அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்


அனைவருக்கும் அன்னையர்நாள் நல்வாழ்த்துக்கள்.

ஒரு நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அன்னையைக் கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தில் இல்லை. ஆனால், அன்னைக்கும் தந்தைக்கும் என்றுமே மதிப்பளித்து உயர்நிலையில் போற்றும் பண்பு நமக்கிருக்கிறது.

மலையிடைப் பிறவா மணியும், அலையிடைப் பிறவா அமிழ்தும், யாழிடைப் பிறவா இசையும் சிலப்பதிகார ஆசிரியருக்கு அரியவற்றுடன் ஒப்பிடப் பயன்பட்டன. மாறிவரும் காலச்சூழலில், மலைத்தேனும் கடல்முத்தும் அருகிப்போனதோடு, மரநிழலும், மழைத்தூரலும், பனைநுங்கும்கூட அரிய பொருட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றுவரை வெய்யிலும் காற்றும், பூவின் மணமும், கடல் உப்பும், கன்னல் சாறும், தெங்கின் இளநீரும் இயல்பாகக் கிடைப்பதுபோல் தாயின் அன்பையும் அணைப்பையும் எவ்வளவு வயதானாலும் நேரம் கேட்டுப்பெறும் தேவையில்லை நம் வாழ்க்கை முறையில். இன்னொரு பார்வையில், எளிதாகக் கிடைத்திடும் எதையும் கொண்டாடும் கட்டாயமில்லை நமக்கு. தாய்மையும் சிலவேளைகளில் அப்படிப்பட்டதுதான்.

இன்றைய நாளைப் பயன்படுத்தி, சங்கப் பாடல்கள் என்னும் சாளரம் வழியாகப் பழங்காலத் தமிழகத்து அன்னையர் எப்படி இருந்தார்கள் என்று பார்க்கத் தோன்றியது. இலக்கியம் நமக்குக் காட்டும் பலப்பல அன்னையருள் சிலரை இன்று காண்போம். இருவர், மகனைப் போருக்கு அனுப்பிவிட்டுத் தாமும் வீரத்தையே அணிகளாகப் பூண்டவர்கள். மற்றவர்கள், மணமுடித்துச் சென்ற மகள் குறித்துக் கவலைப்படும் பாசமிகு தாய்மார். இன்றும் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ளமுடிகிற உணர்வுப் புதையல் சங்க இலக்கியம்.

இந்தப் பாடல்களும் காட்சிகளும் நம்மில் பலரும் அறிந்தவைதான். ஆயினும், எத்தனைமுறை வாசித்தாலும் இவர்கள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள்.

முதலில் ஒரு புறநானூறுக் காட்சியைப் பார்ப்போம். பாடலைப் பாடியவர் காவற்பெண்டு என்ற பெண்பாற் புலவர். அந்தத் தாயின் மகனைத் தேடிச் சிலர் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டின் தூணைப் பிடித்திக் கொண்டு அவர்கள் ‘உன் மகன் எங்கே?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் கூறும் விடை என்ன?

சிற்றில் நற்றூண் பற்றி,  “நின் மகன்
யாண்டு உளனோ?” என வினவுதி; என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே, 
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

புறநானூறு 86;  பாடியவர்: காவற்பெண்டு

சிற்றில் நற்றூண் பற்றி,  “நின் மகன் யாண்டு உளனோ?” என வினவுதி– என் சிறிய இல்லத்தில் நல்ல தூணைப் பிடித்துக் கொண்டு “உன் மகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்கிறாய்.  

என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்– என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது.  

ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே – புலி இருந்துவிட்டுப் போன கல் குகையைப் போன்றது அவனைப் பெற்ற என் வயிறு –

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே– வீரம் மிகுந்த என் மகன் எங்கே இருப்பான்? போர்க்களத்தில் இருப்பான், அங்கு போய்த் தேடுங்கள்,

என்கிறார் அந்தத் தாய்.

மகன் எங்கே என்று ஏளனமாகக் கேட்ட கேள்வியால் கோபத்தில் சொன்ன விடையாகவும் இப்பாடலைக் கொள்ளலாம். அல்லது, போருக்கு மகனை அனுப்புவதைத் தம் நாட்டுப்பற்றுடைக் கடமையாகக் கருதிய புறநானூற்றுத் தாய், விடை பகர்ந்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள் என்றும் கொள்ளலாம். அவனைத் தேடி இங்கே ஏன் வந்தாய்? போ போ போர்க்களத்தில்தான் இருப்பான்…வேறெங்கே இருப்பான் என்று இயல்பாகச் சொல்லிவிட்டார்போலும்.

ஆனால், புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே- புலி இருந்துச் சென்ற குகையென மகனைச் சுமந்த கருவறையைக் குறிக்கும் அத்தாயின் வீரப் பண்பை என்னவென்று சொல்வது!

அடுத்து வருவதும் ஒரு புறநானூறு காட்சி.

கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய்வடித்த வேல் தலைப் பெயரித்,
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்,
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, 
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

புறநானூறு 295; பாடியவர்: ஔவையார்

போர்க்களத்தில் மகன் இறந்துவிட்டான். இறந்துபோன தன் மகனைக் காண ஓடோடி வருகிறார் அவனுடைய தாய்.

அவன் எப்படிப் போரிட்டிருந்தான்?

கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய்வடித்த வேல் தலைப் பெயரி
– கடல் துள்ளி எழுந்தாற்போல, தீ கக்கும் தன் வேலைப் பகைவர்களை நோக்கி எறிந்து கொண்டும்,

தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்– வேலும் அம்பும் நிறைந்த போர்க்களத்தில் தன் படையினரை வழிநடத்திக் கொண்டும்,

வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி– முன்னேறி வந்த எதிர்ப் படையினரைத் தடுத்தும் விலக்கியும் போரிட்டான்.

இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, 
சிறப்புடையாளன்
– அப்படிச் சிறப்புறப் போரிட்ட அந்த வீரன் வீழ்த்தப்பட்டான்.

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே- புறமுதுகு இடாமல் நெஞ்சு நிமிர்த்திப் போரிட்ட அந்த இளம் வீரனின் தாய்;

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி– அப்படிச் சிறப்பாகப் போரிட்டு இறந்த, போற்றுதலுக்குரிய தம் மகனின் உயர்ந்த மாண்பைக் கண்டு மகிழ்ந்தார்;

அந்தப் பெருமிதத்தில்- வாடு முலை ஊறிச் சுரந்தன – அவருடைய வாடிய முலைகளிலும் பால் சுரந்ததாம்.

சங்கத் தாய்மாரின் மனத்திண்மையைப் படம்பிடித்துக் காட்டும் பாடல்கள் இவை.

காதலும் வீரமும்தானே சங்கப் பாடல்களின் சாரம்.. முதலில் வீரத்தைப் பார்த்தோம், இனி காதலைப் பார்ப்போம்.

தன் காதலனுடன் சென்றுவிட்ட மகளைப் பிரிந்த தாயின் வாட்டம், திருமணம் முடித்துக் கணவன் வீட்டில் தனியாகப் பொறுப்புக்களை மகள் எப்படி நல்லவண்ணம் நிறைவேற்றுவாளோ என்ற பதைபதைப்பு, பொருள்வளத்துடன் தன் வீட்டில் வளர்ந்த மகள் வசதியின்றித் துன்பப்படுவாளோ என்ற தவிப்பு என்று சங்ககாலத் தாயின் துடிதுடிப்பு நம்மை நெகிழச் செய்யும் அன்புப் போராட்டம்.

நற்றிணையில் ஒரு பாடல்-

அந்தத் தாயின் மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள்.


ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்,
இனியே தாங்கு நின் அவலம் என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே, 
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

நற்றிணை 184, பாடியர் பெயர் கிடைக்கவில்லை

ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்

எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகள்; அவளும் போரில் மிகுந்த வலிமையையும் கூரிய வேலையுமுடைய ஒரு இளைஞனோடு பாலை நிலத்திற்குச் சென்றுவிட்டாள். 

இனியே தாங்கு நின் அவலம் என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே

இனி உன்னுடைய துன்பத்தைத் பொறுத்துக் கொள் என்கிறீர்கள்.  அது எப்படி முடியும் அறிவு உடையவர்களே?  சொல்லுங்கள், என்கிறார் பெண்ணைப் பெற்ற அந்தத் தாய்.

………………………………………………….உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

மை தீட்டிய கண்ணின் மணியில் வாழும் பாவை வெளியே நடந்து வந்ததுபோல, என்னுடைய அழகிய இளைய மகள் விளையாடிய நீலமணியைப் போன்ற நொச்சி மரத்தையும் திண்ணையையும் பார்க்கும்போதெல்லாம்,

உள்ளின் உள்ளம் வேமே– என் உள்ளம் வெந்து போகும் என்று வருந்துகிறார்.

உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள்
– தன் மகள் பிரிந்து சென்றது, தன் கண்ணின் பாவை தனியே வெளியேறி நடந்தது போலத் தெரிந்ததாம் அந்தத் தாய்க்கு.

எவ்வளவு அழகாக அந்தத் தாயின் உணர்வைச் சொற்களில் வெளிப்படுத்திவிட்டார் ஆசிரியர்!

மற்றோர் இல்லத்தில், காதலனுடன் சென்ற மகள் திரும்பி வந்து அந்தக் காதலனின் வீட்டிலே இருக்கிறாள். தலைவனின் வீட்டில் பெண்ணுக்குச் சிலம்பு கழிக்கும் சடங்கை நடத்திவிட்டார்கள். அதை அறிந்த தாயின் மனத்தவிப்பைக் காட்டுகிறார் இந்த ஐங்குறுநூறு பாடலில், ஆசிரியர் ஓதலாந்தையார்.

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ, மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?

ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார்

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ

உங்கள் வீட்டில் என் மகளுடைய சிலம்பு கழிக்கும் நோன்பை நடத்திவிட்டீர்கள்.  எங்கள் மனையில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று சொன்னால் என்ன? என்று கேட்கிறார்.

யாரிடம் சொன்னால் என்ன?

வென்வேல் மையற விளங்கிய கழலடி

வெற்றி வேலையும் வீரக் கழல்களையும் காலில் அணிந்த,

இது தலைவனைப் புகழ்வதுபோல இருக்கிறது இல்லையா? அடுத்துச் சொல்கிறார்-

பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?– பொய்யில் வல்லவனான அந்த இளைஞனின் தாய்க்கு நீங்கள் சொன்னால்தான் என்ன? எங்கள் மனையில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று…. என்று, தன் மகளின் திருமணத்தைத் தங்கள் வீட்டில் நடத்த விழையும் அந்தத் தாய் துடிக்கிறார்.

அடுத்து வரும் சுவையான குறுந்தொகைக் காட்சியில், கணவன் வீட்டுக்கு வாழச் சென்றுவிட்ட மகள் எப்படி மனையறம் பேணுகிறாள் என்று காணத் தவிக்கும் தாயைக் காட்டுகிறார் ஆசிரியர் கூடலூர் கிழார்.

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,
குவளை உண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,
இனிதெனக் கணவன் உண்டலின், 
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே. 

குறுந்தொகை 167; பாடியவர்: கூடலூர் கிழார்

தன் மகளும் மருமகனும் இல்லறம் நடத்தும் பாங்கினைக் கண்டுவரச் செவிலித்தாயை அனுப்புகிறார் தலைவியின் அன்னையான நற்றாய். மகள் இருக்கும் ஊருக்குச் சென்று, திரும்பி வரும் செவிலித்தாய், தான் கண்டவற்றை விளக்குகிறார்.

அவர் கண்ட காட்சிதான் என்ன? மகள் அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தாள்.

முளி தயிர் பிசைந்த என்று தொடங்குகிறது பாடல்- உரைய வைத்த தயிர் நன்றாக.. ஏன் அளவிற்கு அதிகமாகவே புளித்துவிட்டது- அந்த முற்றிய தயிரைப் பிசைந்த-

காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்– காந்தள் மலரின் இதழைப் போன்ற தன் மெல்லிய விரல்களை அணிந்திருக்கும் ஆடையில் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்;

குவளை உண்கண் குய் புகை கழும– குவளை மலரைப் போன்ற மையிட்டக் கண்களில் தாளிப்பின் புகையைப் பொறுத்துக் கொண்டு உணவு சமைத்தாள்;

அடுத்து, தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்– தானே கலந்துச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பைக் கணவனுக்குப் பரிமாறினாள்;

புளிப்பு கூடுதலாகிப் போன அந்தக் குழம்பை உண்ட அவள் கணவன் என்ன சொன்னான்? நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த செவிலித்தாய்க்கு என்ன நடக்கப் போகிறதோ என்று முதலில் அச்சமும் படபடப்பும்; அடுத்து, செவிலித்தாய் உரைக்கக் கேட்ட தலைவியின் தாயின் மனப் போராட்டத்தைச் சொல்லவா வேண்டும்?

புளித்தக் குழம்பை உண்ட தலைவன் –

இனிதெனக் கணவன் உண்டலின், 
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே
. 

நன்றாக, சுவையாக இருக்கிறது என்று அவன் உண்டதால், மலர்ந்தது தலைவியின் முகம்.

அந்தப் பெண்ணின் முக மலர்வினால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் இரண்டு அன்னையர்- ஒருவர் அவளை ஈன்ற நற்றாய்; மற்றவர் அவளை வளர்த்த செவிலித்தாய்.

மழைச்சாரலென மனம் மயக்கும் தாயன்பின் சாறைப் பிழிந்து சங்க இலக்கியக் காட்சிகள் நம்மைச் சங்க காலத்துக்குக் கொண்டுபோவது உண்மைதானே?

தாய்மை உணர்வையும், தாயின் ஈடில்லா அன்பையும் பொறுமையையும் புரிந்துகொள்ள மொழி தேவையில்லைதான். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் என் மண்ணில் தாய்மார் எப்படி இருந்தனர்? எப்படி அன்பு பாராட்டினர்? உறவு சார்ந்த சமூகச் சூழல் எப்படி இருந்தது? என்ற பலதரப்பட்ட மரபுசார் தகவல்களுக்கும் என் மொழி எனக்குத் தேவை.

தொன்மையான நம் சமூகத்தின் தொன்மையான மரபுகளைப் புரிந்துகொள்ள- நம் முன்னோர் விட்டுச்சென்ற இலக்கியக் கடிதங்களைப் படித்திட நம் மொழி நமக்குத் தேவை.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

பன்னாட்டு மகளிர் நாள் பகிர்வு- சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி பன்னாட்டு மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு மகளிர் நாள் உருவான வரலாறு பற்றி ஐ.நா.வின் இணையதளம் என்ன சொல்கிறது?

முதன்முதலில் 1848இல் அமெரிக்காவின் நியுயார்க் மாகாணத்தில் சமூக, பொருளாதார, அரசியல், மதம் சார்ந்த உரிமைகள் கோரிப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அடுத்து, 1908ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் நாள், துணி ஆலைகளில் பணியாற்றிய பெண்கள், தங்கள் பணிச்சூழலில் மாற்றம் வேண்டிப் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 1909 முதல் அமெரிக்காவிலும், ஐரோப்பாவில் டென்மார்க், நெதர்லாந்து முதலிய பல நாடுகளிலும் பெண்கள் தத்தம் உரிமைகளுக்காகப் போராடினர். 1917இல் ரஷியாவில் பெண்கள் போராடியதன் விளைவாக அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1975ஆம் ஆண்டு, பன்னாட்டு மகளிர் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. அந்த ஆண்டுமுதல், மார்ச் 8ஐப் பன்னாட்டு மகளிர் நாளாக ஐ.நா. அறிவித்தது.

பெண்களுக்கான சம உரிமை, முன்னேற்றம், கல்வி போன்ற பலப்பலத் தேவைகளை இன்றளவும் போராடியே பெறவேண்டிய சூழலில், தமிழின் சங்ககால இலக்கியங்கள் பெண்களை எப்படிக் காட்டுகின்றன? பெண்பாற் புலவர்கள் மிகுந்திருந்த நாடு; இளம்பெண்கள் அங்கவையும் சங்கவையும் பாடலியற்றிய பண்பாடு; வெண்ணிக்குயத்தி என்ற குயவர்வீட்டுப் பெண் கவிபாடிய பண்பாடு- அப்பெண்பாற்புலவரை வெண்ணிக்குயத்தியார் என்று மாண்புடன் விளித்த சமூகம் நம்முடையது.

இலக்கியங்களில் தலைவியென்றும் தோழியென்றும், தாயென்றும் செவிலித் தாயென்றும் உறவின்வழி அறியப்படும் பெண்கள்; உறவல்லாத பரத்தையர் என்று இவர்களை ஒரு வகையில் வைப்போம். இவர்கள் தவிர, பாடும் பாடினியும், ஆடும் விறலியும், இசைக் கலைஞர்களும் ஒரு வகை என்போம். இவர்கள் அல்லாத பல பெண்களையும், அவர்தம் இயல்புகளையும், பணிகளையும், தொழில்களையும் நம் இலக்கியங்கள் காட்டுகின்றன.

இன்று நாம் பார்க்கப்போவது, தனித்தன்மையோடு தம் உழைப்பின்வழித் தொழில் செய்துப் பொருளீட்டி, தனி ஆளுமைகளாக வாழ்ந்த தமிழ்நிலத்துப் பெண்களை. எட்டுத் தொகை- பத்துப்பாட்டு நூல்களில் மதுரைக் காஞ்சி, பெரும்பாணாற்றுப்படை இரண்டிலும் நான் கண்ட சுவையான காட்சிகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன். அந்தக் காட்சிகளில் வரும் நான்கு வகைப் பெண்களும் சொந்தக்காலில் நிற்கும் தொழில் முனைவோர் என்பதுதான் சிறப்பு.

முதலில், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியைப் பார்ப்போம்.

மதுரை நகரின் நாளங்காடியில் பண்டங்கள் விற்கும் பெண்களைப் பாருங்கள்-

இருங்கடல் வான்கோடு புரைய, வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்
நன்னர், நலத்தர், தொல் முதுபெண்டிர்
(407-409)

நன்னர், நலத்தர், தொல் முதுபெண்டிர் என்றால் நல்ல அழகுடைய வயதில் மூத்த பெண்கள்;

எப்படிக் காட்சி அளிக்கிறார்கள்?

வாருற்றுப் பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்– நரைத்த கூந்தலை வாரிப் பெரிய பின்னலிட்டு உள்ளனர்; இருங்கடல் வான்கோடு புரைய– அந்தப் பின்னிய நரைத்த கூந்தல், கரிய கடலில் வெள்ளை நிறத்துச் சங்கைப் போல இருக்கிறதாம்.

அந்தப் பெண்கள் மதுரைத் தெருக்களில் பலவிதப் பொருட்கள் விற்கின்றனர். 

நரைத்த முடியுடன் முதிய விற்பனைப் பெண்களைப் பார்த்தோம்; இளம்பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?

மை உக்கன்ன மொய் இருங்கூந்தல்
மயில் இயலோரும், மட மொழியோரும்
(417-418)

மை ஒழுகியதுபோன்ற இருண்ட கருங்கூந்தலையுடையவர்கள்; மயிலின் இயல்பும் மென்மையான பேசும்தன்மையும் உடையவர்களாகக் காட்சியளிக்கிறார்கள்.

புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்,
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக
(421-423)

மக்கள் விரும்பும் பலவிதப் பொருட்களை அழகிய பலவகைக் கிண்ணங்களில், குறிப்பாக மணம்நிறைந்த மலர்களோடு வீடுவீடாகச் சென்று விற்கிறார்கள்.

மதுரைக் காஞ்சியின் மற்றுமொரு காட்சியைப் பாருங்கள்-

பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய
————————————————
பானாள் கொண்ட கங்குல் இடையது
(629-631)

ஒலியெல்லாம் அடங்கிய குளிர்ந்த கடல்போல அமைதியான நடு இரவில், தம் வேலைகளை முடித்துக்கொண்டு பலர் உறங்கச் செல்கிறார்கள். அவர்களில்-

பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர
(621-623)

அந்த இரவுக்கடைவீதியில், சங்குகளின் ஆரவாரம் அடங்கியிருக்க-

காழ் சாய்த்து– கடையின் தட்டியைத் தூக்கி நிறுத்தும் கட்டையைச் சாய்த்துவிட்டு; நொடை நவில் நெடுங்கடை அடைத்து– பண்டங்களைக் கூவிவிற்கும் தம் நெடியகடையை அடைத்து; ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர– ஒளிரும் அணிகலன் புனைந்த பெண்கள் தூங்கச் செல்கிறார்கள். ஊரடங்கிய நடுஇரவில் தம் பணி முடித்து, கடையை அடைத்து உறங்கச் செல்கின்றனர் கடை நடத்தும் மதுரை நகரத்துப் பெண்கள்.

இந்த இரண்டு காட்சிகளிலும், சங்ககால மதுரையில் பெண்கள், நரைத்த முடியைப் பின்னிய தொல் முதுபெண்டிர் – வயது முதிர்ந்தாலும் உழைத்துப் பொருளீட்டுகிறார்கள்; அடுத்த காட்சியில், வேலையெல்லாம் முடிந்து நடு இரவில் கடையை அடைத்து உறங்கச் செல்லும் அளவிற்குக் கடுமையாக உழைக்கிறார்கள். தத்தம் தனித்தொழில்கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

அடுத்து, தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படைக்கு வருவோம்.

இளந்திரையனிடம் பரிசு பெற்றுத் திரும்பிய ஒரு பாணன், வறுமையினால் வருந்தும் மற்றொரு பாணனிடம் தனக்குக் கிட்டிய பரிசுகளைக் கூறி, இளந்திரையனிடம் சென்றால் பொருள் கிடைக்கும் என்று ஆற்றுப்படுத்துவது – அதாவது வழிப்படுத்துவது இப்பாடல். அப்போது, போகும் வழியில் உள்ள இடங்கள், கடக்கையில் காணக்கூடிய காட்சிகளை விவரிக்கிறான் முதல் பாணன்.

அவற்றில் இரண்டு காட்சிகளை இப்போது பார்ப்போம்.

ஆடு, எருமை, பசுக்களை வளர்க்கும் கோவலர் குடியிருப்பில் ஒரு காட்சி.

நாள் மோர் மாறும் நல்மா மேனி  
சிறு குழை துயல்வரும் காதில், பணைத்தோள்,
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
(160-162)

குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்– சிறிய வகிடெடுத்த கூந்தலுடைய ஆயர் குடும்பத்தின் பெண், நல்மா மேனி – நல்ல மாந்தளிர் அல்லது கருத்தநிற மேனி கொண்டவள்; சிறு குழை துயல்வரும் காதில், பணைத்தோள்– சிறிய அணிகலன் அசையும் காதும், மூங்கில் போன்ற தோளும் கொண்டவள், நாள் மோர் மாறும்– அன்றன்று கடைந்த புதிய மோரை விற்கச் செல்கிறாள்.

நள் இருள் விடியல் புள் எழப் போகி – இருள் நீங்கி விடியும்காலையில் பறவைகள் துயில் எழும்பொழுதே அவள் பணி தொடங்கிவிடுகிறது. 

புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீந்தயிர் கலக்கி, நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
(156-159)

புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி– அவள் தயிரை மத்தால் கடைகிறாள். அந்த ஒலி புலி உறுமுவதுபோல் கேட்கிறது; உறை அமை தீந்தயிர் கலக்கி– இறுகத் தோய்த்தத் தயிரைக் கடைந்து, நுரை தெரிந்து– வெண்ணெய் எடுத்து, குழிசி பூஞ்சுமட்டு இரீஇ– வெண்ணெய் நீக்கிய மோர்ப்பானையைத் தலையில், மெல்லிய சுமட்டின் மேல் வைத்துச் சென்று, அன்றைய புதிய மோரை விற்கிறாள்.

இங்குச் செய்தி இதுமட்டுமல்ல…

அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்
(163-165)

குறிஞ்சி நிலத்து ஆயர்மகள் மோருக்குப் பண்டமாற்றாக நெல்லைப் பெற்றுக் கொள்கிறாள். கிடைத்த நெல்லைக் கொண்டுச் சுற்றத்தார் யாவரையும் உண்ணச் செய்யும் அவள், நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்– நெய்யை விற்றுக் கிடைத்த விலையில் பசும்பொன் வாங்காமல், எருமைகளையும் நல்ல பசுக்களையும் கன்றுகளையும் வாங்குவாளாம்.

தொழில் ஒன்றைச் செய்து, அதில் வரும் வருமானத்தில் சுற்றத்தாரையும் பசியாற்றுபவள், கூடுதல் வருவாயில் தொழிலுக்கான மேல்முதலீடு செய்வதிலும் தேர்ந்தவளாக இருக்கிறாள். ஈட்டிய வருவாயில் பொன் வாங்குவது அக்காலத்தில் இயல்பாக இருந்தத் தகவலைத் தரும் புலவர், தொடர்ந்துச் செல்வம் பெருக்கும் அக்காலப் பெண்களின் தொழிலறிவை ஆயர்மகள் வழியாகக் நமக்குக் காட்டுகிறார்.

பெரும்பாணாற்றுப்படையின் மற்றுமொரு காட்சி, கடற்கரைப் பட்டினத்து மக்களின் உபசரிப்புத் தன்மையைச் சொல்கிறது.

கள் விற்கும் பெண்களைச் சங்க இலக்கியங்கள் அரியலாட்டியர், கள் அடு மகளிர் என்ற பெயர்களால் குறிக்கிறது.

கள் காய்ச்சும் பெண்கள் பற்றிய செய்தி எவ்வளவு அழகாக விளக்கப்படுகிறது பாருங்கள்…

நெல்மா வல்சி தீற்றி பன்னாள்
குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக் 
கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்
(343-345)

பட்டினப்பகுதியில், கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்– கொழுத்த ஆண்பன்றியின் இறைச்சியுடன் களிப்பு மிகுந்த கள்ளைப் பெறுவீர்கள்; சரி, அது எப்படிப்பட்ட ஆண்பன்றி? நெல்மா வல்சி தீற்றி பன்னாள் குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏறு– நெல் இடித்த மாவை உணவாகக் கொண்ட பன்றி; பல நாட்களாக குழியில் நிறுத்திப் பாதுகாத்த பன்றி;

அதுபோக-

ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
(341-342)

பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது– அடர்ந்த மயிரையுடைய பெண் பன்றிகளுடன் சேராத ஆண்பன்றி அது;

ஓஹோ சரி, அந்தப் பெண் பன்றிகள் எப்படி? ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டி உடைய பெண்பன்றி – ஈரமான சேற்றில் புரளும் பல கரிய குட்டிகளையுடைய பெண்பன்றிகள் அவை;

ஈரமான சேறு எப்படி வந்தது?

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் 
(339-340)

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய– கள்ளை காய்ச்சிய பெண்கள் வட்டில்/கலத்தைக் கழுவியதால்; வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்– வடிந்து சிந்திய அந்தக் குழம்பில் வந்த ஈரமான சேறு அது.

ஆக, கள் காய்ச்சும் மகளிர் தங்கள் வட்டிலைக் கழுவி ஊற்றிய நீர், அந்த நீர் உருவாக்கிய சேற்றில் புரளும் குட்டிகளையுடைய பெண் பன்றிகள், அவற்றுடன் சேராத கொழுத்த ஆண்பன்றிகள், அந்த ஆண்பன்றியின் இறைச்சியும், அந்த நெய்தல் நில மகளிர் காய்ச்சிய கள்ளும் அங்குச் சென்றால் கிடைக்கும் என்று ஒரு பாணன் மற்றொருவனை ஆற்றுப்படுத்துகிறான்.

பெண்கள் கள் காய்ச்சியதும், கள் விற்றதும் இயல்பான தொழிலாகவே அக்காலத்தில் இருந்தது இலக்கியங்கள்வழி நாம் அறிந்து கொள்கிறோம்.

சங்க காலத்து இலக்கியங்களுள் இரண்டு இலக்கியங்களில், நான்கு வெவ்வேறு காட்சிகள் காட்டிய பெண் தொழில்முனைவோரை மட்டும்தான் இன்று பார்த்தோம். இன்னும் எண்ணிலடங்காத் தகவல்கள் உண்டு.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கப் பாடல்களில், பெண்கள் பலப்பலத் தொழில்கள் புரிகிறார்கள். தமக்கான ஆளுமையுடன் பொருளீட்டும் குடும்பப் பொறுப்பையும் ஏற்று உழைக்கிறார்கள். வளர்ந்தோங்கிய பண்பாடு செழித்த தமிழ்ச் சமூகத்தின் வெளிப்பாடுகள் இவை; வேறோர் இனத்துக்குக் கிட்டாத ஆவணங்கள் இவை.

கள்அடு மகளிர் காய்ச்சிய கள்ளைவிடச் சுவையான நம் இலக்கியங்களைச் சொற்களால் பேணினால் மட்டும் போதாது, படித்து மகிழவும் வேண்டும்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மாமல்லரும் மகாபலியும்

மாறிய பெயர்களும் தடம் மாறிய பொருள்களும் பற்றிச் சென்ற பதிவில் பார்த்தோம். அப்படிப்பட்ட வரலாற்றுப் பிழைகளில் முதலில் மாமல்லருக்கும் மகாபலிக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.

புராணப் பாத்திரமான மகாபலிக்கும் தமிழக வரலாற்றில் பல முதன்மைகளுக்குச் சொந்தக்காரரான மாமல்லருக்கும் என்ன தொடர்பு? மல்லைக் கடலோரம் பல்லவர் சிற்பக்கலைச் சாதனைகள் அலையொலியோடு எதிரொலிக்க இறுமாந்து நிற்கும் அழகுப் பெட்டகம் – மாமல்லபுரமா மகாபலிபுரமா?

பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு

இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்விசும்பில்

கணங்களியங்கு மல்லைக் கடன்மல்லைத் தலசயனம்

வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே

………… இது திருமங்கையாழ்வார் பாசுரம்

திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமொழியில், கடல்மல்லைத் தலசயனத்துறையும் பெருமாளை நெஞ்சுருகப் பாடுகிறார். ‘புரம்’ என்று ஊர்ப் பெயர் முடிந்தால், அது வணிகர்கள் இருப்பிடத்தைக் குறிக்கும். கடல்மல்லையாம் மாமல்லபுரம், பல்லவர்களின் வணிகத் தளமாக விளங்கிய துறைமுகப்பட்டினம்.

பல்லவ அரசைத் தமிழகத்தில் நிலையாகக் கோலூன்றச் செய்த சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவர். இவருடைய காலம் பொதுக்காலம் 590 முதல் 630 வரையாகும். மலைகளை வெட்டி, குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்கியவர். அதுவரை வழக்கிலிருந்த செங்கல், மரம், உலோகம், சுதை இல்லாமல் தமிழ்நாட்டில் முதன்முதல் கோயிலை எடுப்பித்த பெருமையை , தன் மண்டகப்பட்டுக் கல்வெட்டில் உலகிற்குப் பேரறிவிப்பாகப் பறைசாற்றுகிறார் மகேந்திரர். சிவனுக்கும் திருமாலுக்கும் தனித்தனிக் குடைவரைக் கோயில்கள் கட்டியதோடு, மண்டகப்பட்டில் மும்மூர்த்திக் கோயிலும் அமைத்தவர். இயல் இசை நாடகக் கலையில் வல்லவராகவும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தவர். இது பெருங்கடலின் ஒரு துளிதான். மகேந்திரரின் சிறப்புக்களைச் சொல்ல ஒரு பதிவு போதாது.

மகேந்திரவர்ம பல்லவரின் மகன், ‘வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்’ என்று கல்வெட்டு கூறும் முதலாம் நரசிம்மவர்மர். கருநாடகத்தில் உள்ள அன்றைய வாதாபியான இன்றைய பாதாமி கல்வெட்டு, இவரை மகாமல்லன் என்று குறிப்பிடுகிறது.

மகேந்திரரால் தொடங்கப்பட்டு, மகன் முதலாம் நரசிம்மவர்மரால் மெருகூட்டி வளமாக்கப்பட்டன தமிழ்நாட்டின் தொடக்ககாலக் குடைவரைக் கோயில்களும், அழகுறச் செதுக்கப்பட்ட புதுமைச் சிற்பங்களும். மாமல்லபுரத்தை உலகம் போற்றும் பெருங்கற்கோயில் கலைக்களஞ்சியமாக உயர்த்திய பெருமை இவர்கள் வழிவந்த இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மனையே சேரும். இவருடைய காலம் பொதுக்காலம் 690 முதல் 725 வரை ஆகும். கடல்மாமல்லை என்ற மாமல்லபுரம், தமிழகக் கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை வரலாற்றில் பற்பலப் புதுமைகளின் முன்னோடி என்பதில் தமிழன் தனிப்பெருமை கொள்ளவேண்டும்.

‘அருச்சுனன் தபசு’ என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பப் பாறையில்தான் எத்தனை எத்தனைச் சிற்பங்கள்… இறை வடிவங்கள், வானவர், மக்கள், விலங்குகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். பொய்யாகத் தவம் செய்யும் பூனையும், பூனை கண்மூடியிருப்பதால் மகிழ்ந்தாடிக் களிக்கும் எலிகளும், தன் துணைக்குப் பேன் பார்க்கும் ஆண் குரங்கும், அத்தாய்க்குரங்கின் மார்பிலிருந்து பால் அருந்தும் குட்டிகளும் .. அப்பப்பா கல்லில் கலைநயமிக்க உளிவண்ணம்.

இங்கே, தொடர்பில்லாமல் பஞ்ச பாண்டவர்களையும் திரெளபதியையும் இணைக்கிறார்கள் கதைச்சொல்லிகள். பஞ்சபாண்டவர் ரதமென்று அழைக்கப்படும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோயில். அவற்றை ஒருகல் தளிகள் அல்லது செதுக்குத் தளிகள் என்று வரலாற்றறிஞர்கள் கூறுவார்கள். ‘தளி’ என்பது கோயிலைக் குறிக்கும் சொல்.

ஒவ்வொரு ரதத்திலும் அதாவது தளியிலும் அமைந்துள்ள சிற்பங்கள், பல்லவச் சிற்பிகளின் உளித்திறனைப் பறைசாற்றும். கற்பாறைகளைக் குடைந்து முதன்முதல் வடிவங்களை உருவாக்கும்போதே உச்சம்தொடும் வளமான சிற்பங்களை அமைத்திருப்பது சிற்பக்கலை வல்லவர்களின் பேராற்றல்.

ஆனால், பஞ்ச பாண்டவர்களுக்கும் இக்கோயில்களுக்கும் தொடர்பு ஏதும் இல்லை.

கூடுதலாக, பெண்வாயில் காப்பாளர்கள் வடிக்கப்பட்டிருப்பதாலேயே கொற்றவைக் கோயிலை திரெளபதி ரதமென்று ஆக்கிவிட்டார்கள்.

மாறிய பெயர்களில் ஒரு மண்டபம் தப்பித்துக்கொண்டது. திருமாலின் வராக அவதாரத்தைக் காட்டும் மண்டபத்திற்கு வராக மண்டபமென்றே பெயர் அமைந்துள்ளது வியப்புத்தான். இங்கே நாம் காணும் மற்றொரு சிற்பம்- ‘மூவுலகும் ஈரடியால்’ என்று சிலப்பதிகாரம் கூறும் வாமன அவதாரத்தைக் குறிக்கும் திரிவிக்கிரமச் சிற்பம். விண்ணை அளக்கத் தூக்கிய காலின் கீழே மகாபலி அமர்ந்திருக்கிறார். அப்பாடா…. மகாபலிபுரம் என்று பெயர்க்காரணம் சொல்ல ஒரு சிற்பமாவது கிடைத்தது.

பரந்து விரிந்த மாமல்லையில் கண்களுக்கு விருந்தாகும் கலைவடிவங்கள் வேறு என்னென்ன? சிவனும், திருமாலும், பிரமனும், மகிஷனை வீழ்த்திய மகிஷாசுரமர்தினியும், இவர்களின் மூல உருவான கொற்றவையும் எழிலுற வடிக்கப்பட்டுள்ளார்கள்.

…………..குடமாடு கூத்தன்தன்னைக்

கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்

காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே

என்று திருமங்கையாழ்வார் பாடிய கடல்மல்லைத் தலசயனப் பள்ளிகொண்ட பெருமாள் மிக அழகு.

குன்றைக் குடையாக ஏந்திய கண்ணன், பால் கறக்கும் ஆயன், பானையுடன் பெண்டிர், சோமாஸ்கந்தர், யாளி மண்டபம் என்று கண்களையும் எண்ணத்தையும் பூரிக்கச் செய்யும் பணிநேர்த்தியை என்னவென்று சொல்ல.. ஒவ்வொரு தொகுதியிலும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் சிற்பங்கள். உளியைக் கொண்டு அற்புதங்கள் படைத்திருக்கிறார்கள் பல்லவச் சிற்பிகள்.

சரி..கரையோரக் கோயில்களின் அழகில் மயங்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டோமே… இது மாமல்லபுரமா? மகாபலிபுரமா?

அதற்கு, தர்மராஜ ரதம் என்றழைக்கப்படும் கோயிலுக்கு வரவேண்டும். தர்மராஜ ரதத்திற்கு அதை உருவாக்கியவர் வைத்த பெயர்தான் என்ன?

மாமல்லைக் கோயில் தொகுதியில் வியக்கவைக்கும் சாதனைகள் புரிந்தவர் இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மன் என்பதையும் , தர்மராஜ ரதம் அவரால் உருவாக்கப்பட்டது என்பதையும் கட்டடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பச் சான்றுகளால் உறுதிசெய்துள்ளார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற வரலாற்றறிஞர் டாக்டர் இரா. கலைக்கோவன். 2004இல் வெளியிடப்பட்ட அவருடைய நூலான ‘அத்யந்தகாமம்’ இதை உலகிற்கு அறிவித்து 18 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

அன்னாரின் ஆய்வுகளால் நாம் அறிவது என்ன? குறிப்பாகக் கல்வெட்டுத் தகவல்களைப் பார்ப்போம்.

‘அத்யந்தகாமம்’ என்பது என்ன? தர்மராஜ ரதத்தில் கிடைத்த 39 வடமொழிக் கல்வெட்டுக்களில் இரண்டு, ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’ என்று அக்கோயிலை அடையாளப்படுத்துகின்றன. ஆக, தர்மராஜ ரதத்திற்கு அதை உருவாக்கிய பல்லவ அரசர் வைத்த பெயர் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’.

ஏனைய 37 கல்வெட்டுக்களும் அரச விருதுப் பெயர்களாய் அமைந்துள்ளன. ஶ்ரீ நரசிம்மன், புவனபாஜனன், ஶ்ரீமேகன், நயனமனோகரன், பராபரன், வாமன், ரணஜயம், அத்யந்தகாமன், மகாமல்லன் என்று விருதுப் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன. இதனால் இக்கோயில் அத்யந்தகாமன் என்றும் மகாமல்லன் என்றும் சிறப்புப் பெயர்களையுடைய பல்லவ அரசரால் உருவாக்கப்பட்டது தெரிகிறது.

எனில், மகாமல்லன் என்றும் விருதுப் பெயர்கொண்ட அத்யந்தகாமன் யார்? கடல் மாமல்லையில் தமிழகச் சிற்பக்கலைச் சாதனைகளைக் கல்லிலே உலகிற்கு 1300 ஆண்டுகளுக்குமுன் அறிவித்த மகாமல்லன் என்ற அந்தப் பல்லவர் யார்?

கடற்கரைக் கோயிலையும் காஞ்சி கயிலாயநாதர் கோயிலையும் கட்டிய இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மர்தான் மகாமல்லன் என்றும் அத்யந்தகாமன் என்றும் அழைக்கப்பட்டவர். தர்மராஜ ரதமென்னும் அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தை உருவாக்கியவர். ‘இராஜசிம்மர் காலத்துக் கோயில்களான அதிரண சண்டேசுவரம், மல்லைக் கடற்கரைக் கோயில் வளாகம், காஞ்சி கயிலாயநாதர் கோயில் என்றறியப்படும் இராஜசிம்மேசுவரம் ஆகியவற்றிலும் பனைமலைக் குகைக்கோயிலிலும், அவர் வெட்டுவித்த வாயலூர் மற்றும் திருப்போரூர்க் கல்வெட்டுக்களிலும் இத்தகு விருதுப் பெயர்கள் பலவாக இடம்பெற்றுள்ளன’, என்கிறார் டாக்டர் கலைக்கோவன்.

நம் ஆர்வத்துக்குரிய ‘மகாமல்லன்’ என்ற பெயர், இராஜசிம்மனின் வாயலூர் பொறிப்புகளிலும் காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்திலும் வெட்டப்பட்டுள்ளது. ‘அத்யந்தகாமன், ரணஜயம், மகாமல்லன் என்ற இம்மூன்று பெயர்களையும் தம்முடைய விருதுப் பெயர்களாகக் கொண்டவராக இராஜசிம்மனைத் தவிர வேறெந்தப் பல்லவ மன்னரையும் வரலாறு நமக்குக் காட்டவில்லை’ என்று ஆணித்தரமாகத் தன் கட்டுரையொன்றில் கூறுகிறார் ‘அத்யந்தகாமத்தின் ஆசிரியர். மாமல்லபுரத்தில் மாமல்லனைக் குறிக்கும் கல்வெட்டு, அத்யந்தகாமனின் கல்வெட்டு மட்டுமே.

ஆக, தர்மராஜ ரதமென்று இன்று பொருத்தமின்றி அழைக்கப்படும் அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தை உருவாக்கி, அதில் தம் விருதுப் பெயரான ‘மகாமல்லனையும்’ கல்வெட்டாகப் பொறித்துச் சென்றுள்ளார் இராஜசிம்மர்.

இவ்வளவு சிறப்புமிகு சிற்பங்கள் அமைந்த, பல்லவர் மரபால் மாமல்லை என்று பெயர்பெற்றிருந்த துறைமுகச் சிற்பப் பட்டினத்திற்கு, ஒரு சிற்பம் இடம்பெற்றிருப்பதாலேயே வலிந்து பொருள்கொண்டு மகாபலிபுரமென்று பெயர் வழங்குவது சரியா? பெயரைக் கேட்டதும் பின்னணியைத் தேடும் ஆர்வமுடையோருக்கு-

  • மாமல்லபுரம் மாமல்லனுடன் கூடிய பல்லவர் வரலாறைத் தேட வைக்கும்;
  • பொருத்தமில்லா மகாபலிபுரமோ தமிழக வரலாறை மறந்து புராணக் கதைகளில் பாயவைக்கும்.

எல்லாம் இறைவன் செயலாக இருக்கலாம். யாரும் காணாத அந்த இறைவனுக்கும் வடிவம் தந்து செதுக்கி 1300 ஆண்டுகளுக்குப் பின்பும்… இன்றும் நம் கண்முன் காட்டும் கலைக்குச் சொந்தக்காரர்களான சிற்பிகளை மறக்கலாமா? அவர்களை வளர்த்த மாமன்னர்களின் சிறப்பைப் புறந்தள்ளலாமா? புறக்கணிக்கலாமா?

அத்யந்தகாமத்தைப்போல, பற்பலக் கோயில்களில் கல்வெட்டுக்களாகவும் சிற்பங்களாகவும் நமக்குப் பல அரிய தகவல்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர். அது அவர்களுடைய வரலாறு மட்டுமல்ல; நம்முடைய வரலாறு என்பதை நாம் உணர்வது எப்போது?

யுனெஸ்கோ இணையதளம் முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வரை, மாமல்லபுரத்தை மகாபலிபுரம் என்று பலரும் பிறழ்ந்தே அழைக்கின்றனர். தமிழையும் தமிழக வரலாறையும் பேணவேண்டிய அரசுசார் அலுவலகங்கள் இந்தப் பிழையை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, வரலாறு அறிந்த, உணர்ந்த… நாம் அனைவரும் மாமல்லபுரம் என்றே இனி அழைப்போம்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மாறிய பெயர்; தடம் மாறிய பொருள்

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் துப்பாக்கி திரைப்படம் ஒளிபரப்பி இருந்தார்கள். அலைவரிசையைக் கவனிக்கவில்லை. உற்று நோக்கியபோது நடிகர் விஜய் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். அட.. என்னடா இது என்று ஆர்வம் கூடியது. பெயரைப் பார்த்தால் – ‘Thuppakki – Indian Soldier Never On Holiday’ என்று வந்தது. ஓ.. மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்று புரிந்துகொண்டேன். பின்னொருநாள், இந்தி அலைவரிசை வழங்கிக்கொண்டிருந்த படமொன்றைப் பார்க்க அமர்ந்தேன். ஏற்கனவே பார்த்த படம்போல் இருந்தது. மூளையைத் தீட்டித் தேடியதில் அதே துப்பாக்கி- இப்போது அக்‌ஷய்குமார் கையில். உதட்டசைவு மாறாமல் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். பெயரைப் பார்த்தால் – ‘Holiday – A Soldier is Never Off Duty’ என்று இருந்தது. இது தமிழ்த் துப்பாக்கியின் இந்தி தழுவல். துப்பாக்கி என்று தமிழில் முதலில் எடுத்து, வணிக வெற்றியடைந்ததும், அதையே ‘Indian Soldier Never On Holiday’ என்று இந்தியில் மொழிமாற்றம் மட்டும் செய்து வெளியிட்டு இருந்தார்கள். பின் அதே கதையைத் தழுவி, முதலிலிருந்து முழுமையாக மறுபடி இந்தியில் ‘A Soldier is Never Off Duty’ என்று பயங்கரமாக மாற்றி யோசித்திருந்தார்கள். ஒரே கல்லில் மூன்று மாங்காய்… இல்லை இல்லை.. ஒரே கதையில் குறைந்தது மூன்று படங்கள்.

தோசையும் தேங்காய்த் துவையலும் வழங்கிய உணவகம் அதையே தோசா நாரியல் சட்னி என்று பெயர்மாற்றி வழங்கியது. மேலும் அடங்காத அறிவுப் பசியில், தோசை மாவை பாசுமதி அரிசியில் முதலிலிருந்து ஆட்டி வட இந்திய ‘தோசா’வாகத் திரைவிரும்பிகளுக்குப் பரிமாறியது புரிந்தது. இதுபோல் தோசைகளும் இட்லிகளும் கணக்கில்லாமல் கிடைக்கும் காலம் இது. தலைச் சுற்றியது எனக்கு.

எதை எப்படிக் கொடுத்தாலும் சிந்திக்காது வாங்கியுண்ணும் சமூகமாக மாறிப்போன நமக்கு, மாறிய பெயர்களும் தடம் மாறிய பொருள்களும் பொருட்டாகவே தெரிவதில்லை.

இன்னொரு கவளம் வேண்டுமா? இதோ…

சென்னையில் ஹாமில்டன் பாலம் என்று ஒன்று இருந்தது. அதன் பெயர்க்காரணம் குறித்துச் சென்னை ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்கள் கூறுகிறார்கள். சென்னையின் ஆளுநராக இருந்த லார்ட் ஹாமில்டன் என்பவரின் பெயரில் இது கட்டப்பட்டதாக நம்பிவந்த நேரத்தில், ஹாமில்டன் என்ற ஆளுநர் சென்னையில் இருந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை என்கிறார், சென்னை ஆய்வாளரான திரு. முத்தையா. ஆனால், நம்முடைய பேசுபொருள் அதுவல்ல.

ஆங்கிலேயர் காலத்தில் ‘ஹாமில்டன் ப்ரிட்ஜ்’ என்றழைக்கப்பட்ட பாலம், தமிழில் ‘ஹாமில்டன் வாராவதி’ என்றானது. ஹாமில்டன் என்ற சொல் காலப்போக்கில் மருவி ‘அம்பட்டன் வாராவதி’ ஆனது.  அழகுத் தமிழ்ச் சொற்களான கன்னியாகுமரி cape comorin என்றும், தூத்துக்குடி tuticorin என்றும், திருநெல்வேலி tinneveli என்றும் ஆங்கிலேயர் வாயில் படாதபாடுபட்டதைக்கூட ஓரளவு தாங்கிக் கொள்ளலாம். நம் உணவுச் சின்னமாம் மிளகாய்ப்பொடியை gun powder என்று இழிவுபடுத்தியதற்குப் பழிக்குப்பழிதான் ‘அம்பட்டன் வாராவதி’ என்று நினைத்துவிடாதீர்கள். வாராவதியின் கதை அதோடு நிறைவடையவில்லை.

ஹாமில்டன் ப்ரிட்ஜ் தமிழனால் அம்பட்டன் வாராவதி என்றாக, அதை ஆங்கிலேயர் மிகச்சிறப்பாக மறுமொழியாக்கம் செய்து barbers bridge என்று அழைக்கத் தொடங்கினர். ‘ஹாமில்டன் ப்ரிட்ஜ்’ – barbers bridgeஆக மாறிய கதைச் சுருக்கம் இது.

பின்னர் அதுவே அம்பேத்கர் பாலம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

இதை எண்ணிச் சிரிப்பதா? சிந்திப்பதா? முடிவு உங்கள் கையில்.

இது போல இன்னும் நிறைய உண்டு-

பெருமைமிகு மாமல்லபுரம் மகாபலிபுரம் ஆனதும்; அருள்மிகு தில்லைச் சிற்றம்பலம் சிதம்பரம் ஆனதும்; இணையில்லாப் பெருவுடையார் கோயில் ப்ருஹத்தீஷ்வரம் ஆனதும் என்று பட்டியல் நீள்கிறது. பார்ப்போம்… கேட்போம்… அடுத்தடுத்த பதிவுகளில்.

நன்றி.

இணைப்புகள்-


Podcast available on:   Apple   Google   Spotify

ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!


இந்த ஆண்டு ஆகஸ்டு 30 தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை உலகெங்குமுள்ள மலையாள மக்களால் கொண்டாடப்பட்டது ஓணம்.

தாமதமாகச் சொன்னாலும், அனைவருக்கும் ஓணநன்னாள் நல்வாழ்த்துக்கள்!!

சரி, மலையாளப் பண்டிகைக்குத் தமிழில் வாழ்த்தா என்கிறீர்களா?

சேர சோழ பாண்டியர்களென ஒன்றிணைந்த தமிழகத்தின் திருவிழாவாக இருந்த ஓணவிழாவை, காலப்போக்கில் தமிழர்கள் கொண்டாட மறந்த பண்டைநாள் பண்டிகையைப் பற்றியதுதான் இன்றைய பதிவு. இதை உணர நம் வழித்துணை- நமக்கென நம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கியச் சான்றுகளே.

கடந்த நான்கு ஆண்டுகள் அபுதாபியில் வாழ்ந்ததில் பல கேரளத் தோழிமார் கிடைத்தனர். செவிக்கினிய மலையாள மொழியைக் கொஞ்சமாய்ப் பேசக்கற்கும் வாய்ப்பும் அமைந்தது. அதனால், அம்மொழி தமிழோடு எவ்வளவு தொடர்புடையது என்றும் தமிழரின் பல பழமையான சொற்களை மலையாளிகள் இன்றளவும் புழங்கி வருவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமிழர்கள்மீதும், தமிழ்த்திரைப்படங்கள்மீதும், தமிழ்த்திரைப்பாடல்கள்மீதும் மலையாள மக்களுக்கு உள்ள ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுடைய மொழி, பழகும் தன்மை, வேர்களைப் பாதுகாக்கும் விழைவு, உணவுமுறை என்று பலவற்றைக் கூர்மையாகக் கவனிப்பேன். அப்போதெல்லாம், என்றோ விலகிப்போன உறவுகளோடு இணையும் மீள்நிகழ்வுபோல உணர்ந்திருக்கிறேன்.

வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரி தம் ‘தென் இந்திய வரலாறு’ நூலில் –

“சங்க காலத்தில், இப்போதைய மலையாளப் பகுதி தமிழ்ப்பேசும் நிலமாகவே இருந்தது……….. சங்க இலக்கியத்தில் காணப்படும் பல சொற்களும் சொற்றொடர்களும் இப்போதைய தமிழில் வழக்கற்றுவிட்டபோதிலும், அவை மலையாள மொழியில் இன்றும் வழக்கிலிருக்கின்றன”

என்று குறிப்பிடுகிறார்.

“கன்னடத்தையும் தெலுங்கையும்போல, மலையாள மொழியும் இலக்கிய மரபுச் சொற்கள் பலவற்றைச் சமஸ்கிருதத்திலிருந்து தாராளமாகக் கடன் வாங்கியது. சமஸ்கிருத ஒலிகளைச் சரியாக உச்சரிப்பதற்காக, பழைய வட்டெழுத்து முறையை விட்டுவிட்டு, தமிழ்-கிரந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய எழுத்துமுறையை உருவாக்க வேண்டியிருந்தது”

என்றும் அவர் விளக்குகிறார்.

ஆக, முந்தைய சேரநாடென வழங்கப்பெற்ற இன்றைய கேரள மாநிலத்தில், அவர்தம் மொழியில், உணவில், இசையில் தமிழ்மணம் கமழ்வது வியப்பில்லைதானே?!

 அப்படிப்பட்ட ஒரு தொடர்புதான் ஓணநன்னாளும்.

ஓணம் தமிழரின் பழங்காலப் பண்டிகை என்பதுபற்றி பலர் பேசியும் எழுதியுமிருக்கிறார்கள். இது என் முறை.

ஓணத்திருநாள் திருமாலின் வாமன அவதாரத்தோடு தொடர்புபடுத்தியே கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம்.

‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடிய’ என்று வாமன அவதாரத்தைப் பாடி, ‘திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே’ என்று இளங்கோவடிகள் சிலப்பதிகார ஆய்ச்சியர்க் குரவையில் போற்றும் முன்பே, சங்கப்பாடல்கள் வாமனரைக் குறிக்கக் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப்பாட்டின் தொடக்கமே திருமால் பெருமை பேசுகிறது.

‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்று தொல்காப்பியர் காட்டும் முல்லை நிலத்தின் தலைவன் மாயோனான திருமால் அல்லவா?

முல்லைப்பாட்டு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, சோழநாட்டில் பிறந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மழைமேகத்தை திருமாலோடு ஒப்பிடுகிறார் புலவர்.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல

(முல்லைப்பாட்டு 1-3)

அகன்ற உலகத்தை வளைத்து, சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும்,

மா தாங்கு தடக்கை – திருமகளை அணைத்த வலிமையான கையை உடையவனும்,

நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – மாவலி மன்னன் தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமால்;

அந்தத் திருமாலைப் போல் முகிலானது, கடல்நீரைப் பருகியவுடன், மலைகளை இடமாகக் கொண்டு வலப்பக்கமாக எழுந்துநின்று, விரைந்து பெருமழையைப் பெய்ததாம்.

முல்லைப்பாட்டைப் போல, வாமனரைப் பற்றி வேறு பாடல்களிலும் காணமுடிகிறது. ஆனால், ஓணவிழா அல்லவா நாம் தேடுவது?

சரி, ஓணவிழாவைத் தமிழர்கள் கொண்டாடிய சான்றுகளை எங்கெல்லாம் காணமுடிகிறது?

சங்க இலக்கியத்தில் மதுரைக்காஞ்சியில் ஓணவிழவின் குறிப்பு வருகிறது. பத்திமை இலக்கியங்களில் சிவனைப் போற்றிய நாயன்மாரும், திருமாலைப் போற்றிய ஆழ்வார்களும் ஓணவிழாவைப் பற்றிப் பாடுகிறார்கள்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை, மாங்குடி மருதனார் பாடியது.

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

(மதுரைக்காஞ்சி 590 – 599)

என்ற வரிகளைப் பாருங்கள்…

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நன்னாள்

அவுணர்களைக் கொன்ற, பொன்னால் செய்த மாலையினையுடைய திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், 

வீரர்கள் எப்படித் தெருக்களில் வந்தார்களாம்??

கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  

யானைத் தோட்டி வெட்டின வடுவுடைய முகம்

போர்க்கருவிகளைப் பயின்று தழும்புபட்ட போரைத் தாங்கும் பெரிய கை

தழும்புடைய நெற்றியுடன் காட்சியளிக்கும் போரை விரும்பும் மறவர்கள்-

எப்படி நடந்து வருகிறார்கள்??

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

வண்டுகள் நிறைந்த மலர்ச் சரத்தை அணிந்து வலிமையான களிற்று யானைகளைச் செலுத்தி நடந்து வருகிறார்கள்..

திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், யானைகளைத் தெருக்களில் நடத்திச் செல்கிறார்கள் வீரர்கள்..

இன்றளவும் யானைகள் கோயில்களோடும் திருவிழாக்களோடும் இணைந்திருப்பதைக் காண்கிறோம்.

சங்கநூலான மதுரைக்காஞ்சி நமக்குச் சொல்லும் செய்தி இது.

அடுத்து, சிவனை அம்மையப்பனாகக் கண்ட திருஞானசம்பந்தர், மயிலை கபாலீச்சரத்தில் பாடிய பூம்பாவைப் பதிகத்தில்-

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம்அமர்ந்தான் ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்

(பன்னிரு திருமுறை 2:47:2 திருஞானசம்பந்தர், இரண்டாம் திருமுறை, திருமயிலை கபாலீச்சரம்)

என்கிறார்.

மையிட்ட அழகிய கண்களையுடைய பெண்கள் வாழும் மயிலையில், திருநீறு அணிந்து கபாலீச்சரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அங்கு நடக்கும் ஐப்பசி ஓணவிழாவையும் அடியவர்கள் போற்றுதலையும் காணாமல் போவாயோ பூம்பாவாய் என்று கேட்கிறார்.

ஓணவிழா, சம்பந்தர் காலத்தில் ஐப்பசியில் கொண்டாடப்பட்டதையும் இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

திருமாலையே முழுமுதல் கடவுளாக வழிபட்ட, திருமால் பெருமை பாடிய ஆழ்வார்கள் நெஞ்சுருகி உரைத்தது என்ன?

திருமழிசை ஆழ்வார்-

காணல்உறுகின்றேன் கல்அருவி முத்து உதிர 
ஓண விழவில் ஒலிஅதிர  பேணி
வருவேங்கடவா! என்உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று

(2422, திருமழிசை ஆழ்வார்,  நான்முகன் திருவந்தாதி, மூன்றாம் ஆயிரம்)

என்கிறார்.

நானோ உன்னைத் தேடி திருவேங்கடம் அதனைச் சென்று காணல் உறுகின்றேன்….. நீயோ என் உள்ளம் புகுந்தாய்

கல்அருவி முத்து உதிர ஓண விழவில் ஒலிஅதிர  ….. வேங்கடத்தில், அருவிகளிலிருந்து முத்துக்கள்போல நீர் ஆர்ப்பரித்து விழுகிறது;

அந்த ஒலியோடு தொண்டர்கள் திருமாலைப் போற்றிப் பல்லாண்டு பாடும் ஒலியும் சேர்ந்து வேங்கடமலையில் ஒலியதிர்கிறது என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

சரி, இந்தக் காட்சி நடக்குமிடம் திருவேங்கடத்தில், ஆனால் நடக்கும் நாளோ மாலுக்குரிய நாளான ஓணவிழாவில் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் செய்தி.

அடுத்து, பெரியாழ்வார் தம் திருப்பல்லாண்டில்-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் 

அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் 

 பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே 

 (6, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார்.

நாங்கள் வழிவழியாக ஏழேழு பிறவியிலும் திருமாலுக்கே தொண்டு செய்கின்றோம் என்பவர், திருவோணத் திருவிழவில், அந்திப் பொழுதில் அரியுரு எடுத்தவனைப் பல்லாண்டு பாடுவோமென்கிறார். நற்றமிழில் நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிடுகிறார்.

ஆயினும், திருவோணத்தைக் குறிப்பிடும் பெரியாழ்வார் வாமன அவதாரத்தை இணைத்துப் பாடாதது இங்கு நோக்கத்தக்கது.

திருப்பல்லாண்டின் மற்றொரு பாடலில்-

உடுத்துக் களைந்த நின் பீதகஆடை உடுத்துக் கலத்ததுண்டு

தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்

விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்

படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

(9, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார் பெரியாழ்வார்.

நீ உடுத்திக் களைந்த பட்டாடையை நாங்கள் உடுத்துகிறோம்; உனக்கு முதலில் கலத்தில் படைத்த உணவையே நாங்கள் உண்ணுகிறோம்; நீ சூடிய துழாய் மாலையை நாங்கள் சூடிக்கொள்கிறோம்;

நீ எங்களைச் செய்யப் பணித்த தொழிலையே செய்யும் நாங்கள்- பாம்பணையில் பள்ளிகொண்ட உமக்குப் பல்லாண்டு பாடுகிறோம், என்று வெறுமனே சொல்லாமல்,

திருவோணத் திருவிழவில்படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

என்று வரலாற்றுத் தகவலையும் தந்து செல்கிறார்.

ஆக, முந்தைய இலக்கியங்கள் வாயிலாக, ஓணவிழா சங்ககாலம் தொடங்கி பத்திமைக்காலத்திலும் தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது நமக்குத் தெரிய வருகிறது.

தமிழர்களாகிய நமக்குக் கிடைத்துள்ள பெரும் சொத்து நம் பழம்பெரும் இலக்கியங்கள். அவை, நம் மூதாதையர் நமக்கென எழுதிச்சென்ற கடிதங்கள். அவற்றைத் தேடித்தேடி மேலும்மேலும் படிக்கப்படிக்க, நம் வரலாறும் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட சமூகமாற்றங்களும் நமக்குப் புரிபடும், நம் உண்மையான அடையாளமும் தெளிவுபெறும்.

நன்றி.

Podcast available on:   Apple   Google     Spotify

 

 

 

 

‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்


ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம்.. நாடுவிட்டு நாடு பணியிடம் மாறிவந்ததால் தொடர்ந்து பதிவுகளைத் தர இயலாமல் போனது.

இந்த இடமாற்றம் பற்றியதுதான் இன்றைய பதிவு.

இப்படி நாடுவிட்டு நாடுசென்று வாழ்வு அமைத்துக் கொள்வதைத் தமிழில் எப்படிக் குறிக்கிறோம்?  ‘புலம்பெயர்தல்’ என்று சொல்கிறோம். இன்றும், புலம்பெயர்ந்த இந்தியர்கள்/ புலம்பெயர் தமிழர்கள் என்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா?

பொதுவாக, வெளிநாடுவாழ் இந்தியர்/ அயலகத் தமிழர் ஆகிய சொற்களை அரசுகள் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது.  ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படுவது குறித்தும் செய்திகளைச் சமீபத்தில் கண்டோம்.

இன்றும் நம்மிடையே புழங்கிவரும் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் என் மனதில் தங்கிப்போனது.

‘புலம்பெயர்தல்’ எவ்வளவு பழமையானது என்பதைவிட, ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் எவ்வளவு பழமையானது என்று தேடத் தோன்றியது. ஏனென்றால், தமிழர்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்றதும், வேற்றுநாட்டவர் தமிழகத்தில் வாழ்ந்ததும் சங்ககாலம் தொட்டு இருந்துவந்ததுதான். இலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுக்கள் வழியாகவும் இதை அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது’ என்று கூறியதாகக் கட்டுரைகளில் வாசித்தேன். ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : கோவை-சிறப்பு மலரில், அவருடைய ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தபோது, செம்மொழிக்கான பண்புகளாக – ‘தொன்மை, தொடர்ச்சி, செழுமை வளம்’ ஆகியவற்றை அவர் குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.

தமிழ்மொழி இன்றும் நம்மிடையே வழக்கொழியாது இருப்பதற்கு அதன் தொடர்ச்சியே முதன்மைப் பங்கு வகிக்கிறது. அப்படி, தொடர்ந்து நாம் பயன்படுத்தும் எண்ணிலடங்காச் சொற்களுள் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லின் தொன்மையை இன்று பார்ப்போம்.

மக்கள், தாம் வாழுமிடம்விட்டு வேறோர் இடம் புலம்பெயர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கல்வி, வேலை, வணிகம், போர் என்று பட்டியலிடலாம். தொல்காப்பியரும்-

‘ஓதல் பகையே தூதிவைப் பிரிவே’ 

என்று பிரிவு ஏற்படும் சூழல்களைக் காட்டுகிறார்.

நாம் இங்கு பார்க்கப்போவது, சங்கப் பாடல்களில் ‘புலம்பெயர்தல்’ என்னும் சொல்லாட்சி எப்படிப்பட்ட சூழல்களில் எல்லாம் வருகிறது என்பதைத்தான்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ஒரு பாடல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பொருள் ஈட்டுவதற்காகப் பிரியும் தலைவனிடம் தோழி, பிரிவின் துன்பம் குறித்துக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தன் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து

பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி

அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

(நற்றிணை 183)

என்பன முதல் சில வரிகள்.

மருத நிலத்து உமணர் – அதாவது உப்பு வணிகர்கள், தம் நாட்டில் விளைந்த நெல்லை, கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் உள்ள உப்பிற்கு விலையாகக் கொடுப்பார்கள். அதாவது, நெல்லை உப்புக்குப் பண்டமாற்றாகக் கொடுத்து வாங்குவார்கள்.  உப்பு வாணிபத்தில் ஈடுபடும் உமணர்,  தம் சுற்றத்தாரோடு நிலவுபோன்ற வெள்ளை மணலில், நீண்ட வழித்தடத்தில் வண்டிகளைக் கட்டிக்கொண்டு, நிலம்விட்டு மற்ற நிலத்திற்குப் புலம்பெயர்ந்துச் செல்வார்களாம். அப்படி அவர்கள் புலம்பெயர்ந்து செல்வதுகண்டு, அந்த ஊரில் இருப்பவர்கள் வருந்துவார்களாம். அதுபோல, உன் பிரிவால் தலைவி துன்பப்படுவாள் என்று தோழி கூறுகிறாள். 

ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

சுற்றத்தாரோடு புலம்பெயர்ந்து உமணர் போவது துன்பம் தரும், எனுமிடத்தில் ‘புலம்பெயர்தல்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரும் அகநானூற்றுப் பாடலைப் பாருங்கள்.

வேம்பற்றூர் குமரனார் எழுதிய பாடல், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைகிறது பாடல்.

முனை புலம்பெயர்த்த புல்லென் மன்றத்துப்

பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்

வினை அழி பாவையின் உலறி,

மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கே

(அகநானூறு 157)

என்று முடிகிறது பாடல். தலைவன் சென்றுள்ள கொடிய வழியைப் பாடலின் தொடக்க வரிகள் விளக்குகின்றன. பிரிந்து செல்லும் முன் தலைவன் தலைவிக்கு ஊக்கம்தரும் சொற்களைச் சொல்லிச் சென்றிருக்கிறான். அதைத் தலைவி தோழிக்குச் சொல்கிறாள்.

அச்சம் தரும் வழியில் தனியாகச் சென்ற நம் தலைவர் என் மனதிற்கு ஆறுதல் அளிக்க, முன்பெல்லாம் என்ன சொல்லுவார் தெரியுமா?

‘போர் நிகழ்கிறது. ஊரில் நலமாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தம் இடம் பொருள் இழந்து பாதுகாப்பான இருப்பிடம் நோக்கிப் புலம்பெயர்ந்துப் போய்விட்டனர். அதனால் பொலிவிழந்து காணப்பட்டது ஊர்மன்றம். எல்லோரும் புலம்பெயர்ந்து போன பிறகும், ஊர்மன்றத்தில் வைக்கப்பட்ட பெண்சிலை ஒன்று இருக்கும். அது மழை பெய்யும்போது நெகிழ்ந்தும், வெய்யில் காய்கையில் வெளுத்துப்போயும் தனியாக நிற்கும். 

அந்த மன்றத்துப் பொலிவிழந்த பாவைபோல, வீட்டில் தனித்திருக்க யாரால் முடியும்? உன்னைப் போன்று மனவலிமை உடையவர்களால் மட்டும்தான் அது முடியும்’, என்று தலைவர் என்னிடம் சொல்வார். ஆனாலும் அவரைப் பிரிந்து தனியாக நாட்களை என்னால் கழிக்க இயலவில்லை, என்று தலைவி புலம்புகிறாள்.

முனை புலம்பெயர்த்த புல்லென்மன்றத்து’

மக்கள் புலம்பெயர்ந்து சென்றதால் பொலிவிழந்த மன்றம் என்கிறது பாடல்.

புலம்பெயர்தலைத் தேடப் போய், பாடலின் இனிமையில் மயங்கிவிட்டோம் பாருங்கள்.

மற்றுமோர் அகநானூற்று பாடல், மாமூலனார் பாடியது. 

கோடு உயர் பிறங்கல் குன்றுபல நீந்தி,
வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய

(அகநானூறு 393)
என்று தொடங்கும் பாடல் அது.

இங்கே, புல்லி என்ற மன்னன் ஆளுகின்ற வேங்கடமலை பற்றிய வண்ணனையைக் காணமுடிகிறது.

வேங்கட மலையின் வளமும், நாட்டுப்புற வாழ்வும் தனியாக மற்றொரு பதிவில் பார்க்கவேண்டிய தகவல்கள். 

கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அதாவது – உயர்ந்த சிகரங்களையுடைய, பாறைகள் நிறைந்த குன்றுகள் பலவற்றைக் கடந்து சென்று, 

வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து- அதாவது – வேறொரு நாட்டில் பொருள் தேடும் எண்ணத்தோடு – 

புலம்பெயர்ந்து செல்லும் தலைவன், உன்னை மறவாது திரும்பி வருவான், என்று பிரிவினால் வருந்தும் தலைவிக்குத் தோழி கூறுவதாக அமைகிறது பாடல்.

இதுவரை நாம் படித்த எட்டுத்தொகைப் பாடல்கள் மூன்று. இரண்டில் பொருள் ஈட்டுவதற்காக இடம் மாறுவது ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லால் காட்டப்பட்டது. ஒன்றில், போரினால் ‘புலம்பெயர்ந்ததைப்’ பார்க்கமுடிந்தது.

இன்றும் புழக்கத்தில் உள்ள ‘புலம்பெயர்தல்’ என்ற சொல், பத்துப்பாட்டில் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடை, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடியது.

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

(நெடுநல்வாடை 1-5)

என்று பாடலின் தொடக்கமே, வெள்ளப் பெருக்கால் தம் இடத்தைவிட்டு வேறோர் இடம் நகரும் இடையர்களைக் காட்டுகிறது.

பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்-

வானம் புதிய மழையை அளவில்லாது பொழிந்ததை வெறுத்த வளைந்த கோல்களையுடைய இடையர், 

ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

தம் காளைகளை வேறு நிலங்களில் மேயவிட்டு, புலம்பெயர்ந்து, தனிமையில் கலங்கித் தவித்தனராம்.


அடுத்து, மலைபடுகடாம் – ‘புலம்பெயர்வைப்’ பயன்படுத்துகிறது. 

மலைபடுகடாம் ‘கூத்தராற்றுப்படை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். நன்னன் வேண்மான் என்ற மன்னனின் நாட்டுச்சிறப்பு, போர்த்திறன், மலைவளம் போன்றவை விவரிக்கப்படுகின்றன மலைபடுகடாமில்.

ஆற்றுப்படை நூல் இல்லையா? ஒரு பாணர் வறுமையில் வாடும் மற்றொரு பாணரை மன்னரிடம் சென்று, தாம் பெற்றதுபோல் செல்வத்தைப் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். தம் இடத்தைவிட்டுப் பிரிந்து, செல்வம் பெற்றுவரும் பொருட்டு, புலம்பெயர்ந்து மன்னரை நாடிச் செல்வார்கள் கலைஞர்களான கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும்.

பற்பல இசைக்கருவிகள் குறித்தும்,  எள், இஞ்சி, அவரை, தயிர், நாவல் பழம், வெண்கடுகு போன்ற உணவுப் பொருட்கள் குறித்தும் தகவல்கள் நூலில் காணமுடிகிறது.

மன்னன் நன்னனின் மலைநாட்டை நோக்கிச் செல்லும் வழித்தடம் எப்படி இருக்கும்? ஒரு சிறிய எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

பெரிய பெரிய அரண்கள் இருக்கும். பின்னி வைத்ததுபோல் கொடிகள் நிறைந்த சிறுகாட்டைக் கடக்க வேண்டும். யானைகள் போரிடுவதைப் போன்று நெருங்கிக் கிடக்கும் பாறைகள் நிறைந்த மழைக்காடுகள் இருக்குமாம். 

அப்படிப்பட்ட பாதையைக் கடந்து செல்லும்போது – 

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்

(மலைபடுகடாம் 392 – 393)

என்று அறிவுறுத்துகிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

முன்பு பாதையை நன்கு அறியாததால் வழிதவறிப் போன – புலம்பெயர்ந்த புதியவர்களான நீங்கள், (புலம்பெயர்புதுவிர்)

மறுபடி அதே சரியான இடத்திற்கு வந்துவிட்டால், அப்படியே சென்றுவிடாதீர்கள்.

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்-

குழப்பத்தைக் கொடுத்த அந்தச் சந்தைத் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு உதவியாக, ஊகம்புல்லைக் கட்டி வையுங்கள், என்கிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

அடுத்து, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையைப் பார்ப்போம். பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இதே ஆசிரியர், பத்துப்பாட்டு நூல்களில் மற்றொன்றான பெரும்பாணாற்றுப்படையையும் பாடியுள்ளார். 

காவிரியின் சிறப்பு, சோழநாட்டின் பெருவளம், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, இரவுநேர நிகழ்ச்சிகள், ஏற்றுமதி, இறக்குமதி, விழா நீங்காக் கடைவீதி, ஊரில் வாழும் உழவர்கள், வணிகர்கள், பல நாட்டினர் ஒன்றுகூடி வாழும் பாங்கு, என்று பல்வேறு வரலாற்றுச் செய்திகளைக் கண்முன் காட்டும் நூல் பட்டினப்பாலை. 

வணிகர் சிறப்பைச் சொல்லுகையில் – 

நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்,
கொள்வதூஉம் மிகை கொடாது,  கொடுப்பதூஉங் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை

(பட்டினப்பாலை 207-212)

நடுநிலைகொண்ட நல்ல நெஞ்சினர், பழிச்சொல்லுக்கு அஞ்சி உண்மை பேசினர், தம் பொருட்களையும் பிறர் பொருட்களையும் ஒன்றாகக் கருதினர், வாங்கியவற்றைக் கூடுதலாகக் கொள்ளாமல் கொடுத்தவற்றைக் குறைவாகக் கொடுக்காமல், பலப்பலப் பண்டங்களை விலைப்பேசி விற்கும், வளம் சேர்க்கும் தொன்மையான வணிகர் இருப்பிடம், என்று மிக அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.

காவிரிப்பட்டினத்தின் வணிகர் பகுதி எப்படி இருந்ததாம்?

பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர் முதுவாய் ஒக்கல்,
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள்கலந்துஇனிதுஉறையும்முட்டாச் சிறப்பின் பட்டினம் 

(பட்டினப்பாலை 213-218)

வெவ்வேறு  நாடுகளில் பலப்பலக் குழுக்களாக வாழ்ந்து பழகிய அறிவார்ந்த சுற்றத்தார் ஒன்றுகூடி, திருவிழாக்கோலம் பூண்ட தொன்மையான ஊர்போல் காட்சி அளித்ததாம் காவிரிப்பூம்பட்டினம் .

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

பழியில்லா நாடுகளிலிருந்து, பலப்பல மொழிகள் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து வணிகத்தின் பொருட்டு, காவிரிப்பூம்பட்டினத்தில் இனிமையாகக் கலந்து வாழ்ந்தனராம். அத்தகைய குறையில்லாச் சிறப்புடையது புகார் நகரம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பிழைப்புத் தேடி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர், அதுவும் இணக்கமாக வாழ்ந்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, தமிழகத்தின் வரலாற்றுச் செய்தி இது.

‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லும் உண்டு; பிறநாட்டவருடன் கூடிப் பன்னாட்டுச் சமூகமாக  அன்றே வாழ்ந்த சான்றும் உண்டு.

சங்ககாலத்தை அடுத்துவரும் சிலப்பதிகாரத்தில், பட்டினப்பாலையை ஒட்டிய வரிகளைக் காணமுடிகிறது.

புகார் காண்டத்தில் இந்திரவிழவு ஊரெடுத்த காதையில், புகார் நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பிரிவுகளாக இருந்ததை விளக்குகிறார் ஆசிரியர் இளங்கோவடிகள்.

மருவூர்ப்பாக்கத்துக் காட்சிகளைப் பாருங்கள் – 

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்                     

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 7-10)

திறந்தநிலை மேல்மாடங்களும், வியத்தகு பண்டகசாலைகள் அல்லது கிடங்குகளும், மானின் கண்போன்ற அகண்ட சாளரங்கள் கொண்ட மாளிகைகளும் இருந்தன. காண்போர் கண்களை அகலவிடாமல் கட்டிப்போடும் அழகிய யவனர் இருப்பிடங்களும் புகார் நகரில் இருந்தன.

அதோடு, 

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்

கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 11-12)

கடல் வழியாகச் செல்லும் கலங்களில் பலப்பல நாடுகளிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவோரும் கொண்டு செல்வோருமாக  – புலம்பெயர்ந்துப் பற்பல நாட்டவர் செல்வம் கொழிக்கக் காவிரிப்பூம்பட்டினத்தில் கலந்து மகிழ்ந்து வாழ்ந்த கடலோரப் பகுதிகளை இளங்கோவடிகள் கண்முன் நிறுத்துகிறார். ‘புலம்பெயர் மாக்கள்’ என்று நாம் தேடும் சொல்லையே பயன்படுத்துகிறார்.

புகார் நகரம் குறித்த- 

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

என்னும் பட்டினப்பாலை வரிகளும்

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

என்னும் சிலப்பதிகார வரிகளும் எவ்வளவு ஒத்திருக்கின்றன பாருங்கள். 

இப்படி, பல நாட்டவருடன் பரந்த மனத்துடன் கூடி வாழ்ந்த பன்மைச் சமூகமாகத்தான் பண்டைத் தமிழகத்தை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். 

பட்டினப்பாலை தவிர்த்த சங்க இலக்கியங்களில் – 

  • நற்றிணையில் மருத நிலத்து உமணர் நெய்தல் நிலத்திற்குப் புலம் பெயர்ந்தனர்
  • அகநானூறில் ஒரு பாடலில் போரால் புலம் பெயர்ந்தனர்; மற்றொரு பாடலில் பொருளீட்டப் புலம் பெயர்ந்தனர்
  • நெடுநல்வாடையில் வெள்ளப் பெருக்கால் புலம் பெயர்ந்தனர்
  • மலைபடுகடாமில் பொருள் வேண்டி மன்னரிடம் செல்வோர் புலம் பெயர்ந்தனர்

என்று பார்த்தோம். 

பட்டினப்பாலையிலும் சங்ககாலத்துக்குப் பின்வந்த சிலம்பிலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிபம் புலம் பெயர்தலுக்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. குறிப்பாக, பன்னாட்டவர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்த மேம்பட்ட சமூகச்சூழலைப் பெருமிதத்துடன் அறிந்துகொள்கிறோம்.

ஆக, சங்ககால நூல்களிலும் காப்பியக்காலச் சிலப்பதிகாரத்திலும் இன்றும் வழக்கிலுள்ள ‘புலம்பெயர்தல்’ எனும் சொல்லே இடம் பெயர்தலுக்குப் பயன்பட்டுள்ளது.

எனவே, தமிழ் இன்னும் வாழும் மொழியாக இருப்பது அதன் தொன்மையால் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாலும்தான். அந்தத் தொடர்ச்சிக்குத் தேவை நாம் தமிழ்மொழியை வேற்றுமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்துவதுதான்.

நன்றி.


Podcast available on:   Apple   Google    Spotify

கம்பர் எனும் காலத்தை வென்ற கவிப்பேரரசு !

வெய்யோன் ஒளி, தன் மேனியின்
   விரிசோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும்
   இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி
   கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர்
   அழியா அழகுடையான்!

(1926, கங்கைப் படலம், அயோத்தியா காண்டம்)

இராஜபாளையம் எம்.எஸ். சுப்புலட்சுமி இசைப்பள்ளியின் ‘கம்பன் இசைத்தேன்’ என்ற youtube காணொலிப் பதிவிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடல் இது. பொதுத்தளத்தில் பதிவேற்றி, என்னைப் போன்றோர் கற்றுக்கொள்ள வழி செய்ததற்கு அவர்களுக்கு என் நன்றிகள்.

இது கம்பராமாயாணத்தின் அயோத்தியா காண்டத்தில் கங்கைப் படலத்தில் வரும் பாடல். காட்டுக்குச் செல்லும் இராமன், சீதையோடும் தம்பி இலக்குவனோடும் வழியில் அழகான காட்சிகளைக் கண்டு, கங்கைக்கரையை அடைகிறான்.  அங்கு நிகழும் காட்சிகளை உரைக்கும் படலம் என்பதால் ‘கங்கைப் படலம்’ என்று இதற்குப் பெயர்.

தமிழுக்கும் அமுதென்று பேர் என்று சொன்ன பாரதிதாசனார், அதே பாடலில்- தமிழுக்கு மதுவென்று பேர் என்றும் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் என்றும் தமிழின் பெருமை பாடுகிறார். பாரதிதாசனாரின் வாக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பற்பல தமிழ்ப் படைப்புக்களைக் கூறலாம். அவற்றுள் இன்று நாம் பார்க்கப்போவது கம்பர் கவிநயத்தைக் காலங்கடந்தும் பறைசாற்றும் கம்பராமாயணத்தைப் பற்றி. படிப்பவரை மயக்கத்தில் ஆழ்த்தி, தன்னிலை மறந்து மூழ்கச்செய்யும் அமுதும் மதுவும் தேனும் இணைந்த இனிமைமொழி தமிழ்மொழி என்பதைக் கம்பரின் இராமாவதாரத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.  

கம்பராமாயணத்தைப் படிக்கையில், இயல்பாகக் கதைத் தலைவன் இராமன்மீது ஏற்படும் பற்றையோ மதிப்பையோ காட்டிலும், கம்பரின் தமிழ்மீது தீராக் காதல் ஏற்படும்.

தம் சுவைமிகு உவமைகளை அணிகளாக்கிப் பாடல்களைப் புனையும் வல்லமையால், இத்தகைய விந்தையை நிகழ்த்திக் காட்டுகிறார் கம்பர்.

நான் முதலில் பாடிய பாடலில், இராமனின் தோற்றச் சிறப்பைக் கம்பர் இயம்புகிறார்.

வெய்யோன்ஒளி, தன்மேனியின்
   விரிசோதியின் மறைய

இராமனின் மேனியின் ஒளி, வெய்யோன்/கதிரவனின் ஒளியையே  மறைத்துவிடும் அளவிற்கு மிளிர்கிறதாம்;

பொய்யோஎனும் இடையாளொடும்
   இளையானொடும் போனான்

இடை இல்லையோ என்றெண்ணுகின்ற அளவில் சிற்றிடையாளான சீதையோடும், தனக்கு இளையவனான இலக்குவனோடும் நடந்து செல்கிறான் இராமன்;

அடுத்து வரிசையாக, இராமனின் வடிவழகை நாம் காணச் செய்கிறார் கம்பர்-

மையோ மரகதமோ மறி
   கடலோ மழைமுகிலோ

மையோ, மரகதமோ, கரையிலே வந்தடிக்கிற கடலோ, மழை முகிலோ.. என்பவர்.. இதற்குமேல் உருவகங்களே இல்லை என்னிடத்தில் என்று நெகிழ்ந்தவராக-

ஐயோஇவன் வடிவென்பதோர்
   அழியா அழகுடையான்!

ஐயோ .. இதற்குமேல் என்ன சொல்வது.. இவன் அழியாத அழகுடைய வடிவைக் கொண்டவன் என்று வியக்கிறார்.

இப்படிப்பட்டச் சிறப்புப் பொருந்திய இராமன் கல்லிலும் முள்ளிலும் நடந்து செல்கிறானே.. ஐயோ ஏனிந்த நிலை என்று பொருள் சொல்பவர்களும் உண்டு. 

இப்போது சொல்லுங்கள்.. காப்பியத்தின் தலைவன் இராமனல்ல கம்பன்தான் என்று நான் நினைப்பது சரிதானே??

கம்பரின் காலம், சோழப் பேரரசரான மூன்றாம் குலோத்துங்கன் காலமான 12 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி ஆகும். இராமனின் கதையை முதலில் தமிழர்களுக்குச் சொன்னவர் கம்பர்தானா? வால்மீகி இராமாயணத்தைத் தழுவி, முழுமையான காப்பியமாக அளித்தவர்  கம்பர்தான். ஆனால், சங்கப் பாடல்களில், இராமாயணம் சார்ந்த தகவல்களைப் புலவர்கள் சிலர், சிறு துணுக்குகளாகத் தந்திருக்கிறார்கள்.

அகநானூறில் பாடல் எண் 70இலும், புறநானூறில் பாடல் எண் 378இலும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறிலும்  இராமாயணக் குறிப்புகளைக் காணமுடிகிறது.

புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை இங்கு பார்ப்போம். அந்தப் பாடல், ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடியது. அந்தப் புலவர் சொல்கிறார்-

போரில் வென்ற அரசனை நான் பாடியதில் பெரும் மகிழ்வுற்ற அரசன், நானும் என் பெரிய குடும்பத்தாரும் அதுவரைக் கண்டிராத பரிசுப் பொருள்களாகப் பல்வேறு அணிகலன்களை வழங்கினான்.  அவை வறுமையில் வாடும் எங்களுக்கு உரியவை அல்ல. அதனால் என் சுற்றத்தார் எதை எங்கு அணியவேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. விரலில் அணியவேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர். காதில் அணியவேண்டியவற்றை விரலில் மாட்டிக்கொண்டனர். இடுப்பில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும் கழுத்தில் அணியவேண்டியவற்றை இடுப்பிலும் இட்டுக்கொண்டனர்.

இது எப்படியிருந்தது?

கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு

(18-21, 378, புறநானூறு, எட்டுத்தொகை)

என்கிறார் புலவர்.

இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றான். சீதை, இராமனுக்கு வழி தெரியவேண்டும் என்பதற்காக, தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அந்த நகைகளை எடுத்த குரங்குகள், எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் மனம்போல் அணிந்துகொண்டது போல் இருந்ததாம், புலவரின் சுற்றத்தார் செய்தது.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் –

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே

(சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், ஆய்ச்சியர் குரவை)

என்று அரக்கரினம் போரில் தோற்று மடிய, பழமையான இலங்கையின் காவலை அழித்த இராமன் புகழைப் பாடி ஆடுகிறார்கள்.

அடுத்தக் காலக்கட்டத்தில், சைவம் வளர்த்த நாயன்மாரைப் போற்றிய பல்லவர்கள், திருமால்மீதும் பெரும்பற்றுக் கொண்டிருந்தார்கள். 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாம் மகேந்திரவர்மரின் மாமண்டூர் கல்வெட்டில், ‘வால்மீகி வண்ணித்தபடி பரதனை நாயகனாகக் கொண்ட நாடகம்’ பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.  

பக்தி இலக்கியத்தில், சைவ நாயன்மார் சிவபெருமான் இராவணன் செருக்கை அடக்கியதை மறக்காமல் குறிப்பிடுகிறார்கள்.

வைணவம் வளர்த்த ஆழ்வார்கள் திருமால் பெருமை உரைக்கையில், இராமனைப் போற்றினர். அப்படி, திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் பாசுரங்களில் இராமன் குறித்த கருத்தையும் சொல்லையும் அப்படியே கம்பர் எடுத்தாண்டிருப்பதை தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார், தம் ‘கால ஆராய்ச்சி‘ நூலில் விளக்குகிறார்.

9 ஆம் நூற்றாண்டு தொடங்கும் முற்சோழர் காலத்துக் கோவில்களில், இராமாயணக் காட்சிகள், சிற்றுருவச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் சிற்பத்தொகுதி.  குறிப்பாக, தமிழகக் கோயில்களில் வாலி வீழ்த்தப்படுவதற்குக் கொடுக்கப்படும் முதன்மை நிலை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இராமாயணத்தில் வாலி வதத்தை வருந்தத்தக்க ஒரு நிகழ்வாக நம் முன்னோர்கள் நினைத்தார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

பல ஆண்டுகள் முன்பு, என்னுடைய கல்லூரி முதுகலைப் படிப்பில் கம்பராமாயணத்தின் ஆரண்யக் காண்டமும் கிட்கிந்தாக் காண்டமும் கற்பிக்கப்பட்டன. கிட்கிந்தாக் காண்டம் படித்து முடிக்கையில், ‘வாலி’ என்ற கதைமாந்தன் என்னைப் பெரிதும் பாதித்துவிட்டான். என் ஆய்வுக்காக, வாலியின் வழக்கறிஞராக மாறினேன். ‘வஞ்சிக்கப்பட்ட வாலி’ என் ஆய்வுத் தலைப்பானது.

வஞ்சிக்கப்பட்ட வாலியைப் பற்றி, மற்றுமொரு வலையொலிப் பதிவில் பேசுவோம்.

இப்படி, சங்ககாலம்தொட்டுத் தமிழர்கள் கேட்டுவந்த இராமாயணக் கதை, சிலப்பதிகாரக் காலத்தில் வழிபாட்டு நெறிகளுள் புகுந்து, திருமாலின் அவதாரப் பெருமையென அழுத்தமாகப் பதிந்துவிட்டது.  பத்திமைக்காலத்தில் ஆழ்வார்கள் திருமால் பெருமையோடு இராமகாதையின் சாரையும் இணைத்து வழங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக, 12 ஆம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில், திருமால் அவதாரமான இராமனின் கதையை- தம் காலத்தின் மிகச்சிறந்த காப்பியமாக,  அன்றைய தமிழ்க்கூறு நல்லுலகம் அதுவரைக் கண்டிராத வகையில் மாபெரும் படைப்பாக வழங்க விழைந்திருக்கிறார் கம்பர்.

இயல்பில் தமக்கு அமைந்த இணையில்லா தமிழ்மொழிப் புலமையும், எழுத்தாற்றலும், சந்தநயமும் பெரிதும் துணைநிற்க- வால்மீகியின் இராமாயணக் கதையைத் தமிழ்ப்படுத்துகிறார், கம்பர்.

இத்தனை மொழித் திறனும், படைப்பாற்றலும் கொண்ட கம்பர், தழுவல் கதையான இராமாவதாரத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்? தமிழர்கள் பல நூற்றாண்டுகள் கழிந்தபின்னரும் இனிக்க இனிக்கச் சுவைக்கும் வண்ணம் அவர் படைத்தது வேறொரு பகுதியில் நடைபெற்ற மூலக்கதையையா? என்ற கேள்விகள் என் மனதில் அவ்வப்போது தோன்றும்.

அவருடைய கற்பனை வளத்தையும், உவமை மற்றும் உருவக அணிகளில் சொற்களை மாலைகளெனக் கோர்த்து வழங்கும் இணையில்லாத் திறமையையும் காட்டிட, தம் மண்ணில் நிகழாத கதை ஒன்றை, மண்ணின் பண்பாட்டிற்கு ஏற்றாற்போல மாற்றித்தந்து உலகோர் வியக்கும் காப்பியம் படைக்கும் தேவைதான் என்ன?

ஆறு காண்டங்களில் கிட்டத்தட்ட 10,500 பாடல்கள் கொண்ட,  தேனினும் இனிமையான தமிழ்மொழியில் கம்பர் எழுதிய இராமாவதாரத்தில், முன்னிலையில் என் மனதில் நிற்பது கம்பரும் தமிழும்தான்.

இராமன் என்ற பாட்டுடைத் தலைவனுக்கு எதிராக, வாலியின் வழக்கறிஞராக நிற்க நான் முன்வந்ததும், பலரை விவரிக்கும் உவமைகள் பெருக்கெடுத்து ஓடும் இராமாயணப் பாடல்களில் சூர்ப்பணகையை வண்ணித்த பாடல் என் மனதில் பதிந்துபோனதும் – கம்பருடைய சொல்லாற்றலால்தான்.

ஆம். ஆரண்யக் காண்டத்தைப் படித்தபோது பதிந்துபோன ஒரு பாடல், இன்றும் என் மனதில் அடிக்கடி ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல் – அது சூர்ப்பணகையின் நடையழகை விவரிக்கும் பாடல்.

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.

(2762, சூர்ப்பணகையின் நடையழகு, சூர்ப்பணகைப் படலம், ஆரண்யக் காண்டம்)

இது, ஆரண்யக் காண்டத்தில் சூர்ப்பணகை அழகிய பெண்ணுருவில் தன்னை உருமாற்றிக் கொண்டு, இராமனிடம் செல்வதை விவரிக்கும் பகுதியான சூர்ப்பணகைப் படலத்தில் வரும் பாடல். கம்பருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் தேர்ந்தெடுத்த சொற்களைத் தொடுத்த மாலை போன்று அழகு பொலிபவை.

குறிப்பாக, இந்தப் பாடலின் சந்தநயம் மிகுந்த அழகு நிறைந்தது. அதனால்தான் இன்றுவரை என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அரக்கர்குலப் பெண்ணான சூர்ப்பணகையின் புதிய மாற்றுருவை, மென்மையான பெண்ணுருவை வண்ணிக்க – மெல்லின ‘ஞ’கரத்தைப் பயன்படுத்தி இப்பாடலைப் புனைந்துள்ளார் கம்பர்.

இந்தப் பாடலின் சுவையைப் பருகும்முன், இதற்கு முந்தையப் பாடல்களைப் பார்ப்போம். சூர்ப்பணகை இராமனைக் கண்டு, காமுற்று, அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேச விழைகிறாள். ஆனால், அரக்க வடிவில் உள்ள தன்னை, இராமன் ஏற்க மறுப்பான் என்பதால் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்கிறாள்.

‘எயிறுடை அரக்கி, எவ்உயிரும் இட்டது ஓர்
வயிறுடையாள்’ எனமறுக்கும்; ஆதலால்,
குயில் தொடர் குதலை, ஓர்கொவ்வை வாய், இள
மயில் தொடர் இயலி ஆய், மருவல்நன்று எனா

(2760, சூர்ப்பணகை கோல வடிவம் கொள்ளுதல், சூர்ப்பணகைப் படலம், ஆரண்யக் காண்டம்)

‘கோரப் பற்களையுடைய அரக்கி, எல்லா உயிர்களையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடிய பெரிய வயிரை உடையவள்’ என்று என்னை இராமன் ஏற்க மறுக்கும் வாய்ப்பிருக்கிறது, எனவே,

குயிலைப் போன்ற கொஞ்சும் மொழி

கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாய்

இளமயில் போன்ற சாயலுடைய பெண்வடிவம் ஏற்றுச் செல்வது நல்லது என்று எண்ணுகிறாளாம் சூர்ப்பணகை.

எத்தனை உவமைகள் பாருங்கள்.

இதோடு கம்பர் நிறுத்தவில்லை.

மேலும் எப்படியெல்லாம் சூர்ப்பணகையை விவரிக்கிறார் பாருங்கள்..

பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா,
அங்கையின் ஆயமந்திரத்தை ஆய்ந்தனள்

தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளை மனத்தில் நினைத்து, தான் பெற்றிருந்த மந்திரத்தை ஓதினாள். ஓதியவள் –

திங்களின் சிறந்து ஒளிர்முகத்தள், செவ்வியள்,
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள்

(2761, சூர்ப்பணகை கோல வடிவம் கொள்ளுதல், சூர்ப்பணகைப் படலம், ஆரண்யக் காண்டம்)

முழுமதியைக் காட்டிலும் ஒளிரும் முகம் உடையவளாக, அழகுடையவளாக, வானிலிருந்து ஒளி பரவ, புதிய வடிவில் வெளிப்படுகிறாள் சூர்ப்பணகை.

இராமனைச் சந்திக்கும் முன்பு, தன் புறத்தோற்றத்தில் இத்தனை மாற்றங்களைச் செய்கிறாள் அவள். இது கம்பர் உண்டாக்கிய மாற்றம். வால்மீகியின் இராமாயணத்தில், தன் இயல்பான தோற்றத்துடனேயே சூர்ப்பணகை இராமனைச் சந்திப்பதாக உரையாசிரியர் குறிப்புத் தருகிறார்.

காப்பியத்தில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தும் இடம் – சூர்ப்பணகை இராம இலக்குவரை அணுகுவதும், மூக்கு அறுபடுவதும். கதைத் தலைவி சீதை சிறையெடுத்துச் செல்லப்படுவதுமான மாறுபட்ட சூழல் உருவாகும் இடமல்லவா அது?

சிறந்த படைப்பாசிரியரான கம்பர், தம் சொல்வளத்தைப் பயன்படுத்தி, இந்தப் பகுதிக்குச் சுவை கூட்டுகிறார்.

புறத்தோற்றத்தில் அழகு நிறைந்தவளாக மாற்றம் பெற்ற சூர்ப்பணகை, உண்மையில் யார் என்பதைத்தான், முன்னரே நாம் பார்த்த ‘பஞ்சு ஒளிர் விஞ்சு குளிர்’ பாடல் இயம்புகிறது-

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க

செஞ் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி

இயற்கையில் மென்மையும், குளிர்ச்சியும், ஒளியும் பொருந்திய பஞ்சும் கொடியின் தளிரும் வருந்தும் வண்ணம் –

சிறந்த அழகுடைய தாமரை போன்ற பாதம் கொண்டவளாக;

அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்

அழகான சொற்களையுடைய இளமையான மயில் போலவும் அன்னம் போலவும் இருக்கும் சூர்ப்பணகை –

வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்

 மின்னுகின்ற வஞ்சிக் கொடி போலவும், நச்சுத் தன்மை பொருந்தியவளாகவும், தீமை செய்யும் பெண்ணாகவும் இராமன்முன் வந்தாள்.

அழகும் கவர்ச்சியும் நிறைந்த பலவற்றைச் சொன்னதன் இறுதியில்- வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – என்று எதிர்வினை ஆற்றவந்த கதைமாந்தரைத் தம் சொல்வலிமையால் வேறுபடுத்திக் காட்டுகிறார் கம்பர்.

எழில் உருவில் நஞ்சம் என வஞ்சம் நிறைந்தவளை நம் கண்முன் நிறுத்திட, உவமைகளை வாரி வாரி வழங்குகிறார்.

கதையின் எதிர்வினை ஆற்றும் பெண்ணுக்கு இவ்வளவு மனங்கவர் உவமைகளை அளித்து, சூழ்ச்சி நிறைந்த அந்த மாந்தரையும் நிலைத்து நிற்கச் செய்கிறார்.

கதைத் தலைவனாம் இராமனுக்கு இணையாக, அவனால் வீழ்த்தப்படும் இதர மக்களையும் படிப்பவர் எண்ணங்களில் நிறைந்து நிற்கச் செய்வது கம்பர் என்ற படைப்பாளரின் பாடல் இயற்றும் திறம்தான்.

கம்பர் கையாண்டுள்ள ஓசை நயம் மிகுந்த அடிகளும், உவமை அணிகள் நிறைந்த வண்ணனைகளும் ஏராளம் ஏராளம். படிப்பவர் மனங்களில் இனிக்க இனிக்க ஒலிக்கும் வகையில் காப்பியத்தில் இடம்பெறும் சொற்கள் அதனினும் ஏராளம். கிட்டத்தட்ட 10500 பாடல்கள் இல்லையா? அமுதும் தேனும் பெருக்கெடுத்து ஒடுவதைப் போல- தமிழ்ச் சொற்கள் கம்பன் கவிநடையில் குதூகலமாய் ஆடுவதை உணரலாம். கம்பராமாயணத்தின் ஒரு பகுதியைப் படித்துவிட்டு உறங்கச் சென்றால், கனவில் வருபவை கதைமாந்தர்கள் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். நீங்கள் கனவு காண்பது தமிழாகத்தான் இருக்கும்.

அதனால்தான் சொல்கிறேன், இராமன் என்ற கதைத் தலைவனைவிட, தம் படைப்பில் மிளிர்பவர், தமிழ்ப் படைப்புலகம் காலந்தோறும் வியந்து போற்றும் கம்பர்தான்.

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

என்று பாவேந்தர் பாரதிதாசனார் பாடிய தமிழின் பெருமை- கம்பர் போன்ற காலத்தை வென்ற கவிப்பேரரசர்களால்தான் மங்காது ஒளிர்கிறது; உலகின் தொன்மை மொழிகளில் ஒன்று என்றாலும், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பொலிவுடன் விளங்கும் இளமைமொழியாக நம் தாய்மொழியாம் தமிழ் திகழ்கிறது.

இன்று கம்பரை ஓரளவு தெரிந்துகொண்டது போல, நேரம் உருவாக்கிக்கொண்டு, இல்லத்தினருடன், நண்பர்களுடன், பழந்தமிழ் படைப்புக்களைத் படித்தும் பகிர்ந்தும் நினைவு கூர்ந்தும் தமிழின்பம் பெற்றால்தான் என்ன?

நன்றி.

Podcast available on: Apple Google Spotify

வள்ளுவம் போற்றுவோம்; மக்களைப் பேணுவோம்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்   
    (மக்கட்பேறு 04)

தம்முடைய மக்களின் சிறு கைகளால் பிசைந்து கூழாக்கப்பட்ட உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிடச் சுவையானதாம்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு 
  (மக்கட்பேறு 05 )

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அவர்களின் மழலைமொழி கேட்பது, செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
     (மக்கட்பேறு 06)

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை உணராதவரே, குழலின் இசை இனிமையானது என்றும் யாழின் இசை இனிமையானது என்றும் கூறுவர்.

இவை, அறத்துப்பால் – இல்லறவியலில் – ‘புதல்வரைப் பெறுதல்’ அல்லது ‘மக்கட் பேறு’ என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் மழலைச் செல்வங்களைப் பற்றிக் கூறுவது.

அதிகாரத்தின் முதல் குறளிலேயே, இவ்வுலகில் அடைகிற பேறுகளிலெல்லாம் சிறந்தது மக்களைப் பெறுவது என்று தெளிவுபடுத்தி விடுகிறார்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற  
       (மக்கட்பேறு 01)

என்கிறார்.

பிள்ளைகள் மிகச்சிறந்த செல்வங்கள்தான்…. ஐயமில்லை. ஆனால், எப்படிப்பட்ட பிள்ளைகளால் பெற்றோர் பெரும்பேறுடையவர்கள் ஆகிறார்கள்?

அறிவறிந்த மக்கட்பேறு என்று உரைக்கிறார் வள்ளுவர்.

அறிவில் சிறந்த பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லையாம்.

சரி, ‘பெற்றோர்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?

செல்வம் பெற்றோர்; கல்வி பெற்றோர்; வலிமை பெற்றோர்; பெரும்பதவி பெற்றோர்; அழகு பெற்றோர்; நிம்மதி பெற்றோர்; இன்பம் பெற்றோர் – என்று நீண்ட பட்டியலைத் தரலாம்.

ஆனால், ‘பெற்றோர்’ என்ற சொல் குறிப்பது மக்களைப் பெற்றவரைத்தானே!!

அறிவறிந்த மக்கட்பேறு என்று வள்ளுவர் சொல்லிவிட்டார்;  அவர்களை அறிவறிந்தவர்களாக, நன்மக்களாக வளர்ப்பது எப்படிபட்ட பெரும் பொறுப்பு??

பெற்றவராக, குறிப்பாகத் தாயாக- திருக்குறளை நான் எப்படி பார்க்கிறேன்? சிறுவயதுமுதல் குழந்தைகளுக்குப் புகட்டவேண்டிய பண்பாட்டுப் பாடங்களை உள்ளங்கை நெல்லிக்கனியென வள்ளுவம் உரைப்பதைத்தான் இன்று பகிர இருக்கிறேன்.

திருக்குறள் ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுக்க ஒரு பிறவி போதாது. ஒவ்வொரு வயதுக்கும், ஒவ்வொரு பணிக்கும், ஏன் பிணிக்கும் ஏற்ற தகவல் உண்டு திருக்குறளில். வாழ்வின் பல்வேறு சூழல்களில் நம்மோடு பயணித்து, தோள் கொடுக்கும் தோழன் வள்ளுவர் என்றே சொல்லலாம்.  

குழந்தை வளர்ப்பில் நான் கற்றுக்கொண்ட குறள்கள் என்னென்ன? குழந்தைக்குக் கற்றுக்கொடுத்த குறள்கள் என்னென்ன? அடிப்படை வாழ்க்கைப் பண்புகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவும், என்னைச் வளர்த்துக் கொள்ளவும் நான் பயன்படுத்திய குறள்கள் எவை? ‘பெற்றோர்’ என்ற பொறுப்பில் கடந்துவந்த சில ஆண்டுகளை, பின்னோக்கிச் சென்றெண்ணிப் பார்த்தேன்..

அதன் விளைவுதான் இந்தப் பகிர்வு.

முன்பெல்லாம், திருக்குறள் அதிகாரங்களைச் சொல்லிக் கொடுப்பதும், குடும்பமாகக் குறள்களை மனப்பாடம் செய்து சொல்லிப் பார்ப்பதும் விளையாட்டுபோல் செய்து கொண்டிருந்தோம்.

அடுத்த நிலையில், நமக்குப் பணிகள் கூடிப்போக, பிள்ளை பெரிய வகுப்புக்குள் செல்ல, மூன்று மூன்று குறள்களாக மனதில் பதிய வைக்க முயற்சித்தோம். சுவற்றில் சார்த்திய, அளவில் பெரிய வெண்பலகையில் எழுதிவைத்து, மூன்று குறள்களைப் பொருளோடு புரிந்துகொண்டு, அவ்வப்போது மறுபயிற்சி செய்தோம்.

இப்போது இந்த மூன்று குறள் பயிற்சிதான் தொடர்கிறது.

சரி, வெவ்வேறு காலக்கட்டங்களில் கற்றுக்கொண்ட, கற்றுக்கொடுத்த குறள்களைப் பார்ப்போமா?

முதல் இரு அதிகாரங்களான கடவுள் வாழ்த்தும் வான்சிறப்பும் கற்றுக்கொடுத்த பிறகு, வாழ்வின் இன்றியமையாத ஒன்றை விளக்கும் அதிகாரத்திற்குத் தாவினேன்- அது அன்புடைமை.

கொஞ்சி அணைத்து மகிழ்ந்தவாறு நாங்கள் கற்றது –

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்  
     (அன்புடைமை 01 )

உள்ளத்து அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க இயலுமா? நம் அன்புக்குரியவர்கள் துன்பப்படுவதைக் காணும்போது, கண்ணீர்த்துளியாக அந்த அன்பு வெளிப்படும், என்கிறார் வள்ளுவர்.

அன்பின் சிறப்பைச் சொல்லும் மற்றொரு குறள்-

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு  
    (அன்புடைமை 10)

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும். அன்பு இல்லாதவர்களின் உடம்பு- எலும்பைத் தோல்போர்த்திய வெற்றுடம்பே ஆகுமாம்.

நாங்கள் சொல்லிக் கொடுத்த முதல்சில எண்ணங்களில், ‘அச்சம் தவிர்’ என்பது ஒன்று. ஆனால், ஓர் எண்ணத்திற்கு மறுபக்கம் உண்டு என்பதைச் சிந்திக்கச் செய்பவர் வள்ளுவர். அச்சம் தவிர்த்தால்மட்டும் போதாது; அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சுவதே நலம் பயக்கும், என்கிறார் இந்தக் குறளில்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
       (அறிவுடைமை 08)

அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமை, அஞ்ச வேண்டுவனவற்றுக்கு அஞ்சுவதே அறிவுடையவரின் செயலாகும், என்பது இதன் பொருள்.

இதையே குழந்தைக்குப் பலவிதமாய்ச் சொல்லிக் கொடுக்கையில்- தவறு செய்வதற்கு அஞ்ச வேண்டும், அப்படியே நிகழ்ந்தாலும் பெற்றோரிடம் மறைப்பது தவறு என்று சொல்லிக் கொடுத்தேன்.

அதன் தொடர்ச்சியாக, பொய் என்னும் தவறை ஏன் செய்யக்கூடாது? என்ற கேள்வி வந்து விழுந்தது….பொய் சொன்னால் என்ன ஆகும்?

எனக்கு மிகவும் பிடித்த குறள்களுள் இதுவும் ஒன்று.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
     (வாய்மை 03)

ஒருவன் தன் நெஞ்சம் அறிந்து பொய்ச் சொல்லக்கூடாது, அப்படிப் பொய் சொன்னால் தன் நெஞ்சமே தன்னை வருத்தும் என்கிறார் வள்ளுவர். இது எவ்வளவு உண்மை!!

அடுத்து வரும் குறள்கள், பள்ளிப் பருவத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டவை. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கற்றல் எப்படி இருக்க வேண்டும்?

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக    
   (கல்வி 01)

கற்பவற்றை குறைகள் இல்லாதவண்ணம் கற்றுக்கொள்ள வேண்டும்; கற்றபின் அதன்படி நடக்கவும் வேண்டும். சரிதானே!!

வாழ்வில் உயர்வு காண்பது எப்படி?

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
      (ஊக்கமுடைமை 05)

 நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவைப் பொறுத்தே இருக்கும்; அதுபோல, மக்களின் ஊக்கத்தின் அளவைப் பொறுத்ததே வாழ்க்கையின் உயர்வு.

ஒழுக்கம் வாழ்வில் எவ்வளவு இன்றியமையாதது?

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும் (ஒழுக்கமுடைமை 01)

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தரும் என்பதால், அது உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

அடுத்து, நாம் எப்படிப் பேசவேண்டும்?

இனிமையாகப் பேசுதல் பற்றிச் சொல்லித் தருகையில் வந்த குறள்கள் இவை –

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று   (இனியவைகூறல் 10)

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிடுத்து கடுமையான சொற்களைக் கூறுதல், கனிகள் இருக்கும்போது அவற்றைவிட்டுவிட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது…

இது எவ்வளவு பொருள்பொதிந்தது?

இனிய சொல் பற்றிப் பேசினோம்.. சிறந்த சொல் எது?

எனக்கு மிகவும் பிடித்த குறள்களுள் மற்றொன்று- 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து    (சொல்வன்மை 05)

ஒரு சொல்லைச் சொல்லும் முன்பு, அந்தச் சொல்லைக் காட்டிலும் சிறந்த சொல் இல்லை என்பதை அறிந்தபின்னரே அதைப் பயன்படுத்த வேண்டுமாம்.

இந்தக் கலையில் தேர்ந்ததால்தான் வள்ளுவர் நமக்குத் திருக்குறள் என்னும் பெட்டகத்தை வழங்கினார்.

இனிமையாகப் பேச வேண்டும், மிகச் சரியான சொற்களையே பயன்படுத்த வேண்டும், அப்போ.. பேசிக்கொண்டே இருக்கலாமா? அதுதான் இல்லை.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு    (அடக்கமுடைமை 07)

என்று தலையில் குட்டுகிறார் வள்ளுவர்.

எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவை அடக்கிக் காக்கவேண்டும். இல்லையெனில், அவரவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

எதற்கு அஞ்ச வேண்டும் எதற்கு அஞ்ச வேண்டாம்; இனிமையாகப் பேச வேண்டும் ஆனால், நாவடக்கம் தேவை என்று சொன்ன வள்ளுவர், எதை மறக்கக்கூடாது எதை மறந்தால் நல்லது என்பதையும் விளக்கிவிடுகிறார்-

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று      (செய்ந்நன்றி அறிதல் 08)

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்துவிடுவதே அறம் ஆகும்.

ஆக, தீயவற்றை- அது நம்மால் விளைந்ததோ பிறரால் நிகழ்ந்ததோ-  அப்போதே மறந்துவிடவேண்டுமென்று கூறுகிறார்.

குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் மறக்கக்கூடாத பண்புகளில் ஒன்று- நன்றி.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது     (செய்ந்நன்றி அறிதல் 02)

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

வீட்டிலேயே எடுத்துக்கொள்வோம்.  தண்ணீர் தருவது, அடுப்பை அணைப்பது, மின்விசிறி சுழலவிடுவது, அவசரமாகக் கிளம்புகையில் தேவையானவற்றை எடுத்துத் தருவது.. என்று எண்ணற்ற, சிறுசிறு வேலைகள்மூலம் பிள்ளைகள் நமக்குச் செய்யும் இந்தக் ‘காலத்தினால் செய்த உதவிக்கு’, நாம் அவர்களை நன்றி பாராட்ட மறக்கவே கூடாது.

பெரியவர்கள் உரைக்கும் நன்றி, பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை மட்டும் ஏற்படுத்தாது, தம் நற்செயலுக்குக் கிடைத்த மதிப்பால் வரும் பெருமை, பிறருக்கு உதவும் மனப்பாங்கையும் ஏற்படுத்தும். ஆக, அந்த நன்றியால் பிள்ளைக்கு ஏற்படும் ஊக்கம், சமூகத்தில் உரிய நேரத்தில் உதவும் பாங்கையும், உரிய நேரத்தில் தமக்கு உதவியவரை மதிக்கும் மனதையும் பிள்ளைகளுக்குத் தரும் இல்லையா? 

ஈகை – அதாவது வரியவருக்கு/இல்லாதவருக்குக் கொடுத்து உதவுதல் இன்றியமையாத பண்புகளுள் ஒன்றல்லவா? அதையே வள்ளுவர் தம் தெளிவான வாக்கால் எப்படி உரைக்கிறார் பாருங்கள்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்         (ஈகை 05)

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்- அதாவது- உண்ணாநோன்பு இருப்பவர்களுடைய ஆற்றல்- தம் பசியைப் பொறுத்துக்கொள்வது.

ஆனால், அந்த வலிமையைவிட/ஆற்றலைவிடச் சிறந்தது எது? பசியால் வாடும் மற்றவருடைய பசியை மாற்றுகின்ற ஆற்றல் இருக்கிறதே.. அதுவே சிறந்த ஆற்றல். உண்ணாநோன்பு இருப்பவரின் ஆற்றல் அதற்கு அடுத்த நிலையில்தான் என்கிறார் வள்ளுவர்.

இதுவரை, பெற்றோராக எங்கள் நோக்கில், பிள்ளைக்குத் தரவேண்டிய வாழ்க்கைப் பண்புகள் சிலவற்றை, வள்ளுவம் வாயிலாகத் தமிழோடு நாங்கள் கலந்து தரமுயன்றதைப் பகிர்ந்து கொண்டேன்.

‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்று அறிவில் சிறந்த பிள்ளைகளைப் பற்றி வள்ளுவர் கூறினார் என்று பகிர்வின் தொடக்கத்தில் பார்த்தோம் இல்லையா?

வள்ளுவர், பிள்ளைகள் அறிவில் சிறந்தவர்களாய் இருக்கவேண்டும் என்பதை எவ்வளவு வலியுறுத்துகிறார் தெரியுமா?

முதலில், மக்களை அறிவில் சிறந்தவர்களாக ஆக்கும் சூழலை அளிப்பது பெற்றோர் கடமைதானே?

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்    (மக்கட்பேறு 07)

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க உதவி, கற்றவர் அவையில் முந்தியிருக்கும்படிச் செய்வது.

அப்படி அறிவுடையவர்களாகப் பிள்ளைகள் விளங்குவதன் பயன் என்ன?

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது    (மக்கட்பேறு 08)

என்கிறார்.

தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் தம்மின் இனிது, என்று பொருள்கொள்ள வேண்டும் என்று பெரும்பான்மையான  உரையாசிரியர்கள் கூறுகிறார்கள்.

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட, உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

உண்மைதானே, அறிவுடையவராகப் பிள்ளைகள் திகழ்வது சமூகத்திற்கே நன்மை பயக்கும் அல்லவா?

கல்விக்கும், அறிவுக்கும், சான்றோராக விளங்குவதற்கும், தமிழ்ச் சமூகம் அன்றிலிருந்து இன்றுவரை முதன்மைநிலை அளித்துவரும் தொடர்ச்சியை இது காட்டுகிறது.

இதற்கு அடுத்த நிலையில்,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்     (மக்கட்பேறு 09)

தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோன் என அறிவுடையோர் சொல்லக் கேட்க தாய், பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியை விடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.

கல்வியில் சிறந்து விளங்கும் குழந்தைகள், அளவிட இயலாத மகிழ்வைத் தாய்க்குத் தருகிறார்கள். அந்த அளவிட இயலாத மகிழ்ச்சியை வள்ளுவர் ‘ஈன்ற பொழுதின்’ என்ற சொற்றொடரில் தந்து மனமுருகச் செய்கிறார்.

சரி, பிள்ளைகளின் பொறுப்புதான் என்ன?

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்      (மக்கட்பேறு 10)

மகனோ மகளோ தம் பெற்றோருக்குச் செய்யத்தக்க கைம்மாறு, இவர்களைப் பிள்ளைகளாகப் பெற என்ன தவம் செய்தாரோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் வகையில் வாழ்வில் உயர்வதுதான்.

பதின்பருவத்தில் பிள்ளைகள் இருக்கும் வீட்டில், இந்த மூன்று குறள்களை எழுதி வைத்தால் – பெற்றோர் பிள்ளைகளிடையே பிணைப்பு பெருகும், பொறுப்பும் புரியும் என்று நினைக்கிறேன். இது என் பார்வை.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

‘மக்கட் பேறு’ அதிகாரத்தில் வள்ளுவர் சொன்னவற்றை இப்போது முழுமையாகப் பார்ப்போம்-

பிள்ளைகளின் மெய்த்தீண்டல் இன்பம், சொல்கேட்டல் இன்பம் என்றார். சரி, குழந்தைகளாகவே கொஞ்சிக் களித்தால் வாழ்வு சிறக்குமா?

அடுத்த நிலைக்கு உயரவேண்டும் இல்லையா?

அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்;

அதற்குரிய சூழலைப் பெற்றோர் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.

அப்படி, அறிவறிந்த மக்களாய்ப் பிள்ளைகள் திகழும்போது, ஈன்ற பொழுதினும் மகிழ்வடைகிறது பெற்றவர் மனது, என்று குறித்தார்.

இத்தனையையும் சொன்ன வள்ளுவர், இனிப்புத் தமிழ்க் கலந்து நடைமுறை நோக்கில் ஓர் எண்ணத்தை அழுத்தமாக உரைக்கிறார்.

இந்தக் குறள் வள்ளுவம் எக்காலத்திற்கும் பொருந்தும்.. உலகத்து மாந்தர்க்கெல்லாம் பொருந்தும்…. ‘பொதுமுறை’ என்பதைக் காட்டுவது –

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்      (மக்கட்பேறு 03)

தம்மக்களே தம்முடைய செல்வம், அவர்கள் நாம் பெற்ற பேறு, என்று சொல்வதெல்லாம் சரிதான். சொல்லிக்கொண்டே, கொஞ்சி மகிழ்ந்துகொண்டே, வசதிகள் கொடுத்துக்கொண்டே இருந்தால் போதுமா? அந்த மக்களுடைய செல்வம், அவரவருடைய செயல்கள்/முயற்சிகளின்  பயனால்தான் வந்து சேரும், என்கிறார்.

நம் அடுத்தத் தலைமுறைக்கு-

தேவையென்று நாம் நினைப்பவற்றை, தேவையென்று அவர்கள் கேட்பவற்றை, நாம் சிறார்களாய் இருந்தபோது நம் மனம்மயங்கிக் கிடைக்காதவற்றை – என்று பலவற்றை அவரவர் வசதிக்கேற்பத் தந்து வளர்க்கிறோம். கட்டுப்பாடுகளும் விதிக்கிறோம்.  

நற்பண்புகளும், நல்லொழுக்கமும், பெற்றோர் அரவணைப்பும் பொதுவானவை.

வசதியான வளர்ப்புச் சூழலும், அதற்கேற்ற வாய்ப்புக்களும் கூடிய வாழ்க்கை சிலருக்கு;

ஆனால், கடினச் சூழலும், போராட்டங்களும் கூடிய வாழ்க்கை வேறு பலருக்கு.

பெற்றோர் கொடுப்பது எதுவென்றாலும், அவரவர் மேன்மை அவரவர் செயல்கள்/முயற்சிகளால்தான் –  அயரா உழைப்பும், தளராக் குறிக்கோளும், சோர்வில்லா எண்ணங்களும், அடங்கா வேட்கையும், அகலா ஊக்கமும், கவனம் சிதறா ஆற்றலும் கொண்டு, தம் வாழ்வுப் பாதையில் உயர்வு காண்பது பிள்ளைகள் கையில்தான் உள்ளது.

பிள்ளைகள் வாழ்வில் வெற்றிபெறும் உளவியல் தத்துவத்தை, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமாய் வள்ளுவர் இந்தக் குறளில் எளிமையாகச் சொல்லிவிட்டார் பாருங்கள்..

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்

நம் வாழ்வின் மிகவும் பொறுப்பு நிறைந்த காலத்தின் எண்ணாவோட்டங்களைப் படம்பிடித்துக் காட்டும் வள்ளுவர், நிறைகளோடு சிறந்த அறிவுரைகளையும் வழங்குகிறார்.

இப்படி, நம் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் உற்ற துணையாவது வள்ளுவம். அதற்கு எடுத்துக்காட்டாகப் பகிர நினைத்த ஒரு சிறுதுளிதான் இந்தப் பதிவு.

தமிழர் வாழ்வு சிறக்க, வருங்காலம் தமிழோடு சிறக்க, திருக்குறளைப் போற்றிப் பேணுவதும், நம் பிள்ளைகளுக்கு அதன் அருமை பெருமைகளைச் சொல்லித் தருவதும் நம் கடமை இல்லையா??

நன்றி.

Podcast available on:  Apple Google Spotify

தாய்லாந்தில் இரு தமிழ்க் கல்வெட்டுக்கள்

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்.   

ஈழத் துணவும் காழகத் தாக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு

(பட்டினப்பாலை 184-193)

இதென்ன, பலப்பலப் பொருட்களின் நீண்ட பட்டியல்போல இருக்கிறதே என்கிறீர்களா? ஆம், இவையனைத்தும் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் பற்பல நாடுகளில் இருந்து வந்து குவிந்திருக்கும் பண்டங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு, சோழநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இவை.

சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை தரும் செய்தியைத்தான் பார்த்தோம். சோழன் கரிகால்  பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது பட்டினப்பாலை.

உண்மையில், கரிகாற் பெருவளத்தான் அரசாண்ட தமிழகத்தின் சோழநாடு, பெரும் வளத்தோடு செழித்திருந்ததை எவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் புலவர்!

கடல் மூலமாக வந்த குதிரைகள் காணப்படுகின்றன;  உள்நாட்டு வணிகர்களின் கரிய மிளகு மூட்டைகள், வடமலையில் விளைந்த பொன்னும் மணியும், குடகுமலையில் தோன்றிய சந்தனமும் அகிலும் நிரம்பியுள்ளன; அதோடு, கங்கைக்கரையில் விளைந்தவையும் காவிரியில் விளைந்தவையும் குவிந்திருக்கின்றன; ஈழத்து உணவும் காழகத்துப் பொருட்களும் வந்து இறங்கியிருக்கின்றன. இப்படி, அரியவையும் பெரியவையுமாகப் பண்டங்கள் புகார் வீதியில்  நிறைந்து இருந்தனவாம்.

கடல்வழி வந்த குதிரைகள் அரபு நாட்டுத் தொடர்பைக் குறிப்பதாக அறிஞர்கள் உரைக்கிறார்கள். ஈழத்து உணவு புரிகிறது, இங்கே காழகம் என்பது மலேயப் பகுதியின் கடாரமாக இருக்கலாம் என்று சிலரும் இன்றைய மியான்மார் பகுதியாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்களும் சொல்கிறார்கள்.

பொதுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழரின் ரோமானிய மற்றும் அரபு வணிகம் தழைத்து விளங்கியதை இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றுச் சான்றுகள் மூலமாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தென்கிழக்காசியா உடனான தமிழகத்தின் தொடர்பு குறித்த செய்திகளை உறுதியாகக் கூறும் நேரடிச் சான்றுகள் குறைவாகவே இருந்தன.

பொதுக்காலத்தின் முதல் சில நூற்றாண்டுகளில், தென்கிழக்காசியாவுடனான தமிழர் தொடர்பிலான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கத் தொடங்குகின்றன.

அவற்றில், இன்றைய தாய்லாந்து நாட்டுப் பகுதியில் கிடைத்த இரண்டு கல்வெட்டுக்கள் குறித்து இன்று பேசுவோம்.

முதல் கல்வெட்டின் காலம்- பொதுக்காலம் 3-4 ஆம் நூற்றாண்டு; மற்றொரு கல்வெட்டின் காலம் பொதுக்காலம் 9 ஆம் நூற்றாண்டு.

தமிழர்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்ததைக் காட்டும் அந்த இரு கல்வெட்டுக்களின் கூடுதல் சிறப்பு, அவையிரண்டும் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் என்பது. கடல் கடந்து மற்றொரு நாட்டில் குடியேறிய நம் முன்னோர், அங்கு தாம் வாழ்ந்ததற்கான ஆவணத்தையும் விட்டுச் சென்றிருக்கின்றனர்.

அவர்கள் தமிழர்கள்தான் என்று நாம் எப்படி அறுதியிட்டுச் சொல்கிறோம்?

அவர்கள் செய்த வணிகத்தாலா? அவர்கள் விட்டுவந்த பொருட்களாலா? இவற்றைக்கொண்டு, கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த இனத்தின் அடையாளத்தை ஆய்வுகளால் ஓரளவுக்கு உறுதிசெய்ய முடியும்.

ஆனால், ஐயமின்றி அவர்கள் தமிழர்கள் என்பதற்கான அடையாளம் – அவர்கள் கல்லில் பதித்துச்சென்ற தம் தாய்மொழிதான்.

நாம் பார்க்கப் போகிற முதல் கல்வெட்டு, இன்றைய தாய்லாந்தில் உள்ள ‘கிராபி’ என்ற மாநிலத்தில்- ‘குவான் லுக் பட்’ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்.

அது ஒரு பொற்கொல்லர் அல்லது பொன் வணிகருடைய உரைகல். அதாவது, தங்கத்தின் தரத்தை உரசிப் பார்க்க, பொற்கொல்லர்கள் பயன்படுத்துவார்கள் இல்லையா…. அந்தக் கல். அதில், ‘பெரும்பதன் கல்’ என்ற பொரிப்பு காணப்பட்டது. பண்டைய நூற்றாண்டுகளில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்திய ‘தமிழ் பிராமி’ வரிவடிவத்தில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு அது.  அதன் காலம், பொதுக்காலம் 3-4 ஆம் நூற்றாண்டு.

அந்த இடத்தைச் சுற்றி, பொன்துகள்களும் கிடைத்தன. அங்கு ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், அங்கு பொன்வணிகம் நடந்து வந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

ஆக, இந்தக் கல்வெட்டைக் கொண்டு ஆய்வாளர்கள் கண்டறிந்து சொன்னது- பொதுக்காலம் 3-4 ஆம் நூற்றாண்டில் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்துவந்த தமிழர்கள், பொன்வணிகம் செய்திருக்கவேண்டும். 

அந்தக் கல் – ‘பெரும்பதன்’ என்ற பெயருடைய வணிகரின் உரைகல். தாம் தங்கத்தை உரசிப்பார்த்த அந்த உரைகல்லில் தம் பெயரைச் செதுக்கிச் சென்றிருக்கிறார் அவர்.

இன்றும், நம் வீட்டுப் பாத்திரங்களில் பெயர்களைப் பொரித்துவைக்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. அது ஓர் இயல்பான பழக்கம்போல் தோன்றினாலும், இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சி என்பது வியக்கவைக்கும் உண்மை.

‘பெரும்பதன்’ என்ற அந்த வணிகர் செய்த ஒரு சிறிய செயல் – தம் உரைகல்லில் பெயரைச் செதுக்கிவைத்தது. அந்தச் செயல், இன்றும் நாம் பெருமிதம் கொள்ளும் வகையில், தமிழர் கடல்கடந்து வாழ்ந்ததை உறுதிசெய்யும் சிறப்புமிகுந்த வரலாற்று நிகழ்வாக அமைந்துவிட்டது பாருங்கள்!

இன்று, நம் நாட்டிலும் சரி, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் சரி, அந்நாட்டின் தாய்மொழியிலோ, நம் அலுவல் மொழியிலோ, அல்லது பெரும்பான்மையோர் புழங்கும் மொழியிலோ எழுதுவதும் பேசுவதும், வாழ்க்கை ஓட்டத்தில் எளிதென்று சிலரும் உயர்வென்று சிலரும் எண்ணுகிறோம். 

பெரும்பதன் என்ற அந்தத் தமிழர் நினைத்திருந்தால், தாம் வாழ்ந்த நாட்டின் மொழியிலோ, புழங்கிய பொது மொழியிலோ எழுதியிருக்கலாம். அவர் எழுதிய மொழி தாய்மொழி தமிழ் என்றதனால்தான்- அது, தமிழர் அங்கு வாழ்ந்த அடையாளத்தை உறுதியாக உலகிற்குச் சொல்லும் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

அந்தக் கல்வெட்டு, அந்தமான் கடலை ஒட்டிய தாய்லாந்தின் மாநிலமான கிராபியில் உள்ள ‘ப்ரா குரு அந்தோன் சங்கரகிட்’ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 

நாம் இன்று தெரிந்துகொள்ளப்போகும் அடுத்த கல்வெட்டு – பொதுக்காலம் 9 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தின் ‘தகோபா’ அல்லது ‘தக்குவாபா’ என்ற பகுதியில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டு.

முந்தைய கல்வெட்டு கிடைத்த தென் தாய்லாந்துப் பகுதியில் உள்ள மற்றோர் ஊர்தான் தகுவாபா . சிதிலமடைந்த அந்தக் கல்வெட்டு கூறும் செய்தி என்ன?

தாங்கள் வாழ்ந்த இடத்தில் அமைத்த குளத்தைப் பற்றிக் குறிப்புத் தருகிறார்கள் அங்கு வாழ்ந்த வணிகர்கள்.

அந்தப் பகுதியில் வாழும் ‘மணிக்கிராமத்தார்க்கும்’ அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ‘சேனாவரையர்க்கும்’ பயன்படுமாறு ‘ஸ்ரீஅவனிநாரணம்’ என்ற பெயரில் குளம் ஒன்று வெட்டப்பட்டது. அந்தக் குளத்தை வெட்டியவர் பெயர் ‘நாங்கூர் உடையான்’. 

இந்தக் கல்வெட்டில் கிடைக்கும் பெயர்கள் – மணிக்கிராமத்தார், சேனாவரையர், நாங்கூர் உடையான், ஸ்ரீஅவனிநாரணன். இந்தப் பெயர்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு?

மணிக்கிராமம் என்பது, கடல்கடந்து பற்பல நாடுகளுக்குச் சென்ற தமிழக வணிகக் குழுக்களுள் ஒன்று.

சேனாவரையர் என்போர், அவர்களுக்குப் பாதுகாப்புக்கென்று உடன் இருந்தோர்

நாங்கூர் உடையான் குளத்தை வெட்டியவர் பெயர் – ஊர்ப்பெயரோடுகூடிய  நல்ல தமிழ்ப் பெயர் 

அந்தக் குளத்துக்கு அவர்கள் சூட்டிய பெயர்தான், அந்தக் கல்வெட்டின் காலத்தைக் கூறும் கூடுதல் சான்றாக இன்றுவரை நிற்கிறது.

குளத்தின் பெயர் – ‘ஸ்ரீ அவனிநாரணம்’.

பொதுக்காலம் 9 ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சிசெய்த பல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மரின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றுதான் ‘அவனிநாரணன்’ என்பது.

குடிபெயர்ந்து வாழ்ந்த நாட்டில் தாங்கள் வெட்டிய குளத்திற்கு, தம் சொந்த மண்ணில் தம்மை ஆளும் மன்னர் பெயரைச் சூட்டி வாழ்ந்து வந்திருக்கிறார்கள் தமிழக வணிகர்கள்.

தாம் செல்லும் இடங்களுக்கு, குழுக்களாகக் குடிபெயரும் ஊர்களுக்கு, தங்களுடைய சொந்த ஊர்ப் பெயர்களைச் சூட்டி வாழ்வது, தமிழரின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. தமிழகம் தாண்டி, இன்னும் தமிழ்ப் பெயர்கள் தாங்கி நிற்கும் ஊர்களே அதற்குச் சான்று.

இன்று தகோபா என்று அழைக்கப்படும் ஊரின் முந்தைய பெயர் ‘தக்கோலா’வாக இருந்திருக்கவேண்டும் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், தகோபாவுக்குப் பக்கத்தில் உள்ள ‘த்ராங்’ என்ற பகுதியே தக்கோலாவாக இருக்கும் என்கிறார்கள் வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்த்திரி உள்ளிட்டோர். தமிழ்நாட்டில், பல்லவத் தலைநகர் காஞ்சிக்கு அருகில் ‘தக்கோலம்’ என்ற ஊர் இன்றும் இருப்பது நம்மில் பலர் அறிந்ததுதானே?

தாய்லாந்தின் தகோபா பகுதியில், அவ்வூரின் வரலாற்றுப் பெயரான ‘தக்கோலா’ என்ற பெயரில் இன்றும் தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

சரி, புலம்பெயர்ந்த நாட்டில் ஒரு குளம் வெட்டி, அதற்கு அந்நாட்டு மன்னர் பெயரைச் சூட்டாமல், தம் மன்னர் பெயரைச் சூட்டி மகிழ்ந்த அந்த வணிகக் குழுவினர், தம் மண்ணின் வேறு என்ன சான்றுகளை அங்கு விட்டுச்சென்றார்கள்?

தமிழ்க் கல்வெட்டு கிடைத்த பகுதியில், பல்லவ பாணியிலான மூன்று சிற்பங்கள் கிடைத்தன. அவற்றுள், முதன்மைச் சிற்பம் திருமால் சிற்பம்.

கூடுதலாக, அந்த இடத்தைச் சுற்றியும் பொன்துகள்கள் நிரம்பக் கிடைத்தன. அங்கும் பொன் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஆக, தக்கோலம் என்று புலம்பெயர்ந்த ஊருக்குப் பெயரிட்டு, வழிபாட்டுக்குரிய கோயில் கட்டி, குளமும் வெட்டி,  தம் மன்னர் பெயரைக் குளத்திற்குச் சூட்டி, மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்திருக்கிறார்கள் மணிக்கிராமத்தார் என்ற தமிழக வணிகக் குழுவினர்.

அந்தச் சிற்பங்களைத் தாய்லாந்தின் ‘நாகோன் சி தம்மரத்’ அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம்.   

இந்தக் கல்வெட்டு, கடல்கடந்து சென்ற தமிழர் பெருமையைச் சொல்கிறது. வரலாற்று நோக்கில் பற்பல சான்றுகளைத் தருகிறது.  தென்கிழக்காசியாவில், அக்காலத்தில் தமிழக வணிகர்களின் செல்வாக்கை மிகத் தெளிவாகக் காட்டும் கல்வெட்டு இது.

ஆனால், இவற்றுள் முதன்மையானதாகத் தோன்றுவது – அவர்கள் எழுதிச் சென்ற மொழி. அங்கு வாழ்ந்த இனக்குழுவினர் ‘தமிழர்’ என்பதை உலகிற்குச் சொல்லும் முதன்மை ஆவணம் அவர்கள் பயன்படுத்திய தாய்மொழியான தமிழ்தான்.

ஒரு சமூகத்தின் அடையாளம் மொழியொடு பின்னிப் பிணைந்தது. அந்த அடையாளத்தை ஒதுக்கிவிட்டு, நாம் விட்டுச்செல்லும் எச்சங்கள், தெளிவில்லாத வரலாறையே காட்டும்.

விதைக்கும் விதை மரமாவதுதானே நோக்கம்?

இன்று நம்மில் பலர், மரபு மாற்றத்தில் வேரையே தொலைந்துபோகச் செய்வது சரியா?   

இன்று மட்டுமல்ல, நாளைய தலைமுறைக்கும் பெரும்பதன் போன்ற எண்ணிலடங்கா பலர் தேவை என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்தானே?

நன்றி.

நுனி நாக்குத் தமிழ் சரியா? தொல்காப்பிய வழி தமிழ் ஒலிகள்

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்

(ஔவையார்)

என்று ஔவையார் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

சித்திரம் வரைவது கைப்பழக்கம்;

செம்மையாகத் தமிழ்ப் பேசுவது- நாவின் பழக்கம்;

எக்காலமும் பயன்படுமாறு உள்ளிருத்திக் கொள்ளும் கல்வி – மனப்பழக்கமாம்.

இன்று நாம் பேசும் தமிழ், பெரும்பாலும் கலப்புத் தமிழ்தான். ஆங்கிலச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் கலந்து பேசுவதே இயல்பான பேச்சுவழக்கு என்று பலரும் கருதும் வருந்தத்தக்கச் சூழலைக் காண்கிறோம்.

 இடையிடையே ஒலிக்கும் அந்தத் தமிழாவது சரியான உச்சரிப்பில் உள்ளதா?

இந்தப் பகிர்வில் நாம் பார்க்கப் போவது ஔவை சொன்ன நாப்பழக்கத்தைப் பற்றித்தான்.

ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கும் மையங்கள் – ‘நுனிநாக்கு ஆங்கிலம் பேச வேண்டுமா? எங்களிடம் வாருங்கள்’ என்று விளம்பரப்படுத்துவதைக் காண்கிறோம்.

நுனிநாக்கு ஆங்கிலம் என்பது மற்றவரைக் கவரும்வண்ணம் ஆங்கிலத்தைப் பேசும் முறையைச் சொல்கிறது.  ஆனால், ஒரு சொல் அல்லது தகவல் ‘நுனி நாக்கில் உள்ளது’ என்பதை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தால் – ‘tip of my tongue’ என்று வரும்.

வாய்வரை வந்துவிட்டது ஆனால் மறந்துவிட்டேன்’ என்பதையே அத்தொடர் குறிக்கிறது.

இன்றைய பகிர்வு இதைப் பற்றியதல்ல. நுனிநாக்கு ஆங்கிலம் பற்றியதும் அல்ல.

நுனிநாக்கு ஆங்கிலம்போல் நுனிநாக்கில் தமிழைப் பேசுவது சரியா என்பதுதான் இன்றைய பதிவு.

பேச்சுமொழி தவிர, நாள்தோறும் நம் காதுகளில் ஒலிக்கும் பல்வகைத் தமிழ் உண்டு- வானொலியில் பண்பலைத் தமிழ், தொலைக்காட்சியில் தொகுப்பாளர் தமிழ், செய்தித் தமிழ் என்பதுபோல்.

மகிழ்ச்சியூட்டும் ஒருசில நிகழ்வுகளை விடுத்து, ஔவை சொன்ன நாவில் பழகிய செம்மையான தமிழ் – தேடினாலும் கிடைப்பதில்லை.

தமிழ்வழிக் கல்வி இன்று அருகிவிட்டது;

தமிழ் கற்ற பெற்றோர் வீட்டில் தமிழ்ப் பேசுவதில்லை;

ஆங்கிலவழியில் கல்வி கற்கும் பிள்ளைகளில் பெரும்பாலானோருக்குத் தமிழ்ப் பேசும் தேவை இல்லவே இல்லை.

குறைந்தது, பள்ளியில் தமிழ் படிக்காத முதல் தலைமுறை, பெற்றோர் வீட்டில் பேசுவதைக் கேட்டாவது உச்சரிப்புப் பிழையின்றிப் பேசினார்கள். இப்போது, அந்த வாய்ப்பும் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.

இதற்கெல்லாம் ஏன் வருந்த வேண்டும்? மொழி என்பது தகவல் தொடர்புக் கருவிதானே? என்று உங்களில் பலர் நினைக்கலாம்.

ஆனால், நமக்குப் பயன்படும் பற்பல மொழிகளை அதே எண்ணத்துடன் நாம் பார்ப்பதில்லையே? வெளிநாட்டு மொழிகளைக் கற்கும்போது உச்சரிப்பில் எடுத்துக்கொள்ளும் அக்கறை, நம் வாயிலாக அடுத்தத் தலைமுறைக்குச் செல்லவேண்டிய நம் அடையாளமான தாய்மொழியைப் பழக்கும்போதும் இருக்கலாமே என்பதுதான் என் ஆதங்கம்.

சரி, நாப்பழக்கத்தை எப்படி வளர்ப்பது?

சரியான உச்சரிப்பை எப்படிப் பழகுவது?

தமிழ் மொழியின் ஒலிகள் எப்படி வந்தன, அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பது குறித்து, நம் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போம். 

தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்கள் எதுவும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான், தமிழில் இதுவரைக் கிடைத்துள்ள நூல்களில் மிகத் தொன்மையானது தொல்ககாப்பியம் என்கிறோம்.

இலக்கியத்துக்குத்தானே இலக்கணம் வகுக்க இயலும்? தமக்கு முன்பிருந்த இலக்கியங்களில் இருந்து மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கினார் தொல்காப்பியர்.

தொல்காப்பியரின் காலம், பொதுக்காலத்துக்கு முன் 500 முதல் 300 ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என்று ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.

கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்குமுன், தெளிவான விளக்கங்களுடன் நம் மொழிக்கான இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மொழியைத் தவறாக உச்சரிப்பது மொழிக்கொலை என்றுதானே சொல்லவேண்டும்?

நம் பிள்ளைகள் கெட்ட சொல் ஏதாவது சொன்னால், அவர்களைத் திட்டினாலும் நமக்கு நன்றாகத் தெரியும் – அவர்கள் அந்தக் கெட்ட சொல்லை உருவாக்கவில்லை- தாம் கேட்ட சொல்லைத்தான் பயன்படுத்தினார்கள்  என்று.

அதேபோல்தான், ஒழுங்காகத் தமிழ்ப் பேசாத சமூகம், தமிழ் எழுத்துக்களை ஒழுங்காக உச்சரிக்காத சமூகம் – தவறான உச்சரிப்பைக் கேட்டு அதையே தொடரும் தலைமுறையைத்தானே உருவாக்கும்?

தொல்காப்பியர், தாம் இயற்றிய தொல்காப்பியத்தில்- எழுத்ததிகாரத்தில் – ‘பிறப்பியல்’ என்று தனி இயலில் எழுத்துக்களின் ஒலிப்புமுறை பற்றிக் கூறுகிறார்.

மிகமிக எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார். 

எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளாகத் தொல்காப்பியர் எட்டு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார்.

தலை, கழுத்து, நெஞ்சு. பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவை அவை.

அண்ணம் என்பது மேல்வாயைக் குறிக்கிறது.

தொல்காப்பியத்தின் நூற்பாக்களையும் அவற்றின் விளக்கத்தையும் கூற முயற்சிக்கிறேன்.

பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்

12 உயிர் எழுத்துக்களும் மிடற்றுப் பிறந்த வளியின்– அதாவது, தொண்டையில் இருந்து பிறந்த காற்றால் ஒலிக்கும்.

அவற்றுள்,
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்

வாயைத் திறந்த நிலையில், அ ஆ இரண்டும் ஒலிக்கும்.

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
அவைதாம்,
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய

இ ஈ எ ஏ ஐ என்ற ஐந்தும் – மேல்வாய்ப் பல்லின் அடியை நாவிளிம்பு பொருந்தப் பிறக்கும்.

அடுத்த நூற்பாவை விளக்கவே தேவையில்லை-

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்

என்கிறார் தொல்காப்பியர்.

சரி மெய்யெழுத்துக்களின் ஒலி எப்படி பிறக்கிறது?

நாவின் அடி மேல்வாயின் அடிப்பகுதியைச் சென்று பொருந்தும்போது க், ங் ஆகியவை பிறக்கின்றன.

ககார ஙகாரம் முதல் நா அண்ணம்

அண்ணம் என்பது மேல்வாயைக் குறிக்கிறது.

நாவின் இடைப்பகுதி, அண்ணத்தின் (மேல்வாயின்) இடைப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச், ஞ் இரண்டும் பிறக்கின்றன.

சகார ஞகாரம் இடை நா அண்ணம்

நாவின் நுனி, அண்ணத்தின் நுனிப்பகுதியைச் சென்று பொருந்துகின்ற நிலையில் ட், ண் இரண்டும் பிறக்கின்றன. 

டகார ணகாரம் நுனி நா அண்ணம்

மேல்வாய்ப் பல்லினது அடிப்பகுதியை நாவின் நுனியானது நன்கு பரந்து ஒற்றும்போது ‘த்’, ‘ந்’ என்னும் மெய்கள் பிறக்கின்றன.

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்

மேல் இதழும் கீழ் இதழும் ஒன்றோடு ஒன்று இயைந்து பொருந்திட, ‘ப்’, ‘ம்’ என்பவை பிறக்கின்றன.

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்

நாவின் நுனி, அண்ணத்தைச் சென்று நன்கு ஒற்றும் போது ‘ற்’ ‘ன்’ என்னும் மெய்கள் தோன்றும்.

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்

இனி, இடையின மெய்களுக்குச் செல்வோம். யரலவழள இடையினம் இல்லையா?

யகர மெய்– மேல்வாயை நாவின் அடிப்பகுதி சேரும் போது, கழுத்தில் இருந்து எழும் காற்று மேல்வாயைச் சென்று அடையப் பிறக்கும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்

நீங்களும் பொறுமையாகக் கேட்டோ படித்தோ இவற்றை ஒப்புநோக்கிப் பாருங்களேன். எவ்வளவு துல்லியமாக ஒலிகள் குறித்து நம் பழந்தமிழ் நூல் விளக்கியுள்ளது என்பது புரியும்.

மேல்வாய் நுனியை நாக்கின் நுனி வருடும் போது ர், ழ் மெய்கள் தோன்றுகின்றன.

நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்

மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரமானது (விளிம்பு) தடித்துப் பொருந்தும் (ஒற்றும்) போது லகர மெய் தோன்றும்; மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ (வருட) ளகர மெய் தோன்றும். 

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்

ல, ள இரண்டு எழுத்துக்களுக்கும் உச்சரிப்பு வேறுபாடுகளை அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.

மேற்பல் கீழ் இதழோடு இயைந்து பொருந்த வகர மெய் தோன்றுகிறது

பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும்

இதுதான் தொல்காப்பியர் விளக்கிய உயிர் மற்றும் மெய் எழுத்துக்களின் ஒலிப்புமுறை.

இதுவரை, இலக்கணம் குறித்த இந்த ஒலிப்பதிவைப் பொறுமையாகக் கேட்டமைக்கு நன்றி.

ஒவ்வொரு மொழிக்கும் அம்மொழிக்குரிய ஒலிப்புமுறை உண்டு. அதை மனதில் வைத்து அந்த மொழியைப் பேசினால்தானே அழகு?!

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி வெற்றி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வோம்;

தாய்மொழி தமிழ் பன்னெடுங்காலம் தழைத்தோங்கிட, ஔவை சொன்னபடி நாவைப் பழக்கிக் கொள்ளலாமே.

நன்றி.

உதவிய நூல்கள்-

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – பிறப்பியல், அழகப்பா பல்கலைக்கழகம்

மெய்யெழுத்துகளின் பிறப்பு, tamilvirtualuniversity

உயிரெழுத்துகளின் பிறப்பு, tamilvirtualuniversity

Podcast available on:

Apple

Spotify

Google