பாருங்கள்…

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நன்னாள்

அவுணர்களைக் கொன்ற, பொன்னால் செய்த மாலையினையுடைய திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், 

வீரர்கள் எப்படித் தெருக்களில் வந்தார்களாம்??

கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  

யானைத் தோட்டி வெட்டின வடுவுடைய முகம்

போர்க்கருவிகளைப் பயின்று தழும்புபட்ட போரைத் தாங்கும் பெரிய கை

தழும்புடைய நெற்றியுடன் காட்சியளிக்கும் போரை விரும்பும் மறவர்கள்-

எப்படி நடந்து வருகிறார்கள்??

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

வண்டுகள் நிறைந்த மலர்ச் சரத்தை அணிந்து வலிமையான களிற்று யானைகளைச் செலுத்தி நடந்து வருகிறார்கள்..

திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், யானைகளைத் தெருக்களில் நடத்திச் செல்கிறார்கள் வீரர்கள்..

இன்றளவும் யானைகள் கோயில்களோடும் திருவிழாக்களோடும் இணைந்திருப்பதைக் காண்கிறோம்.

சங்கநூலான மதுரைக்காஞ்சி நமக்குச் சொல்லும் செய்தி இது.

அடுத்து, சிவனை அம்மையப்பனாகக் கண்ட திருஞானசம்பந்தர், மயிலை கபாலீச்சரத்தில் பாடிய பூம்பாவைப் பதிகத்தில்-

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம்அமர்ந்தான் ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்

(பன்னிரு திருமுறை 2:47:2 திருஞானசம்பந்தர், இரண்டாம் திருமுறை, திருமயிலை கபாலீச்சரம்)

என்கிறார்.

மையிட்ட அழகிய கண்களையுடைய பெண்கள் வாழும் மயிலையில், திருநீறு அணிந்து கபாலீச்சரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அங்கு நடக்கும் ஐப்பசி ஓணவிழாவையும் அடியவர்கள் போற்றுதலையும் காணாமல் போவாயோ பூம்பாவாய் என்று கேட்கிறார்.

ஓணவிழா, சம்பந்தர் காலத்தில் ஐப்பசியில் கொண்டாடப்பட்டதையும் இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

திருமாலையே முழுமுதல் கடவுளாக வழிபட்ட, திருமால் பெருமை பாடிய ஆழ்வார்கள் நெஞ்சுருகி உரைத்தது என்ன?

திருமழிசை ஆழ்வார்-

காணல்உறுகின்றேன் கல்அருவி முத்து உதிர 
ஓண விழவில் ஒலிஅதிர  பேணி
வருவேங்கடவா! என்உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று

(2422, திருமழிசை ஆழ்வார்,  நான்முகன் திருவந்தாதி, மூன்றாம் ஆயிரம்)

என்கிறார்.

நானோ உன்னைத் தேடி திருவேங்கடம் அதனைச் சென்று காணல் உறுகின்றேன்….. நீயோ என் உள்ளம் புகுந்தாய்

கல்அருவி முத்து உதிர ஓண விழவில் ஒலிஅதிர  ….. வேங்கடத்தில், அருவிகளிலிருந்து முத்துக்கள்போல நீர் ஆர்ப்பரித்து விழுகிறது;

அந்த ஒலியோடு தொண்டர்கள் திருமாலைப் போற்றிப் பல்லாண்டு பாடும் ஒலியும் சேர்ந்து வேங்கடமலையில் ஒலியதிர்கிறது என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

சரி, இந்தக் காட்சி நடக்குமிடம் திருவேங்கடத்தில், ஆனால் நடக்கும் நாளோ மாலுக்குரிய நாளான ஓணவிழாவில் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் செய்தி.

அடுத்து, பெரியாழ்வார் தம் திருப்பல்லாண்டில்-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் 

அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் 

 பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே 

 (6, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார்.

நாங்கள் வழிவழியாக ஏழேழு பிறவியிலும் திருமாலுக்கே தொண்டு செய்கின்றோம் என்பவர், திருவோணத் திருவிழவில், அந்திப் பொழுதில் அரியுரு எடுத்தவனைப் பல்லாண்டு பாடுவோமென்கிறார். நற்றமிழில் நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிடுகிறார்.

ஆயினும், திருவோணத்தைக் குறிப்பிடும் பெரியாழ்வார் வாமன அவதாரத்தை இணைத்துப் பாடாதது இங்கு நோக்கத்தக்கது.

திருப்பல்லாண்டின் மற்றொரு பாடலில்-

உடுத்துக் களைந்த நின் பீதகஆடை உடுத்துக் கலத்ததுண்டு

தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்

விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்

படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

(9, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார் பெரியாழ்வார்.

நீ உடுத்திக் களைந்த பட்டாடையை நாங்கள் உடுத்துகிறோம்; உனக்கு முதலில் கலத்தில் படைத்த உணவையே நாங்கள் உண்ணுகிறோம்; நீ சூடிய துழாய் மாலையை நாங்கள் சூடிக்கொள்கிறோம்;

நீ எங்களைச் செய்யப் பணித்த தொழிலையே செய்யும் நாங்கள்- பாம்பணையில் பள்ளிகொண்ட உமக்குப் பல்லாண்டு பாடுகிறோம், என்று வெறுமனே சொல்லாமல்,

திருவோணத் திருவிழவில்படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

என்று வரலாற்றுத் தகவலையும் தந்து செல்கிறார்.

ஆக, முந்தைய இலக்கியங்கள் வாயிலாக, ஓணவிழா சங்ககாலம் தொடங்கி பத்திமைக்காலத்திலும் தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது நமக்குத் தெரிய வருகிறது.

தமிழர்களாகிய நமக்குக் கிடைத்துள்ள பெரும் சொத்து நம் பழம்பெரும் இலக்கியங்கள். அவை, நம் மூதாதையர் நமக்கென எழுதிச்சென்ற கடிதங்கள். அவற்றைத் தேடித்தேடி மேலும்மேலும் படிக்கப்படிக்க, நம் வரலாறும் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட சமூகமாற்றங்களும் நமக்குப் புரிபடும், நம் உண்மையான அடையாளமும் தெளிவுபெறும்.

நன்றி.

Podcast available on:   Apple   Google     Spotify