பன்னாட்டு மகளிர் நாள் பகிர்வு- சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி பன்னாட்டு மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு மகளிர் நாள் உருவான வரலாறு பற்றி ஐ.நா.வின் இணையதளம் என்ன சொல்கிறது?

முதன்முதலில் 1848இல் அமெரிக்காவின் நியுயார்க் மாகாணத்தில் சமூக, பொருளாதார, அரசியல், மதம் சார்ந்த உரிமைகள் கோரிப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அடுத்து, 1908ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் நாள், துணி ஆலைகளில் பணியாற்றிய பெண்கள், தங்கள் பணிச்சூழலில் மாற்றம் வேண்டிப் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 1909 முதல் அமெரிக்காவிலும், ஐரோப்பாவில் டென்மார்க், நெதர்லாந்து முதலிய பல நாடுகளிலும் பெண்கள் தத்தம் உரிமைகளுக்காகப் போராடினர். 1917இல் ரஷியாவில் பெண்கள் போராடியதன் விளைவாக அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1975ஆம் ஆண்டு, பன்னாட்டு மகளிர் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. அந்த ஆண்டுமுதல், மார்ச் 8ஐப் பன்னாட்டு மகளிர் நாளாக ஐ.நா. அறிவித்தது.

பெண்களுக்கான சம உரிமை, முன்னேற்றம், கல்வி போன்ற பலப்பலத் தேவைகளை இன்றளவும் போராடியே பெறவேண்டிய சூழலில், தமிழின் சங்ககால இலக்கியங்கள் பெண்களை எப்படிக் காட்டுகின்றன? பெண்பாற் புலவர்கள் மிகுந்திருந்த நாடு; இளம்பெண்கள் அங்கவையும் சங்கவையும் பாடலியற்றிய பண்பாடு; வெண்ணிக்குயத்தி என்ற குயவர்வீட்டுப் பெண் கவிபாடிய பண்பாடு- அப்பெண்பாற்புலவரை வெண்ணிக்குயத்தியார் என்று மாண்புடன் விளித்த சமூகம் நம்முடையது.

இலக்கியங்களில் தலைவியென்றும் தோழியென்றும், தாயென்றும் செவிலித் தாயென்றும் உறவின்வழி அறியப்படும் பெண்கள்; உறவல்லாத பரத்தையர் என்று இவர்களை ஒரு வகையில் வைப்போம். இவர்கள் தவிர, பாடும் பாடினியும், ஆடும் விறலியும், இசைக் கலைஞர்களும் ஒரு வகை என்போம். இவர்கள் அல்லாத பல பெண்களையும், அவர்தம் இயல்புகளையும், பணிகளையும், தொழில்களையும் நம் இலக்கியங்கள் காட்டுகின்றன.

இன்று நாம் பார்க்கப்போவது, தனித்தன்மையோடு தம் உழைப்பின்வழித் தொழில் செய்துப் பொருளீட்டி, தனி ஆளுமைகளாக வாழ்ந்த தமிழ்நிலத்துப் பெண்களை. எட்டுத் தொகை- பத்துப்பாட்டு நூல்களில் மதுரைக் காஞ்சி, பெரும்பாணாற்றுப்படை இரண்டிலும் நான் கண்ட சுவையான காட்சிகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன். அந்தக் காட்சிகளில் வரும் நான்கு வகைப் பெண்களும் சொந்தக்காலில் நிற்கும் தொழில் முனைவோர் என்பதுதான் சிறப்பு.

முதலில், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியைப் பார்ப்போம்.

மதுரை நகரின் நாளங்காடியில் பண்டங்கள் விற்கும் பெண்களைப் பாருங்கள்-

இருங்கடல் வான்கோடு புரைய, வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்
நன்னர், நலத்தர், தொல் முதுபெண்டிர்
(407-409)

நன்னர், நலத்தர், தொல் முதுபெண்டிர் என்றால் நல்ல அழகுடைய வயதில் மூத்த பெண்கள்;

எப்படிக் காட்சி அளிக்கிறார்கள்?

வாருற்றுப் பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்– நரைத்த கூந்தலை வாரிப் பெரிய பின்னலிட்டு உள்ளனர்; இருங்கடல் வான்கோடு புரைய– அந்தப் பின்னிய நரைத்த கூந்தல், கரிய கடலில் வெள்ளை நிறத்துச் சங்கைப் போல இருக்கிறதாம்.

அந்தப் பெண்கள் மதுரைத் தெருக்களில் பலவிதப் பொருட்கள் விற்கின்றனர். 

நரைத்த முடியுடன் முதிய விற்பனைப் பெண்களைப் பார்த்தோம்; இளம்பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?

மை உக்கன்ன மொய் இருங்கூந்தல்
மயில் இயலோரும், மட மொழியோரும்
(417-418)

மை ஒழுகியதுபோன்ற இருண்ட கருங்கூந்தலையுடையவர்கள்; மயிலின் இயல்பும் மென்மையான பேசும்தன்மையும் உடையவர்களாகக் காட்சியளிக்கிறார்கள்.

புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்,
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக
(421-423)

மக்கள் விரும்பும் பலவிதப் பொருட்களை அழகிய பலவகைக் கிண்ணங்களில், குறிப்பாக மணம்நிறைந்த மலர்களோடு வீடுவீடாகச் சென்று விற்கிறார்கள்.

மதுரைக் காஞ்சியின் மற்றுமொரு காட்சியைப் பாருங்கள்-

பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய
————————————————
பானாள் கொண்ட கங்குல் இடையது
(629-631)

ஒலியெல்லாம் அடங்கிய குளிர்ந்த கடல்போல அமைதியான நடு இரவில், தம் வேலைகளை முடித்துக்கொண்டு பலர் உறங்கச் செல்கிறார்கள். அவர்களில்-

பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர
(621-623)

அந்த இரவுக்கடைவீதியில், சங்குகளின் ஆரவாரம் அடங்கியிருக்க-

காழ் சாய்த்து– கடையின் தட்டியைத் தூக்கி நிறுத்தும் கட்டையைச் சாய்த்துவிட்டு; நொடை நவில் நெடுங்கடை அடைத்து– பண்டங்களைக் கூவிவிற்கும் தம் நெடியகடையை அடைத்து; ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர– ஒளிரும் அணிகலன் புனைந்த பெண்கள் தூங்கச் செல்கிறார்கள். ஊரடங்கிய நடுஇரவில் தம் பணி முடித்து, கடையை அடைத்து உறங்கச் செல்கின்றனர் கடை நடத்தும் மதுரை நகரத்துப் பெண்கள்.

இந்த இரண்டு காட்சிகளிலும், சங்ககால மதுரையில் பெண்கள், நரைத்த முடியைப் பின்னிய தொல் முதுபெண்டிர் – வயது முதிர்ந்தாலும் உழைத்துப் பொருளீட்டுகிறார்கள்; அடுத்த காட்சியில், வேலையெல்லாம் முடிந்து நடு இரவில் கடையை அடைத்து உறங்கச் செல்லும் அளவிற்குக் கடுமையாக உழைக்கிறார்கள். தத்தம் தனித்தொழில்கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

அடுத்து, தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படைக்கு வருவோம்.

இளந்திரையனிடம் பரிசு பெற்றுத் திரும்பிய ஒரு பாணன், வறுமையினால் வருந்தும் மற்றொரு பாணனிடம் தனக்குக் கிட்டிய பரிசுகளைக் கூறி, இளந்திரையனிடம் சென்றால் பொருள் கிடைக்கும் என்று ஆற்றுப்படுத்துவது – அதாவது வழிப்படுத்துவது இப்பாடல். அப்போது, போகும் வழியில் உள்ள இடங்கள், கடக்கையில் காணக்கூடிய காட்சிகளை விவரிக்கிறான் முதல் பாணன்.

அவற்றில் இரண்டு காட்சிகளை இப்போது பார்ப்போம்.

ஆடு, எருமை, பசுக்களை வளர்க்கும் கோவலர் குடியிருப்பில் ஒரு காட்சி.

நாள் மோர் மாறும் நல்மா மேனி  
சிறு குழை துயல்வரும் காதில், பணைத்தோள்,
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
(160-162)

குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்– சிறிய வகிடெடுத்த கூந்தலுடைய ஆயர் குடும்பத்தின் பெண், நல்மா மேனி – நல்ல மாந்தளிர் அல்லது கருத்தநிற மேனி கொண்டவள்; சிறு குழை துயல்வரும் காதில், பணைத்தோள்– சிறிய அணிகலன் அசையும் காதும், மூங்கில் போன்ற தோளும் கொண்டவள், நாள் மோர் மாறும்– அன்றன்று கடைந்த புதிய மோரை விற்கச் செல்கிறாள்.

நள் இருள் விடியல் புள் எழப் போகி – இருள் நீங்கி விடியும்காலையில் பறவைகள் துயில் எழும்பொழுதே அவள் பணி தொடங்கிவிடுகிறது. 

புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீந்தயிர் கலக்கி, நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
(156-159)

புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி– அவள் தயிரை மத்தால் கடைகிறாள். அந்த ஒலி புலி உறுமுவதுபோல் கேட்கிறது; உறை அமை தீந்தயிர் கலக்கி– இறுகத் தோய்த்தத் தயிரைக் கடைந்து, நுரை தெரிந்து– வெண்ணெய் எடுத்து, குழிசி பூஞ்சுமட்டு இரீஇ– வெண்ணெய் நீக்கிய மோர்ப்பானையைத் தலையில், மெல்லிய சுமட்டின் மேல் வைத்துச் சென்று, அன்றைய புதிய மோரை விற்கிறாள்.

இங்குச் செய்தி இதுமட்டுமல்ல…

அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்
(163-165)

குறிஞ்சி நிலத்து ஆயர்மகள் மோருக்குப் பண்டமாற்றாக நெல்லைப் பெற்றுக் கொள்கிறாள். கிடைத்த நெல்லைக் கொண்டுச் சுற்றத்தார் யாவரையும் உண்ணச் செய்யும் அவள், நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்– நெய்யை விற்றுக் கிடைத்த விலையில் பசும்பொன் வாங்காமல், எருமைகளையும் நல்ல பசுக்களையும் கன்றுகளையும் வாங்குவாளாம்.

தொழில் ஒன்றைச் செய்து, அதில் வரும் வருமானத்தில் சுற்றத்தாரையும் பசியாற்றுபவள், கூடுதல் வருவாயில் தொழிலுக்கான மேல்முதலீடு செய்வதிலும் தேர்ந்தவளாக இருக்கிறாள். ஈட்டிய வருவாயில் பொன் வாங்குவது அக்காலத்தில் இயல்பாக இருந்தத் தகவலைத் தரும் புலவர், தொடர்ந்துச் செல்வம் பெருக்கும் அக்காலப் பெண்களின் தொழிலறிவை ஆயர்மகள் வழியாகக் நமக்குக் காட்டுகிறார்.

பெரும்பாணாற்றுப்படையின் மற்றுமொரு காட்சி, கடற்கரைப் பட்டினத்து மக்களின் உபசரிப்புத் தன்மையைச் சொல்கிறது.

கள் விற்கும் பெண்களைச் சங்க இலக்கியங்கள் அரியலாட்டியர், கள் அடு மகளிர் என்ற பெயர்களால் குறிக்கிறது.

கள் காய்ச்சும் பெண்கள் பற்றிய செய்தி எவ்வளவு அழகாக விளக்கப்படுகிறது பாருங்கள்…

நெல்மா வல்சி தீற்றி பன்னாள்
குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக் 
கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்
(343-345)

பட்டினப்பகுதியில், கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்– கொழுத்த ஆண்பன்றியின் இறைச்சியுடன் களிப்பு மிகுந்த கள்ளைப் பெறுவீர்கள்; சரி, அது எப்படிப்பட்ட ஆண்பன்றி? நெல்மா வல்சி தீற்றி பன்னாள் குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏறு– நெல் இடித்த மாவை உணவாகக் கொண்ட பன்றி; பல நாட்களாக குழியில் நிறுத்திப் பாதுகாத்த பன்றி;

அதுபோக-

ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
(341-342)

பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது– அடர்ந்த மயிரையுடைய பெண் பன்றிகளுடன் சேராத ஆண்பன்றி அது;

ஓஹோ சரி, அந்தப் பெண் பன்றிகள் எப்படி? ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டி உடைய பெண்பன்றி – ஈரமான சேற்றில் புரளும் பல கரிய குட்டிகளையுடைய பெண்பன்றிகள் அவை;

ஈரமான சேறு எப்படி வந்தது?

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் 
(339-340)

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய– கள்ளை காய்ச்சிய பெண்கள் வட்டில்/கலத்தைக் கழுவியதால்; வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்– வடிந்து சிந்திய அந்தக் குழம்பில் வந்த ஈரமான சேறு அது.

ஆக, கள் காய்ச்சும் மகளிர் தங்கள் வட்டிலைக் கழுவி ஊற்றிய நீர், அந்த நீர் உருவாக்கிய சேற்றில் புரளும் குட்டிகளையுடைய பெண் பன்றிகள், அவற்றுடன் சேராத கொழுத்த ஆண்பன்றிகள், அந்த ஆண்பன்றியின் இறைச்சியும், அந்த நெய்தல் நில மகளிர் காய்ச்சிய கள்ளும் அங்குச் சென்றால் கிடைக்கும் என்று ஒரு பாணன் மற்றொருவனை ஆற்றுப்படுத்துகிறான்.

பெண்கள் கள் காய்ச்சியதும், கள் விற்றதும் இயல்பான தொழிலாகவே அக்காலத்தில் இருந்தது இலக்கியங்கள்வழி நாம் அறிந்து கொள்கிறோம்.

சங்க காலத்து இலக்கியங்களுள் இரண்டு இலக்கியங்களில், நான்கு வெவ்வேறு காட்சிகள் காட்டிய பெண் தொழில்முனைவோரை மட்டும்தான் இன்று பார்த்தோம். இன்னும் எண்ணிலடங்காத் தகவல்கள் உண்டு.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கப் பாடல்களில், பெண்கள் பலப்பலத் தொழில்கள் புரிகிறார்கள். தமக்கான ஆளுமையுடன் பொருளீட்டும் குடும்பப் பொறுப்பையும் ஏற்று உழைக்கிறார்கள். வளர்ந்தோங்கிய பண்பாடு செழித்த தமிழ்ச் சமூகத்தின் வெளிப்பாடுகள் இவை; வேறோர் இனத்துக்குக் கிட்டாத ஆவணங்கள் இவை.

கள்அடு மகளிர் காய்ச்சிய கள்ளைவிடச் சுவையான நம் இலக்கியங்களைச் சொற்களால் பேணினால் மட்டும் போதாது, படித்து மகிழவும் வேண்டும்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மாமல்லரும் மகாபலியும்

மாறிய பெயர்களும் தடம் மாறிய பொருள்களும் பற்றிச் சென்ற பதிவில் பார்த்தோம். அப்படிப்பட்ட வரலாற்றுப் பிழைகளில் முதலில் மாமல்லருக்கும் மகாபலிக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.

புராணப் பாத்திரமான மகாபலிக்கும் தமிழக வரலாற்றில் பல முதன்மைகளுக்குச் சொந்தக்காரரான மாமல்லருக்கும் என்ன தொடர்பு? மல்லைக் கடலோரம் பல்லவர் சிற்பக்கலைச் சாதனைகள் அலையொலியோடு எதிரொலிக்க இறுமாந்து நிற்கும் அழகுப் பெட்டகம் – மாமல்லபுரமா மகாபலிபுரமா?

பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு

இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்விசும்பில்

கணங்களியங்கு மல்லைக் கடன்மல்லைத் தலசயனம்

வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே

………… இது திருமங்கையாழ்வார் பாசுரம்

திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமொழியில், கடல்மல்லைத் தலசயனத்துறையும் பெருமாளை நெஞ்சுருகப் பாடுகிறார். ‘புரம்’ என்று ஊர்ப் பெயர் முடிந்தால், அது வணிகர்கள் இருப்பிடத்தைக் குறிக்கும். கடல்மல்லையாம் மாமல்லபுரம், பல்லவர்களின் வணிகத் தளமாக விளங்கிய துறைமுகப்பட்டினம்.

பல்லவ அரசைத் தமிழகத்தில் நிலையாகக் கோலூன்றச் செய்த சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவர். இவருடைய காலம் பொதுக்காலம் 590 முதல் 630 வரையாகும். மலைகளை வெட்டி, குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்கியவர். அதுவரை வழக்கிலிருந்த செங்கல், மரம், உலோகம், சுதை இல்லாமல் தமிழ்நாட்டில் முதன்முதல் கோயிலை எடுப்பித்த பெருமையை , தன் மண்டகப்பட்டுக் கல்வெட்டில் உலகிற்குப் பேரறிவிப்பாகப் பறைசாற்றுகிறார் மகேந்திரர். சிவனுக்கும் திருமாலுக்கும் தனித்தனிக் குடைவரைக் கோயில்கள் கட்டியதோடு, மண்டகப்பட்டில் மும்மூர்த்திக் கோயிலும் அமைத்தவர். இயல் இசை நாடகக் கலையில் வல்லவராகவும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தவர். இது பெருங்கடலின் ஒரு துளிதான். மகேந்திரரின் சிறப்புக்களைச் சொல்ல ஒரு பதிவு போதாது.

மகேந்திரவர்ம பல்லவரின் மகன், ‘வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்’ என்று கல்வெட்டு கூறும் முதலாம் நரசிம்மவர்மர். கருநாடகத்தில் உள்ள அன்றைய வாதாபியான இன்றைய பாதாமி கல்வெட்டு, இவரை மகாமல்லன் என்று குறிப்பிடுகிறது.

மகேந்திரரால் தொடங்கப்பட்டு, மகன் முதலாம் நரசிம்மவர்மரால் மெருகூட்டி வளமாக்கப்பட்டன தமிழ்நாட்டின் தொடக்ககாலக் குடைவரைக் கோயில்களும், அழகுறச் செதுக்கப்பட்ட புதுமைச் சிற்பங்களும். மாமல்லபுரத்தை உலகம் போற்றும் பெருங்கற்கோயில் கலைக்களஞ்சியமாக உயர்த்திய பெருமை இவர்கள் வழிவந்த இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மனையே சேரும். இவருடைய காலம் பொதுக்காலம் 690 முதல் 725 வரை ஆகும். கடல்மாமல்லை என்ற மாமல்லபுரம், தமிழகக் கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை வரலாற்றில் பற்பலப் புதுமைகளின் முன்னோடி என்பதில் தமிழன் தனிப்பெருமை கொள்ளவேண்டும்.

‘அருச்சுனன் தபசு’ என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பப் பாறையில்தான் எத்தனை எத்தனைச் சிற்பங்கள்… இறை வடிவங்கள், வானவர், மக்கள், விலங்குகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். பொய்யாகத் தவம் செய்யும் பூனையும், பூனை கண்மூடியிருப்பதால் மகிழ்ந்தாடிக் களிக்கும் எலிகளும், தன் துணைக்குப் பேன் பார்க்கும் ஆண் குரங்கும், அத்தாய்க்குரங்கின் மார்பிலிருந்து பால் அருந்தும் குட்டிகளும் .. அப்பப்பா கல்லில் கலைநயமிக்க உளிவண்ணம்.

இங்கே, தொடர்பில்லாமல் பஞ்ச பாண்டவர்களையும் திரெளபதியையும் இணைக்கிறார்கள் கதைச்சொல்லிகள். பஞ்சபாண்டவர் ரதமென்று அழைக்கப்படும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோயில். அவற்றை ஒருகல் தளிகள் அல்லது செதுக்குத் தளிகள் என்று வரலாற்றறிஞர்கள் கூறுவார்கள். ‘தளி’ என்பது கோயிலைக் குறிக்கும் சொல்.

ஒவ்வொரு ரதத்திலும் அதாவது தளியிலும் அமைந்துள்ள சிற்பங்கள், பல்லவச் சிற்பிகளின் உளித்திறனைப் பறைசாற்றும். கற்பாறைகளைக் குடைந்து முதன்முதல் வடிவங்களை உருவாக்கும்போதே உச்சம்தொடும் வளமான சிற்பங்களை அமைத்திருப்பது சிற்பக்கலை வல்லவர்களின் பேராற்றல்.

ஆனால், பஞ்ச பாண்டவர்களுக்கும் இக்கோயில்களுக்கும் தொடர்பு ஏதும் இல்லை.

கூடுதலாக, பெண்வாயில் காப்பாளர்கள் வடிக்கப்பட்டிருப்பதாலேயே கொற்றவைக் கோயிலை திரெளபதி ரதமென்று ஆக்கிவிட்டார்கள்.

மாறிய பெயர்களில் ஒரு மண்டபம் தப்பித்துக்கொண்டது. திருமாலின் வராக அவதாரத்தைக் காட்டும் மண்டபத்திற்கு வராக மண்டபமென்றே பெயர் அமைந்துள்ளது வியப்புத்தான். இங்கே நாம் காணும் மற்றொரு சிற்பம்- ‘மூவுலகும் ஈரடியால்’ என்று சிலப்பதிகாரம் கூறும் வாமன அவதாரத்தைக் குறிக்கும் திரிவிக்கிரமச் சிற்பம். விண்ணை அளக்கத் தூக்கிய காலின் கீழே மகாபலி அமர்ந்திருக்கிறார். அப்பாடா…. மகாபலிபுரம் என்று பெயர்க்காரணம் சொல்ல ஒரு சிற்பமாவது கிடைத்தது.

பரந்து விரிந்த மாமல்லையில் கண்களுக்கு விருந்தாகும் கலைவடிவங்கள் வேறு என்னென்ன? சிவனும், திருமாலும், பிரமனும், மகிஷனை வீழ்த்திய மகிஷாசுரமர்தினியும், இவர்களின் மூல உருவான கொற்றவையும் எழிலுற வடிக்கப்பட்டுள்ளார்கள்.

…………..குடமாடு கூத்தன்தன்னைக்

கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்

காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே

என்று திருமங்கையாழ்வார் பாடிய கடல்மல்லைத் தலசயனப் பள்ளிகொண்ட பெருமாள் மிக அழகு.

குன்றைக் குடையாக ஏந்திய கண்ணன், பால் கறக்கும் ஆயன், பானையுடன் பெண்டிர், சோமாஸ்கந்தர், யாளி மண்டபம் என்று கண்களையும் எண்ணத்தையும் பூரிக்கச் செய்யும் பணிநேர்த்தியை என்னவென்று சொல்ல.. ஒவ்வொரு தொகுதியிலும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் சிற்பங்கள். உளியைக் கொண்டு அற்புதங்கள் படைத்திருக்கிறார்கள் பல்லவச் சிற்பிகள்.

சரி..கரையோரக் கோயில்களின் அழகில் மயங்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டோமே… இது மாமல்லபுரமா? மகாபலிபுரமா?

அதற்கு, தர்மராஜ ரதம் என்றழைக்கப்படும் கோயிலுக்கு வரவேண்டும். தர்மராஜ ரதத்திற்கு அதை உருவாக்கியவர் வைத்த பெயர்தான் என்ன?

மாமல்லைக் கோயில் தொகுதியில் வியக்கவைக்கும் சாதனைகள் புரிந்தவர் இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மன் என்பதையும் , தர்மராஜ ரதம் அவரால் உருவாக்கப்பட்டது என்பதையும் கட்டடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பச் சான்றுகளால் உறுதிசெய்துள்ளார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற வரலாற்றறிஞர் டாக்டர் இரா. கலைக்கோவன். 2004இல் வெளியிடப்பட்ட அவருடைய நூலான ‘அத்யந்தகாமம்’ இதை உலகிற்கு அறிவித்து 18 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

அன்னாரின் ஆய்வுகளால் நாம் அறிவது என்ன? குறிப்பாகக் கல்வெட்டுத் தகவல்களைப் பார்ப்போம்.

‘அத்யந்தகாமம்’ என்பது என்ன? தர்மராஜ ரதத்தில் கிடைத்த 39 வடமொழிக் கல்வெட்டுக்களில் இரண்டு, ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’ என்று அக்கோயிலை அடையாளப்படுத்துகின்றன. ஆக, தர்மராஜ ரதத்திற்கு அதை உருவாக்கிய பல்லவ அரசர் வைத்த பெயர் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’.

ஏனைய 37 கல்வெட்டுக்களும் அரச விருதுப் பெயர்களாய் அமைந்துள்ளன. ஶ்ரீ நரசிம்மன், புவனபாஜனன், ஶ்ரீமேகன், நயனமனோகரன், பராபரன், வாமன், ரணஜயம், அத்யந்தகாமன், மகாமல்லன் என்று விருதுப் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன. இதனால் இக்கோயில் அத்யந்தகாமன் என்றும் மகாமல்லன் என்றும் சிறப்புப் பெயர்களையுடைய பல்லவ அரசரால் உருவாக்கப்பட்டது தெரிகிறது.

எனில், மகாமல்லன் என்றும் விருதுப் பெயர்கொண்ட அத்யந்தகாமன் யார்? கடல் மாமல்லையில் தமிழகச் சிற்பக்கலைச் சாதனைகளைக் கல்லிலே உலகிற்கு 1300 ஆண்டுகளுக்குமுன் அறிவித்த மகாமல்லன் என்ற அந்தப் பல்லவர் யார்?

கடற்கரைக் கோயிலையும் காஞ்சி கயிலாயநாதர் கோயிலையும் கட்டிய இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மர்தான் மகாமல்லன் என்றும் அத்யந்தகாமன் என்றும் அழைக்கப்பட்டவர். தர்மராஜ ரதமென்னும் அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தை உருவாக்கியவர். ‘இராஜசிம்மர் காலத்துக் கோயில்களான அதிரண சண்டேசுவரம், மல்லைக் கடற்கரைக் கோயில் வளாகம், காஞ்சி கயிலாயநாதர் கோயில் என்றறியப்படும் இராஜசிம்மேசுவரம் ஆகியவற்றிலும் பனைமலைக் குகைக்கோயிலிலும், அவர் வெட்டுவித்த வாயலூர் மற்றும் திருப்போரூர்க் கல்வெட்டுக்களிலும் இத்தகு விருதுப் பெயர்கள் பலவாக இடம்பெற்றுள்ளன’, என்கிறார் டாக்டர் கலைக்கோவன்.

நம் ஆர்வத்துக்குரிய ‘மகாமல்லன்’ என்ற பெயர், இராஜசிம்மனின் வாயலூர் பொறிப்புகளிலும் காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்திலும் வெட்டப்பட்டுள்ளது. ‘அத்யந்தகாமன், ரணஜயம், மகாமல்லன் என்ற இம்மூன்று பெயர்களையும் தம்முடைய விருதுப் பெயர்களாகக் கொண்டவராக இராஜசிம்மனைத் தவிர வேறெந்தப் பல்லவ மன்னரையும் வரலாறு நமக்குக் காட்டவில்லை’ என்று ஆணித்தரமாகத் தன் கட்டுரையொன்றில் கூறுகிறார் ‘அத்யந்தகாமத்தின் ஆசிரியர். மாமல்லபுரத்தில் மாமல்லனைக் குறிக்கும் கல்வெட்டு, அத்யந்தகாமனின் கல்வெட்டு மட்டுமே.

ஆக, தர்மராஜ ரதமென்று இன்று பொருத்தமின்றி அழைக்கப்படும் அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தை உருவாக்கி, அதில் தம் விருதுப் பெயரான ‘மகாமல்லனையும்’ கல்வெட்டாகப் பொறித்துச் சென்றுள்ளார் இராஜசிம்மர்.

இவ்வளவு சிறப்புமிகு சிற்பங்கள் அமைந்த, பல்லவர் மரபால் மாமல்லை என்று பெயர்பெற்றிருந்த துறைமுகச் சிற்பப் பட்டினத்திற்கு, ஒரு சிற்பம் இடம்பெற்றிருப்பதாலேயே வலிந்து பொருள்கொண்டு மகாபலிபுரமென்று பெயர் வழங்குவது சரியா? பெயரைக் கேட்டதும் பின்னணியைத் தேடும் ஆர்வமுடையோருக்கு-

  • மாமல்லபுரம் மாமல்லனுடன் கூடிய பல்லவர் வரலாறைத் தேட வைக்கும்;
  • பொருத்தமில்லா மகாபலிபுரமோ தமிழக வரலாறை மறந்து புராணக் கதைகளில் பாயவைக்கும்.

எல்லாம் இறைவன் செயலாக இருக்கலாம். யாரும் காணாத அந்த இறைவனுக்கும் வடிவம் தந்து செதுக்கி 1300 ஆண்டுகளுக்குப் பின்பும்… இன்றும் நம் கண்முன் காட்டும் கலைக்குச் சொந்தக்காரர்களான சிற்பிகளை மறக்கலாமா? அவர்களை வளர்த்த மாமன்னர்களின் சிறப்பைப் புறந்தள்ளலாமா? புறக்கணிக்கலாமா?

அத்யந்தகாமத்தைப்போல, பற்பலக் கோயில்களில் கல்வெட்டுக்களாகவும் சிற்பங்களாகவும் நமக்குப் பல அரிய தகவல்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர். அது அவர்களுடைய வரலாறு மட்டுமல்ல; நம்முடைய வரலாறு என்பதை நாம் உணர்வது எப்போது?

யுனெஸ்கோ இணையதளம் முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வரை, மாமல்லபுரத்தை மகாபலிபுரம் என்று பலரும் பிறழ்ந்தே அழைக்கின்றனர். தமிழையும் தமிழக வரலாறையும் பேணவேண்டிய அரசுசார் அலுவலகங்கள் இந்தப் பிழையை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, வரலாறு அறிந்த, உணர்ந்த… நாம் அனைவரும் மாமல்லபுரம் என்றே இனி அழைப்போம்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மாறிய பெயர்; தடம் மாறிய பொருள்

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் துப்பாக்கி திரைப்படம் ஒளிபரப்பி இருந்தார்கள். அலைவரிசையைக் கவனிக்கவில்லை. உற்று நோக்கியபோது நடிகர் விஜய் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். அட.. என்னடா இது என்று ஆர்வம் கூடியது. பெயரைப் பார்த்தால் – ‘Thuppakki – Indian Soldier Never On Holiday’ என்று வந்தது. ஓ.. மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்று புரிந்துகொண்டேன். பின்னொருநாள், இந்தி அலைவரிசை வழங்கிக்கொண்டிருந்த படமொன்றைப் பார்க்க அமர்ந்தேன். ஏற்கனவே பார்த்த படம்போல் இருந்தது. மூளையைத் தீட்டித் தேடியதில் அதே துப்பாக்கி- இப்போது அக்‌ஷய்குமார் கையில். உதட்டசைவு மாறாமல் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். பெயரைப் பார்த்தால் – ‘Holiday – A Soldier is Never Off Duty’ என்று இருந்தது. இது தமிழ்த் துப்பாக்கியின் இந்தி தழுவல். துப்பாக்கி என்று தமிழில் முதலில் எடுத்து, வணிக வெற்றியடைந்ததும், அதையே ‘Indian Soldier Never On Holiday’ என்று இந்தியில் மொழிமாற்றம் மட்டும் செய்து வெளியிட்டு இருந்தார்கள். பின் அதே கதையைத் தழுவி, முதலிலிருந்து முழுமையாக மறுபடி இந்தியில் ‘A Soldier is Never Off Duty’ என்று பயங்கரமாக மாற்றி யோசித்திருந்தார்கள். ஒரே கல்லில் மூன்று மாங்காய்… இல்லை இல்லை.. ஒரே கதையில் குறைந்தது மூன்று படங்கள்.

தோசையும் தேங்காய்த் துவையலும் வழங்கிய உணவகம் அதையே தோசா நாரியல் சட்னி என்று பெயர்மாற்றி வழங்கியது. மேலும் அடங்காத அறிவுப் பசியில், தோசை மாவை பாசுமதி அரிசியில் முதலிலிருந்து ஆட்டி வட இந்திய ‘தோசா’வாகத் திரைவிரும்பிகளுக்குப் பரிமாறியது புரிந்தது. இதுபோல் தோசைகளும் இட்லிகளும் கணக்கில்லாமல் கிடைக்கும் காலம் இது. தலைச் சுற்றியது எனக்கு.

எதை எப்படிக் கொடுத்தாலும் சிந்திக்காது வாங்கியுண்ணும் சமூகமாக மாறிப்போன நமக்கு, மாறிய பெயர்களும் தடம் மாறிய பொருள்களும் பொருட்டாகவே தெரிவதில்லை.

இன்னொரு கவளம் வேண்டுமா? இதோ…

சென்னையில் ஹாமில்டன் பாலம் என்று ஒன்று இருந்தது. அதன் பெயர்க்காரணம் குறித்துச் சென்னை ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்கள் கூறுகிறார்கள். சென்னையின் ஆளுநராக இருந்த லார்ட் ஹாமில்டன் என்பவரின் பெயரில் இது கட்டப்பட்டதாக நம்பிவந்த நேரத்தில், ஹாமில்டன் என்ற ஆளுநர் சென்னையில் இருந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை என்கிறார், சென்னை ஆய்வாளரான திரு. முத்தையா. ஆனால், நம்முடைய பேசுபொருள் அதுவல்ல.

ஆங்கிலேயர் காலத்தில் ‘ஹாமில்டன் ப்ரிட்ஜ்’ என்றழைக்கப்பட்ட பாலம், தமிழில் ‘ஹாமில்டன் வாராவதி’ என்றானது. ஹாமில்டன் என்ற சொல் காலப்போக்கில் மருவி ‘அம்பட்டன் வாராவதி’ ஆனது.  அழகுத் தமிழ்ச் சொற்களான கன்னியாகுமரி cape comorin என்றும், தூத்துக்குடி tuticorin என்றும், திருநெல்வேலி tinneveli என்றும் ஆங்கிலேயர் வாயில் படாதபாடுபட்டதைக்கூட ஓரளவு தாங்கிக் கொள்ளலாம். நம் உணவுச் சின்னமாம் மிளகாய்ப்பொடியை gun powder என்று இழிவுபடுத்தியதற்குப் பழிக்குப்பழிதான் ‘அம்பட்டன் வாராவதி’ என்று நினைத்துவிடாதீர்கள். வாராவதியின் கதை அதோடு நிறைவடையவில்லை.

ஹாமில்டன் ப்ரிட்ஜ் தமிழனால் அம்பட்டன் வாராவதி என்றாக, அதை ஆங்கிலேயர் மிகச்சிறப்பாக மறுமொழியாக்கம் செய்து barbers bridge என்று அழைக்கத் தொடங்கினர். ‘ஹாமில்டன் ப்ரிட்ஜ்’ – barbers bridgeஆக மாறிய கதைச் சுருக்கம் இது.

பின்னர் அதுவே அம்பேத்கர் பாலம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

இதை எண்ணிச் சிரிப்பதா? சிந்திப்பதா? முடிவு உங்கள் கையில்.

இது போல இன்னும் நிறைய உண்டு-

பெருமைமிகு மாமல்லபுரம் மகாபலிபுரம் ஆனதும்; அருள்மிகு தில்லைச் சிற்றம்பலம் சிதம்பரம் ஆனதும்; இணையில்லாப் பெருவுடையார் கோயில் ப்ருஹத்தீஷ்வரம் ஆனதும் என்று பட்டியல் நீள்கிறது. பார்ப்போம்… கேட்போம்… அடுத்தடுத்த பதிவுகளில்.

நன்றி.

இணைப்புகள்-


Podcast available on:   Apple   Google   Spotify

ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!


இந்த ஆண்டு ஆகஸ்டு 30 தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை உலகெங்குமுள்ள மலையாள மக்களால் கொண்டாடப்பட்டது ஓணம்.

தாமதமாகச் சொன்னாலும், அனைவருக்கும் ஓணநன்னாள் நல்வாழ்த்துக்கள்!!

சரி, மலையாளப் பண்டிகைக்குத் தமிழில் வாழ்த்தா என்கிறீர்களா?

சேர சோழ பாண்டியர்களென ஒன்றிணைந்த தமிழகத்தின் திருவிழாவாக இருந்த ஓணவிழாவை, காலப்போக்கில் தமிழர்கள் கொண்டாட மறந்த பண்டைநாள் பண்டிகையைப் பற்றியதுதான் இன்றைய பதிவு. இதை உணர நம் வழித்துணை- நமக்கென நம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கியச் சான்றுகளே.

கடந்த நான்கு ஆண்டுகள் அபுதாபியில் வாழ்ந்ததில் பல கேரளத் தோழிமார் கிடைத்தனர். செவிக்கினிய மலையாள மொழியைக் கொஞ்சமாய்ப் பேசக்கற்கும் வாய்ப்பும் அமைந்தது. அதனால், அம்மொழி தமிழோடு எவ்வளவு தொடர்புடையது என்றும் தமிழரின் பல பழமையான சொற்களை மலையாளிகள் இன்றளவும் புழங்கி வருவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமிழர்கள்மீதும், தமிழ்த்திரைப்படங்கள்மீதும், தமிழ்த்திரைப்பாடல்கள்மீதும் மலையாள மக்களுக்கு உள்ள ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுடைய மொழி, பழகும் தன்மை, வேர்களைப் பாதுகாக்கும் விழைவு, உணவுமுறை என்று பலவற்றைக் கூர்மையாகக் கவனிப்பேன். அப்போதெல்லாம், என்றோ விலகிப்போன உறவுகளோடு இணையும் மீள்நிகழ்வுபோல உணர்ந்திருக்கிறேன்.

வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரி தம் ‘தென் இந்திய வரலாறு’ நூலில் –

“சங்க காலத்தில், இப்போதைய மலையாளப் பகுதி தமிழ்ப்பேசும் நிலமாகவே இருந்தது……….. சங்க இலக்கியத்தில் காணப்படும் பல சொற்களும் சொற்றொடர்களும் இப்போதைய தமிழில் வழக்கற்றுவிட்டபோதிலும், அவை மலையாள மொழியில் இன்றும் வழக்கிலிருக்கின்றன”

என்று குறிப்பிடுகிறார்.

“கன்னடத்தையும் தெலுங்கையும்போல, மலையாள மொழியும் இலக்கிய மரபுச் சொற்கள் பலவற்றைச் சமஸ்கிருதத்திலிருந்து தாராளமாகக் கடன் வாங்கியது. சமஸ்கிருத ஒலிகளைச் சரியாக உச்சரிப்பதற்காக, பழைய வட்டெழுத்து முறையை விட்டுவிட்டு, தமிழ்-கிரந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய எழுத்துமுறையை உருவாக்க வேண்டியிருந்தது”

என்றும் அவர் விளக்குகிறார்.

ஆக, முந்தைய சேரநாடென வழங்கப்பெற்ற இன்றைய கேரள மாநிலத்தில், அவர்தம் மொழியில், உணவில், இசையில் தமிழ்மணம் கமழ்வது வியப்பில்லைதானே?!

 அப்படிப்பட்ட ஒரு தொடர்புதான் ஓணநன்னாளும்.

ஓணம் தமிழரின் பழங்காலப் பண்டிகை என்பதுபற்றி பலர் பேசியும் எழுதியுமிருக்கிறார்கள். இது என் முறை.

ஓணத்திருநாள் திருமாலின் வாமன அவதாரத்தோடு தொடர்புபடுத்தியே கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம்.

‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடிய’ என்று வாமன அவதாரத்தைப் பாடி, ‘திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே’ என்று இளங்கோவடிகள் சிலப்பதிகார ஆய்ச்சியர்க் குரவையில் போற்றும் முன்பே, சங்கப்பாடல்கள் வாமனரைக் குறிக்கக் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப்பாட்டின் தொடக்கமே திருமால் பெருமை பேசுகிறது.

‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்று தொல்காப்பியர் காட்டும் முல்லை நிலத்தின் தலைவன் மாயோனான திருமால் அல்லவா?

முல்லைப்பாட்டு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, சோழநாட்டில் பிறந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மழைமேகத்தை திருமாலோடு ஒப்பிடுகிறார் புலவர்.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல

(முல்லைப்பாட்டு 1-3)

அகன்ற உலகத்தை வளைத்து, சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும்,

மா தாங்கு தடக்கை – திருமகளை அணைத்த வலிமையான கையை உடையவனும்,

நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – மாவலி மன்னன் தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமால்;

அந்தத் திருமாலைப் போல் முகிலானது, கடல்நீரைப் பருகியவுடன், மலைகளை இடமாகக் கொண்டு வலப்பக்கமாக எழுந்துநின்று, விரைந்து பெருமழையைப் பெய்ததாம்.

முல்லைப்பாட்டைப் போல, வாமனரைப் பற்றி வேறு பாடல்களிலும் காணமுடிகிறது. ஆனால், ஓணவிழா அல்லவா நாம் தேடுவது?

சரி, ஓணவிழாவைத் தமிழர்கள் கொண்டாடிய சான்றுகளை எங்கெல்லாம் காணமுடிகிறது?

சங்க இலக்கியத்தில் மதுரைக்காஞ்சியில் ஓணவிழவின் குறிப்பு வருகிறது. பத்திமை இலக்கியங்களில் சிவனைப் போற்றிய நாயன்மாரும், திருமாலைப் போற்றிய ஆழ்வார்களும் ஓணவிழாவைப் பற்றிப் பாடுகிறார்கள்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை, மாங்குடி மருதனார் பாடியது.

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

(மதுரைக்காஞ்சி 590 – 599)

என்ற வரிகளைப் பாருங்கள்…

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நன்னாள்

அவுணர்களைக் கொன்ற, பொன்னால் செய்த மாலையினையுடைய திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், 

வீரர்கள் எப்படித் தெருக்களில் வந்தார்களாம்??

கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  

யானைத் தோட்டி வெட்டின வடுவுடைய முகம்

போர்க்கருவிகளைப் பயின்று தழும்புபட்ட போரைத் தாங்கும் பெரிய கை

தழும்புடைய நெற்றியுடன் காட்சியளிக்கும் போரை விரும்பும் மறவர்கள்-

எப்படி நடந்து வருகிறார்கள்??

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

வண்டுகள் நிறைந்த மலர்ச் சரத்தை அணிந்து வலிமையான களிற்று யானைகளைச் செலுத்தி நடந்து வருகிறார்கள்..

திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், யானைகளைத் தெருக்களில் நடத்திச் செல்கிறார்கள் வீரர்கள்..

இன்றளவும் யானைகள் கோயில்களோடும் திருவிழாக்களோடும் இணைந்திருப்பதைக் காண்கிறோம்.

சங்கநூலான மதுரைக்காஞ்சி நமக்குச் சொல்லும் செய்தி இது.

அடுத்து, சிவனை அம்மையப்பனாகக் கண்ட திருஞானசம்பந்தர், மயிலை கபாலீச்சரத்தில் பாடிய பூம்பாவைப் பதிகத்தில்-

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம்அமர்ந்தான் ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்

(பன்னிரு திருமுறை 2:47:2 திருஞானசம்பந்தர், இரண்டாம் திருமுறை, திருமயிலை கபாலீச்சரம்)

என்கிறார்.

மையிட்ட அழகிய கண்களையுடைய பெண்கள் வாழும் மயிலையில், திருநீறு அணிந்து கபாலீச்சரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அங்கு நடக்கும் ஐப்பசி ஓணவிழாவையும் அடியவர்கள் போற்றுதலையும் காணாமல் போவாயோ பூம்பாவாய் என்று கேட்கிறார்.

ஓணவிழா, சம்பந்தர் காலத்தில் ஐப்பசியில் கொண்டாடப்பட்டதையும் இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

திருமாலையே முழுமுதல் கடவுளாக வழிபட்ட, திருமால் பெருமை பாடிய ஆழ்வார்கள் நெஞ்சுருகி உரைத்தது என்ன?

திருமழிசை ஆழ்வார்-

காணல்உறுகின்றேன் கல்அருவி முத்து உதிர 
ஓண விழவில் ஒலிஅதிர  பேணி
வருவேங்கடவா! என்உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று

(2422, திருமழிசை ஆழ்வார்,  நான்முகன் திருவந்தாதி, மூன்றாம் ஆயிரம்)

என்கிறார்.

நானோ உன்னைத் தேடி திருவேங்கடம் அதனைச் சென்று காணல் உறுகின்றேன்….. நீயோ என் உள்ளம் புகுந்தாய்

கல்அருவி முத்து உதிர ஓண விழவில் ஒலிஅதிர  ….. வேங்கடத்தில், அருவிகளிலிருந்து முத்துக்கள்போல நீர் ஆர்ப்பரித்து விழுகிறது;

அந்த ஒலியோடு தொண்டர்கள் திருமாலைப் போற்றிப் பல்லாண்டு பாடும் ஒலியும் சேர்ந்து வேங்கடமலையில் ஒலியதிர்கிறது என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

சரி, இந்தக் காட்சி நடக்குமிடம் திருவேங்கடத்தில், ஆனால் நடக்கும் நாளோ மாலுக்குரிய நாளான ஓணவிழாவில் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் செய்தி.

அடுத்து, பெரியாழ்வார் தம் திருப்பல்லாண்டில்-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் 

அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் 

 பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே 

 (6, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார்.

நாங்கள் வழிவழியாக ஏழேழு பிறவியிலும் திருமாலுக்கே தொண்டு செய்கின்றோம் என்பவர், திருவோணத் திருவிழவில், அந்திப் பொழுதில் அரியுரு எடுத்தவனைப் பல்லாண்டு பாடுவோமென்கிறார். நற்றமிழில் நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிடுகிறார்.

ஆயினும், திருவோணத்தைக் குறிப்பிடும் பெரியாழ்வார் வாமன அவதாரத்தை இணைத்துப் பாடாதது இங்கு நோக்கத்தக்கது.

திருப்பல்லாண்டின் மற்றொரு பாடலில்-

உடுத்துக் களைந்த நின் பீதகஆடை உடுத்துக் கலத்ததுண்டு

தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்

விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்

படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

(9, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார் பெரியாழ்வார்.

நீ உடுத்திக் களைந்த பட்டாடையை நாங்கள் உடுத்துகிறோம்; உனக்கு முதலில் கலத்தில் படைத்த உணவையே நாங்கள் உண்ணுகிறோம்; நீ சூடிய துழாய் மாலையை நாங்கள் சூடிக்கொள்கிறோம்;

நீ எங்களைச் செய்யப் பணித்த தொழிலையே செய்யும் நாங்கள்- பாம்பணையில் பள்ளிகொண்ட உமக்குப் பல்லாண்டு பாடுகிறோம், என்று வெறுமனே சொல்லாமல்,

திருவோணத் திருவிழவில்படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

என்று வரலாற்றுத் தகவலையும் தந்து செல்கிறார்.

ஆக, முந்தைய இலக்கியங்கள் வாயிலாக, ஓணவிழா சங்ககாலம் தொடங்கி பத்திமைக்காலத்திலும் தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது நமக்குத் தெரிய வருகிறது.

தமிழர்களாகிய நமக்குக் கிடைத்துள்ள பெரும் சொத்து நம் பழம்பெரும் இலக்கியங்கள். அவை, நம் மூதாதையர் நமக்கென எழுதிச்சென்ற கடிதங்கள். அவற்றைத் தேடித்தேடி மேலும்மேலும் படிக்கப்படிக்க, நம் வரலாறும் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட சமூகமாற்றங்களும் நமக்குப் புரிபடும், நம் உண்மையான அடையாளமும் தெளிவுபெறும்.

நன்றி.

Podcast available on:   Apple   Google     Spotify

 

 

 

 

‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்


ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம்.. நாடுவிட்டு நாடு பணியிடம் மாறிவந்ததால் தொடர்ந்து பதிவுகளைத் தர இயலாமல் போனது.

இந்த இடமாற்றம் பற்றியதுதான் இன்றைய பதிவு.

இப்படி நாடுவிட்டு நாடுசென்று வாழ்வு அமைத்துக் கொள்வதைத் தமிழில் எப்படிக் குறிக்கிறோம்?  ‘புலம்பெயர்தல்’ என்று சொல்கிறோம். இன்றும், புலம்பெயர்ந்த இந்தியர்கள்/ புலம்பெயர் தமிழர்கள் என்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா?

பொதுவாக, வெளிநாடுவாழ் இந்தியர்/ அயலகத் தமிழர் ஆகிய சொற்களை அரசுகள் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது.  ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படுவது குறித்தும் செய்திகளைச் சமீபத்தில் கண்டோம்.

இன்றும் நம்மிடையே புழங்கிவரும் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் என் மனதில் தங்கிப்போனது.

‘புலம்பெயர்தல்’ எவ்வளவு பழமையானது என்பதைவிட, ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் எவ்வளவு பழமையானது என்று தேடத் தோன்றியது. ஏனென்றால், தமிழர்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்றதும், வேற்றுநாட்டவர் தமிழகத்தில் வாழ்ந்ததும் சங்ககாலம் தொட்டு இருந்துவந்ததுதான். இலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுக்கள் வழியாகவும் இதை அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது’ என்று கூறியதாகக் கட்டுரைகளில் வாசித்தேன். ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : கோவை-சிறப்பு மலரில், அவருடைய ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தபோது, செம்மொழிக்கான பண்புகளாக – ‘தொன்மை, தொடர்ச்சி, செழுமை வளம்’ ஆகியவற்றை அவர் குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.

தமிழ்மொழி இன்றும் நம்மிடையே வழக்கொழியாது இருப்பதற்கு அதன் தொடர்ச்சியே முதன்மைப் பங்கு வகிக்கிறது. அப்படி, தொடர்ந்து நாம் பயன்படுத்தும் எண்ணிலடங்காச் சொற்களுள் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லின் தொன்மையை இன்று பார்ப்போம்.

மக்கள், தாம் வாழுமிடம்விட்டு வேறோர் இடம் புலம்பெயர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கல்வி, வேலை, வணிகம், போர் என்று பட்டியலிடலாம். தொல்காப்பியரும்-

‘ஓதல் பகையே தூதிவைப் பிரிவே’ 

என்று பிரிவு ஏற்படும் சூழல்களைக் காட்டுகிறார்.

நாம் இங்கு பார்க்கப்போவது, சங்கப் பாடல்களில் ‘புலம்பெயர்தல்’ என்னும் சொல்லாட்சி எப்படிப்பட்ட சூழல்களில் எல்லாம் வருகிறது என்பதைத்தான்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ஒரு பாடல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பொருள் ஈட்டுவதற்காகப் பிரியும் தலைவனிடம் தோழி, பிரிவின் துன்பம் குறித்துக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தன் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து

பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி

அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

(நற்றிணை 183)

என்பன முதல் சில வரிகள்.

மருத நிலத்து உமணர் – அதாவது உப்பு வணிகர்கள், தம் நாட்டில் விளைந்த நெல்லை, கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் உள்ள உப்பிற்கு விலையாகக் கொடுப்பார்கள். அதாவது, நெல்லை உப்புக்குப் பண்டமாற்றாகக் கொடுத்து வாங்குவார்கள்.  உப்பு வாணிபத்தில் ஈடுபடும் உமணர்,  தம் சுற்றத்தாரோடு நிலவுபோன்ற வெள்ளை மணலில், நீண்ட வழித்தடத்தில் வண்டிகளைக் கட்டிக்கொண்டு, நிலம்விட்டு மற்ற நிலத்திற்குப் புலம்பெயர்ந்துச் செல்வார்களாம். அப்படி அவர்கள் புலம்பெயர்ந்து செல்வதுகண்டு, அந்த ஊரில் இருப்பவர்கள் வருந்துவார்களாம். அதுபோல, உன் பிரிவால் தலைவி துன்பப்படுவாள் என்று தோழி கூறுகிறாள். 

ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

சுற்றத்தாரோடு புலம்பெயர்ந்து உமணர் போவது துன்பம் தரும், எனுமிடத்தில் ‘புலம்பெயர்தல்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரும் அகநானூற்றுப் பாடலைப் பாருங்கள்.

வேம்பற்றூர் குமரனார் எழுதிய பாடல், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைகிறது பாடல்.

முனை புலம்பெயர்த்த புல்லென் மன்றத்துப்

பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்

வினை அழி பாவையின் உலறி,

மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கே

(அகநானூறு 157)

என்று முடிகிறது பாடல். தலைவன் சென்றுள்ள கொடிய வழியைப் பாடலின் தொடக்க வரிகள் விளக்குகின்றன. பிரிந்து செல்லும் முன் தலைவன் தலைவிக்கு ஊக்கம்தரும் சொற்களைச் சொல்லிச் சென்றிருக்கிறான். அதைத் தலைவி தோழிக்குச் சொல்கிறாள்.

அச்சம் தரும் வழியில் தனியாகச் சென்ற நம் தலைவர் என் மனதிற்கு ஆறுதல் அளிக்க, முன்பெல்லாம் என்ன சொல்லுவார் தெரியுமா?

‘போர் நிகழ்கிறது. ஊரில் நலமாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தம் இடம் பொருள் இழந்து பாதுகாப்பான இருப்பிடம் நோக்கிப் புலம்பெயர்ந்துப் போய்விட்டனர். அதனால் பொலிவிழந்து காணப்பட்டது ஊர்மன்றம். எல்லோரும் புலம்பெயர்ந்து போன பிறகும், ஊர்மன்றத்தில் வைக்கப்பட்ட பெண்சிலை ஒன்று இருக்கும். அது மழை பெய்யும்போது நெகிழ்ந்தும், வெய்யில் காய்கையில் வெளுத்துப்போயும் தனியாக நிற்கும். 

அந்த மன்றத்துப் பொலிவிழந்த பாவைபோல, வீட்டில் தனித்திருக்க யாரால் முடியும்? உன்னைப் போன்று மனவலிமை உடையவர்களால் மட்டும்தான் அது முடியும்’, என்று தலைவர் என்னிடம் சொல்வார். ஆனாலும் அவரைப் பிரிந்து தனியாக நாட்களை என்னால் கழிக்க இயலவில்லை, என்று தலைவி புலம்புகிறாள்.

முனை புலம்பெயர்த்த புல்லென்மன்றத்து’

மக்கள் புலம்பெயர்ந்து சென்றதால் பொலிவிழந்த மன்றம் என்கிறது பாடல்.

புலம்பெயர்தலைத் தேடப் போய், பாடலின் இனிமையில் மயங்கிவிட்டோம் பாருங்கள்.

மற்றுமோர் அகநானூற்று பாடல், மாமூலனார் பாடியது. 

கோடு உயர் பிறங்கல் குன்றுபல நீந்தி,
வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய

(அகநானூறு 393)
என்று தொடங்கும் பாடல் அது.

இங்கே, புல்லி என்ற மன்னன் ஆளுகின்ற வேங்கடமலை பற்றிய வண்ணனையைக் காணமுடிகிறது.

வேங்கட மலையின் வளமும், நாட்டுப்புற வாழ்வும் தனியாக மற்றொரு பதிவில் பார்க்கவேண்டிய தகவல்கள். 

கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அதாவது – உயர்ந்த சிகரங்களையுடைய, பாறைகள் நிறைந்த குன்றுகள் பலவற்றைக் கடந்து சென்று, 

வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து- அதாவது – வேறொரு நாட்டில் பொருள் தேடும் எண்ணத்தோடு – 

புலம்பெயர்ந்து செல்லும் தலைவன், உன்னை மறவாது திரும்பி வருவான், என்று பிரிவினால் வருந்தும் தலைவிக்குத் தோழி கூறுவதாக அமைகிறது பாடல்.

இதுவரை நாம் படித்த எட்டுத்தொகைப் பாடல்கள் மூன்று. இரண்டில் பொருள் ஈட்டுவதற்காக இடம் மாறுவது ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லால் காட்டப்பட்டது. ஒன்றில், போரினால் ‘புலம்பெயர்ந்ததைப்’ பார்க்கமுடிந்தது.

இன்றும் புழக்கத்தில் உள்ள ‘புலம்பெயர்தல்’ என்ற சொல், பத்துப்பாட்டில் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடை, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடியது.

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

(நெடுநல்வாடை 1-5)

என்று பாடலின் தொடக்கமே, வெள்ளப் பெருக்கால் தம் இடத்தைவிட்டு வேறோர் இடம் நகரும் இடையர்களைக் காட்டுகிறது.

பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்-

வானம் புதிய மழையை அளவில்லாது பொழிந்ததை வெறுத்த வளைந்த கோல்களையுடைய இடையர், 

ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

தம் காளைகளை வேறு நிலங்களில் மேயவிட்டு, புலம்பெயர்ந்து, தனிமையில் கலங்கித் தவித்தனராம்.


அடுத்து, மலைபடுகடாம் – ‘புலம்பெயர்வைப்’ பயன்படுத்துகிறது. 

மலைபடுகடாம் ‘கூத்தராற்றுப்படை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். நன்னன் வேண்மான் என்ற மன்னனின் நாட்டுச்சிறப்பு, போர்த்திறன், மலைவளம் போன்றவை விவரிக்கப்படுகின்றன மலைபடுகடாமில்.

ஆற்றுப்படை நூல் இல்லையா? ஒரு பாணர் வறுமையில் வாடும் மற்றொரு பாணரை மன்னரிடம் சென்று, தாம் பெற்றதுபோல் செல்வத்தைப் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். தம் இடத்தைவிட்டுப் பிரிந்து, செல்வம் பெற்றுவரும் பொருட்டு, புலம்பெயர்ந்து மன்னரை நாடிச் செல்வார்கள் கலைஞர்களான கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும்.

பற்பல இசைக்கருவிகள் குறித்தும்,  எள், இஞ்சி, அவரை, தயிர், நாவல் பழம், வெண்கடுகு போன்ற உணவுப் பொருட்கள் குறித்தும் தகவல்கள் நூலில் காணமுடிகிறது.

மன்னன் நன்னனின் மலைநாட்டை நோக்கிச் செல்லும் வழித்தடம் எப்படி இருக்கும்? ஒரு சிறிய எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

பெரிய பெரிய அரண்கள் இருக்கும். பின்னி வைத்ததுபோல் கொடிகள் நிறைந்த சிறுகாட்டைக் கடக்க வேண்டும். யானைகள் போரிடுவதைப் போன்று நெருங்கிக் கிடக்கும் பாறைகள் நிறைந்த மழைக்காடுகள் இருக்குமாம். 

அப்படிப்பட்ட பாதையைக் கடந்து செல்லும்போது – 

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்

(மலைபடுகடாம் 392 – 393)

என்று அறிவுறுத்துகிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

முன்பு பாதையை நன்கு அறியாததால் வழிதவறிப் போன – புலம்பெயர்ந்த புதியவர்களான நீங்கள், (புலம்பெயர்புதுவிர்)

மறுபடி அதே சரியான இடத்திற்கு வந்துவிட்டால், அப்படியே சென்றுவிடாதீர்கள்.

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்-

குழப்பத்தைக் கொடுத்த அந்தச் சந்தைத் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு உதவியாக, ஊகம்புல்லைக் கட்டி வையுங்கள், என்கிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

அடுத்து, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையைப் பார்ப்போம். பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இதே ஆசிரியர், பத்துப்பாட்டு நூல்களில் மற்றொன்றான பெரும்பாணாற்றுப்படையையும் பாடியுள்ளார். 

காவிரியின் சிறப்பு, சோழநாட்டின் பெருவளம், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, இரவுநேர நிகழ்ச்சிகள், ஏற்றுமதி, இறக்குமதி, விழா நீங்காக் கடைவீதி, ஊரில் வாழும் உழவர்கள், வணிகர்கள், பல நாட்டினர் ஒன்றுகூடி வாழும் பாங்கு, என்று பல்வேறு வரலாற்றுச் செய்திகளைக் கண்முன் காட்டும் நூல் பட்டினப்பாலை. 

வணிகர் சிறப்பைச் சொல்லுகையில் – 

நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்,
கொள்வதூஉம் மிகை கொடாது,  கொடுப்பதூஉங் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை

(பட்டினப்பாலை 207-212)

நடுநிலைகொண்ட நல்ல நெஞ்சினர், பழிச்சொல்லுக்கு அஞ்சி உண்மை பேசினர், தம் பொருட்களையும் பிறர் பொருட்களையும் ஒன்றாகக் கருதினர், வாங்கியவற்றைக் கூடுதலாகக் கொள்ளாமல் கொடுத்தவற்றைக் குறைவாகக் கொடுக்காமல், பலப்பலப் பண்டங்களை விலைப்பேசி விற்கும், வளம் சேர்க்கும் தொன்மையான வணிகர் இருப்பிடம், என்று மிக அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.

காவிரிப்பட்டினத்தின் வணிகர் பகுதி எப்படி இருந்ததாம்?

பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர் முதுவாய் ஒக்கல்,
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள்கலந்துஇனிதுஉறையும்முட்டாச் சிறப்பின் பட்டினம் 

(பட்டினப்பாலை 213-218)

வெவ்வேறு  நாடுகளில் பலப்பலக் குழுக்களாக வாழ்ந்து பழகிய அறிவார்ந்த சுற்றத்தார் ஒன்றுகூடி, திருவிழாக்கோலம் பூண்ட தொன்மையான ஊர்போல் காட்சி அளித்ததாம் காவிரிப்பூம்பட்டினம் .

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

பழியில்லா நாடுகளிலிருந்து, பலப்பல மொழிகள் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து வணிகத்தின் பொருட்டு, காவிரிப்பூம்பட்டினத்தில் இனிமையாகக் கலந்து வாழ்ந்தனராம். அத்தகைய குறையில்லாச் சிறப்புடையது புகார் நகரம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பிழைப்புத் தேடி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர், அதுவும் இணக்கமாக வாழ்ந்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, தமிழகத்தின் வரலாற்றுச் செய்தி இது.

‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லும் உண்டு; பிறநாட்டவருடன் கூடிப் பன்னாட்டுச் சமூகமாக  அன்றே வாழ்ந்த சான்றும் உண்டு.

சங்ககாலத்தை அடுத்துவரும் சிலப்பதிகாரத்தில், பட்டினப்பாலையை ஒட்டிய வரிகளைக் காணமுடிகிறது.

புகார் காண்டத்தில் இந்திரவிழவு ஊரெடுத்த காதையில், புகார் நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பிரிவுகளாக இருந்ததை விளக்குகிறார் ஆசிரியர் இளங்கோவடிகள்.

மருவூர்ப்பாக்கத்துக் காட்சிகளைப் பாருங்கள் – 

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்                     

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 7-10)

திறந்தநிலை மேல்மாடங்களும், வியத்தகு பண்டகசாலைகள் அல்லது கிடங்குகளும், மானின் கண்போன்ற அகண்ட சாளரங்கள் கொண்ட மாளிகைகளும் இருந்தன. காண்போர் கண்களை அகலவிடாமல் கட்டிப்போடும் அழகிய யவனர் இருப்பிடங்களும் புகார் நகரில் இருந்தன.

அதோடு, 

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்

கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 11-12)

கடல் வழியாகச் செல்லும் கலங்களில் பலப்பல நாடுகளிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவோரும் கொண்டு செல்வோருமாக  – புலம்பெயர்ந்துப் பற்பல நாட்டவர் செல்வம் கொழிக்கக் காவிரிப்பூம்பட்டினத்தில் கலந்து மகிழ்ந்து வாழ்ந்த கடலோரப் பகுதிகளை இளங்கோவடிகள் கண்முன் நிறுத்துகிறார். ‘புலம்பெயர் மாக்கள்’ என்று நாம் தேடும் சொல்லையே பயன்படுத்துகிறார்.

புகார் நகரம் குறித்த- 

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

என்னும் பட்டினப்பாலை வரிகளும்

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

என்னும் சிலப்பதிகார வரிகளும் எவ்வளவு ஒத்திருக்கின்றன பாருங்கள். 

இப்படி, பல நாட்டவருடன் பரந்த மனத்துடன் கூடி வாழ்ந்த பன்மைச் சமூகமாகத்தான் பண்டைத் தமிழகத்தை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். 

பட்டினப்பாலை தவிர்த்த சங்க இலக்கியங்களில் – 

  • நற்றிணையில் மருத நிலத்து உமணர் நெய்தல் நிலத்திற்குப் புலம் பெயர்ந்தனர்
  • அகநானூறில் ஒரு பாடலில் போரால் புலம் பெயர்ந்தனர்; மற்றொரு பாடலில் பொருளீட்டப் புலம் பெயர்ந்தனர்
  • நெடுநல்வாடையில் வெள்ளப் பெருக்கால் புலம் பெயர்ந்தனர்
  • மலைபடுகடாமில் பொருள் வேண்டி மன்னரிடம் செல்வோர் புலம் பெயர்ந்தனர்

என்று பார்த்தோம். 

பட்டினப்பாலையிலும் சங்ககாலத்துக்குப் பின்வந்த சிலம்பிலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிபம் புலம் பெயர்தலுக்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. குறிப்பாக, பன்னாட்டவர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்த மேம்பட்ட சமூகச்சூழலைப் பெருமிதத்துடன் அறிந்துகொள்கிறோம்.

ஆக, சங்ககால நூல்களிலும் காப்பியக்காலச் சிலப்பதிகாரத்திலும் இன்றும் வழக்கிலுள்ள ‘புலம்பெயர்தல்’ எனும் சொல்லே இடம் பெயர்தலுக்குப் பயன்பட்டுள்ளது.

எனவே, தமிழ் இன்னும் வாழும் மொழியாக இருப்பது அதன் தொன்மையால் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாலும்தான். அந்தத் தொடர்ச்சிக்குத் தேவை நாம் தமிழ்மொழியை வேற்றுமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்துவதுதான்.

நன்றி.


Podcast available on:   Apple   Google    Spotify

செம்புலப் பெயல்நீர் – இன்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்


யாயும் ஞாயும் யாராகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர்போல 

அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே 

(செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை 40)

எட்டுத் தொகை இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் 40ஆவது பாடல் இது. 

சென்ற பகிர்வில் கண்ட, அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள்’ இன்றுவரை நம்மிடையே உலவி வருவது போலவே, கவிஞர்களை மகிழ்வுபடுத்தும் மற்றொரு சொற்றொடர் உண்டு. 

அதுதான், ‘செம்புலப்பெயல்நீர்’ – இதன் பொருள் – செம்மண் நிலத்தில் விழுந்த நீர்த்துளி . 

என் தாயும் உன் தாயும் யார் யாரோ, தந்தைமார் இருவரும் உறவினர்  அல்லர்; நானும் நீயும் முன்பின் அறியாதவர்கள். அப்படி இருக்க, செம்புலத்தில் விழுந்த நீரைப்போல, அன்புடை நெஞ்சம் கலந்தது எப்படிப்பட்ட விந்தை பார்த்தாயா? என்று தலைவன் வியந்து தலைவிக்கு உரைக்கிறான்.  

காதலில் இரு மனங்கள் கலப்பதை – அழகான உவமையோடு விளக்குகிறது இந்தப் பாடல்.

எட்டாத தொலைவில் இருக்கும் வானும் செம்மண் நிலமும்போல -தலைவனும் தலைவியும் இருக்கின்றனர். ஆனாலும், மனமொருமித்த இளையவர் இருவரும், கொண்ட காதலால் இணைவதை – செம்மண் நிலத்திலே விழுந்த மழைத்துளிக்கு உவமையாக்குகிறார் பாடல் ஆசிரியர்.

செம்மண் நிலத்தில் மழைநீர் விழுந்தபின், மண்ணென்றும் மழை நீரென்றும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாது இரண்டறக் கலந்துவிடும். அதுபோல, அன்பால் இணைந்த இரு மனங்கள் கலந்துவிட்டனவாம்.

என்னவொரு அழகான உவமை! இது, காலம் கடந்து பயணிக்கும் உவமை!

குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால், காலத்தால் அழியாத காதல் உணர்வுக்கு, காலத்தைக் கடந்து நிற்கும் உவமையைத் தந்த அந்தப் புலவருக்கு, அவர் வழங்கிச் சென்ற சொற்றொடரையே தமிழுலகம் பெயராகத் தந்தது. ‘யாயும் ஞாயும்’ என்ற பாடலை இயற்றியவர் செம்புலப் பெயல்நீரார்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல் அடி, இன்றளவும் நம்மிடையே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

நாள்தோறும் கேட்கும் திரை இசைப்பாடல்களில், செம்புலப் பெயல்நீராரை நினைவூட்டும் பாடல்கள் என்னென்ன? 

ஒரு சில பாடல்களைக் கேட்டு வியந்ததுதான் இந்தப் பகிர்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. இவை தவிர வேறு பாடல்கள் உண்டா என்று இணையத்தில் தேடியபோது, ‘கற்க நிற்க’ என்ற வலைதளத்தில், ‘செம்புலப் பெயல்நீரை’ ஒட்டிய பாடல்களின் பட்டியல் கிடைத்தது.  

கால வரிசைப்படியே வருவோம். 

1979இல் வெளிவந்த தர்மயுத்தம் திரைப்படத்தில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய ‘ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு- என் தெய்வம் தந்த என் தங்கை’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள், தங்கைக்காக அண்ணன் பாடும் அன்புப் பாடல் அது. 

அதில்,

செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது

என்ற அடியில், அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்ல- குறுந்தொகை வரிகள் சொன்ன, செம்மண்ணில் கலந்த நீர்த்துளியைப் பயன்படுத்தி இருக்கிறார் கவிஞர். 

அடுத்து, 1983இல் வெளிவந்த வெள்ளை ரோஜா என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது. 

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்

புத்துணர்வோடு கால்களைத் தாளம் போட வைக்கும் இசை; பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம். 

அவர் செம்புலப் பெயல்நீரை எப்படி நமக்களிக்கிறார்?

செந்நில மேடில்
தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம்
நீயென் வாழ்க்கையின் சொந்தம்

என்று தலைவனும் தலைவியும் பாடிக் கொள்கிறார்கள். 

அடுத்து, 1997இல் வெளிவந்த இருவர் என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது.  

கவிஞர் வைரமுத்து, ‘நறுமுகையே’ என்று தொடங்கும் பாடலில், ஏற்கனவே ‘அற்றைத் திங்கள்’ என்ற புறநானூற்று அடிகளை பெரிய மாற்றங்களின்றி தந்த கவிஞர், அதே பாடலின் இன்னொரு பகுதியில், ‘யாயும் ஞாயும்’ என்ற குறுந்தொகை அடிகளையும் கிட்டத்தட்ட அப்படியே கொடுத்துவிடுகிறார்.  

யாயும் ஞாயும் யாராகியரோ என்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன 
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன

என்று செல்கிறது பாடல். இங்கு தலைவி தலைவனைப் பார்த்துப் பாடுவதாக அமைத்திருக்கிறார் கவிஞர். 

தமிழ் இலக்கியம் வாசிக்கும் கவிஞர்கள், அதன் ஈர்ப்பிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம் போலிருக்கிறது. 

2006இல் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் வரும்,   கவிஞர் வாலி எழுதிய – 

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

என்ற பாடலில், தலைவன் தலைவியைப் பார்த்து மெய்மறந்து வினவுகிறார் இப்படி-

நீரும் செம்புலச்சேறும்
கலந்தது போலே கலந்தவளா ?

கவிஞர் கபிலன் எழுதிய ‘பட்டாம்பூச்சி’ என்று தொடங்கும் பாடலில்- 

அதே 2006இல் வெளிவந்த சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது.  

யாயும் நீயும் யாரோ 
எந்தை நுந்தை யாரோ
செம்புல நீராய் ஒன்றாய்க் கலந்தோமே

என்று ‘செம்புலப் பெயல்நீரை’ இணைக்கிறார். 

மிகச் சமீபத்திய திரைப்படமான, 2019இல் வெளிவந்த ‘ சகா’ என்ற படத்தில், கவிஞர் ஷபீர்,

யாயும் ஞாயும் என்ற குறுந்தொகைப் பாடலை முழுமையாகப் பயன்படுத்தி ஒரு பாடலைத் தொடங்குகிறார். 

நாம் இன்று பார்த்த திரைப்பாடல்களில், 1979 தொடங்கி 2019 வரை, ஆறு திரையிசைப் பாடல்கள், குறுந்தொகைப் பாடலை இயற்றிய செம்புலப் பெயல்நீராருடைய உவமையை மறுபடியும் மறுபடியும் சொல்கின்றன. 

தமிழ் இலக்கியங்களை வாசிப்பவர்கள், அப்பாடல்களின் சொல்லாடலையும் பொருட்சுவையையும் தம் படைப்புக்களில் இணைத்துக் கொள்ளும் துடிப்பைப் பாருங்கள், பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பாருங்கள்.

‘செம்புலப் பெயல்நீர்போல்’ அன்புடை நெஞ்சம் கலந்துவிடும் இயல்பை, தனி அழகை, பாடல் எழுதப்பட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் புரிந்து கொள்ள முடிகிறது; பாடலின் பொருட்சுவையை உணர்ந்து மனம் நெகிழ்ந்து போகிறது. 

இந்தப் பாடலின் சொல் பயன்பாடு, இன்று 21ஆம் நூற்றாண்டில் தமிழ் பேசும் நமக்குப் புரியாது என்று நாம் விலகிப் போகும் பழந்தமிழா? நமக்குத் தொடர்பில்லாதது என்றும் அக்காலச் சமூகத்தின் காதல்நிலை சொன்ன பாடல் என்றும் ஒதுங்கி நிற்கும் பழம்பொருளா? 

அன்றைய அன்புடை நெஞ்சம் நினைத்ததையே இன்றும் உணர்கிறோம்; எண்ணி மகிழ்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும், அதே அன்பு, அதே நெஞ்சினுள்தான் குடியிருக்கிறது; அன்பும், நெஞ்சமும், செம்மண்ணும் நீரும் தத்தம் பொருளையே தமிழில் இன்றும் சுட்டுகின்றன. 

தமிழரின் அடையாளமான தமிழ்மொழி, அத்தொன்மை இனத்தின் பண்பாட்டைத் தொடர்ந்து உரைக்கும் ஊடகமாக இருந்து வருகிறது. 

இன்றைய அகழ்வாய்வுகள் காட்டும் 3000 ஆண்டுகால நாகரிகத்தை 21ஆம் நூற்றாண்டுத் தமிழர் நாகரிகத்தோடு இணைத்துக் கட்டும் பாலமாக நிற்பது ‘தமிழ்’ என்ற நம் தாய்மொழிதான்.   

நம் வாழ்வின் ஒவ்வொரு செயலோடும் உடனிருந்து பேணக்கூடிய பழந்தமிழ் இலக்கியங்களை, கருத்துப் பெட்டகங்களை மகிழ்ந்து படியுங்கள்: பிறருடன் பகிருங்கள். 

தமிழரின் பயணம் ‘தமிழ்’ என்ற அடையாளத்தோடு தொடரட்டும். 

நன்றி. வணக்கம்.

Podcast available on :

Apple

Spotify

Google

கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’

இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்!

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்

வென்றெரி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

(புறநானூறு 112)

தமிழ் மொழியும், பண்பாடும், வரலாறும் குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மண்ணில் உலவி வருவது பற்றிச் சென்ற பகிர்வில் குறிப்பிட்டேன் இல்லையா?

அந்தத் தொடர்ச்சியைச் சொல்லும் ஓர் அழகான எடுத்துக்காட்டை இன்று பார்ப்போம்.

என் வலையொலிப் பக்கத்திற்குப் பெயர் கொடுத்த பாடல், புறநானூறில் 112 ஆவது பாடலான, பாரி மகளிர் அங்கவை சங்கவை எழுதிய ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ பாடலையே எடுத்துக் கொள்வோம்.

இது வருத்தமான சூழலைக் காட்டும் கையறுநிலைப் பாடல்.

‘சென்ற மாதம் நிலவு பொழிந்த இரவில், எங்கள் தந்தை பாரி மன்னர் எம்முடன் இருந்தார், எங்கள் குன்றாகிய பரம்புமலையும் எம்முடையதாக இருந்தது;

இந்த மாதத்து நிலவைக் காணும்போது, வெற்றி முரசைக் கொண்ட வேந்தர்கள், எங்கள் குன்றை வென்றுவிட்டனர். நாங்கள் தந்தையையும் இழந்து நிற்கிறோம்’

என்று, போரினால் ஏற்படும் மாபெரும் வடுவை, பேரிழப்பைப் பாரிமகளிர் நமக்கு உரைக்கிறார்கள்.

போர் ஏற்படுத்தும் பேரழிவை எழுதியிருப்பவர்கள் பலர். ஆனால், தந்தையையும் தம் அரசையும் இழந்த மகள்களின் மனநிலையை நேரடியாக நம்முடன் பகிர்ந்திருக்கிறார்கள் அங்கவையும் சங்கவையும்.

எந்தவொரு பாடலும் படிப்பவர் மனநிலைக்கேற்ப அவரவர்க்கு ஒவ்வொருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும். அது கவிதையின் வலிமைகளுள் ஒன்று.

பாடல் மட்டுமல்ல, பாடப்பட்ட பொருளும் வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலவும்கூட சூழலுக்கேற்ப வலியைத் தருகிறது; தாக்குகிறது; வேறு சிலருக்கு, மனக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது; இன்பத்தைக் காட்டுகிறது.

ஒருவருக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கும் நிலவு, மற்றவர்க்கு மட்டற்ற மகிழ்ச்சியைப் பொழிகிறது.

அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள்’ ஏற்படுத்திய வெவ்வேறு பாதிப்புக்கள்தான்  என்ன?

சங்க இலக்கியக் காலத்தில் இருந்து 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் திரை உலகிற்கு வருவோம்.

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ என்ற கையறு நிலைப் பாடல் / வாழ்க்கைத் துயரைச் சொல்லும் பாடலைக் கவியரசர் கண்ணதாசன், இரண்டு சூழல்களில் கையாண்டு இருக்கிறார்.

1963இல் வெளிவந்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்திற்காக எழுதிய –

‘அன்று வந்ததும் அதே நிலா

இன்று வந்ததும் இதே நிலா’

பாடலில், துள்ளலிசையோடு மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘அற்றைத் திங்களைப்’ பயன்படுத்தி இருக்கிறார்.

கம்பனின் காதலனாகவே தம்மைக் காட்டிக் கொள்ளும் கண்ணதாசன், இப்பாடலிலும் ‘கம்பன் பாடிய வெள்ளை நிலா’ என்று கம்பனை உடன் வைத்துக் கொள்கிறார்.

இருந்தாலும், ‘அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் இதே நிலா’ என்ற முதல் அடி , பாரி மகளிர் எழுதிய சங்கப் பாடல் அடிகளின் பாதிப்பில்தான் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

மற்றுமொரு பாடலில், பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி, காதல் நினைவிற்கும் பிரிவிற்கும் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ பாடலை ஒட்டிய அடிகளைப் படைத்திருக்கிறார்.

1966 இல் ‘நாடோடி’ படத்தில்-

‘அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை

நீ அறிவாயே வெண்ணிலவே’

என்று தலைவியை நிலவோடு உரையாட வைக்கிறார்.

காலங்கள் உருண்டோடினாலும், சமூகக் காரணிகளால் பண்பாடு -மாற்றம் கண்டாலும், ஒரு சில தொடர்புகள், நம்மை விடுவதாக இல்லைபோலும்.

1997 இல் ‘இருவர்’ திரைப்படத்தில், கவிஞர் வைரமுத்து, பாரி மகளிரின் ‘அற்றைத் திங்கள்’ அடிகளை அப்படியே நமக்களிக்கிறார்.

காதல் களிப்பை வெளிப்படுத்துகிறது அப்பாடல் –

‘நறுமுகையே’ எனத் தொடங்கும் பாடலில்-

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றித் தரள நீர்வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

என்று தலைவன் கேட்க..

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா

என்று தலைவி வினவுகிறாள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 இல் வெளிவந்த சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில், கவிஞர் யுகபாரதி –

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

என்று அற்றைத் திங்களை இணைக்கிறார்.

திரை இசைப் பாடல்களில் சங்க இலக்கிய அடிகள் என்பதைப் பற்றித்தான் இன்றைய பகிர்வா? என்று எண்ண வேண்டாம்.

இல்லவே இல்லை.

உண்மையில், ஈராயிரம் ஆண்டுகாலப் பாடல் அடிகள் இன்றளவும் நம்மிடையே உலவக் காரணம் என்ன? தொடர்ச்சியாக எழுதுவோர் வழக்கின் மூலம் சமூக வழக்கில் இடம் பெறுவதுடன், படிக்கும்போதும் கேட்கும்போதும் இந்த அடிகளின் பொருள் நமக்குப் புரியவும் செய்கிறது, என்றால் அதன் காரணம்தான் என்ன?

என்ன என்ன என்ற வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை – நம்மில் ஆர்வமுள்ள பலர் நல்ல தமிழ்ச் சொற்களை, சொற்றொடர்களை விடாது பற்றி இருப்பதால்தான்.

கவியரசர் கண்ணதாசனும், கவிஞர்கள் வைரமுத்து மற்றும் யுகபாரதியும் – தாம் படித்த இலக்கியத்தின் அழகுடைய, பொருள் பொதிந்த சொற்றொடரில் மதிமயங்கி, ஈர்க்கப்பட்டு, தாம் புனைந்த பாடல்களில் அதை அப்படியே அல்லது அதன் பொருளை நயம்படப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

மணற்கேணி – அதாவது ஊற்று நீர் தோண்டும் அளவிற்கு ஏற்றாற்போல ஊறும்; அதேபோல, கற்றலுக்கு ஏற்றவாறு அறிவு வளரும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆக, தோண்டத் தோண்ட நீர் பெருகும், படிக்கப் படிக்க அறிவு வளரும்.

நம் மொழியின் சொற்றொடர்கள், வேற்றுமொழி பாதிப்பையும் ஆதிக்கத்தையும் மீறி, வழக்கில் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, சங்கிலித் தொடராக நல்ல தமிழ்ச் சொற்கள் நம்மிடையே வழங்கி வருவது தமிழின் சிறப்பு என்று சொல்லிவிட்டுப் போகலாம்; ஆனால், இந்தச் செம்மொழியைப் படித்து, கேட்டு, உணர்ந்து மகிழும் வண்ணம், நமக்குப் பரிமாறும் படைப்பாளர்கள் முதன்மைப் பங்கு வகிக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள்.. அங்கவை சங்கவையின் புறநானூற்று ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ நமக்குப் புரிகிறதுதானே?

இலக்கிய மாணவர்களாக இருந்துதான் நல்ல தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும் என்பதில்லையே… தமிழ் என்ற மொழி, இத்தனை ஆண்டுகாலத் தொடர்ச்சியாக நல்ல சொற்களை, தொன்மைச் சொற்களை, தெளிவாகப் பொருளை உணர்த்தும் எளிய சொற்களைத் தாங்கி நிற்கிறது என்றால், அதற்குக் காரணம் ஒவ்வொரு வீட்டிலும் தொடர்ந்து ஒலித்து வந்த/ ஒலித்து வரும் நல்ல தமிழ்தான்.

நூல்களில் எழுத ஒரு தமிழ், மேடையில் முழங்க ஒரு தமிழ், ஊடகங்களில் அறிவிக்க ஒரு தமிழ், வீட்டில் உரையாட ஒரு தமிழ் என்று பாகுபாடு ஏன்?

சூழலுக்கேற்ப ஏற்ற இறக்கங்கள் நம் தொண்டையில் இருந்து வரும் ஒலியில்தானே இருக்க வேண்டும், நாப்பழக்கத்தில் வரும் மொழியில்  இருக்க வேண்டியதில்லையே??

திரையிசையில் வழங்க வேண்டும் என்று எதிர்பாராமல், காத்துக் கிடக்காமல், நல்ல நூல்களை, பழந்தமிழ் நூல்களைப் படிக்கும் வழக்கத்தை நாமும் ஏற்படுத்திக் கொள்ளலாமே.

ஒரு மொழியின் தொடர்ச்சியான பயணம், வாசிப்பவர்கள் மூலமும், தாம் வாசித்த சொற்றொடர்களை மற்றவர்களுடன் பகிர்பவர்கள்மூலமும், அந்த நல்ல சொற்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவர்கள்மூலமும், தடையில்லாமல் செல்ல இயலும்தானே!

படைப்பாளிகள் மட்டுமல்ல, தமிழ்ப் பேசும் ஒவ்வொருவருக்கும், தாய்மொழியின் தொடர்ச் சங்கிலியைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு உண்டு.

அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்களை’ இன்று பார்த்தோம்.

‘அற்றைத் திங்கள்’ போலவே, இன்றுவரைத் தொடர்ந்துவரும் மற்றுமொரு சுவையான சங்கப் பாடலோடு அடுத்த பகிர்வில் சந்திப்போம்.

நன்றி. வணக்கம்.

Podcast available on : 

Apple 

Spotify

Google

‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்


வலையொலிப் பதிவு

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கும் குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
(பாரதிதாசனார், தமிழின் இனிமை)

என்ற பாரதிதாசனாரின் அடிகள் சொல்லும் இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள். ‘அற்றைத் திங்கள்’ வலையொலிப் பக்கத்தில் உங்களை வரவேற்கிறேன்.

என் வலையொலிப் பக்கத்தின் முதல் பதிவு… அறிமுகப் பகிர்வு இது.

‘அற்றைத் திங்கள்’ என்று பெயர் சூட்ட என்ன காரணம் என்று முதலில் சொல்லணும்
இல்லையா? இன்றைய பகிர்வு முழுவதும் அதைப் பற்றியதுதான்.

உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ் – மொழி மட்டுமல்ல, ஒரு பண்பாடு.

சமீபத்திய கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுப் பணிகளைப் பாருங்கள்-

. பொதுக் காலத்துக்குப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுத்தறிவு
பெற்றிருந்தது தமிழ்ச் சமூகம் என்பது தெரிகிறது;

. பொதுக் காலத்துக்குக் குறைந்தது 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே, கொற்கை ஒரு
துறைமுகமாகச் செயல்பட்டு வந்ததும், அக்காலத்திலேயே வெளிநாடுகளில் வணிகச்
செல்வாக்குப் பெற்றிருந்தது தமிழகம் என்பதும் தெரிய வருகிறது;

. சிவகளையில் கிடைத்த நெல்மணிகளின் காலம், பொதுக் காலத்துக்கு முன் 1155 ஆண்டுகள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம், தமிழரின் நாகரிகம் இன்றிலிருந்து குறைந்தது 3200 ஆண்டுகள்
முற்பட்டது என்று அறியும்போது உள்ளம் பூரித்துப் போகிறது.

சரி, தொன்மை, பழமை என்பதை வைத்து நாம் அறியும் செய்திதான் என்ன?
அதற்கு இவ்வளவு சிறப்பிடம் தரத்தான் வேண்டுமா?
இந்த உலகம் மிக வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த அதிவேகப்
பயணத்தில், இனம், மொழி சார்ந்த பூரிப்பில் மெதுவாகப் பயணிப்பது… வேகத்தைக் குறைத்துக் கொண்டு மெதுவாகப் பயணிப்பது தேவையா?
என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

தமிழ்மொழியின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பழமையையும், இன்றும் நம் வாழ்வுடன் இயைந்த தன்மையையும், நான் எப்படி
பார்க்கிறேன்?
ஒரு சில பார்வைகளை உங்கள்முன் வைக்கிறேன்.

அ. சங்கப் பாடல்கள் காட்டும் சமூக வாழ்வை இன்றைய நம் வாழ்க்கைமுறையோடும் தொடர்புப்படுத்திப் பார்க்கமுடிகிறது

ஆ. மிகப் பழங்காலந்தொட்டுச் செழித்திருந்த அயல்நாட்டு வணிகம் குறித்த தகவல்களைப் பாருங்கள். அவை நம்மை வியக்க வைக்கின்றன.

அகழ்வாய்வுகளும் சங்க இலக்கியச் சான்றுகளும் சொல்லும் ரோம வணிகம்-
பல்லவர் காலத்தில் வளர்ந்து, இடைக்காலச் சோழர் காலத்தில் விண்ணளவு உயர்ந்த தென்கிழக்காசிய வணிகம்-
என்றிவை, தமிழர்கள் வலிமையான பெருங்கடல்களை வணிகக் குளங்களாகப் பயன்படுத்தியதைப் பறைசாற்றுகின்றன.

இ. இலக்கியங்கள் கூறும் கூத்தும் பாட்டும் வழிபாட்டு நெறிகளும் இதர கலைகளும், இன்றும் வளமாக நம்மிடையே உலவக் காண்கிறோம்.

ஈ. அன்று வழக்கில் இருந்த பண்டிகைகளை, விழாக்கோலத்துடன் இன்றும் தொடர்ந்து நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

உ. பிறமொழி கலப்பில்லாமல் தமிழ் பேசுவது அரிதாகிவிட்டது இன்று. ஆனாலும் கூட,
ஈராயிரம் ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட இலக்கியச் சொற்களும், தொடர்களும் பாக்களும் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. அவற்றை நம்மால் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வு, உயர்த்திய பண்பாடு, வளர்த்த மொழி, பரப்பிய வணிகம், உண்ட உணவு, உணர்ந்த காதல், உழைத்துச் செழிக்கச்
செய்த நானிலம், வென்ற போர்கள், இழந்த அரசுகள், இத்தனையும் இதற்கு மேலுமான வரலாறைக் கண்ட தமிழ் மண், 3200 ஆண்டுகாலத்
தொடர்ச்சியாக இன்னமும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது, இதே தமிழகத்தில்!
தமிழ் மொழியோ, இளமை மாறாது வாழும் மொழியாகத் திகழ்கிறது.

ஒரு சமூகத்தின் தொடர்ச்சி, பண்பாட்டின் தொடர்ச்சி, மண் சார்ந்த வரலாற்றின் தொடர்ச்சி – இத்தனை நீண்ட காலஎல்லையைக் கடந்தும்
உலகெங்கும் இடையூறற்றுப் பரவி நிற்பதை என்னவென்று சொல்வது!!

இத்தகு தொன்மை இனத்தின் எச்சங்களான நாம்- மொழி, பண்பாடு, வரலாறை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுச் செல்லும், பாதுகாத்துக் கொடுத்துச் செல்லும் பண்பாட்டுப் புரவலர்கள் என்று நான் நினைக்கிறேன்.

இத்தனைச் சிறப்புடைய தொன்மைத் தமிழின் ஒரு சொற்றொடர், இன்றும் நம்மிடையே உலவி வரும் சொற்றொடர்தான், என் வலையொலிப் பக்கத்தின் பெயராக அமையவேண்டும் என்று நினைத்தேன்.

சங்க இலக்கியத்தில், எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூறில், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை.
அங்கவையும் சங்கவையும் புனைந்த பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் ஒன்று.

பெண்பாற் கவிஞர்களும், இளமையிலேயே பாடல் இயற்றும் திறன் வாய்த்தவர்களும் இருந்த சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதை எடுத்துக்காட்டும் சிறப்புப் பாடல் இது.

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்ற இந்தப் பாடலின் தொடக்கச் சொற்றொடரையே, என் வலையொலிப் பதிவின் பெயராகச் சூட்டினேன்.

இப்போது நான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.. முன்பின் அறிமுகமில்லாத நம்மை இணைப்பது தமிழ்தான்.

வீட்டில் பேச்சுமொழியாக, நூல்களில் எழுத்துமொழியாக, ஓங்கி ஒலிக்கும் மேடைமொழியாக, நாள்தோறும் கேட்கும் ஊடகமொழியாக உலவிவரும் தமிழ், இளமை மாறாத இனிமை மொழியாக இன்ப மொழியாக இருக்கக் காரணம் நாம்தான்.

தமிழை வாசித்தும் நேசித்தும் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துப்போகிற நம் பற்றுடைய மனப்பாங்குதான் தமிழ் மொழியின், பண்பாட்டின், தமிழர் வரலாற்றின் தொடர்ச்சிக்கான காரணங்களுள் அடிப்படையானவை எனலாம்.

தமிழை வளர்க்கும் நற்பெயர் நமதென்றால், அதை வளர்க்காத குறையும் நம்முடையதுதானே?

தமிழ் என்ற மொழியும் பண்பாடும் நம் வேர்கள். அந்த வேர்களை, விழுதுகளான நம் பிள்ளைகள் இறுகப் பிடிக்கச் செய்வது நம் கைகளில்தான் உள்ளது.

இல்லையெனில், மரபு மாற்றுப் பயிர்போல, அடையாளம் இல்லாச் சமூகத்தை விட்டுச் செல்லும் பழியும் நம்மையே சேரும்.

நான் படித்து, கேட்டு, வியந்த – மொழி, இலக்கியம், வரலாறு, கலைகள், ஆளுமைகள் போன்ற ஆர்வமான பல தகவல்கள் குறித்த ஒலிப்பதிவாக இந்த வலையொலிப் பகிர்வை வழங்க விழைகிறேன்.

வாங்க சேர்ந்தே பயணிப்போம்!

உலகமெனும் அகண்ட இந்த நிலப்பரப்பில், 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஒலித்துவரும் தாய்மொழியை, அடுத்த தலைமுறைக்குப் பெருமிதத்துடன் கொண்டு செல்வோம்!!

Podcast available on:   Apple   Google   Spotify